Wednesday, December 26, 2012

கட்டுரை-பாரம்பரிய பரதத்தில் நுழையும் புதுமையும், காக்கப்படும் பழமையும்

பாரம்பரிய பரதத்தில்
நுழையும் புதுமையும், காக்கப்படும் பழமையும்

    பத்து ஆண்டுகளுக்கு முன் நான் எனது தோழியுடன் (ஆங்கிலத்தில் எழுதுபவள்) தஞ்சாவூரில் பல கிராமங்களூக்குச் சென்று நாதஸ்வரக் கலைஞர்களைக் கண்டு அவர்களின் தற்கால நிலை பற்றி அறிந்து ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் எழுதுவதற்காக சென்றிருந்தேன். எங்களுடன் ஒரு மூத்த நாதஸ்வரக் கலைஞர் அவர்களின் பேரனும் உடன் வந்திருந்தார். அவரும் நாதஸ்வரக் கலையை இன்னமும் பரவலாகச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். கோவில்களில் பரந்த மண்டபங்களிலும், வெளிப் பிரகாரங்களிலும், கோவிலைச் சுற்றியுள்ள தெருச் சந்திப்புக்களிலும் நாதஸ்வர ஓசையும், தவிலின் கம்பீரமும், சலங்கையின் நாதமும் நிறைந்து வழிந்து ஓடிக் கொண்டிருந்தது என் மனதில்.  
    ஒரு கோவிலில் கல் நாயனம் கண்டேன். அதை  அதற்காவே ஏற்படுத்திய ஸ்டாண்டில் வைத்து வாசிப்பார்கள் என்றனர். யானையின்  தந்தத்தில் இரண்டு நாதஸ்வரம் அக்கோவிலில் இருந்தது எனவும், அதில் ஒன்று தற்போது சென்னையில் ஒரு பெரிய மனிதரிடம் இருப்பதாகவும், மற்றொன்று வேறு ஒருவரிடம் இருப்பதாகவும் தெரிவித்தனர். தந்த நாயனமோ, கல் நாயனமோ இப்போது உபயோகத்தில் இல்லை எனினும், அதை வாசித்த பரம்பரை இன்னமும் இருக்கிறது. தந்த நாயனத்தில் காற்று ஊதி உள்ளிழுக்கும் பொழுது அதன் ஊடாக ஊடாடி வரும் காற்று உடலுக்கு மிகுந்த உஷ்ணத்தை கொடுக்கும், அதனால் வாய் மற்றும் மூக்கு வழியே குருதி வெளிப்படும். அதை ஈடுகட்ட நிறைய உருக்கிய நெய் சாப்பிட வேண்டும் என்றும் கூறினார். அதன் நாதம் எவ்வாறு இருக்கும்? கல் நாயனத்தின் உள்ளே காற்று செலுத்த நிறைய பிரயத்தனப் பட வேண்டுமா?அதை முதலில் கண்டு பிடித்தவர் யார்? அதை வாசிக்கத் தெரிந்தவர் இன்னமும் யாராவது இருக்கிறர்களா? 
    நாதஸ்வர இசை செழித்து எல்லோர் இல்லங்களிலும் சலங்கையும், ஓசையும் பொங்கிக் கொண்டு இருக்கும் என்று என் மனதில் குதூகலம் இருந்தது. எனது குதூகலம் வெறும் புனைவாகவே இருந்தது. நிறைய நாதஸ்வர வித்வான்களின் வீடுகளில் வாசிப்போர் இன்றி ஒரு தூசி படிந்த உறையில் இட்டு நாதஸ்வரம் தொங்கிக் கொண்டு இருந்தது. அடுத்த அடுத்த சந்ததியினர் பல பணிகளைக் கற்று வேற்றூரில் அல்லது நாட்டில் வசிப்பதை 'அப்பாடா' என்ற நிறைவுடன் கூறினர். இசை கல்லூரியில், நாதஸ்வரம் கற்றுக் கொள்ள உதவித் தொகை அளித்தும் கூட ஐந்து அல்லது ஆறு மாணவர்களே கல்வி மேற் கொண்டிருந்தனர். கோவில்களில் பூஜைக்காக வாசிக்கும் சிலர் இருந்தனர். மனம் மிகவும் கனத்தது. சென்னை போன்ற பெரு நகரங்களில் டிசம்பர் மாதத்தில் மட்டும் அதாவது, இசை விழாக் காலத்தில் மட்டும் 2000க்கும் மேற்பட்ட இசை, நாட்டிய நிகழ்ச்சிகள் நடை பெறுகின்றன என்று ஒரு கூற்று தெரிவிக்கிறது .அதில் எத்தனை நாதஸ்வரக் கச்சேரி? விரல் விட்டு எண்ணிவிடலாம். அப்போதும் சில விரல்கள் மீதமாக நெரலாம். ஆரம்ப நாட்களில் இசைக்கப்படும் மங்கள இசை தவிர. ஆனால் அதற்கு பிறகு பெரும் முயற்சியில் தற்போது நாதஸ்வரத்திற் கென்றும் கச்சேரிகள் ஏற்பட்டுள்ளன. அதே இசை வேளாளர் பரம்பரைச் சார்ந்த பெண்கள் பலர் தன்னை இறைவனுக் கென்றே அற்பணித்துக் கொண்டு, மிகுந்த அறிவும், சுதந்திரமும், கல்வியும் கொண்டு விவாதங்கள் புரிந்து, விரிவுரை ஆற்றி கலை நிகழ்த்தி கலைக்காகவே வாழ்ந்து இருக்கின்றனர். வாழ்ந்தும் வருகின்றனர் இன்னமும் வெகு சிலர், மீதமுள்ளோர்.

    பரத நாட்டியம் என்பது நாட்டிய சாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்டது. அது கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் இருந்து கி.பி. இரண்டாம் நூற்றாண்டுகளுக்குள் எழுதப்பட்டது என்று வரலாறு கூறுகிறது. பரத  சாஸ்திரம், ரிக் வேதத்தில் இருந்து சொற்களையும், உரையாடலையும், சாம வேதத்திலிருந்து இசையையும், யஜுர்  வேதத்திலிருந்து உணர்வுகளையும், அதர்வண வேதத்திலிருந்து அழகியலையும் எடுத்து, திரட்டி ஐந்தாவது படைக்கப்பட்ட ஒன்று என்றும் புராணம் கூறுகிறது. ஆனால் இப்படிப்பட்ட நாட்டிய சாஸ்திரத்தை வைத்துக் கொண்டு வெறுமே படித்து அதை உடலில் கொணர்ந்து ஆடிவிட யாராலும் இயலாது. நாட்டியத்தை நிகழ் கலையாக உருவாக்கியதை  பல நூற்றாண்டுகளாக கற்பித்து, நிகழ்த்தியும் காத்தும் வரும் நட்டுவனார்கள் இல்லை என்றால் இது உயிரோடு இருந்திருக்குமா? கற்பித்தலை மட்டுமே வாழ்வாகக் கொண்டிருந்ததினால், தனது நிகழ்ச்சிகள்,. அதன் மேடை ஏற்றம், அதன் மூலம் மற்றவை என எதைப்பற்றியும்  அக்கறை கொள்ளாமல் சொல்லிக் கொடுத்து  வளர்ப்பதிலேயே தனது முழுக் கவனத்தையும் செலுத்தி இருக்கின்றனர்.

    கற்பவரின் உடல் பாங்கு, அவர் வாழ்விடத்தின் சூழல் என சில அடிப்படை மாற்றங்களைக் கணக்கெடுத்து, சொல்லிக் கொடுத்து அக் கலையை வளர்த்தனர். மெல்ல மெல்ல கலைஞர்களின் வாழ்வியல் முறை மாற்றத்திற்கு ஆளாகிப் போயிற்று. பரத கலை கோவில்களையும், பக்தியையும் விட்டு நகரம் நோக்கிப் இடம்பெயரத் தொடங்கியது. இசை வேளாளர் பாரம்பரையில் இல்லாத மற்றவர்களும் பயில்வது   ஆரம்பம் ஆயிற்று. நகரம் நோக்கி எடுத்து வந்தவர்கள் பலர். கற்பிக்கும் பலரும் பரத்தத்தில் தமக்குத் தோன்றிய மாற்றங்களை செய்ய முற்பட்டனர். மெல்ல மெல்ல பரதம் பரவத் தொடங்கியது நகரத்தில் தன் இயல்பை விடுத்து. இதற்கான பெருமை, புகழ், பரவப் பரவ கற்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாக, அதிகமாக கற்பிப்போர் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியது. கற்பத்தலில் பணம் பண்ண ஆரம்பித்தனர். கலை சிறிது சிறிதாக நீர்க்கத் தொடங்கியது.

    நகரங்களில், பெரு நகரங்களில் கற்பிக்க என காளான்கள் போல் அனுபவமற்ற, சிறிதே கற்ற  பலரும், தங்களுக்குத் தெரிந்த அந்தக் கொஞ்சத்தில் கொஞ்சத்தை  தனி நிறுவனமாகவும், கல்விக் கூடங்களிலும், பெரிய நாட்டியத் தாரகைகளின் பள்ளிகளில் ஆரம்பப்பாடம் கற்பிப்பவராகவும்  பணிபுரிய ஆரம் பித்தனர். அந்தக் கொஞ்சத்தில் கொஞ்சத்தை சில வருடங்கள் பகுதி நேரமாகப் பயின்றனர் பலர். அதில் பொருளாதார மற்றும் செல்வாக்கு உள்ளவார்களின் பிள்ளைகள் மேடை ஏறத் தொடங்கினர்.

    வெளி நாடுகளில் வாழும் இந்தியர்களும், தங்கள் குழந்தைகள் இந்திய பாரம்பரியத்தைப் பிரதிபலிப்பதில் ஒரு பகுதியாக பரதத்தை உணர்ந்து கொண்டிருக் கின்றனர். எனவே நீண்ட நாட்களாக வாழும் இந்தியர்கள், தற்காலிகமாக குடி பெயர்ந்து இருப்பவர்கள் தங்கள் பிள்ளைகளை பரதம் பயில அனுப்புகின்றனர். இது வெளி நாட்டுப் பணம் மற்றும் மோகத்தை இங்கிருக்கும் நாட்டிய ஆசிரியர்ககளுக்கு ஏற்றி விட்டிருக்கிறது. எனவே, சில நாட்கள் பயணம் என வெளி நாடுகளுக்குக் கற்பிக்கப் பயணப்படுபவர்கள் அதிகமாகி விட்டனர்.

    ஆனால் வெளி தேசத்தில் வாழும் மக்களிலும் கலையை மிக உன்னதமாகக் கருதி, அதில் தம் முழு நேரத்தையும் செலவிட்டுக் கற்பிக்கும், கற்கும் மக்கள் மிக அதிகமாக இருக்கின்றனர். ஆழத்தையும் உணர்ந்து கற்று நிகழ்ச்சிகள் தந்து, கற்பிக்கும் கலைஞர்களும் இருக்கின்றனர். அவர்களிடம் புதுமை, பழமைக் குழப்பம் இருப்ப தாகத் தெரியவில்லை. புதுமையைத் தனியாகவும், முழுதான பாரம்பரியத்தை தனியாகவும் உணர்ந்து செயல் படுகின்றனர். கலையின் வேரைத் தேடி இந்தியாவிற்கு வரும் பொழுது முழுமையாக தனது நேரத்தை அதற்காக செலவு செய்கின்றனர். பணத்தையும் கூட.. தேடித் தேடி அலைந்து கற்றுக் கொள்கின்றனர்.  டிசம்பர் மாத விழாக்களில் பல சபாக்களில் அவர்களைக் காணலாம். இதன் மற்றொரு பகுதியும் வெளி தேசங்களில் நிகழ்கிறது.சீசனுக்கு இந்தியா வந்து, நடனக்கலைஞர்களிடம் மணிக்கு இவ்வளவு டாலர் எனக் கொடுத்து இரண்டு அல்லது நான்கு வாரங்கள் மட்டும் கற்றுக் கொண்டு ஊர் திரும்புகிறவர்களும் உள்ளனர்.  அப்படிக் கற்றுக் கொண்டவர்கள் இன்னாரின் சிஷ்யர் என்று போட்டுக் கொண்டு அவர்களின் வழி பரதம் எனக் கூறிக் கொண்டு கற்பிக்கவும் செய்கின்றனர். விவரம் தெரியாதவர்கள் இவர் பெரிய குருவிடம் ஏதோ பத்தாண்டுகள் பயின்றவர் என்று எண்ணுகின்றனர்.  இப்போது இன்னமும் ஒரு வடிவமும் பரதம் பெற்றுள்ளது. அதாவது, வெளி நாடுகளில் வாழும் இந்தியர்கள் தங்கள் நிகழ்ச்சிகளை இந்தியாவில் கொடுத்தோம் என்று சொல்லிக் கொள்வதற்காக பல சபாக்களில் பணம் கொடுத்து ஆடி, சி.டியும் , வந்த விமர்சனங்களையும் எடுத்துக் கொண்டு திரும்புகின்றனர். எனவே, சில சபாக்கள் Only for N.R.Is என ஏற்படுத்திக் கொடி கட்டிப் பறக்கின்றனர்.

    இசை வேளாளர்கள் பாரம்பரியத்தில் வந்த நாதஸ்வரம் ஒரு பக்கம் குறுகிக் கொண்டு வந்துள்ளது. அவைகளின் பரதம் நகர மற்றும் பணக்கார மேட்டுக் குடி மக்களால் பறிக்கப்பட்டு பணம் கொழிக்கிற வியாபாரமாக மாறி விட்டிருக்கிறது. இரண்டும் இன்றி ஒரு சாரார் மிகவும் பின் தங்கி இருகின்றனர். நிறைய எதிர் மறையாகவே பேச வேண்டி வருவது எனக்கும் வருத்தமாகத்தான் இருக்கிறது.

    டிசம்பரில் செனையில் 2000க்கும் மேற்பட்ட நிகழ்வுகள். ஒருவரே பல சபாக்களில் நிகழ்ச்சி தருதல், எங்கெங்கும் சபாக்கள், எங்கெங்கும் சலங்கை ஒலிகள். ஆனால், அவைகள் அநேகமாக வெகு சிலரே அமர்ந்திருக்க, பெரும் பாலான இருக்கைகள் காலியாக இருக்கும் அரங்காகவேதான் காட்சி அளிக்கறது. இதில் மிகவும் பரபரப்பாக இயங்கி பணம் பண்ணுகிறவர்கள், பக்க வாத்யக்காரர்களும், பாடகர்களும்தான். பலருக்கும் ‘ரிகர்சல்' எனப்படும் பயிற்சிக்காக நேரம் ஒதுக்க முடியாமல், காலை ஒரு நடனமணிக்கு, மதியம் ஒரு நடனமணிக்கு, மாலை ஒரு நடன மணிக்கு எனப் பறந்து பறந்து காரில் சென்று கொண்டிருக்கின்றனர்.

    எனவேதான், நாம் உண்மையான கலையை அதன் ஆழத்தையும், நேர்த்தியையும் உணர்ந்து  அவற்றை அடைய முயலும் கலைஞர்களைக் கண்டு கொண்டு அவர்களின் பாரம்பரியம் வழுவாக் கலையை இன்னமும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து, காளான்களை அழித்து விருட்சங்களை போஷிக்க வேண்டும். இங்கு நான் சில நிகழ்வுகளை இதற்காகத்தான் பதிவு செய்து உள்ளேன். நடனத்தில் நவீன முயற்சிகளும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன. அது இன்னமும் செழுமையையும், உறுதியான வடிவமைப்பையும், ஆழத்தையும் பெற வேண்டும் என்பது என் எண்ணம்.
வளரும்

Friday, December 21, 2012

குப்பை-காகிதங்கள்-குப்பை- கட்டுரை

குப்பை-காகிதங்கள்-குப்பை


‘சுடிதார் தைக்கணுமாம்மா' பணிவன்புடன் கை நீட்டி காகிதம் ஒன்றைத் திணித்துத் திரும்புகிறான் ஒரு சிறுவன்.'  கணிணி படிப்புங்கண்ணா' மற்றொரு சிறுவன் கை நீட்டி அளிக்கிறான், ஒரு வண்ணக் காகிதத்தை.'உடல் பருமன் ஒரு வாரத்தில் குறைய' என்ற சொற்கள் தாங்கிய பெரிய தொப்பை கொண்ட பெண் உருவம் அச்சிடப்பட்ட வழவழத்தாளை நீட்டுகிறாள் ஒல்லியான ஒரு இளம் பெண்.  இந்த மூன்று வகைக் காகிதங்களாலும், அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையில் விநியோகிக்கப்படும் காகிதங்கள் என் கைக்குக் கிடைக்காது. நான் எப்போதும் அவற்றை வாங்க மாட்டேன். காகிதத்தின் அருமை தெரியும்.

பெண் முகமும் தலையும் இல்லாமல் பிதுங்கிய மார்பகங்களுடனும், அதற்கு கீழே சட்டையை விட்டு வெளியே பேண்டுக்கும் இடையே நீட்டிக் கொண்டிருக்கும் இடைப் பட்ட வெள்ளைத் தோல் பிரதேசத்துடனும், நடுவில் துருத்திக்கொண்ட தொப்பையும் வண்ணப்படத்தில் அச்சிடப் பட்டிருக்கும் .

அட்சய திருதியைக்கு கடவுள் படமிடப்பட்டு, ((கைகளிலிருந்து தங்கக்காசு கொட்டிக்கொண்டிருக்கும், மற்றொரு கையால் அருள் பாலிக்கும் காசின் கடவுள் படம், சில நொடிகளுக்குப்பின் எல்லோருடைய  காலடியின் கீழும் மிதிபட்டுப் புரளும்.) கடையின் பெயர்களுடன் தள்ளுபடியில் தங்கக்காசுகள், நகைகள். .கடையின் பெயரில் மட்டுமே மாற்றம் இருக்கும். மிகுந்த  விலை உயர்ந்த தாளில் வண்ணத்துடன் கூடிய  நோட்டீஸ்  கூட்டம் அலை மோதும் தெருவில் எல்லோர் கைகளிலும் கொடுக்கப்படும். அந்தத் தெருவில் யாருடனும் இடிக்காமல் நடக்க முடியாது. பெண்களைக் கவர்ந்திழுக்க கடையின் வாசலில் அழகழகான வண்ணக்கோலங்களும், வாழை மரங்கள், தோரணங்கள் கட்டப்பட்ட  நுழைவாயிலில்  ஏறும் போதே தங்கள் வீட்டில் திருமணம் கைகூடி விட்டதாக கனவுடன் படி ஏறும் கூட்டம். கடைக்கதவு எப்போதும் திறந்தே இருக்கும். எரிக்கும் வெய்யிலுக்கு இதமாக செயற்கைக் குளிரூட்டப்பட்ட காற்றும் என எல்லாவற்றையும் கடந்துதான் நான் செல்கிறேன். இலவசமாக விநியோகிக்கும் எதையும் எல்லோரும் கைநீட்டி வாங்கிக்கொள்கிறார்கள். வண்ணவண்ண அந்தக் கையகலத் தாள்கள், பெரியவர்கள் கைகளில் கொடுக்கப்பட்டவுடன் தனக்கும் ஒன்று என்று கைநீட்டி வாங்கிக் கொள்ளும் குழந்தைகள். பெரியவர்கள் செய்வதையே தானும் செய்யும் குழந்தைகள். இளைஞர்கள் நடுத்தர வயதினர், வயோதிகர் என எல்லோரும் கைநீட்டி வாங்கிக் கொள்கின்றனர். ஓரிரு அடிகள் நடப்பதற்குள், காகிதத்தை படித்தும் படிக்காமலும், மடித்தும் மடிக்காமலும், எந்தவித நுண் உணர்வும் இல்லாமல், தங்கள் காலடியில் நழுவ விடுகின்றனர். ஏறக்குறைய நூறு அடிகளுக்குள் வழியெங்கும் (ரயிலடியின் வெகு அருகில் கடைகள் மட்டுமல்ல குப்பைகளும் நிறைந்திருக்கும்) ரயில் நிலையம் செல்லும் வழியில், படி எங்கும், நிறைந்து இறைந்து கிடக்கும் அவற்றைப் பார்க்க பார்க்க மனம் கொதிக்கும்.அட்டைக்கு மட்டுமே வண்ணத்தை ஓடவிட்டு விட்டு, அதுவும் மிகுந்த சிரமத்திற்கு இடையில்,  உள்ளே அனைத்தையும் கருப்பு வெள்ளையில் அடைத்து திணித்து நிரப்பி உயிரையும், உயிர்காற்றையும், வலியையும், வேதனையும், காதலையும், காமத்தையும் கொட்டி எழுதிய நூல்கள் தயாரிக்கிறேன். என் ஆசை அளவிற்கு எந்த நூலையும் செலவு செய்து கொண்டுவர முடியவில்லை. ஓவியம் பற்றிய நூல்களைக்கூட கருப்பு வெள்ளையில் வடித்தும், அதையே படித்தும் வர வேண்டிய நிலை. .நிகழ்த்துக்கலைகளைக் கூட அப்பி வைத்த கருப்பு வெள்ளையில் வண்ணங்களைத் துடைத்து எறிந்துவிட்டு அதையே வெள்ளையாக்கி வண்ண ஜாலம் காட்டி வித்தையும் காட்டுகின்றன நூல்கள். வண்ணத்தில் அடிக்க பணம் கொடுத்து மாளாது.

சிற்றிதழ் தயாரிப்போர் ஒவ்வொரு இதழையும் வழ்க்கையைப் பணயம் வைத்து உறவுகளுடன் முரண்பட்டு வெறி பிடித்தது போல வெளிக் கொண்டு வருகின்றனர்.

ஆனால் இந்தப் பணக்கார வியாபாரிகளின் விளம்பரமோ வழவழ வண்ணத்தாளில், அழாழகாக அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன. அதை வாங்கி ஓரிரு நொடிகளில் நழுவ விடுகின்றனர். எத்தனை மரங்கள்? அதிலுள்ள எத்தனை சிற்றுயிர்களை அரைத்துப் பூசிய காகிதமது?  

தேர்வு முடிந்து அடுத்த கட்டத்துக்குப் போகும் மாணவர்களைக் கவர்ந்திழுக்க இப்போது ஜூன் ஜூலையில் என்ன படிக்கலாம், எப்படிப் படிக்கலாம், என்று வழிகாட்டும்(?)  காகிதங்கள் தெருவெங்கும்.  என்னால் இப்ப்டி செலவு செய்ய முடியவில்லையே என்ற பொறாமையும் இதில் கொஞ்சம்  கலந்துதான் இருக்கிறது. வெள்ளைத் தாள்கள் வண்ணம் பூசப்படுவதற்கான காரணம் இன்னமும் கொஞ்சம் மக்களை வழி நடத்துவதாகவோ, மக்களை விழிக்கச் செய்வததகவோ இல்லாமல் முட்டாளாக்கும் செயலைத் திறம்பட அதிகம் செலவழித்து விழும் விட்டில் பூச்சி ஆக்குகிறார்களே என்ற கவலையும் இணைந்துதான்  இதைச் சொல்ல வைக்கிறது.

.

கவிதை

மெய்__ஞானம்

அறியாத வயதில் கேட்டதுண்டு,
காயம் போய், காற்றடைத்த பை என்று.

ஒரு நாள்,

பிளாஸ்டிக் பையில்  காற்றடைத்து
பின் நீரில் விட்டேன் அது பெரும்
உருவெடுத்து உப்பி கம்பீரமாக --
மிதந்து மிதந்து சென்றது.

பின்னர் ஒரு நாள்,

மழையில் ஓடும் சிறு நீர்த் தாரையில்
காகிதப் படகு செய்து மிதக்க விட்டேன்
காற்று நிறைந்து அது காற்றுடன் கலந்து
காற்றிருந்த மட்டும்
மிதந்து பின் நீர் நிறைந்தவுடன் --
மிதக்காமல் மூழ்கியது.

பிறகும் ஒரு முறை,

காலியான டப்பாவில் மூடியிட்டுக்
காற்றடைத்துத் தொட்டியிலிட்டேன்
அதுவும் நீரில் மிதந்து அலை அலையென
அசைந்து அசைந்து நெளிந்தது.
திரவம் நிரம்பிய அக்கணமே
உள்சென்று மூழ்கியது.

விவரம் அறிந்து,
விஞ்ஞானமும், மெய்ஞானமும் கற்றபின்


நீரைவிட அடர்த்தி குறைவெனில்
திரவத்தில் மிதக்கும்
கெட்டிப்படுத்தப்பட்ட நீரும்
நீரில் மிதக்கும், அசையும்.

பிரம்மாண்டமான கப்பலும்
பெரும் நீரில் மிதக்கும் காற்று மட்டும்
உள்ளிருந்தால் அடிநீர் 
மூழ்கித்தான் போகும் என்றும் அறிந்தேன்.

எல்லா உயிர்களிலும் மேலானவன்.
ஆறறிவு உள்ளவன்.
அவனே கடவுள்.
அவனே மனிதன்.

ஆனால்,

நானறிந்த பெண் ஊர் அறியா
வயிற்றுச் சுமையுடனும், வளர்ந்த
தன் மற்றொரு சிசுவை வயிற்றுடன்
துண்டிணைத்துக் கட்டி
சப்தமின்றி நடுநிசியில்
வீட்டுக்கினற்றுள்
காற்று நிறைந்த பைகளாய்
கீழிறங்கி வீழ்ந்தனர்.

காற்றுடன் பைகளாக இருந்த போது
நீருக்குள் மூழ்கியும், மூச்சற்றுப்
பேச்சற்றுக் காற்றும் அற்ற பைகளாய் நீர் நிறைந்திட்ட பின்
ஈருயிரும் சிசுவும்  மேலெழும்பி
அசைந்தன உப்பி, அப்போது

என்னுள் இருந்த விஞ்ஞானமும்
சித்தரின் மெய்ஞானமும்
என எல்லாமே நொறுங்கிப்போய்
ஏன், ஏன், ஏன் என்ற கேள்வியே
மேலெழும்பி மிதந்தது என்னுள்
காற்றும் நீரும் நிறைக்காமலேயே.

Friday, November 23, 2012

பதினேழு கவிதைகள் (சென்னை வானொலி நிலயத்தில் படித்தவை)

மாற்று பிம்பம்

தெருவோரம் தேங்கிநிற்கும் தெளிவான
நீரில் விழுந்துவிட்ட நிலவையும்
உச்சி வெயில் வெளிச்சத்தில்
அடிக்கற்கள் தெரிய அசையாத கிணற்றையும்
இடைவெளி தூரத்தை மாற்றிக்காட்டும்
பிரதிபலிக்கும் பிம்பங்கள்.


ஒரேமண்

களிமண் பூமியில் சூளையிட்டு
அறுத்தெடுக்கும் செங்கற்கள்
களிமண் விளைபூமியைப் பிரிக்கும்;
அடுக்கடுக்காய் சிமென்டுடன்
அழகான சுவராக்கி- பயிரற்று.

உறக்கமல்ல, பறத்தல்

ஊர்ந்துவரும் புழு, நெளிந்து நெளிந்து.
இன்றோ அதுவுமற்று கூடுகட்டிக்கொண்டு.
சிறையில் மரண உறக்கம் என்றெண்ணி
எக்களிக்காதே! இது உறக்கமல்ல; பறத்தலின்
விஸ்தரிப்பு. வண்ணம் கொண்டு உந்திப்
பறக்கும் முன்னதான ஓய்வெடுப்பு. ( 9-4-2006-கல்கி)

சூரிய மலர்

வாசலில் சூரியன்(காந்தி மலர்)
இரவில் மலர்ந்து பகலில் உறங்கும்
மின்சாரத் தடைபாட்டில் மெலிதான மஞ்சள்
மேகம் சூழ்ந்த சூரியன், மழை வரும்
என்றெண்ணினேன், பின் மாயை அகன்றேன்.


ஓசோன்

விஞ்ஞானத்தால் வந்த துளை.
விரிந்து பெரிதாகும் என்றால்
ஊர்வன, பறப்பன ஏதுமற்றுக் காலியாகும் பூமி
செடிகளும் மரங்களுமற்று.
உடையும் உலகத்தை ஒட்டவைக்க-ஒரு
பசையுள்ள நாடா உண்டா உன்னிடம்?

கற்றாழை

பிரம்மாண்டமான பச்சை முள் தூண்கள்,
மேலொரு கலசமென விரிந்த சிவப்பு மலர்
மலர் பிரிதொரு நாள் முள்ளாய் மாறும்
மற்றொரு முட்செடி உருவாகும்- என்றாய் நீ;
மற்றொரு முட்செடியில் இன்னொரு
வண்ணமலர் உச்சிக் கொண்டையாய்-
என்றேன் நான்.


கணிப்பொறி

காற்றின் மூலம் காதில் மிதந்துவந்தன
அன்று, அனைத்துச் செய்திகளும்
வாழ்க்கைக் குறிப்பும் வாழும் முறையும் கூட.
அது, பிறகு கல்வெட்டாகி, காகிதமாகி,
அச்சாகி அரங்கேற, இன்றோ- அது
திரும்ப ஒளிரும் மின் அஞ்சல் எழுத்தாகி
மீண்டும் காற்றினூடே!

அவரவர் சதுரம்

கலந்துரையாடல் அனைவருடனும்- வீட்டின்
உள்ளேயும் வெளியேயும் மக்கள்
கூட்டமாய் சமூகமாய் உறவாய்.
இன்றோ, நகர வாழ்வில்
ஆளுக்கொரு பெட்டி, வசதிக்கேற்ப.
தொலை காட்சி, கணிப்பொறி விளையாட்டு என,
அவரவர் சதுரத்தில் அவரவர் தனித்தனியே.

உறவு

ஜடங்களின் உரசல் சப்தமும்
உயிர்களின் உணர்வில் குரல்களும்
அடிவயற்று ஓலமும், நுனிநாக்கு நளினமும்
இணையாத இரு குரல்கள்;
பல்லாண்டாய் ஓர் அறையில்
எதிர் எதிராய்.

சாம்பல் காடுகள்

எரிமலைக் காட்டிடை
வெடித்துச் சிதறும் எரிமலைத் தீயில்
எத்தனை எத்தனை வண்ணங்கள்!
ஆரஞ்சு, ஊதா, மஞ்சள், நீலமென
அனைத்தையும் விழுங்கி முன்னேற
எஞ்சி நிற்பது- சாம்பல் காடுகள்.

அன்பு

இளம்பிள்ளை அச்சமற்று நிற்கும்
எதிரி யாரென்று அறியாத தருணத்தில்;
எல்லாம் கடந்தவரும் அஞ்சார்; அன்பால்
எதிரி யாரென்று அறிந்தாலும் கூட.



நேர்மை

முளையிலேயே கண்டுணரப்படும்
நேர்மையின் முளை எதுவென்று.
பார்த்தனீயமும் பச்சைதான்-எனினும்
பயன்படாதது அழித்தெடுக்கப்படும்.
எங்கும் நேர்மை முளை பரவ
களையெடுப்போம் எல்லோரும்.

பிள்ளைப் பருவம்

வண்ணத்தோடு  ஒப்பிட்டு பெயரிடப்படும்
மலர்கள், உருவத்தோடு ஒத்ததாய் இருக்கும்
காய்கனிகள், இணைத்து சமைத்து
இணைந்து கூடி மகிழ்ந்த நாட்கள்- இன்று,
மற்றோரையும் தொடர்ந்து
சுமந்து செல்கிறது வாழ்க்கை.

நீரும் நானும்

மழை நடந்து வரும், என் இருப்பிடம் தேடி
வெள்ளம் ஓடிவரும், என்னைக் கடந்து
குளம் தேங்கி நிற்கும், என்னை எதிர்பார்த்து.
கடல், அலை கொணரும் கரை நோக்கி
என்னை அடைய, உள் இழுக்க.

வட்டம்

நிலவைச் சுற்றி சிறு வட்டம், கோட்டை
மேகக் கூட்டம் காட்டப்- பின்
வரும் மழை காட்ட. நிழல்
விளக்கைச் சுற்றி வட்டம்
இருளைக் கரைத்து ஒளியை உமிழும்
விளக்குக் காட்ட.

மரம்

மலையிடை உடைசலில் விழுந்த விதை
முளைத்து இன்று ஒரு மரமாகி.
மரத்தின் உடல் போலப் பரந்து
விரிந்த வேர் பாறை பற்றி
உள் ஓடும் நரம்பாய், எலும்பாய்
உயிர் காக்கும் தேவதையாய்.


கவிதை

அன்று ராவணன் தூக்கிச் செல்ல
தொடரும் வழி காட்டலுக்காய்
விட்டெறிந்த அணிகள் நிலத்தில்
வீழ்ந்து கூறியது கதை.
வழி தொலைத்து என்னை இழக்க
தேய்த்துத் தரும் கரைந்த கவிதைகள் இவை.

Monday, October 29, 2012

முன்னுரை-பஞ்சதந்திரம்

 சதுரம் பதிப்பகம் மூலம் விரைவில் 'பஞ்சதந்திரம்' நூல் வெளிவர உள்ளது. அதற்கான முன்னுரை இது.

பஞ்சதந்திரம்: சிறு அறிமுகம்


    நாங்கள் புதுச்சேரியில் வசித்துவந்த போது டெல்லியில் இருந்துவந்த எழுத்தாள நண்பர் ஒருவர் வேலை மாற்றலில் புதுச்சேரிக்கு வந்தார்.  குடும்பத்துடன், அடிக்கடி அவர்களின் வீட்டிற்கு நாங்களும் எங்கள் வீட்டிற்கு அவர்களுமாக சந்தித்துக் கொள்வோம். (1984,85) அப்போது அவர்கள் ‘பஞ்சதந்திரம்' என்னும் இந்தப் புத்தகத்தை எங்களிடம் கொடுத்தனர். 

    பஞ்சதந்திரம் மிக அருமையான நூல் என்பதால் இதில் உள்ள பல விஷயங்கள் குறித்தும் நிறைய பேசி இருக்கிறோம். அப்போதெல்லாம் நூல் வெளியிடுவது என்பதெல்லாம் இல்லை. அந்தப் புத்தகம் அவர்களிடமிருந்து வந்த பின் எங்கள் வீட்டில் யார் கைகளிலாவது எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். அந்த அளவுக்கு ஆர்வத்தைத் தூண்டுவது பஞ்சதந்திரம். படிக்கத் தொடங்கியவுடன் அது உங்களை உள் இழுத்துக் கொண்டுவிடும். எந்தப் பக்கத்திலிருந்தும் படிக்கலாம்.

    கதைகள் என்பதால் பஞ்சதந்திரம் குழந்தைகளுக்கான நூல் என்பதாக ஒரு தவறான எண்ணம் மனதில் பதியவைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு குழந்தை களுக்கானதாகப் பார்க்கப் படுவதும் ஓரளவுக்கு சரிதான் என்றாலும் கூட, அரசியல் தந்திரங்கள் நிறைந்த இந்த ‘பஞ்சதந்திரம்' குழந்தைகளுக்கான கதையாக சிறு சிமிழில் அடைக்க முடியாதது. மேலும் குழந்தைகளுக்காக வடிவமைத்த பஞ்சதந்திரக் கதைகள் மிகவும் நீர்த்துப் போனதாக இருக்கிறது. எளிமைப் படுத்துவது என்பது வேறு, நீர்த்துப் போக வைப்பது என்பது வேறு.

    பண்டிட் ஜ்வாலா பிரசாத் மிஸ்ரா 1910ம் ஆண்டு,  பஞ்சதந்திரத்தை சம்ஸ்கிருத ஸ்லோகங்களுக்கு ஹிந்தியில் உரை தந்து முதன் முதலாக பதிப்பித் திருக்கிறார். அதில் விஷ்ணு சர்மன் நீண்ட காலத்திற்கும் முன்னதாக நமது நாட்டில் வசித்தவர். அவருடைய இரண்டாம் பாடலான அறிஞர்களுக்கு வந்தனம் என்னும் ஸ்லோகத்தில் சாணக்கியரின் பெயர் இடம் பெற்றிருப்பதனால் அவர் சாணக்கியருக்கும் பின்னான காலத்தவர் என்கிறார்.  வெகு காலத்திற்கு முன்னதாகவே பஞ்சதந்திரம் செவிவழிக் கதைகளாக இருந்து வந்திருக்கிறது. கால ஓட்டத்தில் இந்தப் பஞ்சதந்திரம் வெளி நாட்டவர்களால் உயர்வாக உணரப்பட்டு, ஆசியா, அமெரிக்கா, ஐரோப்பியா ஆகிய நாடுகளில் பரவலாக அறியப்பட்டு இருக்கிறது.  விஷ்ணுசர்மன்  என்பது அவரது உண்மைப் பெயராக இருக்க வேண்டியதில்லை. நம் நாட்டில் பல நூல்களை எழுதிய அறிஞர்கள் தமது அடையாளத்தை வெளியிடுவது இல்லை.  எந்த இடத்தைச் சார்ந்தவர்கள், என்ன குலம், எந்தப்பகுதி, எந்த சந்தர்ப்பத்தில் எழுதப் பட்டது போன்ற எந்த அடையாளத்தையும் அவர்கள் சொல்வதில்லை. அது தேவை என்றும் அவர்கள் கருதியதில்லை. மகாபாரதம், ராமாயணம் போன்ற நூல்களை எழுதியவர்களின் பெயர்கள் கூட காரணப் பெயர்களாக இருக்கின்றன. அவர்களின் உண்மைப் பெயர் நமக்குத் தெரியாது. புற்றிலிருந்தவர் அதனால் வால்மீகி என்றும், வேதத்தை உரைத்தவர் என்பதால் வேதவியாசர் என்ற பெயராலும் நாம் அறிகிறோம் என்கிறார்  ஜ்வாலா ப்ரசாத் சர்மா.

    ‘பஞ்சதந்திரம்' மற்றும் ‘ஹிதோபதேசம்' ஹிப்ரூ, லத்தீன், கிரேக்கம், இத்தாலி,  ஜெர்மனி, பிரெஞ்சு, ஸ்பானிஷ், அரபி, பாரசீகம், துருக்கி, சீனா, உருது ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு நூலாகி இருப்பதாக 1910 லேயே ஜ்வாலா பிரசாத் சர்மா பதிவு செய்திருக்கிறார்.

    ஒரு நவீன இலக்கியப் படைப்புப் போல, எதிர் எதிர் கண்ணாடிகளின் பிரதி பிம்பம் போல பஞ்சதந்திரக் கதை தொடங்குகிறது. மகிளாரூப்யம் என்ற நாட்டை ஆண்டு வந்தவன் அமரசக்தி. அவனது மூன்று மகன்களும் புத்தி சாதுர்யம் அற்றவர்கள். அவர்களுக்குப் பாடம் கற்பிக்க விஷ்ணுசர்மன் என்கிற எண்பது வயதான அறிஞர் அமர்த்தப்படுகிறார். நூலை எழுதியவரின் பெயரும் விஷ்ணுசர்மன். முட்டாள் அரசகுமாரர்களுக்குக் கதைகள் மூலம் பாடம் சொல்லித்தருகிறார். முதல் கதை நடைபெறும் இடத்தின் பெயரும் மகிளாரூப்யம்.

    ஒரு மன்னன் தன் நாட்டின் பாதுகாப்பை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற அரசாட்சி முறை இந்நூலில் மிகத் தெளிவாக சொல்லப் பட்டிருக்கிறது. ஆரம்பத்திலேயே தலைவன், அவனது ஆட்சி என்பவை சொல்லப் பட்டு உள்ளன. சதுர்மண்டலாஸ்தானம், நால்வகைப் படை, அரசைக் காக்கும் கவசம் என பிரிந்து நிற்கும் விதத்தைத் தெளிவாக்குகிறது.

    பிங்களகன் என்ற சிங்கத்திடம் மந்திரியாயிருந்த ஒரு நரியின் பிள்ளைகள் இருவர் என்று நகர்கிறது கதை. ‘சிங்கம் சாப்பிட்டு மிச்சமான ஆகாரம் நமக்கு இருக்கிறது. புத்திசாலிகள் அநாவசிய விஷயங்களில் தலையிடலாகாது' என்று ஒரு நரி சொல்வதாய் வருகிறது. இந்த இடத்தில் இரண்டு விதமான விவரங்கள் இருக்கின்றன. அரசன் நேர்மையானவனாகவும், சுயகௌரவத்துடனும் இருப்பவனாக இருந்தாலும், அவரது அடுத்த வட்டத்தைச் சேர்ந்த மந்திரிகள் எதிர் மாறாகக் கிடைத்ததைச் சுருட்டிக் கொள்கிறார்கள் என்பது தெரியவருகிறது. எப்போதும் இப்படித்தான். நரி சுயமாக வேட்டை ஆடாது. வேட்டையாடிய உணவின் பகுதியை, விட்டுச் சென்றதை சாமர்த்தியமாகத் தின்று பசி ஆறும். விலங்குகளின் வாழ்க்கை முறையை நன்கு உணர்ந்து அதைப் பயன்படுத்தி வாழ்க்கையைச் சொல்லும் அரசியல் நிர்வாகம் இந்த முறையைப் பஞ்சதந்திரத்தில் முழுவதுமாகக் காணமுடிகிறது.

    விலங்கினங்கள் பற்றிய ஆவணப் படங்களும், அதன் வாழ்க்கையைப் பற்றிய விவரங்கள் அடங்கிய புத்தகங்களும், ஊடகங்களும் இல்லாத அக்காலத்தில், நாம் கண்டறியும் விலங்கின வாழ்க்கையை மிக அழகாக நுட்பமாக மனித இனத்து குணாம்சங்களுடன் ஒப்பிட்டு எழுதியுள்ளார் விஷ்ணுசர்மன். ராஜ தந்திரம், ஞானம், விவேகம் மட்டுமல்லாமல், உயிரினங்கள் பற்றிய தெளிந்த அறிவும் கொண்டவராய் இருந்திருக்கிறார் விஷ்ணுசர்மன்.

    பிறருக்குத் தலை வணங்கிக் குழைந்து பேசும் வழக்கம் பிங்களகன் என்ற சிங்கத்திற்குக் கிடையாது. பொறுமையின்மை, கோபம், ஆக்ரோஷம், பரபரப்பு ஆகியவற்றைக் கொண்டு தன் காரியங்களைச் சாதித்து வந்தது. பயமின்றித் திரிவது, இச்சகம் பேசுவதை இகழ்வது, காலைப் பிடித்துக் கெஞ்சுவதை வெறுப்பது, மனக் கலக்கமின்றி இருப்பது இவைதான் சிங்கராஜனின் அடையாளங்கள். ஒரு அரசன் எப்படித் தலை நிமிர்ந்து நேர்மையாக சிங்கம் போல இருக்க வேண்டும் என்பது இதில் உணர்த்தப்படுகிறது. தற்கால அரசியல் போக்குகளின் எதிர்மறை நிலையிலிருந்துதான் கதை தொடங்கிறது.

    புத்தகம் நெடுகிலும் வரும் பாத்திரங்கள், விலங்குகள், மனிதர்கள், அரசர்கள், குடும்பங்கள் எந்த நேரத்தில் (விலங்கு மனிதனாக, மனிதன் விலங்காக) எதுவாக எந்த தளத்தில் மாற்றம் கொள்கிறார்கள் என்பதை இடைவெளிக் கோடிட்டுப் பிரித்தறிய முடியவில்லை.

    பஞ்சதந்திரம் முழுக்க முழுக்க அரசியல் தந்திர நூல். இன்றைய அரசியல் கூட்டணிகள், துரோகங்கள், பொய்கள், புரட்டுக்கள் இவை இந்தப் புத்தகத்தைப் படிக்கும் போது நினைவுக்கு வராமல் படிக்க முடியவில்லை. அதே சமயம் இதிலுள்ள ஸ்லோகங்கள் என்றென்றைக்குமாக மனித இனம் அறிந்துணர வேண்டிய பொன்மொழிகள். இந்த ஸ்லோகங்கள் ஆழமானவை. ஸ்லோகங்கள் சார்ந்த அனுபவங்கள் நமக்குக் கிட்டும் போது இன்னமும் ஆழமும், நெருக்கமும் அதிகமாகும்.

    அவரவர் குணத்திற்கும் நிகழ்வுகளுக்கும் பொருத்தமானதாக கதாப்பாதிரங் களுக்கு பெயர்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவை காரணப் பெயர்கள். இடங்களின் பெயர்களும் அப்படியேதான். ஆனால் பெண் பாத்திரங்களின் பெயர்கள் ஆண்களின் பெயர்களுடன் சேர்ந்தே வருகின்றன. விலங்குகளில் பெண்ணினப் பெயர்களும் அப்படியே. பெண்ணின் பெயர்கள் ஓரிரு இடங்களில் வந்துள்ளன. மற்றபடி முதலையின் மனைவி, குரங்கின் மனைவி, அரசகுமாரி, ராணி, என்பதாகவே வருகிறது. பெண்கள், சாதிகள் பற்றி பஞ்சதந்திரத்தில் கூறியிருப்பது பொருத்த மற்றதாகவும் சற்றே கோபம் கொள்ள வைப்பதாகவும் இருக்கிறது. அரசியல் நிர்வாகம் பேசப்படுவதால் பெண்கள் பெயர்கள் தவிர்க்கப் பட்டிருக்கின்றனவா? மூல நூலாசிரியருக்குத்தான் தெரியும். இந்தகாலத்திலும் கூட, நிர்வாகத்திலும், அரசியலிலும் பெண்களின் பங்கு மிகக் குறைவுதான். அன்றைய கால கட்டத்தில் அரச பரிபாலனத்தில் பெண்களின் பங்கு அறவே இருந்திருக்காது. அவர்களின் நடமாட்டம் அந்தப்புரத்துடன் சரி. 

    பெண்களைப் பற்றி பஞ்சதந்திரம் சொல்லும் கருத்துக்கள், மாதிரிக்குச் சில கொடுக்கப்பட்டிருக்கின்றன.

‘மேலும்  ஸ்தீரிகள் விஷயம் தான் தெரிந்ததாயிற்றே ஒருத்தனோடு வம்பளப்பாள். இன்னொருத்தனைக் கனிவுடன் பார்ப்பாள். மூன்றாவனை மனதில் நினைத்துக் கொண்டே இருப்பாள். யாரைத்தான் பெண் திடமாகக் காதலித்தாள்'

‘எத்தனை கட்டைகள் போட்டாலும் நெருப்புக்குத் திருப்தி இல்லை.
எத்தனை நீரைக் கொட்டினாலும் சமுத்திரத்திற்குத் திருப்தி இல்லை.
எத்தனை ஜீவராசிகளைக் கொன்றாலும் யமனுக்குத் திருப்தி இல்லை.
எத்தனை ஆண்களைச் சேர்ந்தாலும் பெண்களுக்குத் திருப்தி இல்லை.'

    இதுபோல இன்னமும் பல நூல் நெடுகிலும் இருக்கின்றன.

    பஞ்சதந்திரத்தில் கடவுள் இடம் பெற்றதாகக் கூறமுடியாது. கடவுள் வாழ்த்து என்ற முதல் பாடல் உள்ளது. காளை மாட்டைப் பற்றிக்  குறிப்பிடும் பொழுது, சிவனுக்கு அது வாகனம் என்று வருகிறது. ‘தச்சனும் நெசவாளியும்' என்கிற கதையில் நெசவாளி விஷ்ணு வேஷம் தரித்து அரசகுமாரியை சந்திக்கிறான், அதற்கு விஷ்ணுவினுடைய வாகனம் போல கருட வாகனத்தை தச்சன் செய்து கொடுக்கிறான் என்று வருகிறது. கடைசியில் அரசர்களுக்கிடையில் சண்டை ஏற்படும் பொழுது நெசவாளியை உண்மையான விஷ்ணு என்று நினைத்துக் கொண்டிருக்கும் அரசன், மாப்பிள்ளையிடம் உதவி கேட்கும் பொழுது விஷ்ணு வேஷம் தரித்தவன் தோற்றால் நமக்கு அவமானம் என்று விஷ்ணுவின் மனைவி லட்சுமி கருதுவதால், அந்தக் கணம் உண்மையிலேயே நெசவாளிக்கு சக்தி உண்டாகி எதிரியைத் தோற்கடிப்பதாக வருகிறது. கடவுள் வாழ்த்துடன் தொடங்குவது அந்தக்கால மரபு என்பதால் இந்த நூலும் கடவுள் வாழ்த்துடன் தொடங்குகிறது.

    குழந்தைகளுக்கானது பஞ்சந்திரம் என்று எண்ணிக் கொண்டிருக்கும் நமக்கு பஞ்சதந்திரத்தில் குழந்தைகளே இடம் பெறவில்லை என்பது முரண் தானே. அரச குமாரர்கள் என்ற முட்டாள் சிறுவர்கள் நால்வரைத் தவிர நூல் நெடுகிலும் குழந்தைகளின் பங்கு இல்லை. அரசியலில் குழந்தைகள் இடம் பெறமுடியாது.

    பஞ்சதந்திரத்தில் கடவுள் வாழ்த்துச் செய்யுளில் விஷ்ணுசர்மன் ப்ரம்மா, விஷ்ணு, கார்த்திகேயன், மழை, காலன், நெருப்பு, இந்திரன், சந்திரன், குபேரன், சரஸ்வதி, கடல், நான்கு வேதங்கள், மலை, காற்று, பூமி, வாசுகி முதலான பாம்புகள், நதி, அஸ்வினி குமாரர்கள், லட்சுமி, காஸ்யபரின் மனைவி, தேவர்கள், புனித நீரிடங்கள் (காசி முதலாவை), யக்ஞம் (திதிகள்), வசு (எட்டு திசை) முனிவர் (வியாசர் போன்ற) கோள்கள் (ஒன்பது கிரகங்கள்) எல்லாவற்றையும் கூறி எங்களைக் காப்பற்றுங்கள் என்று வேண்டுகோள் வைக்கிறார்.

    அடுத்து தனக்கு முன்பு வாழ்ந்த அறிஞர்களுக்கு வந்தனம் சொல்கிறார். சுயமாய்த் தோன்றிய முனிவர், சுக்கிரன் வியாசர் பராசரர் போன்றவர்களுக்கும், சாணக்கியன் போன்று தனக்கு முன்னதாக நீதி சாஸ்திர நூல்கள் எழுதிய அனைவருக்கும் வணக்கம் சொல்கிறார்.

    அரசியல் பாடங்களும், அன்றாட வாழ்க்கைப் பாடங்களும் கதைகள் மூலம் எளிதாக எடுத்துச் சொல்லப் படுகின்றன. இடையிடையே வரும் ஸ்லோகங்களில் நீதியும், இலக்கிய நயமும் இருக்கின்றன.

    ‘மித்ரர்களுக்கு உபகாரமும், சத்ருக்களுக்கு அபகாரமும்  செய்து (அரசனின்) புத்திமான்கள் அரசனைத் திருப்தி செய்கிறார்கள்.'

    இன்றைய நாட்களில், சத்ருக்களுக்கு உபகாரம் செய்து அரசனின் பயத்தை அதிகரிக்கச் செய்து அருகில் அருகில் செல்கிறார்கள் அரசியல்வாதிகள்.

    ‘அரசர்கள், ஸ்திரீகள், கொடிகள் இவை மூன்றும் அருகில் எது இருக்கிறதோ அதைப் பற்றிக் கொள்கிறது'
    என்று விலங்கு மற்றும் செடி கொடி போன்ற  இயற்கையை சார்ந்தும் பலதும் பஞ்சதந்திரத்தில் இடம் பெற்றுள்ளன.

    விஷ்ணுசர்மன் முட்டாள்களுக்குச் சொன்ன அறிவுரையை விட அதில் விரவிக் கிடக்கிற விஷ்ணுசர்மனின் புத்திசாலித்தனமும், சொல்ல வேண்டியதை மிக எளிய முறையில் சிறு சிறு சம்பவங்களாகக் கோர்த்துக் கொடுக்கும் முறையும் பிரமிப் பூட்டுவதாக இருக்கிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட இவை, இன்றைக்கும் பொருத்தமாக இருப்பதால், இந்த நூல் நம்மை அதிசயத்தோடும் பார்க்க வைக்கிறது.

    அரசியல் நிர்வாகம் பற்றிய கருத்துக்கள் இன்றைக்கும் பொருத்தமாக இருக்கின்றன.

    அரசனிடம் நடந்து கொள்கிற மாதிரியே அரசனின் தாயார், ராணி, அரச குமாரன், முக்கிய மந்திரி, புரோகிதன், வாயில் காப்போன் ஆகியோரிடம் நடந்து கொள்ள வேண்டும் என்ற பொருள் தரும் இந்த ஸ்லோகத்திலிருந்து, அரசனுக்கு அருகிலிருக்கும் மனிதர்களை அனுசரித்துக் கொண்டு நற்பெயர் எடுத்துவிட்டால், மற்ற கதவுகள் விரைவில் திறக்கும் என்பதையும் அறியமுடிகிறது.

    ‘குத்தலும், ஏளனமுமாக அரசன் பேசும்போது யார் பதிலுரைப்பதில்லையோ, அவனை அரசன் விரும்புகிறான்'.

    ‘காலத்தில் பெய்த மழையால் ஒரு விதையிலிருந்து மற்ற விதைகள் முளைப்பது போல, வார்த்தைக்குக் கிடைக்கும் பதிலிலிருந்து மற்ற பேச்சுக்கள் முளைக்கின்றன.'

    ‘அரசன் விடாமல் சங்கடங்களில் மாட்டிக் கொண்டிருந்தால்தான் மந்திரிகளுக்கு சுகம்'

    இது போன்ற ஸ்லோகங்கள் ‘நட்பு அறுத்தல்' என்ற முதல் தந்திரத்தில் வருகின்றன.

    இது போலவே பரவலாக ஐந்து தந்திரங்களிலும் அதற்கேற்றவாறு கதைகளும், அதனுள் மற்றொரு கிளைக் கதையும், என்று பின்னிப் பின்னி கதை சொல்லும் முறை, இன்றைய பின்நவீனத்துவம், மாஜிக்கல் ரியலிஸம் அன்றே கையாளப் பட்டுள்ளது என்பதைத் தெரிவிக்கிறது. இன்றைய அரசியல் கூட்டணிகளும் அக்காலத்தியவையே என்றும் சொவது போல உள்ளன.

‘அரசர்கள் நாடுகளை விழுங்குகிறார்கள்.
வைத்தியர்கள் நோயாளிகளை விழுங்குகிறார்கள்.
வியாபாரிகள் சரக்கு வாங்குபவர்களை விழுங்குகிறார்கள்.
பண்டிதர்கள் மூடர்களை விழுங்குகிறார்கள்.
.....................................
எல்லோரையும் வேலை விழுங்குகிறது.'

இதுதானே வியாபாரம்?
இதுதானே அரசியல்?

‘பற்றற்றவன் அதிகார பீடத்தில் அமர மட்டான்.
புத்தியற்றவன் முகஸ்துதி செய்ய மாட்டான்.'

    இந்த ஸ்லோகம், சூரியனுக்கும் குடிகாரனுக்குமான சிலேடை.

    அரசனுக்கும், அவனுக்குக் கீழே உள்ளவர்களுக்குமான அரசியல் நிர்வாகம்.
அரசனின் அருகில் இருக்க வேண்டியவர்களுக்கான, அரசனின் குண தோஷங்களைக் கண்டு தனது இடத்தை நிர்ணயம் செய்ய வேண்டிய நிர்வாகம்.
கணவன், மனைவிக்கு இடையே ஏற்படும் குழப்பங்கள், அதைச் சீர் செய்யும் நிர்வாகம்.
ஆணுக்குத் தனியாகவும், பெண்ணுக்குத் தனியாகவும் நிர்வாக முறை.
பணத்தை சம்பாதிக்க நிர்வாகம்.
பணத்தை இழந்த பிறகு அடையும் வேதனையிலிருந்து வெளியேற நிர்வாகம்.
கிடைத்த இடத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும், தொடரவுமான அரசியல்.
ஒருவன் அடைந்த இடத்திலிருந்து அவனைக் கிளப்பி, அந்த இடத்தைப் பிடிப்பதற்கான அரசியல்,

    என்று எதிரெதிர் துருவங்களுக்குமான அரசியல் தந்திரங்களையும் பஞ்சதந்திரத்தில் விலாவாரியாக விஷ்ணுசர்மன், எடுத்தாளப்பட்ட ஸ்லோகங்கள் மூலமும், கதைகள் மூலமும் சொல்லியிருக்கிறார்.

    ஆங்காங்கே சிலேடை இருக்கிறது. தூணுக்கும், மந்திரிக்குமான சிலேடை, பாம்புக்கும் அரசனுக்குமான சிலேடை, சூரியனுக்கும் குடிகாரனுக்குமான சிலேடை போன்றவை இருக்கின்றன. மூல மொழியில் இருக்கும் இதன்  சிலேடைச் சுவையை அதில்தான் உணர முடியும்.
   
    சம்ஸ்கிருத மொழியில் ஸ்லோகங்கள் கவிதை நடையில் உள்ளன. ஸ்லோகங்கள் எவற்றிலிருந்து எடுத்தாளப்பட்டவை என்பது தெரியவில்லை.

    எல்லோரிடமும், எப்போதும் வியந்து சொல்லிக்கொண்டிருக்கும் பஞ்சதந்திரம்  பற்றியும், அதைப் பதிப்பிக்க வேண்டும் என்பது பற்றியும் என் நண்பர் ஹிந்து நடராஜனிடமும் சொன்னேன். அவர் பஞ்சதந்திரத்தை நிர்வாகவியல் கோணத்தில் விளக்கி புத்தகம் எழுதிக் கொண்டிருப்பதாகச் சொல்லிக் குறிப்புக்களைக் காண்பித்தார். தான் இதற்காக எடுத்துக்கொண்ட ஆதர நூலான சக்தி காரியாலயம் பதிப்பித்த அன்ன பூர்ணா ஈஸ்வரனின் மொழிபெயர்ப்பை நல்லி குப்புசாமி செட்டியாரிடமிருந்து வாங்கி ஜெராக்ஸ் எடுத்து பைண்ட் செய்து வைத்திருந்தார். உடனே அவரிடம் என் பதிப்புக்கு ஒரு அணிந்துரை கொடுக்க முடியுமா என்று கேட்டேன். என்னால் நம்பவே முடியவில்லை. இரண்டே நாட்களில் அதை எழுதி கணினியில் பதிவு செய்து அனுப்பியும் விட்டார். அணிந்துரைக்காக காத்திருந்த அனுபவம் உள்ளவர்களுக்கு இது ஒரு மாறுதல்.

    பஞ்சதந்திரம் முழுக்க முழுக்க நிர்வாக அரசியல் என்று இந்தப் பதிப்பிற்கு அணிந்துரை கொடுத்துள்ள ஹிந்து ஆர். நடராஜன் சொல்கிறார். அரசியல் நிர்வாகம், நிர்வாக அரசியல் இரண்டும் கலந்த வாழ்க்கை முறை முக்கியமாக சாதாரண மக்களுக்கு என்றில்லாமல் ஆளும் அரசர்களுக்கும், தலைமை ஏற்று நடத்தும் முன் வரிசை மக்களுக்கும் சொல்லப்பட்ட (எல்லாமே எளிய கதைகள் மூலம் கொடுக்கப்பட்ட)  நீதி போதனை என்று நேரடியாக இல்லாமல் கொடுக்கப்பட்ட நூல் இது. வாழ்க்கையின் பாடங்கள் எல்லாம் எளிமையாகவும், நேர்த்தியாகவும்  தெளிவாகவும் சொல்லப்பட்டிருக்கின்றன. மொழிபெயர்ப்பு மிக எளிமையாகவும், மூலத்திற்கு மிக நெருக்கமாகவும் அழகாகவும் உள்ளது. சம்ஸ்கிருத மொழி அறிந்தவர்கள் மிகவும் புகழ்ந்து சொல்லக் கேட்டேன். அன்னபூர்ணா ஈஸ்வரனுக்கு நன்றி.

    அரசியல், நிர்வாகம், இவற்றுடன் வாழ்வியலும் நிறைந்த பஞ்சதந்திரம் வெவ்வேறு தளங்களில் ஆராய்ச்சிக்கு இன்னமும் இடம் கொடுக்கிறது.

    மேலும் சில விஷயங்களை இந்த முன்னுரையில் கூற வேண்டும். இன்டெர் நெட் பற்றிக் குறிப்பிடாமல், கணினியைப் பற்றிக் குறிப்பிடாமல் எதையுமே சொல்ல முடியாத காலம் இது. ஆங்கிலத்தில் வலைத்தளத்தில் பஞ்சதந்திரம் பற்றிய குறிப்புக் களைக் கண்டு மகிழ்ந்தேன். எத்தனை அழகழகான ஓவியங்கள். அவற்றிலிருந்து சிலவற்றை எடுத்து முகப்போவியமாகவும், பின் அட்டை ஓவியமாகவும் உள்ளே சில கருப்பு வெள்ளைப் படங்களாகவும் கொடுத்திருக்கிறோம்.

    எல்லாவகையிலும் பிரமிப்பையே கொடுத்த பஞ்சதந்திரம் எனக்கு அதிர்ச்சியையும் தந்தது. வலைதளத்தில் பஞ்சதந்திரம் என்று தமிழில் தட்டினால், கொட்டுவது கலஹாசன் நடித்திருக்கும் பஞ்சதந்திரம் திரைப்படம் மட்டுமே.  இனிமேல் மொழிபெயர்ப்பு பஞ்சதந்திரமும் தமிழில் இடம் பெற வேண்டும். மற்றபடி  ஆங்கிலம், ஹிந்தி, சம்ஸ்கிருதம் என்று எல்லாவற்றிலும் விஷ்ணுசர்மனின் பஞ்சதந்திரம் பற்றிய தகவல்கள் கொட்டுகின்றன. பல்கலைக் கழகங்களில் (காசி போன்ற) இந்நூல் பாடத்திட்டத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவை எத்தனை பிரதிகள் அச்சிடப்பட்டன, எத்தனை பதிப்புக்களைக் கண்டது என, எல்லா விவரங்களும் கிடைக்கின்றன. தமிழ் வலைத்தளமும் பஞ்சதந்திரம் பற்றிய முழுமையான தகவல்களைத் தரவேண்டும் என்பது என் விருப்பம். அச்சில் படிக்க விரும்பும் அனைவருக்கும் இந்நூலின் மறுபதிப்பு மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்று நம்புகிறேன்.

    சக்தி. வை. கோவிந்தன் கூறியிருப்பது போல சில வாசகங்கள் இக்காலத்திற்கு ஒவ்வாததாக இருக்கிறது. அதைக் கால மாறுதல் என்று எடுத்துக்கொள்ள வேண்டும். இருந்தாலும் சொல்லப்பட்ட காலத்தையும், யார், யாருக்காக எழுதியது என்பதையும் மனதில் கொள்ள வேண்டியிருக்கிறது. உள்ளதுஉள்ளபடி பதிப்பிப்பதே பதிப்பாளரின் கடமை. அதையே அவர் செய்தார். 1958 இல் பதிப்பித்த அன்னபூர்ணா ஈஸ்வரின் மொழிபெயர்ப்பு இன்றும் சிறப்பாக இருக்கிறது. தமிழ் மொழிபெயர்ப்புக்கு ஆதரமான பஞ்சதந்திரம்  பூர்ணபத்திரரின் சம்ஸ்கிருத  நூல்.

    கணினியும், கைபேசியும் இல்லத தொடர்பு சாதனங்கள் அற்ற அக்காலத்தில் (இக்காலத்தில் கணினியின் அவ்வளவும் வேதவாக்கு என்று புகழ் பாடும் குழு ஒன்று இருக்கிறது.) இது தொடர்பான தகவல்களுக்காக அலைந்து, பாடுபட்டு, தகவல்ளைச் சேகரித்து, ஆதாரங்களுடன் வெளியிட்டிருக்கும் அவர் எவ்வளவு உழைத்திருப்பார்?  அவர் தமிழுக்கு, பதிப்பு உலகுக்குச் செய்த பணி அளவிட முடியாதது. பஞ்சதந்திரம் எந்த எந்த மொழிகளில் அக்காலத்தில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது என்ற தகவலையும் கொடுத்திருக்கிறார்.

    எழுத்துப் பிழைகளே அற்ற, தரமான அச்சில், மலிவு விலையில், நல்ல தாளில், கெட்டி அட்டையில், வெளிவந்த சக்திகாரியாலப் பதிப்பு இன்றையப் பதிப்பாளர் களுக்கு ஒரு முன்னுதாரணம். ஓரிரு நூல்கள் வெளிவந்த உடனேயே  தான் மிகுந்த தமிழ்ச் சேவை செய்து களைப்படைந்து விட்டதாகவும், இந்தத் தமிழ் கூறும் நல்லுலகம் அதற்குத் தகுந்த அங்கீகாரத்தைத் தனக்குக் கொடுக்கவில்லை எனவும், அடுத்தவர்களின் எழுத்துக்கள் வெறும் குப்பை என்றும், பரிசுகள் குவியவில்லை என்றும் புலம்பும் எழுத்தாள, பதிப்பாளர்களிடையே , நம்மிடையே இப்படியும் சிலர் வாழ்ந்து சென்றிருக்கிறார்கள்.

    நூலைப் பதிப்பிக்கத் தமிழ் வளர்ச்சித் துறையின் நிதி உதவிக்கு விண்ணப்பித் திருந்தேன். அதைத் தேர்வு செய்து எனக்கு ஊக்கம் அளித்த தமிழ் வளர்ச்சித் துறைக்கு நன்றி. ஐம்பத்து நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் அச்சிடப்பட்ட (1958) பழைய நூல், பழுப்பு நிறத்திற்கு மாறியிருந்த நூல். தொட்டால் பக்கங்கள் பொடிந்து உதிரும் நிலை. அதை தட்டச்சு செய்ய என் தோழி அமுதாவை அணுகிய போது மறுக்காமல், புத்தகத்திற்கு சேதாரம் விளைவிக்காமல் சரியான நேரத்திற்கு தட்டச்சு செய்து தந்தார். அமுதாவுக்கு நன்றி.

    நூலாவதற்கு முன்பு பஞ்சந்திரம் பலரைச் சென்றடைந்தால் நன்றாக இருக்குமே என்று ‘திண்ணை' இணைய இதழாசிரியர், நண்பர் ராஜாராமனை அணுகிய போது, தொடராகப்போட சம்மதித்துத் தொடராக இன்னமும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். அவருக்கும் நன்றி.

    பொருளிட்டுவதற்காக இதை மறுபதிப்பு செய்யவில்லை. தமிழில் தரமான நூல்கள் வெளியிட்டு லாபம் அடைந்ததாக வை.கோவிந்தன் காலத்திலும், தற்காலத்திலும் யாரும் உதாரணத்திற்குக் கூடக் கிடைக்க மாட்டார்கள். நூலக ஆணை இருந்தால்தான், நூல்கள் அடுத்தடுத்து வெளியிட பணமும், குடும்பத்தில் அனுமதியும், குழந்தைகளிடம் மரியாதையும் கிடைக்கும்.

சக்தி வை.கோவிந்தன் நூற்றாண்டில் இதை மறுபதிப்பு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நன்றி.
க்ருஷாங்கினி


அக்டோபர் 2012.
சென்னை-47. 










 

Wednesday, September 26, 2012

கவிதை

புன்னை மரம்

மரம் நடு விழா வைபவத்தில்
நட்டு நிறுத்தப்படுகிறது;
விழா எடுக்காமலும் தெருவோரம்
ஏதோ ஒரு பெயர் தாங்கிய
இரும்பு வேலியின் நடுவில்.

நீர் கோராது அதிகம்
விலங்குகள் அண்டாது, நின்று
வேகமாய் வளரும்;
கிளை நுனியில் பெரிதாய் விரிந்து
கண் பறிக்கும் கவர்ச்சி காட்டாமல்
வண்ணத்தால், வாசனையால்
திசை திருப்பாது மெல்லிய சிறு பூக்கள்
உச்சியில் பூக்கும். பூப்பது தெரியாமல்
தரை உதிரும் சிறு பூக்கள் கொண்டு
கண்டடையலாம் இதன் வசந்தத்தை.

மேன்மேலும் வளர்ந்து வானெட்ட
முயலாது ஒருபோதும்.
பாங்காக ஐந்தடிக்குள்
உடலை நிறுத்தி வைக்கும்
கிளை விரித்து நிழல் கொடுக்கும்
பெரும் கொடையாய்.

ரயிலடியில் ஒன்றுக்கும் மேலாய்
ஒரே சிமென்ட் வட்டத்துக்குள்
முரணின்றி இணைந்து வாழும்.
எல்லோருக்கும் உகந்ததாய்,
யாருக்கும் உறுத்தாததாய்
ஆங்காங்கே வளர்ந்து நிற்கும்
இப்புன்னை தன் கண்கள்
இமை மூடி சிதறவைக்கும்,
காலடித் தளம் பரப்பி.

ஆனாலும்கூட-

இட நெருக்கடியில் சற்றே இடம் மாறி
குறுக்காக வளர முற்பட்டால்
சட்டென்று முறிக்கப்பட்டு
மொண்ணையாகவே நிற்கும்
இப்புன்னை-
பெண்ணைப்போல

பாட்டில்களில் மருந்துகள் பழங்கள் மற்றும் மரணங்கள்(சிறுகதை)

    

பாட்டில்களில் மருந்துகள் பழங்கள்
மற்றும் மரணங்கள்

   
   
எனக்கு மற்றுமொரு முறை மூத்திரம் போக வேண்டும்  போல் இருந்தது.  எழுந்து மறு முறை செல்ல ஆயாசமாகவும் அலுப்பாகவும்  இருந்தது.  ஆனாலும் வேறு வழி இல்லாமல் எழுந்தேன்.  வெளிளை  பீங்கான் ஏந்தலில் எனது ரத்தம் கலந்த சிறுநீர் தாரையாக சிகப்புக்  கோடுகளாக இறங்குவதைப் பார்க்க ஏற்படும் பயமும் ஒத்திப் போடக்  காரணம்.  மூத்திரத் தூவாரத்திலிருந்து ஒரு கூர்மையான ஊசி உச்சந்  தலை வழியே வௌ¤ப்படும் மூர்க்கமான வலி. சதைத் துண்டுகளும் இரத்தக் கவுச்சியுமாக மூத்திர நாற்றம் ஒரு நிமிடத்திற்கு ஒரு முறை. வீடோ கோடு கீறியது போல் நீளமானது.  

      புறக்கடை தனியானது.  அறைகள் முடிவுக்கு வந்தபின் கடைசிக் கதவு திறத்ததும் வெறும் வெளி. அதன் முடிவில் சிறு சதுரம். கழிப்பறை. கழிப்பறை செல்லாமல் வேறு எங்கும் கழிவுகளை வௌ¤யேற்ற முடியாது. இரவு. பின்இரவு. வலியும் நோயும் அதிகமாகும். கணவனைத் துணைக்கு அழைத்துத் தான் செல்ல வேண்டும்.  திறந்த வௌ¤ பயத்திற்காக மட்டு மல்லாது பலவீனமான உடலுக்காவும் கூட. உடம்பு கொதித்துக் கொண்டு, கண்கள் வழியே உஷ்ணம் வௌ¤வந்து கொண்டு இருந்தது.  உறங்கும் கணவனை இருமுறை அழைத்துப் பின் நானே கதவு திறந்து இருள் தாண்டி சிறுநீர் கழித்து விட்டு வந்தேன். 
 
       மாடியில் குடியிருப்பு. டிசிமெண்ட் தரை திறந்த வௌ¤ தாண்டி பின் எனது படுக்கையை அடைந்து படுக்கும் பொழுதிற்கெல்லாம் திரும்பவும் ரத்தம் கலந்த சிறுநீர் தாரை, வாயிலை எட்டிப் பார்க்கும். வீடோ கோடு போல. பாண்டி ஆட கோடிட்டிருந்தது போன்று தடுப்புச்சுவர். ஒரு காலத்தில் அகலமாக இருந்த வீடுகள் வம்சப் பெருக்கத்தாலும், அதன் வகுத்தலாலும் அகலம் சுறுக்க குறுகி நீண்ட வாக்கிற்கு வந்து நிற்கிறது.
    
அகலம் குறுகக் குறுக சன்னல்கள் வைக்க இயலாத அடுத்த அடுத்த சுவர்களைக் கொண்டு காற்றடைத்ததும் காற்றுக்காக ஏங்கி, ஓட்டின் கண்ணாடி சதுரத்தில் வௌ¤ச்சமும் சூரியனும் நிலவும் நட்சத்திரமுமாக கருத்த வௌ¤யில் வெளுத்த சதுரங்களை ஆங்காங்கே கொண்டு நிற்கும். வீடு அருகில் இரண்டு புறமும் இது போல கோர்த்து வாங்கப்பட்ட ஓட்டு வீடுகள்.  பம்பாய் பணம் கொண்டு கிராமத்தை ஆச்சரியப் படுத்த நான் இருந்தது மாடிவீடு. எங்கும் சிமெண்ட் இட்டு அடைக்கப் பட்ட கட்டங்கள். சுவர் முழுவதும் இடைவௌ¤யற்று மாடியும் எழும்பி நிற்கிறது. மாடிக்கும் கீழுக்குமாக காற்றோட்டம் கருதி கூடம் என்ற நீள சதுரத்தில் ஒரு ஓரம் நடுப்பகுதி பெருத்து வீங்கி தரையிலிருந்து மேலெழும்பி நிற்கும். அந்தப் பகுதி முழுவதும் குறைந்த சுவர்களையும் நிறைந்த ஐன்னலும் கதவுமாக மாடிக்கும் கீழுக்குமான காற்றோட்டத்தைதோடு கூட பேச்சுக்களையும் இருவருக்கும் பரிமாறும் பகுதி அது. கலர் கண்ணாடிக் கதவுகள் எப்போதும் மூடப்படாது.  அது மூடினால் காற்றடைத்து இறந்து விடுவோம் என்று எப்போதும் தோன்றும். 
 
வலியோடு வந்து படுக்கையை அடைந்த நான் உறக்கம் இன்றி முழித்த நிலையில் மல்லாந்து கிடந்தேன், அடுத்த சிறுநீர் கழிப்பின் அழைப்பை எதிர் பார்த்து.  தலை மாட்டில் ஒரு பூனை தன் கீச்சுக் குரலில் அழைத்தது.  தலை எம்பிப் பார்த்த என்னின் பார்வையில் அந்தப் பூனை படாமல் இருந்ததால் அது வீட்டிற்கு வௌ¤யே என்று கொண்டேன்.  ஆனால் சிறிது நேரத்திலேயே இரண்டு பூனைகள் மிக அருகில் தலைக்கு மேல், அதன் முகங்கள் தலைகீழாகப் பார்க்க என்னைப் பார்த்து குரல்கொடுத்துக் கொண்டிருந்தன.இரண்டு நாலாயிற்று. பார்க்கப் பார்க்க நாலு இன்னமும் அதிக எண்ணக்கையில் பூனைகள் தலையைச் சுற்றி சூரியக் கதிர்களென முளைத்து விட்டிருந்தன.  ஏறக்குறைய ஏழு பூனைகள்.  சூரிய ரதம் கட்டி இழுக்க ஏற்பாடான குதிரைகள்.எல்லாம் என்னை நோக்கித் தன் முகங்களை இழுத்துக் கொண்டு பாயத் தயார் நிலையில். எறிந்து விட்ட கல்லென ஒன்று என் தலையைக் கவ்வி இழுத்தது.  பூனை நரமாமிசம் சாப்பிடும் என்று கேள்விப் பட்டதில்லையே நான்.  அதன் கண்களில் அலாதி பிரியமும், வெறியும், களிப்பும். எனக்கோ, வெறும் பீதி மட்டுமே. சின்ன மிட்டாய்த் துண்டை இழுத்துப் போக முயற்சிக்கும் எறும்புகளைப் போல என் பக்க வாட்டில் பூனைகள் வளர்ந்து விட்டிருந்தன. என் மூத்திரக் கவிச்சைக்கு வந்ததா இந்தப் பூனைகள்? அலறல் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தன.

என்னை அவைகள் தொடர்ந்து இழுத்துச் சென்றுவிடா வண்ணம் நான் பம்பரம் போல என் உடலைச் சுழற்றிச் சுழற்றித் திருகிக்கொண்டே இருந்தேன். ஆனால் அவைகளும் என் உடலைக் கவ்விக்கொண்டு என்னுடனேயே சுற்றிச் சுற்றி இடுப்புத் துணி வட்டமிடுவதாய்  லேசாக இல்லாமல் பாராசூட் இறங்குவதாக என்னையும் கவ்விக்  கொண்டு கீழிறக்கமுயன்றன.  பூனைகளில் அலறல் சன்னல் இல்லா மற்ற சுவர்களிலும் ஓவியம்  வரைந்து வழிந்து வழிந்து கீழிறங்கியது.  பூனைகளின் குரல் வழிசலால் சுவற்றில் ஆங்காங்கே   தாரைகள் ஏற்பட்டு முந்தைய, அதற்கு முந்தைய என்று கீழ் வர்ணங்களைத் தோலுரித்துமேலெழுப்பிக் கொண்டிருந்தன. ஆதி சாயமும் காணாமல் போனால் சிமெண்டும், செங்கல்லும் உரிய ஆரம்பிக்கும். ஓட்டைகள் விழுந்த சுவர்கள் வழியே நான் இந்தப் பூனைகளிலிருந்து தப்பித்து விடுவேனா? அல்லது ஒட்டிய அட்டைகளாய் இவைகளும் உடன் தொடருமா? அம்மா சொல்வாள் பிள்ளைப் பெற்ற அறைக்குப் பூனைகள் வரும் மாமிச மணத்திற்காக   என்று.  அந்த மாமிசமும் என் உதிரம் கலந்த சிறுநீரில் வௌ¤ வரும் மாமிசமும் ஒன்றா? இது ஐனனத்திற்கானதா?  மரணத்திற்கானதா?  உதிரத் துகள்கள் எதற்கானது?
   
உச்சந்தலையில் நீட்டிக்கொண்டிருக்கும்கூர்மையான ஊசி  என்னைப்  பூனைகளுடன் அழுத்திக் குத்தி சொருகியிருக்கிறது. பூனைகளின் கண்கள்  பச்சையாய் மட்டும் ஔ¤ராமல், சிவப்பாயும்,  நீலமாயும் ஔ¤விட்டு என்  உடல் நெருப்பைத் தன் கண்களின் வழியேவும் படர விட்டுக் கொண்டிருந்தன.  என் உடல் உஷ்ணம் சிறிதும் குறையாமல் வெந்நீர் ஊற்றென ஊற்று வாயில் தெரியாமல் வௌ¤வந்து கொண்டிருக்கிறது. சமமாகப் பரவி எல்லா தூவாரங் களிலிருந்தும் ஊற்றுவாயில் கொண்டு ஊறி வருகிறது. நானே பூனை சுற்றிப் படர்ந்த, வெப்¢பத்தை வௌ¤விட்டுக் கொண்டு சுற்றிலும் உஷ்ணம் பரவிய  விதானச் சித்திரமாக மேல் தளத்தில் அப்பி இருந்தேன். கீழ் படுக்கையில் இருந்து நான் மேல் நோக்கியும் மேலிருந்து கீழ்நோக்கியும்  என்னை நானே பிரதிபலிப்புப் போல் பார்த்துக் கொண்டு இருந்தாலும், கீழ் படுக்கையில் படுத்திருந்த என் நாடி
நரம்புகள் அடைத்துக் கொண்டு  வேகவேகமாய் என் உடலைச்சுற்றி வலி வந்து கொண்டிருந்தது. 

பெரிய பெரிய புத்தகமாக புரியாத மொழியில் அம்மா தான், படித்து அடுக்கி வைத்திருப்பார் பைண்ட் இட்டு.  அவைகள் தலை வழி திறக்கும் அலமாரியில் அடிப் பெட்டித் திறப்புக்களில் அடுக்கப் பட்டிருக்கும். எப்போதும் அழகாக..  புத்தகங்கள் படிப்¢பதற்காக மட்டுமல்ல பார்ப்¢பதற்கு மானது என்று உணர்த்த வல்லவைகள்.  அவற்றில் அடிக்கடி வண்ணப் படங்கள் தென்படும். நீண்ட வழியை செங்குத்தாக அடைத்துக் கண்டிருக்கும் , இருமறுங்கும்  செடிகளும், கொடிகளும் அவற்றில் ஆங்காங்கே தலைகள் எட்டிப்பார்த்துக் கொண்டு, யாருடையவை அவைகள்?  ஏன்தொங்குகின்றன? பாதையில் ஏன் யாருமில்லை?  செடிகளில் ஏன் பறவைகள், பூக்கள் இல்லை?  செடிகளில் இடையில்  செங்குத்தாக ஓடுவது பாதையா அல்லது குறுகிய நிலையிலிருந்து அகலமாக ஓடிவரும் நதியா? அல்லது செங்குத்தாக  இரும்புப் பலகையாக அடர்ந்து வரும், விழும் நீர்வீழ்ச்சியா?   

        பெரிய வாணலியில் சூடு பறக்க கொதித்துக் கொண்டிருக்கும் திரவத்தில் முக்கிப் போட அருகில் அடுக்கப்¢பட்டிருக்கும் பொருட்கள். மரணம் வாணலியில் திரவமாக்க கொதித்துக் கொண்டிருந்தது. நான் விதானத்திலிருந்து எனக்காகக் கொதித்துக் கொண்டிருக்கும் திரவத்தில் இந்தப் பூனை களுடன்தான் விழப்போகிறேன்.  இந்தப் பூனைகளின் அலறல் அப் போதாவது அடங்க வேண்டும்.  குறுக்கும் நெடுக்குமாக   பூனைகளின் இழுத்து இழுத்து அலறும் குரல் வலையிட்டுப் பின்னி அறைமுழுவதும் தொங்கிக் கொண்டு, அல்லது திடமான நூலாக இழுத்துக் கட்டப்பட்டுக் கிடக்கின்றன. பின்னப்பட்ட வலைகளில் தொங்கும் பாட்டில்களில், மருந்துகள், பழங்கள் மற்றும் மரணங்கள்.
         
         ஆனால் அன்று முழுவதும்  வலியிலும், பூனைளகளாலும் அவஸ்தைப் பட்ட நான் மறுநாள் கீழ் வீட்டில் கேட்ட போது பூனைகளின் அலறலை யாருமே கேட்கவில்லை என்றே கூறினர். என்னைப் பொறுத்தவரை பூனைகளும் மரணமும் அன்றைய நிஐம்.எங்கோ சிறு பிசகலில் மரணம் விட்டுப் போயிருந்தது.  பூனைகள் மட்டும் இருந்தன.  என் உடனிருந்த கணவருக்கும் பூனைகள் நிஐம்தான்.   மரணம்   

அன்று என்னைவிட்டு அகன்றுவிட்டாலும் ஒரு இலேசான இறகாக அது அவ்வப் போது என் முன் வண்ண வண்ண உருவம் கொண்டு நிற்கும்.  ஆனால் மரணம் கொதிக்கும் திரவமல்ல, வெது   வெதுப்பான இதமான சூட்டடைத்த பைதான் என்று அறிந்த போது வலியற்ற ஒலியற்ற ஆனந்தத்தில் மிதந்ததாக நினைவு. அது எப்போதும் சிக்கென வசப்படுவ தில்லை. மரணத்தின் முன் அனுபவம் போல் பூனை வாயோரம் ஒட்டிக் கொண்டு இருக்கும் கிளியின்இறகு. மரணம்   பூனைகளால் உட்கொள்ள ப்பட்டுவிட்டது கிளிகளாக.  அதன் இறகு மட்டுமே என் முன் பச்சை வண்ணம்  கொண்டு. பூனைகள் தங்களின்   பறத்தலுக்கான இறகு முளைப்பதின் ஆரம்பம் இது என்ற மிதப்பில் சுற்றுச் சுவரில் கம்பீரமாக வலம் வந்து கொண்டிருக் கின்றன. மரணம் பூனையாகுமா அல்லது கிளியாகுமா அல்லது பெயரில்லாப் பறவையா  கொதிக்கும் திரவமா  என்று யோசித்து யோசித்துப் பார்க்கையில்   மரணம் கவிதையாயிற்று. 

   

































        

























        

Sunday, September 2, 2012

ஏழு கவிதைகள் (சென்னை வானொலியில் ஒலிபரப்பப்பட்டவை )

1) பூமித்தாய்
அன்று- பூகம்ப பூமியாய் நீ
அசைந்து அசைந்து ஆட்டிவைக்க
அனைவரும் ஒன்றாகி அருகருகே
உண்டோம்; உறங்கினோம்.
இன்றோ- மதக் கலவர பூமியாக
உன்னை மறந்து சண்டையிட்டோம்
எங்களக்குள், அனைத்தும் மறந்து!

2) உறவு

வெளிக்கதவு பூட்டி, உட்கதவு
திறந்திருக்கும்- சற்றே.
இருளை உணர்கையில் எல்லாமே
அடைத்திருக்கும்; உள்ளேயும் வெளியேயும்
பிரவேசிக்கத் தடை- உறவின் விரிசல்.

3) காற்று

வெயில் எங்கும் எரிக்கையில்
சிறிய நீரோட்டம்
காற்றுக் கடந்து வரும்; சிறிது
ஈரத்தையும் கலந்துகொண்டு-
‘சிலீர்' என்கிறது!

4) மூங்கில்

முழு மூங்கில் வெட்டி, பிளாச்சுகளாக்கி,
சாமிக்குச் சப்பரமும் சாவுக்குப் பல்லக்கும்
கட்டிடலாம்- பூக்கொண்டு;
பூவற்று கயிறு கொண்டு கட்டி
பாதாளச் சாக்கடை அடைப்பும் எடுக்கலாம்,
எதற்கும் வளையும் மூங்கில்- எனவே.

5) ரயில் நிலையம்-1

நடைமேடையும் அமர ஆங்காங்கே
கல் பெஞ்சுக்களும். அதில் வயோதிக,
இளம்ஜோடி, குடிகாரன், பிச்சைஎடுப்பவர்கள் என,
யார் யாரோ அமர்ந்தும் படுத்தும்-பெயர்ப்
பலகையில் மட்டும்தான்
மாற்றமுடன். மற்றெல்லாம் ஒன்றுபோல.

6) ரயில் நிலையம்-2

தண்டவாளத்தின் இடையில் ஆங்காங்கே
பிளாஸ்டிக் கோப்பைகள், தண்ணீர்ப் பைகள்,
சிகரெட்டுப் பெட்டிகள், அழுகிய பழங்கள்-
இடையிடையே பசும் புல்லும், பெயர் தெரியா
பலவண்ண மலர்களுமாய்
விடிகிறது ஸ்டேஷன்.   

7) ரயில் நிலயம்-3

சிதறிவிட்ட பாப்கார்ன் பூக்கள், தவறிவிழுந்த
இட்லித் துண்டுகள், ஏதோதோ தின்பண்டம்.
தண்டவாளத்தின் அருகில் துளையில்
வெளிப்பட்ட எலி எதையும் உள்ளிழுத்துச்
சேமிக்கும் அவ்வப்போது; ரயிலில்
அடிபட்டு மாளாமல்.

ப. முத்துக்குமாரசாமி 'குருவே சரணம்' நூலிலிருந்து

ப. முத்துக்குமாரசாமி

நான் பிறந்தது இலங்கையில். என் அம்மாவின் ஊர் சுழிபுரம் என்னும் கிராமம். அருகில் பறாலை முருகன் கோவில். அம்மா திருமணமானபின் புகுந்த இடமும் நல்லூர். முருகன் கோவிலுக்கு புகழ்வாய்ந்த இடம். எனவே, அம்மா வாழ்நாள் முழுவதும் முருகா முருகா என்னும் நாமத்தையே கேட்டவர்.

என் அப்பாவின் பெயர், பரமசாமிக் குருக்கள். நல்லூர் முருகன் கோவில் அர்ச்சகர். அப்பாவுக்குப் பொய் சொன்னால் பிடிக்காது. யாராயிருந் தாலும் பொய் சொன்னால் மிகவும் கோபிப்பார். தமிழ், ஆங்கிலம் வடமொழி ஆகிய மூன்றிலும் புலமை பெற்றிருந்தார். எனக்கு சைவ வினா விடை, பால பாடம் நன்னெறி, நல்வழி ஆகிய பாடங்களச் சொல்லிக் கொடுத்தவர். நாங்கள் நான்கு ஆண் பிள்ளைகள், ஒரு பெண். எப்போழுதும் கலகலப்பு நிறைந் திருக்கும் வீடு.

என்னுடைய மூன்றாம்வயதில் சிறுத்தொண்டர் நாடகத்தில்  சீராளனாக வேடமிட்டு, பாட்டும் பாடி நடிக்கவும் செய்தேன். என் மாமா வைத்தியநாத சர்மா என்னை வழிநடத்திய சிற்பி. மிக இனிமையாகப் பாடக்கூடியவர். அவரின் குரலின் இசை மயக்கத்தில்தால்தான் நான் இசைத்துறைக்கு வந்தேன். என் மாமா, கந்தரலங்காரம், கந்தரனுபூதி, இவைகளை பிருந்தாவனசாரங்கா, திலங், மாண்டு, ரஞ்சனி போன்ற ராகங்களில் பாடக்கேட்ட அனுபவம் இன்னும் மனதில் தெளிவாகப் பதிவாகி இருக்கிறது.

இப்படி வாழ்க்கை சுகமாகவே சென்று கொண்டிருக்குமா என்பது பற்றிய அறிவுகூட இல்லாத என்னுடைய ஏழாவது வயதில் என் அப்பா மறைந்தார். ஐந்து குழந்தைகளையும் வைத்துக்கொண்டு அம்மா கடுமையாயப் போராடினார். என் அம்மாவின் உடன்பிறப்புக்கள் எங்களைப் பிரித்துப் பகிர்ந்து கொண்டு இருக்க வேண்டிய காலமானது. நான் என் அம்மாவின் பாட்டி, மற்றும் பெரிய மாமாவுடன் வசித்தேன். பெரிய மாமா கண்டிப் பானவர், காரணம் குழந்தை சரியான பாதையில் நடக்கத்தானே பொறுப்பு என்ற அக்கறையும், அன்புமே. ஆனால் அந்த மாமாவும் சிறிது காலம் கழித்து மறைந்துவிட்டார். நானும் என் பாட்டியும் தனித்துவிடப் பட்டோம். எனவே என் கல்வி, வாழ்வு எல்லாமே பெரும் போராட்டத்தில் கழிந்தது.

பள்ளிக்கூடத்தில், சனி, ஞாயிறு இசை வகுப்புகள் உண்டு. வசதி இன்மையினால் என்னால் அதில் கலந்து கொள்ள முடியவில்லை. ஆனாலும் இசையின் மீதிருந்த ஆர்வத்தினால் வகுப்பு நடக்கும் இடத்திற்கு வெளியே சுவருக்கு அப்புறம் நின்றுகொண்டு பாடங்களைக் கேட்டுக் கொண்டிருப்பேன். ஒரு நாள், நிசப்தமாகவே இருந்தது. பாட்டு சப்தமே இல்லை. ஏன் என்று அறிந்துகொள்ள மெல்லச் சுவர் ஏறி  உள்ளே பார்த்தேன். அப்போது என் சித்திர ஆசிரியர் சி.பொன்னம்பலம்  என்னைப் பார்த்து விட்டார். ‘இசை மேல் இவ்வளவு ஆர்வமா, கற்றுக்கொள்கிறாயா?' என்றார். ஆனால், நான் அவரிடம் ‘என்னிடம் பணம் இல்லை, எனவே வேண்டாம்' என்றேன். ‘நான் பணம் கட்டினால் கற்றுக்கொள்வாயா?' என்றார். சரி என்றேன். என்னை வகுப்பில் சேர்த்தார். முந்தையப் பாடங்களைக் கற்றுக்கொள் என்றார் இசை ஆசிரியர், தா.பொன்னம்பலம். எனக்கு அனைத்தும் மனப் பாடம் நான் சுவருக்கு வெளியே நின்றுகொண்டு அனைத்தும் பயின்று உள்ளேன் என்றேன். எனது முதல் குருநாதர் தா.பொன்னம்பலம் அவர்கள் தான். சுமார் பத்து மாதங்கள் அந்த இசை வகுப்பு நடந்தது. கீதம், சுரஜதி, வர்ணம், கீர்த்தனம் வரைக்கும் இவரிடம் பயின்றேன். அதுதான் என்னை இன்றுவரை வழிநடத்திய பலமான அடிப்படைப் பாடம்.

நடன ஆசிரியர் செல்லத்துரையிடம் நாடகமும், நடனமும், இசையும் பயின்றேன். இவர் மேடை ஏற்றிய  ‘ஸ்ரீ வள்ளி' நாடகத்தில் நான்தான் முருகன். இந்த நாடகம் 21 பள்ளிகளுக்கிடையே நடந்த  நாடகப் போட்டியில் முதல் பரிசும் பெற்றது. எனக்கு சிறப்புப் பரிசும் கிடைத்தது. அந்தப் பள்ளியின் தமிழ் ஆசிரியர் பொன்.சிவப்பிரகாசம் எழுதி இயக்கிய பதினாறு  நாடகங்களிலும் நானே கதாநாயகன். நான் படித்து, இசை பயின்ற அதே  மேல் நிலைப்பள்ளியில் இசை ஆசிரியராக இருந்த வைத்யலிங்கம் அவர்களிடம் இசை பயின்றேன். பிறகு நாதசுர வித்வான், சுப்பையா பிள்ளையிடம் என்னை இசை பயில வைத்தார் என் பெரிய மாமா. ஆனால் பெரியப்பாவின் மறைவுக்குப் பிறகு வாழ்க்கைப் போராட்டத்தில் என்னால் இசை பயில முடியாமல் போயிற்று. 

பள்ளிப் படிப்பு முடித்துப் பல நாட்கள் சென்றபின் 1957ல் நான் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் சேர்ந்தேன். நான் சேர்ந்த முதல் நாள், முதல் வகுப்பில் நுழைந்த என்னை அன்புடன் ‘வாங்க' என்று அழைத்து பாடம் நடத்தினார். அவர்தான் ‘தான் பெரிய இசை மேதை' என்ற கர்வம் துளியுமற்ற மன்னார்குடி ராஜகோபால பிள்ளை. திருப்பாம்புரம் என்.சிவசுப்ர மணிய பிள்ளை அந்தப் பல்கலைக் கழகத்தில் எனக்கு, சுரதாளக் குறிப்புகள் எழுதக் கற்றுத் தந்தார். இவர் புல்லாங்குழல் இசைக்கலைஞர் திருப்பாம்புரம் சுவாமிநாத பிள்ளையின் சகோதரர். இருபதுக்கும் மேற்பட்ட நூல்கள், அண்ணாமலைப் பல்கலைக் கழக வெளியீடாக சுரதாளக் குறிப்புகளுடன் வெளிவந்தன.

மயிலை வஜ்ஜிரவேல் முதலியார், இவர் அக்கல்லூரியில் மாணவர்கள் இலகுவாகக் கற்கும் வண்ணம் சொல்லிக் கொடுப்பார். மணிக்கணக்கில் ராகம் பாடி, சுரம் பாடி என்றெல்லாம் இல்லாமல் ஒரு கீர்த்தனையை சில நாட் களில் கற்றுக் கொடுப்பார்.  டி.கே.ரங்காச்சாரி, சுருதியுடன் இழைந்து பாடு வதில் வல்லவர். உருப்படிகளை அழகுபடுத்திப் பாடுவார். அவரின் வகுப்பு எப்போதும் ‘பாவ' சங்கீதத்தில் இழைந்து முழங்கும். கல்யாணி அட தாள வர்ணம், ரீதிகௌள வர்ணம் போன்ற பலவும் இவரிடம் கற்றேன். எனது இசைப் பயணத்தில் பெரும்பங்காற்றியவர் இவர்.

தஞ்சாவூர் ராமதாஸ் ராவ் லயசிம்மம். இவரிடம் மிருதங்கம் பயின்றேன். இவரின் வாசிப்பே அலாதியானது. மாமேதை. இவர் பக்கவாத்யமாக வாசிக்கும் கச்சேரி மிகுந்த களைக்கட்டிவிடும். எனக்கு மிருதங்க வாத்யம் என்றால் என்ன, அதில் நாதம் எப்படி எழ வேண்டும், என்று ஆரம்பப் பாடத்திலிருந்து ஆரம்பித்து நன்கு கற்றுத்தந்தார். ‘பாடல்களைக் கற்றுக்  கொள்வது என்பது வேறு, பக்க வாத்யங்களுடன் பாடுவது வேறு. வீட்டிற்கு வா உனக்குச் சொல்லித் தருகிறேன்' என்று கூறி எனக்குக் கற்றுத் தந்தார்.

என் குருநாதர் வர இயலாது போன ஒரு நாள் வந்து எனக்கு வகுப்பு எடுத்தவர், பிடில் மேதை கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை. அவரின் ஒரு கூற்று என்னால் எப்போதுமே மறக்க இயலாது. ‘குரு என்றால், அவர் உன்னிடம் ஒரு பைசாக் கொடுப்பார். அதை நீ சொந்த உழைப்பில் 99 பைசாவைச் சேர்த்து ஒரு ரூபாயாக ஆக்க வேண்டும்'அதாவது, உன்னுடைய உழைப்பு அதில் அவ்வளவு இருக்க வேண்டும் என்பதுதான் குருவின் விருப்பம்'என்றார். அதேபோல, கல்கத்தா கிருஷ்ணமூர்த்தி, ப.சிவஞான சுப்ரமணிய முதலியார் ஆகியோரும் என் ஆசிரியர் களாவர். ப.சிவஞான சுப்ரமணிய முதலியார், பெரும் பாரதி பக்தர். கல்லூரியின் முதல்வராக இருந்து ஓய்வு பெற்றவர். கவிஞர். தமிழ், வடமொழி, சிங்களம் அனைத்திலும் புலமை உடையவர். தந்தையை இழந்து எங்கள் குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கித் தவித்தபோது இசைகற்கும் வாய்ப்பில்லாமல் முடங்கிக் கிடந்த என்னை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் சேர்த்துப் படிக்கவைத்துத் திரும்ப எனது இசை வாழ்க்கையை மீட்டெடுத்தவர். எனது தம்பி என்றாலும் கூட என்னுடைய முழு கல்லூரிச் செலவையும் அவரே ஏற்று என்னை சங்கீத பூஷணம் பட்டம் பெற வைத்தார். அவரின் ஆதரவால்தான் நான் இன்றைக்கு ஒரு இசைக்கலைஞனாக வாழ்கிறேன். கல்கத்தா கிருஷ்ணமூர்த்தி ஒரு அற்புதமான இசைக்கலைஞர். ஆழமான ஞானஸ்தர். அவரை என் ஆசிரியராகப் பெற்றது பெரும் பேறு. அவரிடம் இரண்டு ஆண்டுகள் தெலுங்குக் கீர்த்தனகளை முறைப்படி பயின்றேன். வெளியூர்களில் கச்சேரி நடக்கும்போது என்னையும் உடன் அழைத்துச் செல்வார். பலரிடம் அறிமுகப் படுத்துவார். என்னை ஊக்குவித்து பாடவைத்தவர்களில் இவரும் ஒருவர்.

பறாலை  முருகன் கோவிலில் அதிகாலை பாடிக்கொண்டே தொழும் பக்தர், காந்தீயவாதி, சு.சண்முக சர்மா. இவர் ஒரு கல்லூரிக்கு அதிபர். காந்தி மறைவைக் கேட்டவுடம் மொட்டை அடித்துக் கொண்டவர். உணவைக் குறைத்துக் கொண்டார். தாழ்த்தப்பட்ட மக்களை ஆலயப் பிரவேசம் செய்ய வைத்தார். மனித நேயம் மிக்கவர். தமிழ், சமயம், இசை இந்த மூன்றும் என்னிடம் இருப்பதினால் என் மீது மிகுந்த அன்பு கொண்டு தமது மகள் நளின ரஞ்சனியை எனக்கு மணம் முடித்துக் கொடுத்தார். என் வாழ்வை செப்பனிட்டார் என்றே சொல்லலாம். 

உயர்ந்த உள்ளமும், ஆஜானுபாகுவான தோற்றமும், முற்போக்குச்  சிந்தனையும், தெளிவும் கொண்டவர்-சாகித்யகர்த்தா, சிதம்பரம் நடராஜர் கோவில் டிரஸ்டி டி.நடராஜ தீட்சிதர். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நான் பயின்று கொண்டிருக்கும்போது டி.கே.சுப்ரமணியன் பாடிய சிந்து பைரவி ராகத்தில் அமைந்த அழகான பாடலான ‘கானரீங்காரம் செய்யும் கருவண்டே'என்ற பாடலைக்கேட்டு மயங்கினேன். அதை இசை அமைத்தவர், நடராஜ தீட்சிதர் என்று அறிந்து, டி.கே.ஸ். உடன் அவரைச் சந்தித்தேன். கல்லூரி நாட்கள் முழுவதும், கல்லூரி முடிந்தவுடன் தீட்சிதரின் வீடே கதி என்று இருந்தேன். அவரின் நட்பு எனக்குக் கிட்டவில்லை எனில் என் பாதை வேறாகி இருக்கும். தீட்சிதரின் மறைவுவரை எங்கள் நட்புத் தொடர்ந்தது. கோவை அவிநாசிலிங்கம் பல்கலைக் கழகத்தில் தேவார மூவர் இசை விழாவில், ‘தீட்சிதரும் அவரின் கீர்த்தனைகளும்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினேன். டி.நடராஜ தீட்சிதர் அற்புதமான பல தமிழ்க் கீர்த்தனைகளுக்கு இசை அமைத்துள்ளார்.

என் வாழ்நாளில் மறக்கவே முடியாதவர் அண்ணாமலை அரசர் அவர்கள். அவர் நிறுவிய பல்கலைக் கழகம் இல்லாதிருந்தால், என் போன்ற பொருளாதாரம் குறைந்த மாணவர்கள் இசை பயின்றே இருக்க முடியாது. சிறு வயது முதல் இசை மேல் ஆர்வமாக இருந்த எனக்கு வாழ்வின் பொருளாதாரச் சரிவு இசை பயில முடியாமல் செய்து விட்டது. அண்ணா மலைப் பல்கலைக் கழகம் மிகமிகக் குறைந்த கட்டணத்தில் இசை பயில வகை செய்திருந்தது என்ற காரணத்தால் என்னால் பயில முடிந்தது. விண்ணப்பப் படிவம் அனுப்பி, நேர்முகத்தேர்வும் முடிந்து, தேர்ச்சியும் பெற்றேன். விண்ணப்பத்துடன் இருபத்தியோரு ரூபாய் மட்டுமே கட்டமாக கட்டினேன். பிறகு நான்கு மாதங்கள் கழித்துத்தான் கட்ட வேண்டும். எம்.எம்.தண்டபாணி தேசிகரை எனது குருவாகக் கொண்டு பயில முடிந்தது. கோடி கோடியாகக் கொடுத்தாலும் கிட்டாத பெரும் பேறு இது. அரசரின் உள்ளம் மென் மையானது. நடராஜப் பெருமான் மீது மிகுந்த பக்தி கொண்டவர். அவர்  இல்லை என்றால் தமிழிசை மறைந்திருக்கும். தமிழிசை இயக்கம் தொடங்கி, அதில் பெரும் வெற்றியும் பெற்றார். நான் ராஜா அண்ணாமலை மன்றத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்தேன். இருபது ஆண்டுகள் இலங்கையில் பல கல்லூரி களில் பணியாற்றியிருக்கிறேன். எல்லாமே அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தால்தான்.

தாரமும், குருவும் தலைவிதிப்பயன் என்பார்கள். தேசிகர் அய்யா எனக்குக் குருவாகக் கிட்டினார். அவரின் ஆளுமை, கம்பீரமான குரல் வளம், தாய் மொழியை உச்சரிக்கும் போது மிளிரும் அழகு, உருப்படிகளை செம்மையூட்டிப் பாடும் அழகு என சொல்லிக் கொண்டே போகலாம். என்னிடம் மாணவன் என்ற நிலையையும் தாண்டி ஒரு மகனைப்போல பாசம் கொண்டு பாதுகாத்தார். என் மீது ஏன் இந்த அன்பு, பரிவு என்பது எனக்கு இன்றுவரை விளங்காத புதிர். எனது பொருளாதாரச் சூழல் காரணமாக என்னுடைய இசை ஆர்வம் சிறு வயது முதலே இருந்தாலும் கூட என்னுடைய 26 ஆவது வயதில்தான் நான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இசை பயின்றேன். 1957-58 முதல் 1961ம் ஆண்டுவரை அங்கு பயின்றேன். பிறகு குடும்பச்சுழல் காரணமாக இலங்கைக்குத் திரும்பினாலும் இசை ஆசிரியர் வேலை உடனே கிடைக்கவில்லை. எனவே  வேலைகிட்டாத இசை ஆசிரியர்களை ஒருங் கிணைத்து, ‘பணியற்ற இசை ஆசிரியர்கள் சங்கம்' என்று ஒன்றை ஆரம்பித்தேன். ஆட்சியாளருக்கு எங்கள் நிலையை எடுத்துக் காட்டியதால், எனக்கும், ஏனையப் பணியற்ற இசை ஆசிரியர் களுக்கும் நான்கு ஆண்டுகளுக்குப்பின் கல்லூரிகளில் பணியாற்றும் வாய்ப்புக் கிட்டியது.

ஈழத்தில் பணியாற்றிக்கொண்டே விடுமுறை வரும் இரண்டு மாதங்கள், நான் தமிழகம் வந்து விடுவேன். என் குருநாதைரை சந்திக்கவும், அவரிடம் பாடம் பயிலவும் இங்கு வருவேன். அந்தத் தொடர்பு என் குருநாதர் மறையும் வரை தொடர்ந்தது. ஈழத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போதே வட இலங்கை சங்கீத சபை என்ற நிறுவனத்தின் தேர்வாளர்களில் ஒருவனாகப் பணி புரிந்தேன். 1976, 77 இல் உயர் வகுப்புகளுக்கான இசை நூல்  எழுதினேன்.

தேவார இசையை முறைப்படி பயில ஓதுவார் பி.எஸ்.ராஜசேகரன் அவர்களிடம் பயின்றேன். ஈழத்தில் பணியாற்றும் போதே இலங்கை வானொலியில் கர்நாடக இசை, பக்தி இசை, மெல்லிசை மூன்று தளங்களிலும் ‘ஏ'கிரேட் ஆர்டிஸ்டாக இருந்தேன். இசைச் சித்திரம், பாமாலை, கலைக் கோலம் என பல இசை வடிவ நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறேன். தமிழகத்திலிருந்து பல இசைக்கலைஞர்களை அழைத்து நிகழ்ச்சிகள் நடத்தி, வானொலியில் பேட்டியும் இடம் பெறச்செய்துள்ளேன். அதில் திருவாவடுதுறை ராஜரத்தினம் அவர்களை நேர்காணல் செய்தது மறக்க முடியாதது. தமிழக இசைக் கலைஞர்களைப் பற்றிய கட்டுரைகளும் இலங்கையின் முக்கிய இதழ்களில் எழுதி இருக்கிறேன். நடனதிற்கும் பாடி இருக்கிறேன். ஒலிப் பேழையில் ‘தண்டபாணி தேசிகர் கீர்த்தனைகள்' என்று ஒன்றும், ‘ஈழத்துக் கோவில்கள் பற்றிய பாடல்கள்' என்று ஒன்றும் கொடுத்துள்ளேன்.

ஈழத்து வானொலியில் ஏற்பட்ட இரண்டு சுவையான நிகழ்ச்சிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். வானொலியில் அப்போதெல்லாம் நேரலை நிகழ்ச்சிகள்தான் இசை நிகழ்ச்சிகள். எனக்கு இசை நிகழ்ச்சிக்கு ஒரு குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் வந்து கலந்து கொள்ளுமாறு அழைப்பு வந்திருந்தது. பக்க வாத்யக் கலைஞர்கள் பெயரும் அளிக்கப் பட்டிருந்தது. நிகழ்ச்சி முன் கூறியபடியே நேரலை என்பதை நினைவு கொள்ளுங்கள். வானொலியில் குறிப்பிட்ட நேரத்திற்கு நான் நிலையம் சென்று விட்டேன். ஆனால், அங்கு தயாரிப்பாளரும் இலை, பக்க வாத்யக் கலைஞர்களும் இல்லை. எனக்கு ஒன்றும் புரியவில்லை. வேறொரு தயாரிப் பாளரை அணுகி வினவினேன். அவரோ ‘இதைப்  பெரிது படுத்தாதீர்கள். மேலிடத்தில் முறையிடாதீர்கள். அவருக்கு வேலை போய்விடும். நான் உங்களுக்குப் பக்க வாத்யக் கலைஞர்களை ஏற்பாடு செய்து நிகழ்ச்சி தயாரிக் கிறேன்' என்று கூறி நிலையத்திற்கு ஜலதரங்கம் வாசிக்க வந்திருந்தவரை பிடிலுக்கு பதில் போட்டு, மிருதங்கக் கலைஞரையும் ஏற்பாடு செய்து நிகழ்ச்சியை ஒலிபரப்பினார். எனக்கு அன்று ஜலதரங்கத்துடன் பாடும் படியாக ஆயிற்று.

மற்றொரு நிகழ்ச்சி, அதுவும் நேரலைதான். அன்று எனக்கு இசை நிகழ்ச்சி அளிக்க நேரம் ஒதுக்கி இருந்தார்கள். இம்முறை என்னுடனேயே பக்க வாத்யக் கலைஞர்களும் வந்திருந்தனர். வானொலி நிலையத்தில் எனக்கு பலமுறை பக்கவாத்யம் வாசித்த ஒரு பிடில் கலைஞர் இருந்தார். அன்று அவர் முழு போதையில் இருந்தார். அவரோ என்னைக் கண்டவுடன், என்னுடன் வந்திருந்த பிடில் கலைஞரை விரட்டி விட்டார். ‘நான்தான் எப்போதும்  முத்துக் குமாரசாமிக்கு வாசிப்பேன். நீங்கள் போய்விடுங்கள்' என்று அவரை அனுப்பி விட்டார். நாங்கள் எவ்வளவு கூறியும் புரிந்து கொள்ளும் நிலையில் அவர் இல்லை. பிடில் கலைஞர் கோபித்துக் கொண்டு சென்று விட்டார். நான் இவருடனேயே நிகழ்ச்சி நடத்தும்படி ஆகிவிட்டது. முன்னமே சொன்னேன் இல்லையா அது நேரலை நிகழ்ச்சி என்று; தயாரிப்பாளருக்கும் ஒன்றும் செய்ய முடியவில்லை. நிகழ்ச்சி தொடங்கவேண்டிய நேரமும் நெருங்கி விட்டது. நான் பாடும் போது மிருதங்கத்திற்கு ஒலியைக் கூட்டியும், பிடிலுக்கு ஒலியை மொத்தமாக நிறுத்தி மௌனமாக்கியும் ஒலிபரப்ப வேண்டியதுதான் என்று தயாரிப்பாளர் முடிவெடுத்து, நிகழ்ச்சியைத் துவக்கினார். பிடில் வித்வானோ, வில்லை பிடிலுக்கு வெளிப்புறமும், பிடிலுக்கும் தந்திக்கும் இடையிலுமாக தடுமாறித் தடுமாறிப் போட்டுக் கொண்டிருக்கிறார். இதற்குள்ளேயே பல இடங்களிலிருந்து பிடில் ஒலி கேட்க வில்லை என்று தொலைப்பேசி அழைப்புக்கள் வரத் துவங்கிவிட்டன.. தயாரிப்பாளர் பார்த்தார், பாதியிலேயே நிகழ்ச்சியை முடித்துவிட்டார். அது என் மீதான குற்றம் இல்லை என்பதால் எனக்கு வேறு ஒரு நாள் மீண்டும் நிகச்சி அளிக்க ஏற்பாடு செய்தார்கள். அன்று நிகழ்ச்சி நன்கு நடைபெற்றது.

ஈழத்தில் என் சமகால இசையாளர்கள் எஸ்.பாலசிங்கம், ஏழிசை வாரிதி ந.வீரமணி ஐயர், செல்வி.நரகம்மா, கதிர்காமர், தமிழகத்தில் திருப்பாம்புரம் சோ.சண்முகசுந்தரம், மா.வைத்தியலிங்கம், பெரும்பாண நம்பி, மா.கோடி லிங்கம், டி.கே.சுப்ரமணியன், தாராபுரம் சுந்தரராஜன் தேசிகரின் மூத்த மாணவர் வே.சோமசுந்தர தேசிகர் ஆகியோராவர்.

எனது குருநாதரைப் பற்றி எவ்வளவு சொன்னாலும் போதாது. எனவே அதைத் தனியாகப் பின்பகுதியில் சொல்கிறேன். கல்லூரியில் நான் படித்துக் கொண்டிருக்கும் போது என் குருநாதர் எம்.எம்.தண்டபாணி தேசிகர் ஒரு நாள் என்னிடம், ‘தமிழிசையால் நீ எத்தனையோ பெறப்போகிறாய்.  உனக்கு எல்லாவற்றையும் கொடுக்கும் தமிழுக்கு நீ என்ன செய்யப்போகிறாய்?' என்று கேட்டார். அது என் மனதில் ஆழப் பதிந்துவிட்டது. கல்லூரிக் காலத்திலேயே கையெழுத்துப் பிரதியாக ‘இசை அருவி' என்னும் இசை ஏட்டை மாதாமாதம் கொண்டு வந்தேன். அது, பின்னட்களில் ‘கலை அருவி' எனப் பெயரிட்டப்பட்டு வெளிவந்தது. அதில் நடனம் மற்ற கலைகளுக்கும் இடமளிப்பதால், அது பெயர் மாற்றப்பட வேண்டும் என்ற நண்பர்களின் அறிவுரைப்படி சில காலம் அப்பெயரில் வந்தது. பின்னாளில் அது ‘இசை ஏடு'என்ற பெயரில் ஏறக்குறைய 47 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக் கிறது. நான் ஒருவனாகவே செயற்பட்டு வடிவமைத்து வெளியிட்டுக்கொண்டு வருகிறேன். குருநாதரின் கேள்விக்கு ஏதோ என்னால் சிறிய அளவில் பங்காற்ற முடிந்தது என்றும் எண்ணுகிறேன்.

இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, 1986 இல் நான் தமிழகத்திற்கு வசிக்க வந்துவிட்டேன். ஈழத்து வானொலியில் பல ஆண்டுகாலம் இசைக் கச்சேரிகள் அளித்திருக்கும் என்னை அகில இந்திய வானொலியில் ஆடிஷன் செய்துதான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றார்கள். எனக்கு வானொலி நிகழ்ச்சிகள் வேண்டாம் என்று சொல்லி விட்டேன். தமிழகத்திற்கு வந்தபின் ராஜா அண்ணாமலை மன்றக் கல்லூரியில் குரலிசை விரிவுரையாளராக இணந்த பின், தண்டபாணி தேசிகர் அறக்கட்டளை நிறுவி அவருக்கு ஆண்டுதோறும் விழா எடுத்து வருகிறேன். எஸ்.ராமநாதனுடன் இணைந்து ‘நாதன் நுண் கலை'அமைப்பின் செயலாளராகவும் செயற்பட்டேன். இப்போதும் இருக் கிறேன்.

‘இசை ஏடு' இதழில், மி.ப.பெரியசாமித்தூரன் அவர்களின் ‘பண் வரலாறு' தி.ச.சுந்தர ஓதுவாமூர்த்தியின் ‘தமிழிசை மாண்பு'  நா.மஹாலிங்கம்  அவர்களின் ‘இசை', ‘இசையும் நடனமும்' க.வெள்ளை     வாரணன் அவர் களின் ‘தேவாரத்திற் பயின்ற பண்கள்', டாக்டர் பிரமீளா குருமூர்த்தியின் ‘காவடிச் சிந்து', திருமதி.சுதா ரகுநாதனின் 'நிகண்டு இசை' முதலியன ஆய்வு மேற்கொள்வோருக்கு உதவும் சிறந்த கட்டுரைகள்.

நான் மூன்று வயதில்மேடை ஏறி  சிறுத்தொண்ட நாயனார் நாடகத்தில் சீராளனாக நடித்தேன். அந்த நிகழ்ச்சி நடைபெற்ற இடமான திருச் செங்காட்டாங்குடியில் அதே ஊரில் பிறந்தவர்தான் என குருநாதரான தண்ட பாணி தேசிகரும். ஆண்டவன் அன்றே சொல்லி வைத்தார் போலும் ‘மகனே இன்று சீராளனாக நடிக்கும் நீ இந்தக்கதை நிகழ்ந்த திருச் செங்காட்டாங்குடியில் பிறந்த தேசிகருக்கு மாணவராக இசை கற்கும் வாய்ப்பைப் பெறுவாய். அவரே உன் குரு' என்று.

முதலில் குருநாதரின் தோற்றப்பொலிவையும், அவரின் நேர்த்தியான உடையணியும் முறைபற்றியும் குறிப்பிட வேண்டும். அவரைப் பார்க்கும் போதே மிக அழகாக இருக்கும். ஜரிகை தலைப்பா, ஜரிகை வேட்டி, காதில் வைரக்கடுக்கண், மேலே கோட்டு, கட் ஷூ, நெற்றியில் குங்குமம், கைகளில் தங்கத்தில் வைரம் இழைத்த மோதிரங்கள் என்று அவரது தோற்றம் ஒரு அரசரைப்போல இருக்கும். அவரின் அலங்காரமே அவரின் மற்ற ஒழுக் கத்தையும் நேர்த்தியையும் காட்டும். துளியும் அழுக்கு இருக்காது, அவர் இருக்கும் இடத்தில். எப்போதும் மின்விசிறி  சுழன்று கொண்டே இருக்க வேண்டும்  அவருக்கு. தலைக்கு மேல் ஒரு விசிறி, பக்கத்தில் டேபிள் விசிறி என்று அவரின் வீட்டிலும் அலுவலகத்திலும் எப்போதும் மின்விசிரிகள் சுற்றி கொண்டே இருக்கும். அவர் தனது மனைவியான எங்கள் தாயைப் போன்றவரான தேவசேனா அம்மையாருக்கு சம அந்தஸ்து கொடுத்து இருப்பார். எப்போதும் எல்லா விஷயங்களையும் அவருடன் கலந்து சொல்வார். மாணவர்கள் பற்றிய கருத்துக்களுக்குக் கூட தேவசேனா அம்மையார்  குருவுக்கு மாற்றாக நியாயத்தை எடுத்துரைத்தால் உடனே மாற்றிக் கொள்வார். இதற்கு ஒரு உதாரணமாக என்னுடைய அனுபவத்தையே இங்கு பகிர்ந்து கொள்ளலாம் என்று எண்ணுகிறேன்.

ஒருநாள், குரு வழக்கம்போல எங்களுக்குபாடம் நடத்திக் கொண்டிருந் தார். ஜவ்வாது புனுகு மணக்க எல்லாம் பட்டுமயமாய், காதில் வைரக்கடுக்கண் மின்ன. மிக அழகான தோற்றத்துடன். ‘திருமகளே நல்வரம் அருள்வாய்' என்றபாடல். தோடி ராகம், ஆதி தாளம், இரண்டு களை. பேராசிரியர் மு. அருணாச்சலம் பிள்ளை இயற்றியது. பல்லவியில் கடினமான சங்கதிகள் ஏழு எட்டுப் போட்டுப் பாடிவிட்டு எங்களையும் தன்னுடன் பாடச்சொன்னார். ஓரிரு சங்கதிகளாகப் பிரித்து, அவர் பாட நாங்களும் பாடிக் கொண்டே வந்தோம். எனது முறை வந்தது. கஷ்டமான சங்கதி போட்டுப் பாடினார். பாடினேன், சங்கதி சரியாக வரவில்லை. குருவுக்குக்கோபம் வந்துவிட்டது. ‘என்னப்பா நினைச்சுக்கிட்டே? நில்லு, என்ன பாடறே?  உனக்கு சங்கீதம் வருமா? சங்கீதம்னா எத்தனை புனிதமானது? கேட்டு ஒழுங்காப் பாடத் தெரியல்லை?' என்று என்னைத் திட்டிவிட்டு மற்ற மாணவர்களுக்கு பாடம் நடத்த ஆரம்பித்தார். எனக்கோ மனம் உடைந்துவிட்டது. கண்ணீல் நீர். வகுப்பு முடிந்து வெளிவரும் போது மற்றவர்கள் என்னைத் தேற்றினாலும் மனம் ஒப்பவில்லை. மறுநாள், அதற்கு மறுநாள் என்று மூன்று நாட்கள் நான் வகுப்பிற்கே செல்லவில்லை. மூன்றாவது நாள் விடுதியில் படுத்தே இருந்தேன். என் அறைக் கதவை யாரோ தட்டினார்கள். திறந்து பார்த்தால், குரு! ‘முத்து சாமி, முகமெல்லாம் அலம்பிக்கொண்டு வகுப்புக்கு வா' என்று சொல்லிச் சென்று விட்டார். என்ன நடக்குமோ என்ற பயத்துடன் வகுப்புக்குச் சென்றேன். வகுப்புக்குள் நுழைந்த என்னைப் பார்த்து, ‘என்னப்பா பாடியது சரியில்லை என்று சொன்னதற்காகவா இவ்வளவு மனத்தாங்கல்?  உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு. நண்பனைப்  போலத்தான் குருவும், சீடன் சரியாகப் பாடவில்லை என்றால் தடுத்துத் தவறைச் சுட்டிக் காட்டித்  திருத்துவார். அவர்தான் உண்மையான குரு. சரி வகுப்பு முடிந்ததும் ஏழு மணிக்கு வீட்டுக்கு வா' என்றார்.

என் மனம் இளகிவிட்டது. ஒரு மாணவன் வரவில்லை என்றா அவன் இருக்கும் இடம் தேடி வந்து அழைத்த பண்பு என்னை மிகவும் நெகிழச் செய்துவிட்டது. இதுவே இது போல குருவின் மனதிற்கு துன்பம் கொடுத்த கடைசி நிகழ்ச்சியாக இருக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். மாலை குருநாதர் வீட்டிற்குப் போனேன். என்னைக் கண்டவுடன் தேவசேனா அம்மாவைப் பார்த்து, ‘அம்மா இவனுக்கு வந்த கோபத்தைப் பாரேன்.  சரியாகப் பாடலை என்னடா பாடறேன்னு கேட்டேன், வந்தது வினை' என்றார். உடனே அந்தம்மா ‘உங்களுக்கு எத்தனை வருட அனுபவம்? அவனுக்கு எத்தனை வருட அனுபவம்? நீங்கள் போடும் சங்கதியெல்லாம் அவனால் போட முடியுமா?' என்று சொன்னார். உடனே அவர், ‘ ஓஹோ, நீயும் அவன் கட்சியா?' என்று கூறி சிரித்துவிட்டு தன் பக்கத்தில் இலை போடச்சொல்லி சாப்பிடச் சொன்னார். இது என் மனதில் நீங்காத நிகழ்ச்சி. குரு மட்டுமல்ல அவர். அதற்கும் மேலாக பாசம் நிறைந்தவர் என்பதை உணர்த்திய பதிவு.

தேசிகர் ஐய்யாவின் தமிழிசை மேன்மையைக் கண்டு கேட்டு அனுபவித்தவர் பாவேந்தர் பாரதிதாசன். தேசிகரின் பாட்டு என்றால் முதல் வரிசையில் அமர்ந்து கேட்பாராம் பாவேந்தர். பாவேந்தர் பாடல்களை முதன் முதலில் இசை அமைத்துப் பாடிய பெருமை என் குருவையே சாரும்.  ‘துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ'  என்ற பாடலும். ‘வெண்ணிலாவும் வானும் போலே'என்ற பாடலும் பட்டி தொட்டியெல்லாம் எதிரொலித்ததை மறக்க முடியுமா?  இன்றும் மக்களால் விரும்பிக் கேட்பதை என் கண்ணால் பார்த்து இருக்கிறேன். குரு கூறுவார், “ ‘துன்பம் நேர்கையில்' பாடலுக்கு இசை அமைக்க எனக்கு இரண்டு வருடம் ஆயிற்று. காரணம் பாட்டின் பொருள் கெடாமல், பொருத்தமான ராகத்தைத் தேர்ந்தெடுத்து, தாள நடையுணர்ந்து பாடலுக்கு ஏற்ற மாதிரியும்-கேட்பவர்மனதைக் கொள்ளை கொள்ளும் வகையிலும் அது சிறப்புற வர வேண்டுமல்லவா? தேர்ந்து, தேர்ந்து கடைசியில் தேஷ் ராகத்தில் அமைத்தேன். அதனை அடாணாவில் அமைத்திருந்தால், குழந்தைகூட ஓடிப்போயிருக்கும்.' என்று நகைச் சுவையாகக் கூறுவார். இசை, பாடலை சிறக்கச் செய்ய வேண்டும் என்பார். இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் ஆராய்ந்து நுணுக்கமாக அறிந்து முடிவெடுப்பார்.

குருநாதரின் குரல் கம்பீரமாது. அவரின் குரலில் விரைவான சக்கதி களும், ப்ருக்காக்களும் அனாயாசமாகப் பேசும். அது அப்படி ஒரு மந்திரசக்தி படைத்த குரல். கடவுளின்கொடை. ஒரு நாள் தேசிகர் அய்யா என்னை அழைத்து, ‘மூன்றாம் ஆண்டு முடிந்து நான்காம் ஆண்டு போகப் போகிறாய். இன்னமும் ரவை சங்கதிகள் உன் குரலில் சரியாகப் பேச வில்லையே? சரி, இன்றிரவு என்னுடனேயே படுத்துக்கொள். காலையில் நான் சாதகம் செய்யும் முறையைச் சொல்லித் தருகிறேன்' என்றார். அதிகாலையில் என்னை எழுப்பினார். சுருதி காதில் விழுகிறது. கண்ணக் கசக்கிக் கொண்டு கனவில் நடப்பது போல நடந்தேன். சுரங்களை மிகச் சவுக்கமாகவும், வேகமாகவும் பாடினார். என்னையும் பாடச்சொன்னார். மேல் காலம் மிகவும் கஷ்டமாயிருந்தது. அவர் விடவில்லை. இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த தேவசேனா அம்மா ‘என்னங்க, தயவு செய்து உங்கள் சாரீரத்தில் பேசும் சங்கதிகளைப் பாடு என்று அவன்மேல் திணிக்காதீர்கள். படிபடியாகத்தான் கொண்டு வரவேண்டும்' என்று சொல்லவும். அதை ஒப்புக்கொண்ட குரு உடனே, ‘நாளை வா வேறு முறையில் சாதகம் செய்யலாம்' என்றார்.

     ஒருநாள், குரு, தேவசேனா அம்மா, நான் மூவரும் அமர்ந்திருக்கும் போது, குரு என்னிடம் சொன்னார் “கடமையைச் செய். பலனை எதிர் பார்க்காதே. உன்னுடைய உழைப்புக்கு உனக்கு ஊதியம் வரும். இதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை. இசை என்பது ஆழமான பெருங்கடல். அதுவும் நமது தமிழ் இசை என்பது காலங்கண்டறியாத பழமையான இசை. அதன் பெருமை அதிகம். முன்னொரு காலத்தில், இந்தியா முழுவதும் ஒரே இசைதான் இருந்தது. அது தமிழ் இசைதான். ஆரியரின் வருகைக்குப் பின் தான் மாறுதல் ஏற்பட்டது. அப்பொழுது தென்னிந்திய இசை, வட இந்திய  இசை -அதாவது ஹிந்துஸ்தானி இசை, திராவிட இசை அல்லது கர்நாடக இசை- தோன்றியது. வடக்கில் இருந்து தெற்கு நோக்கி வருவோர்க்கு முதலில் வரவேற்புக் கொடுப்பது கர்நாடகம். கர்நாடகத்தை முகப்பு வாயிலாகக் கொண்ட தமிழ் நாட்டின் இசை கர்நாடக இசை. இது ஒரு வரலாறு. இது தவிர, பழமை என்ற போருளிலும் கர்நாடகம் என்ற சொல் உபயோகப் படுத்தப்பட்டு இருக்கலாம். எனவே, நமது இசையின் பெருமை உணர்ந்து, தொன்மை அறிந்து அதன் இடர்பாடுகளை அறிந்து அவற்றையெல்லாம் சரி செய்ய வேண்டும். தமிழ் இசை மேன்மையுற நாமெல்லலாம் கடினமாக உழைக்க வேண்டும். உழைக்க வேண்டிய பொறுப்பை தட்டிக்கழிக்கக்கூடாது. பிறகு வருந்திப் பயனில்லை.

“இவ்வேளையில் உனக்கொன்று சொல்லுவேன். உன்னிடம் அன்போடு நடந்து கொள்கிறேன் என்ற காரணத்தினால், கடமையை செய்யாது, பாடங்களைப் பயிற்சி செய்யாது விட்டுவிட்டு, என்னிடம் நீ சிபாரிசுக்கு வரக்கூடாது. அது எனக்குப் பிடிக்காது.” என்றார். நானும் உடனே எந்தக் காரணம் கொண்டும் சிபாரிசுக்கு வர மாட்டேன் என்று சொன்னேன்.  அவர் மேலும் ‘கடின உழைப்புக்கு ஈடு இணை கிடையாது. எனவே குறுக்கு வழியில் புகழ்பெற எண்ணாமல், உழைத்து முன்னெறிப் பெரும்புகழ் எடுக்க வேண்டும். சிபாரிசில் கிடைத்தால் அது போலி. உண்மையானதாகாது. எதற்குப் பொய்? போலி? உண்மையே உன்னை உயர்த்தும் ஏணி,' என்றார். இதுவும் மறக்க முடியாததுதான் எனக்கு மட்டு மல்ல எல்லோருக்குமானது தானே?

தமிழில், தமிழ் இசையில், தமிழின் பொருள் உணர்ந்து பாடுவதில் அவருக்கு இணை அவரே. ஒருசமயம் நான் ‘அருள வேண்டும் தாயே, அங்கையற் கண்ணி நீயே எனக்கருள வேண்டும் தாயே' சாருமதி ராகத்தில் அமைந்த இந்தப்பாடலைப் பாடும்போது ‘எனக்கருள' என்னும் இடத்தில் எனக்(Ga)கருள வேண்டும் எனப்பாடினேன். ‘எனக்கருள' என்றுதானே பாட வேண்டும் நீ என்ன க (Ga)  என்று பாடுகிறாய்?' என்று விரைந்து வந்து திருத்தினார். தமிழில் ஒரு எழுத்தும் தவறாக ஒலிக்ககூடாது என்று நினைப்பவர். தேசிகர் இசை பாடிக்கொண்டிருந்த காலத்தில் வேற்று மொழிப் பாடல்கள் செங்கோலோச்சிக் கொண்டிருந்தன. அதைப் பொருட்படுத்தாமல் அந்த நேரத்திலும் எதிர் நீச்சல் போட்டுத் தமிழிசையை வளர்த்தவர் என் குருநாதர்.

அண்ணாமலை அரசர் அவர்களின் தமிழ் இசை இயக்கத்திற்கு தோளோடு தோள் கொடுத்து அத்தனை மாநாடுகளிலும் தமிழிசை பாடிப் பெரும் இசைப் புரட்சி செய்தவர் தேசிகர். அவர் ‘நாமார்க்கும் குடியல்லோம்' என்று பாடிய திருநாவுக்கரசரை குலகுருவாக மதிப்பவர். நாவுக்கரசர் மீது ஹேமவதி ராகத்தில் ஒரு அழகிய பாடலைப் புனைந்தவர். அது ஒரு கம்பீரமான பாடல். என் குரு நிறைய தமிழ்ப் பாடல்கள் புனைந்து தானே இசை அமைத்துப் பாடியுள்ளார்.

என் குரு தவறு தனது என்றால் அதை உடனேயே ஒப்புக்கொள்வார். அவர் ஒரு முறை அவருக்கு ஈழத்திலிருந்து ஒரு இசைக் கச்சேரிக்கு அழைப்பு வந்தது. கச்சேரி முடிந்து, பெரும் பாராட்டுகளுடன் தமிழகம் திரும்பியிருந்தார். மறுநாள் அவர் என்னைப் பார்த்து, ‘நான் சிலோன் போயிருந்தேன், தெரியுமா?' என்றார். ‘தெரியும்' என்றேன். ‘அவர்கள் ஏன் தமிழை இழுத்து இழுத்துப் பேசுகிறார்கள்? அங்கு சிவஞானரத்தினம் பேசும்போது ‘தேசிகர் கேதாரகௌளையை எடுத்துக் கொண்டு ஒரு சுழற்று சுழற்றினார் பாருங்கள்' என்று இழுத்தார் எனக்கு சிரிப்பு வந்தது,'என்றார். உடனே நான்'ஐயா, ஈழத்துக் காரர்கள் தமிழை இழுத்துப் பேசினாலும் தமிழ்தான் பேசுகிறார்கள். ஆனால் தமிழ் நாட்டிலோ நிறுத்திப் பேசினாலும் தமிழைக் காணோமே?' என்றேன். உடனே தேசிகருக்கு கடும் கோபம் வந்துவிட்டது. ‘நீ என்ன சொல்கிறாய்?' என்று வெகுண்டார். நானோ, ‘காலை எழுந்தது முதல் எத்தனை எத்தனை ஆங்கில சொற்கள் கலந்து இங்கு பேசுகிறார்கள்? குட்மார்ணிங், காபி, ஸ்டிராங், டிபன், போஸ்ட் ஆபீஸ், லெட்டர், லைட், லெப்ட், பஸ் கூல்டிரிங் எத்தனை எத்தனை? இவையெல்லாம் தமிழா? தமிழ் சொற்கள் இருக்கும் போது அவைகளுக்குக்கூட ஆங்கிலச் சொற்கள்தான். இது தானே நடைமுறையாய் இருக்கிறது இங்கு?' என்றேன். உண்மையை உணர்ந்த தேசிகருக்குக் கோபம் பறந்து போனது. சிரித்தார். தான் பேசியது தான் சரி என்று வாதிடவில்லை.


     தேசிகர் கச்சேரிக்கு ஒப்புக்கொள்வதென்றால், கச்சேரிக்குப் பேசிய தொகையில் பாதியை ஒப்பந்தம் செய்யும்போது கொடுத்துவிட வேண்டும். மீதியை கச்சேரி முடிந்ததும் மேடையிலேயே தர வேண்டும். தங்குவதற்குத் தனி வசதி கொண்ட இருப்பிடம் கொடுக்க வேண்டும். மின்விசிறி, குளிப்பதற்கு வெந்நீர், உணவு வகை எல்லாமே சொல்லி விடுவார். அவை களுக்கு ஒப்புக்கொண்டால் சரி என்பார்.

சிதம்பரம் டி.நடராஜ தீட்சிதர் சங்கீதவித்வான் என்பதெல்லாம் முன்ன மேயே சொல்லி இருக்கிறேன். ஒருநாள் அவர் பிரகாரம் சுற்றி வரும் பொழுது மடைப்பள்ளி மண்டபத்தில் வலப்பக்க மூலையில் ஒரு பெரிய கல் தூண் சாந்தினால் பூசி மறைக்கப்பட்டிருந்தது. தீட்சிதர் அதன் அருகே போய்த் தட்டிப்பார்த்தார். பிறகு என்ன தோன்றியதோ என்னமோ மரச்சுட்டி ஒன்று எடுத்து வரச்சொல்லி, லேசாக ஒரு இடத்தில் தட்டிப் பார்த்தார்.  அழகிய சிற்ப வேலைப்பாட்டுடன் ஆண்டவன் உருவம் தென்படலாயிற்று. அதனை அத்துடன் நிறுத்திவிட்டு அதே சிந்தனையுடன் இரவு முழுக்க இருந் திருக்கிறார். அதைப்பற்றியே எல்லோருடனும் பேசியிருக்கிறார். மறு நாள், தைப்பூசத்தன்று இரவு மிகவும் கவனமாகச் சிறிது சிறிதாக சாந்துப் பூச்சுக்கள் நீக்கப்பட்டன. ஆச்சரியம்! கால சம்ஹார மூர்த்தியின் தோற்றம் ஒரு பக்கம், ரிஷபத்தில் பார்வதியுடன் பரமசிவன் மறு பக்கம். உடனே அதற்கு எண்ணெய் தடவி ஆடை தரித்தனர். 48 நாட்கள் மண்டலாபிஷேகமும் விமர்சையாகச் செய்ய ஆரம்பித்தனர். 48 நாட்களும் மாலையில் இசைக் கச்சேரிகள். என்னைக் கண்ட நடராஜ தீட்சிதர், ‘முத்து ஏன் தண்டபாணி தேசிகரை இங்கு பாடவைக்கக் கூடாது? நீங்கள்தான் அவரை அழைத்து வர வேண்டும்' என்றார். ஆனால் அது கடினமான பணி என்று எல்லோருக்கும் தெரியும். அவருக்கு தீட்சிதர்கள் என்றாலே பிடிக்காது. கோபம் வரும். கடுமையாகத் திட்டுவார். ஆனாலும் நான் இதைச் செய்ய வேண்டும் என்று தீட்சிதர் விரும்பினார்.

மறுநாள், நான் குருவிடம் சென்று தூணில் இருந்த ஆண்டவரின் வடிவங்கள் பற்றி பேசினேன். கேட்டுக் கொண்டு இருந்தார். கச்சேரிகள் நடை பெறுவதைப்பற்றியும் சொன்னேன். அப்படியா என்று கேட்டார். மிகுந்த பயத்துடன் நீங்களும் அங்கு கச்சேரி செய்ய வேண்டும் என்றேன். வந்ததே கோபம். ‘ஏ! என்ன பேசறே? தீட்சிதர்கள் என்னை மதிப்பதே இல்லை. அங்கு வந்து என் மானத்தைப் போக்கிக் கொள்ளவா?' என்று  கடுமையாகப் பேசினார். ‘உங்கள் இசையைக் கேட்க அவர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். இதற்காக ஒரு தீட்சிதர் கூட்டமே முயல்கிறது. அவர்களே நேரில் வந்து அழைக்கிறோம் என்கிறார்கள்' என்றும் கூறிப்பார்த்தேன். ‘என்னம்மா இவன்?' என்று தேவசேனா அம்மாவைப் பார்த்தார். ‘தீட்சிதர்களே வந்து அழைத்தால் கௌரவமாக நீங்கள் சென்று பாடிவிட்டு வாருங்கள்,' என்றார் அம்மா. ‘சரி, எனக்குப் பணம் எதுவும் வேண்டாம். நீயே வண்டி வைத்துக் கூட்டிக்கொண்டு போய், கச்சேரி முடிந்ததும் திரும்ப அழைத்துக்கொண்டு வந்து விடவேண்டும். நேரே மேடை, நேரே வீடு.' என்றார். ஒரு தட்டு நிறைய பழங்கள், வெற்றிலை பாக்கு, மலர் மாலை, சாதராப்பட்டு, விபூதி பிரசாதம் எடுத்துக்கொண்டு தீட்சிதரும் நானும் நேரே வண்டி வைத்து தேசிகரை வீடு சென்று அழைக்கச் சென்றோம். வீடு சேர்ந்ததும் நான் உள்ளே ஓடி குருவிடம் சென்று தீட்சிதர் கோவில் செகரெட்டரி அழைக்க வந்துள்ளார் என்று சொல்லவும், அவரே கதவருகே வந்து, ‘வாங்க, வாங்க' என்று வரவேற்றார். தம்பதி சமேதராக அவர் களுக்குப் பட்டு அளித்து ‘நீங்கள் நடராஜர் கோவிலில்பாடிப் பல வருடங்கள் ஆகிவிட்டன. இந்த சந்தர்ப்பத்தில் நீங்கள் வந்து பாடவேண்டும் என்று எங்கள் எல்லோரின் விருப்பம்,'என்றார் செகரெட்டரி. ‘ஆஹா, இறை வனுக்குப் பாடக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்' என்று ஒப்புக் கொண்டு அதே போலப் பாடவும் பாடினார். அன்றைய கச்சேரி மிக நன்றாக அமைந்து எல்லோரையும் மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. கோவிலைச் சார்ந்தவர்கள் பிரசாதத்துடன் பணமும் வைத்துக் கொடுக்க, அதை வாங்க மறுத்தார் குருநாதர். அவர்களோ, ‘நீங்கள் பாடியது கோடி பெறும். இதை நடராஜர் பிரசாதமாக ஏற்றுக் கொள்ளுங்கள்' என்றவுடன் மறுப்பேதும் கூறாமல் எடுத்துக்கொண்டு பெருமைப் படுத்தினார். வீட்டில் அம்மாவிடம் ‘என்னம்மா இவன், இது எத்தனை பெரிய சாதனை?' என்று என்னைப் பாராடினார். பணம் சரியானபடி தர வேண்டும் பேசிய தொகை வர வேண்டும் என்று நினைப்பவர் குரு. ஆனால் பணம் மட்டுமே தான் உலகம் என்று எண்ணுபவருமல்ல. இதுவும் என்னால் மறக்க முடியாத நிகழ்ச்சி.

இசையில் ஈடுபாடு, தமிழில் மாறாக்காதல் -தேவார திருவாசகம் திருப்புகழ் பாடல்களைப் பாடுவதில் தனெக்கென ஒரு தனித்துவம் கொண்டவர் தேசிகர். எனக்கும் அவரைக் கண்டதுமுதல் ஒரு மதிப்பும், மரியாதையும் என்னுள் என்னையறியாமலே தோன்றியது. அது, ஒருதளிர் செடியாவதைப் போல தினமும் சிறிது சிறிதாகத் தழைத்தது. என்னுள் என்றும் நீங்காமல் இருப்பவர் என் குரு. அவர் எனக்கு வாய்த்தது நான் செய்த தவமே. ஒரு மகனைபோல பரிவுடன் நடத்தினார். என் மீது ஏன் இவ்வளவு அன்பு என்று வியக்காத நாள் இல்லை. அவரது பெருமை எல்லாவற்றையும் முழுவதுமாகப் பகிர வேண்டும் என்ற பேரவா இருந்தாலும் ஒரு சிறு துளி அளவு உங்களுடன் பகிர்ந்து கொண்டு இருக்கிறேன். படிக்கும் உங்களுக்கும் என் குருநாதரைப் பற்றிய சிறு சித்திரம் தெரியவரும். குரு சிஷ்யன் உறவென்பது புனிதமானது. குருவின் வழி காட்டலிலே தன்னை ஈடுபடுத்தி நடந்து கொள்ளும் சீடன் எதிர்காலத்தில் பிரகாசமடைவான். நிழல் போல் குருவருள் சீடனை நடத்திச் செல்லும். எனது குருநாதர் எம். எம். தண்டபாணி தேசிகர் இதற்கு இலக்கமாய் அமைந்தவர்.

ஓதுவா மூர்த்தியாக இருந்த நாளில், அதிலும் ஒரு உன்னத இடத்தில் இருந்தவர். ஓதுவார்களுக்கே அவரால் பெரும் மதிப்புக் கிடைத்தது. பின் இசைக் கச்சேரிகளின் மூலம் தமிழ் மக்களின் உள்ளங்களையும் கவர்ந்தவர். உலகம் முழுவதும் தமிழ் மக்களின் நன் மதிப்பைப் பெற்றவர். அவரை தேடி பல இசை மேதைகள் வருவார்கள். அவருள் மதுரை சோமசுந்தர பட்டர், விளாத்திக் குளம் சுவாமிகள், மதுரை மாரியப்ப சுவாமிகள் ஆகியோரும் சிலர். சினிமாத் துறையில் தனக்கு ஒரு தனி இடத்தை ஏற்படுத்திக் கொண்டவர் தேசிகர். அருமையாக நடித்து நந்தனார் படத்தை இன்றளவும் பேச வைத்தவர். வித்வான்கள் ஏ.கே.சி.நடராஜன், காருக்குருச்சி அருணாசலம் போன்ற பலரும் அவரக்க் காண வருவார்கள். ‘தாமரைப் பூத்த தடாகமடி', ஜகஜ்ஜனனி, இன்பகனா, ஐயே மெத்தக் கடினம், பாட்டுக் கொரு புலவன் பாரதியடா, வெண்ணிலாவும் வானும் போலே,துன்பம் நேர்கையில், எனப் பலப்பல பாடல்கள் இன்றளவும் மனதில் நிற்கின்றன.

எனது மாணாக்கர்கள் மாணிக்கம் யோகேஸ்வரன் (இலண்டன்), உமா சற்குணம் (கனடா), கலா யோகராசா (இலண்டன்), ச.பார்த்தசாரதி, தவிர இன்னமும் பலர் உலகம் முழுவதும் இருக்கிறார்கள்.

எனது மூத்த மகன் கலாதரன், கனடாவில் நாடகம், நடிப்பு மற்றும் பொத்துத்துறை ஊடகங்கள் நடத்தி வருகிறார். இன்னொரு மகன், பத்மவாசன்  ஓவியக் கலைஞர்களில் குறிப்பிடும்படியானவர். சமயம் மற்றும் வரலாற்று ஓவியங்கள் வரைபவர். மகள் கீதா சுரேஷ் கலாக்ஷேத்ராவில் வீணை பயின்றவர். சாரங்கன், செந்தில்குமார் இரு மகன்களும் கணினியில் தேர்ச்சி பெற்று ‘லாண்ட் மார்க்'கிலும், எஸ்.எஸ்.ம்யூசிக்கிலும் பணி புரிகின்றனர். 


   
 
 

Tuesday, August 7, 2012

கவிதைகள் ஆறு(சென்னை வானொலியில் ஒலிபரப்பப்பட்டவை)

1-எங்கள் ஜாதி


மாத முதலில் அல்லது கடைசியில்
இடைவிடாத லாரிகளின் ஓட்டம்.
காலியாக அல்லது தானிய மூட்டையுடன்
அரசின் தானியக் கிடங்கு,
அதன் அருகில் எங்கள் வீடு.
விடியற்கருக்கலில் ஆளரவமற்ற போதில்
காக்கைகளும் குருவிகளும் தெருவில்
தானியம் கொத்திப் பசியாறுகின்றன.
( 27-4-2003- கல்கி )


2-விளை நிலங்கள்


ஏக்கரும் குண்டங்களும் துண்டாடப்பட்டு
சென்டுகள் ஆயின-அவை பின்
பிளாட்டுகள், அடுக்கு மாடிகள் ஆயின
இல்லாது போயின விளை நிலங்கள்
‘காம்பௌண்டு' சுவரோரம் ‘குரோடன்ஸ்'
பயிர்செய்து அழகு பார்த்தனர்.

3-ஆழ்துளைக் கிணறு


என் வீட்டுக் கிணற்றிற்கு
கம்பிவலையிட்டு பூட்டிட்டேன்
நீர் பாதுகாக்க,
அடுத்த தெருவில் இட்ட ஆழ்துளைக்
குழாய் அடித்துச் சென்றது
என் கிணற்றின் நீரையும்- பூட்டுக் கெடாமல்.

4-கொத்தித் திரியாக் கோழிகள்


இப்போதெல்லாம் கொத்துகின்றன
கோழிகள், தலைவிட்டு தட்டுத் தீவனத்தை
சேவலில்லா முட்டையிட்டு
கழுகின் பாதுகாப்புக்காக
கலரடிக்காக் குஞ்சுகள்
அடைகாக்க அவசியமில்லா மின்சார ஹீட்டர்
குயிலுக்கு மட்டுமா தாய்மை வேண்டாம்?-
கோழிக்கும்தான்.







5-பிளாஸ்டிக் பூக்கள்

என்றும் மலர்ந்திருக்கும், இயற்கை
பச்சையம், நீர், நிலம் ஏதும் வேண்டாம்.
இலை, மொக்கு, மலர்ச்சி என்றில்லாமல்
வீட்டிற்குள்ளும், வெளியிலும், அலுவகத்திலும்
அட்டையுடன் கட்டித் தொங்கவிட்டு
அவ்வப்போது துடைத்து தூசிதட்டு,
அன்றலர்ந்தது போல்.

6-இன்றைய ஆண்டாள்

வாரணமாயிரம் சூழ வலம்வந்து
கனவில் மணம் முடித்தாய் தெய்வத்தை
நிஜமென்று  கொண்டாடி- நானோ
மனிதனே அல்லாத மாற்றானுடன்
நடந்த நிஜ மணத்தைக் கனவாக்க
முயன்று முயன்று தோற்கிறேன்  -தோழியே
(இன்னும் வரும்)

Monday, July 23, 2012

நான்கு கவிதைகள்

(1) நீர் விழுங்கும் நில முதலைகள்

ஆங்காங்கே சேகரிக்கப்பட்ட கழிவுகள்
வந்திறங்கின, வண்டி வண்டியாய்.
ஒரு நெடிய காம்பவுண்டு சுவரும்,
வண்டி நுழையும் அளவிற்கு
சிறிய கேட்டும் அந்த வெட்டவெளி
ஏரிக்கரையின் ஒரு ஓரம்.
பள்ளம் மேடாகியது,கழிவுகள் நிரப்பியதால்
அழுத்தி, நசுக்கியது அவற்றை ஒரு
பெரும் வண்டி வந்திறங்கி

சுவர் உடைக்கப்பட்டு.
இன்னமும் சில நாட்களில்
மீதமுள்ள சுவற்றுக்குப் பின்னால்
சூலம் நட்ட மரமோ,
சிறு குடிசையோ,
கோவிலோ, வீடோ,
மெல்ல மெல்ல முளைக்கும்.
எல்லோருக்கும் அது தெரியும்.
என்ன, ஒரு சிறு மாற்றம் தானே?
நீர்ப் பரப்பு நிலமாகிறது.

ஏரி முன்புண்டு நூறு ஏக்கர்.
இப்போதோ எனில் அறுபதுக்குள் அடக்கம்.
அதிலும் சில சதுர அடிகள் உள்வாங்கி
விழுங்கப்படுகிறது கண்ணெதிரே.
எந்த வண்ணக் கொடியுடன் போராட?
கையறு நிலையில் கவிதையாய் வடிக்கிறேன்
அதை நான்.



(2) ரயில்பெட்டியில் கும்பி வித்தை

மெத்தென்ற முதல் ஒலி உள்நுழைந்தது
சூடுபடுத்தப்படாத தோல்கருவியின் ஒற்றையாக
கணுக்காலளவு ‘கவுன்' அணிந்த சின்னஞ்சிறு சிறுமி,
ரயில்பெட்டியை நோட்டமிட்டு அளந்தாள்.
இரண்டெட்டு வைத்து ஏதோ தீர்மானித்தவள்போல
சடாரெனத் தலையை பின்புறமாகத் தாழ்த்தினாள்

உடல் வில்லாயிற்று, கை இரண்டும் கால்களும் தரையில்;
கணநேரத்தில் கால்கள் மேலெழும்ப - திகைத்துப்
பதறியது என்மனம் சுழன்றது. உள்ளாடை உண்டா?
ஆண்களும் பெண்களுமாக வழியும் அப்பெட்டியினுள்
எத்தனை ஜோடிக் கண்கள் எதையெதைக் காணும்?
சொல்லொணா சோகத்துடன் தூக்கும் கால்கள் கண்டேன்.
தோல்நிறத்தொரு பைஜாமா இறுக்கமாக,

கால்களை முன்வளைத்து கையொன்றில் மட்டும்
ஏந்தி நின்றாள் உடலை, சிவனைக் காணக்
கைலாயம் சென்ற சிறு புனிதவதியென
மறுபடியும் கவிழ்ந்தாள், மீண்டும் இரண்டடி,
பின்னொரு வில், பின் ஒரு கால்தூக்கி
பின்னும் விழுந்தாள்- பெட்டியின் தரைதனில்
கதவோரம் ஓய்வெடுக்கும் சொகுசுக்காரர்களின்
முன்னாலும், தரைமீதும், பின்னாலும்
துவண்டு படுத்து, அமர்ந்திருக்கும் மெதுபொம்மையென
புரண்டெழுந்தாள் பெட்டியின் கடைசிவரை.

மறுமுறை சிறுவளையம் கைகொண்டு கண் அளந்தாள்.
மறுமுறையும் தோதான இடந்தனில் உட்செலுத்தி
வெளியிலிழுத்துவிட்டாள் வளையத்தில் சிறு உடலை.
கண்கள் விரிய கண்டு களித்தனர் சிறுவர்கள்.

சூடூட்டப்படாத தொய்ந்த தோல் கருவியுடன்
ஆணும் அச்சிறுபெண்ணும் ஏற்கனவேயிருந்த
சில்லரையைக் குலுக்கி ஒலியெழுப்பியபடி
வலம் வந்தனர். சில காசுகள் இணைந்து குலுங்க
அடுத்த நிறுத்தத்தில்வேகம் குறைந்த
ரயில் நிற்கத்தயாரானது.

ஒத்த வயதுடைய என் சிறுமியை பற்றியிழுத்தேன்
வளையும் வளையச் சிறுமியின் மீது பட்டுவிடாதவாறு,
நகரும் ரயிலிலிருந்தே இறங்கிவிடுவானோ
எனப் பயந்த மற்றொரு ஆணோ-பதறிக்
கதவருகில் சென்றணைத்தான் தன் பிள்ளையை.

காசு இட்டவரும் இடாதவரும் என
சிறு கூட்டம் இறங்கியது - மெதுச் சிறுமியும்
மெத்தொலிக் கருவியுடன் ஆணும்கூட.
ரயிலின் எல்லாப் பெட்டிகளும் எப்போதும்
ஒரே அகல நீளம் கொண்டவைதான்.

----------------------------------------------------------------------
 (3) லேடீஸ் கம்பார்ட்மெண்ட் 

வீட்டின் வாயிலிருந்து காலி வயிற்றுடன்
விரந்து கிளம்புகிறார்கள் -- இவர்கள்

கிழமையும், மூகூர்த்த நாட்களின் முன் தினமும்
தீர்மானிக்கின்றன இவர்களின் உடையை.

வெள்ளிக்கிழமையில், பிடரியிலிருந்து
இடுப்புவரை அவரவர் இருப்புக்கு ஏற்ப
படர்ந்த ஈர முதுகோடு ரயில் ஏறுகிறார்கள் -- இவர்கள்.

அமர்ந்து, உடன் தலை உதறி, சீப்பெடுத்து வாரி
சுற்றிக் கொண்டு வந்த புடவையைச் சீர் செய்து உடுத்தி--பின்
சிறு டிபன் பாக்ஸ் திறக்கிறார்கள் -- இவர்கள்.

விட்டுப்போன ஸ்லோகங்கள் படிக்கப்படும்
உரத்தகுரலில் பக்திப்பாட்டுக்கள் ஒலிக்கப்படும்
பிறரிடம் கையேந்தாமல் ஆண்டவனிடம் ஏந்தி
அவ்வப்போது நீளும் கைகளுக்கும் தவறாமல் இடுகிறார்கள்-- இவர்கள்.

அடையாள அட்டையைப் பொத்தி எடுத்து
கண்ணாடித் திரை அகன்று உள் நுழையும் நேரம்
வெளியிடத்தில் திறந்த வெளியில்
விட்டு விடுகிறார்கள் வீட்டை-- இவர்கள்.

குட்டி வளர்ப்பு மிருகம் போல கண்ணாடித்
திரை தாண்டியும் கெஞ்சும் கண்களுடன்
அவ்வப்போது திறப்படும் கதவின்
காற்றுடனும் எட்டிப் பார்த்து ஏங்கி நிற்கும் வீடு

சக்தியெல்லாம் வழிந்துவிட, கசங்கிய உடை
மடங்கிய பைல்களுடன் முகப்பூச்சற்று
உரிய நேரத்திற்கும் பிறகே எப்போதும் கட்டாயமாக
வெளியேற்றப்படுகிறார்கள் -- இவர்கள்.

கண்ணாடித் திரையிடை விட்ட குட்டியை எடுத்துத்
தோள் மீது சாற்றி அலுவலகத்தைத் தன் ஒரு விரல்
பிடித்துக் கீழிறக்கி உடன் நடத்தி தளர் நடையுடன்
வாகனம் அடைய விரைந்து நடக்கிறார்கள் -- இவர்கள்.

உப்பிட்ட ஒற்றைக் கொய்யா, ஒரு சப்போட்டா
சிறு சொமோசாக்கள் ஒன்றிரண்டு, பாப்கார்ன்
முதல் வியாபாரமாகத் தொடங்குகிறார்கள் -- இவர்கள்.

நெடு நேரம் சிறு உணவை மென்று
பசி ஆற்றிக் கொண்டு, கழுவி வைத்த டிபன்
டப்பாக்களில் உதிரி மலர்கள்
நூலெடுத்துக் கட்டி வைத்து, பொதினா
காலிப்பிளவர், கீரைகள் ஆய்ந்து
காலடியில்  இட்டுக் கொள்கிறார்கள் கழிவுகளை--இவர்கள்.

சிறிதே சிறிது நேரம் அடுத்திருப்பவருடன் பேசி பின்
கைபேசி அழைப்புகளுக்கு பதிலளித்து
உரையாடிக் கண் மூடுகிறார்கள்--இவர்கள்.

ஜன்னல்களில் பான்பராக் எச்சலோ
காறித்துப்பிய கோழைத் துணுக்குகளோ
சிறு சிகரெட் துண்டுகளோ
வேர்க்கடலை தோல்களோ இல்லாமல்தான்
இருக்கிறது, வீட்டின் சமையல் கழிவுகள்.

தரை நிரம்பி, எல்லோர் கைகளிலும் இடுப்பிலும்
அலுவலகமும் வீடுமாக  நிரம்பி வழிகிறது
லேடீஸ் கம்பார்ட்மெண்ட்
..
( 4) வட்ட மேசை

எத்தனையோ நாற்காலிகள் இருந்தாலும்
அமர்ந்தது என்னவோ அந்த
வட்ட மேசையின்மீது- சற்றே
குனிந்து கையூன்றி எதிர் இருக்கையில்
விவாதமும், விமர்சனமும், கவிதையும், நெருக்கமும்
மற்றெல்லாமாக என விழுந்துகொண்டு
இருந்தன சொற்கள் மேசையின்
மீதாக

ஒன்றின்மீது ஒன்றாக,
குறுக்கு நெடுக்காக,
குவியல் குவியலாக,
சிறுமலையென.. ஆனால்
ஏதொன்றும் சிதறி தவறிக் கீழே
இறங்கவும் இல்லை; விழவும் இல்லை.

வட்டம் என்றால் சுழலும்
அல்லது உருளும்.
ஏதோவொரு அசைவுக்குட்பட்டதே
உருண்டால் சிதறும், சுழன்றால்
சொற்கள் விசிறி அடிக்கப்படும்.
ஏதும் நிகழாமல்
நிலைத்தே நின்றது வட்ட மேசை.

என் வீட்டிற்கு எடுத்துவர
மேலெழும்பியது விருப்பம்.
அது ஒருநாள்

நிறைவேறியது, உண்மையாகவே
எல்லோரும் எப்போதும் பேசிய
பழந்தமிழும், செந்தமிழும், அயல்
தமிழும், இவற்றுடன்
என் சொற்களுமாக வந்து
இறங்கியது மேசை.

ஆனால்,

நான் நினைதவாறில்லாமல் தலை
கழற்றப்பட்டு சக்கரம்போல
பக்கவாட்டில் அடுக்கப்பட்டு
வண்டியில் இருந்தது.
அவசரம் அவசரமாக வண்டியோட்டியிடம்
“சிதறி உருளும் சொற்களையும்
சற்றே சிரமம் பாராமல் எடுத்துவரவும்”
பணிந்து பணித்தேன்.

முகத்திலும், உதட்டோரத்திலும், பார்வையின்
ஊடுருவலிலும் எளனமும் பயமும்.
நானும் உடன் சென்று வண்டியிலிருந்து
விடுபட்ட சொற்களைப் பொறுக்கிக்
கைகளில் அள்ளிவந்தேன்.

இப்போது என்வீடு முழுக்க சொற்கள்
குதித்துக்கொண்டும், ஏற்கனவே இருந்த
இளைய சொற்களோடு
கைகோர்த்து விளையாடியபடியே.

அதிலிருந்து எடுத்த சில சொற்கள் இவை.


வெள்ளை யானையும் குளிர்பதனப் பெட்டியும்(சிறுகதை)

   







 வெள்ளை யானையும் குளிர்பதனப் பெட்டியும்






மூடிய கண்ணினுள் ஒரு சிறு உறுத்தலும் இல்லாமல் அந்தப் பெரிய வௌ¢ளை யானை என்னைப் பார்த்தபடியே உள் நுழைந்திருந்தது. யானையின் நிறம் என் மனத்தினுள் சற்றே ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும், உருவத்தின் பாங்கும் அதன் அசைவுகளும் என்னோடு எப்போதும் உறைந்திருக்கும் காட்சிகளுக்கு ஒப்பவே இருந்ததினால் நிறம் ஏற்படுத்தும் ஆச்சரியமும் சில நிமிடங்களில் பிரிந்து போயிற்று.  யானைக் கலரிலோ அல்¢லது பஞ்சு நிறத்திலோ மேகங்களில் காணப்படும் வடிவ ஒற்றுமையில் உள்ள மெத்மெத்தென்ற மென்மையோ என்னவோ இந்த வௌ¢ளை யானையில் காணாமல் போயிருந்தது. மூடிய கண்ணின் முன் யானை வரக் காரணம் ஆராய மனம் மேற் கொண்டது.  

    யானை என்னை எப்போதும் மரணத்தின் துக்கத்தினுள் கொண்டு செலுத்தும். இப்போதும் அப்படியே.  எனவே கண் தானாகத் திறந்¢தது. சூழலை உள் வாங்கிக் கொண்டது.  யானை வந்ததாக எண்ணிய கதவு என்னமோ மூடிய படியேதான் இருந்தது.

    அம்மாவின் திடீர் இறப்புவரை என் அறியாப் பருவம் யானையுடனேயே  கழிந்தது. எப்போதும் வீட்டில் கல் மீது ஏற்படும் உளிச் சத்தம். முடிந்ததும் முடியாததும், நிமிந்ததும், அமர்ந்ததும், படுத்ததுமாக பல வகையில் கடவுள் உருவங்கள் கல்லிருந்து வெளிப்பட்டுக் கொண்டிருக்கும்.  நிலமெங்கும் சிறு சிறு துகள்களாக கருங்கற்கள். துகள்கள் யானைக் கலரில் அல்லது அதையொத்த வெண்மையையும் கருமையுமாய், இறைந்து கிடக்கும். அமைதியாய் அமர்ந்திருக்கும் புரியாத விலங்காக கடினமான வெறும் பாறை. ஆங்காங்கே உருண்டிருக்கும் தூண்கள் சிற்பங்கள் என முழுமையடைந்த கற்களின் உருவ மாறுபாட்டில் கொக்கி போல துருத்திக் கொண்டிருக்கும் எந்தக் கல் நுனியிலும் ஏதோ ஒரு துணி தொங்கிக் கொண்டு, கனத்துடனேயோ அல்லது காற்றில் ஆடிக் கொண்டோ, பை, சட்டை, துண்டு என்று எந்த வடிவத்திலும் சிற்பத்துடன் துண்டாடிய நவீனத்துடன் சிற்பியிடமிருந்து பிரிந்து உசலாடிக் கொண்டிருக்கும்.  பள்ளி விட்டு வீட்டிற்குத் திரும்பிய பின் முதல்நாள் முடிவுக்குப் பின், பகலில் மலர்ந்திருக்கும் சிலை பார்க்க ஆவல் கொண்டு ஓடிவரும் நாட்கள் அவை. என் கையிலும் உளி ஆடும் நாட்களைக் கற்பனை செய்து கொண்டே வலம் வரும் பள்ளி நாட்கள்.  திறந்த வெளிதாண்டி, வீட்டினுள் அம்மாவைக் காண ஓடிவிடுவேன். சிலைகளிலும் கம்பத்திலும் அசையாது நிற்கும் யானை தினமும் அசைந்து எங்கள் வீட்டைக் கடக்கும், கோவிலுக்கு அபிஷேக நீர் தளும்பத் தளும்ப சுமந்தபடி.  அம்மாவோடு யானைக்கு நல்ல சிநேகிதம். எனக்கும் தான்.  பூஜை முடிந்து வரும் வழியில் அம்மா முறத்தில் வைத்திருக்கும் வெல்லமும் அரிசியும் எடுத்து சாப்பிட்டு, எப்போதும் முறத்தை சுழற்றித் தட்டித் திரும்ப அம்மா கையில் திணிக்கும் யானை.

    பள்ளிச்சவாரி எனக்கு அவனின் மீதுதான்.  ஸ்தபதி பிள்ளை. அவனின் முன் நெற்றியின் அருகாமையில் அமர்ந்து பையைத் தொங்கவிட்டு, அனைத்து வீடுகளையும் கடக்கையில் எனக்கு ஏகப்பட்ட உயரம் கூடி விடும்.  எல்லோர் வீட்டு ஓடும் அதன் மீது எறிந்தும், விழுந்ததுமான பல விதப் பொருட்கள் கண்டு, ஓடுகளைத் தொட்டு மரத்தின் பெரிய கிளைகளைக் கை கொண்டு எட்டிப் படித்து என யாருக்கும் கிடைக்காத யானைச சவாரி. . புட்டத்தில் முடி முள்ளாய்க் குத்தும்,  டிராயரையும் மீறி.. வெற்றுக் கால்களில் வீட்டு வாசலில் உருட்டி விடப்பட்டிருக்கும் கற்களின் சொரசொரப்போடு என்னையும் அசைத்துக் கொண்டு பள்ளி நோக்கி


நடப்பான்,  பாகன் கால் நடையாக உடன் வர. என் தின் பண்டங்களில் அவனுக்கும் பங்கு உண்டு.                         
    ஒருநாள் பள்ளி விட்டு அகாலத்தில் வந்த எனக்கு  அம்மாவின் மரணம் புரியாத பயமாய் இருந்தது. அதன் விளைவுகள், காரணம் ஏதும் அறியாமல் எல்லாம்
நடந்தேறியது. அடுத்த நாள் அவன் வரும் நேரம் பாட்டி அவன் ஏங்கக் கூடாதென்று முறத்தில் அரிசியும் வெல்லமுமாகத் தெருவிற்குக் கொண்டு வந்தாள்.  வெற்றுப்
பார்வை பார்த்து விட்டு கலங்கிய கண்களுடன் வீட்டைக் கடந்து சென்றான் அவன், முறத்தைத் தொடாமல்.  மறுநாளும், அதற்கு மறுநாளும் கூட. இதுவே தொடந்தது.  எனக்கு மரணத்தின் துக்கத்தை அதிகப் படுத்தலை அவன் ஒவ்வொரு நாளும் உணவின் மறுப்பு மூலம் வெளிப்படுத்திக் கொண்டிருந்தான்.

இன்று தரிசித்த கோவிலின்  வாசலில் கட்டியிருந்த யானை என் உள் மனத்தை மேலெழுப்பி யிருக்கலாமோ?  பாகன் சாப்பிட்டு இலையை மடித்து யானையின் வாயினுள் இட்டுக் கையையும் இரு முறை உள் வாயினுள் செலுத்தி புரட்டி எடுத்துப் பின் தன் மேல் துண்டால் துடைத்துக் கொண்டான்¢. வௌ¢ளையானை கண்ணில் முளைக்க இது கூடக் கரணமாயிருக்கலாம். 

வௌ¢ளையானை கனவில்கண்டது பற்றிப் பலரால் பலன் சொல்லப்பட்டது.  புத்தரையும் மற்ற புனிதரையும் இணைத்து .  வௌ¢ளையானை பிரிவின் விளக்கம், ஞானத்தின் வடிவம், அறிவின் படிமம், என அவரவர்க்கு ஏற்றபடி. எனக்கென்னவோ நகரத்தின் சிறிய பிளாட்டினுள், போதாத வாயிற் படியில் இது எப்படி சிரமத்துடன் உள் நுழைந்திருக்கும் என்பதே கேள்வியாய் இருந்தது. பாமரேனியன் நாய்க்குட்டி வேண்டுமானால் குனியாமல் நுழையலாம் வௌ¢ளையாய், பொதியாய் கிரில் கதவின் உட்பக்கம்.  ஆனால் யானை எப்படி? 
   
‘ என்ன வௌ¢ளையானையா?  வெறும் யானைக்கே சம்பளம் கட்டாது. வௌ¢ளை யானை வேறயா?’
இப்படி பலப்பல வழிகளில் என்னுடன் வௌ¢ளை யானை அநேக நாட்கள் பேசப்பட்டது பெரியோராலும், சிறியோராலும். 

நான்கு பெரிய வௌ¢ளை மர ஸ்டாண்ட்  பெரிய கால்களுடன் சதுரமாக நின்று கொண்டிருந்தது அந்தக் குளிர்பதனப் பெட்டி, அதன் கைப்பிடி சற்றே நீளமாய் தொங்கிக் கொண்டு துதிக்கையைப் போல. சாவித்துவாரம் சிறு உலோக வட்டமும், அதன் ஒரு  கோடு கீற்றுப்  பார்வையுமாய்.  கடையினுள் நுழைந்து அதன் அருகில் சென்று சற்றே தடவிப் பார்த்தேன். மிக வழவழப்பு.  கன்னத்தைஉரசினேன். ஸ்டாண்டின் கால்களைத் தட்டிப் பார்த்தேன்.  மேலும் கீழும் பார்த்துச் சுற்றிச் சுற்றி வந்தேன். அது என்னைப் பெயரிட்டு அழைத்தது , அம்மாவின்குரலில்.
பிளாட்டின் இடம் கருதி அம்மா என் யானையுடன் இரண்டரக்கலந்து என் வீட்டில் இடம் பெற சதுரமாய் அச்சிலடக்கி உள் மனம் குளிர என்னை அழைக்கிறாள் என்று. சில நாட்கள் தொடர்ந்து கடை சென்று காசு போட்டு வௌ¢ளைச் சதுரத்தைத் துதிக்கையுடன், கால்களுடன் வாங்கி உள் அறையில் இரவும் பகலும் எந்தேரமும் வெளிச்சம் படும்படி அமர்த்தினேன்.  அருகமர்ந்து முகம் தேய்த்தேன்.

அம்மாவின் மடிமீது.  யானைத் தன் சிறு கண்களால் என்னைப் பார்த்து நான் இட்ட  அனைத்தையும் தன் வயிற்றுக்கிள் அடக்கி எனக்காகப் பாதுகாத்து நின்றிருந்தது, வெளிச்சத்தில்.  சிறு கீறல் கூட அற்று எனது பிளாட்டின் ‘கிரில்’களையும், கதவுகளையும் கடந்து உள் வந்த போது சேதாரமில்லாமல் என்னை அடைந்த---இருப்பிடம் நுழைந்த வௌ¢ளை யானையை எல்லோருக்கும் காட்டினேன்.   


                           















மாசறு (சிறுகதை)






மாசறு








    " ஆன்ட்டி, நான் ஒரு படம் வரையறேன் பாக்கறீங்களா? அம்மா! ஒரு பேப்பர் குடு".

    நிச்சயம் நான் அந்த இடத்தில் ஒரு சிறுமியை எதிர்பார்க்கவில்லை. மிகச்சிறிய -பகலிலும் மின் விளக்கின் உதவி தேவைப்படும்- ஜன்னல்கள் கொண்ட அறை அது. ஜன்னலை அடுத்த அடுத்த கட்டடச் சுவர் அடைத்தது. சுவர்களின் அருகே ஒரு கணினி சிறிய இடைவெளிவிட்டு. அதன்முன் ஒருவர். கணினிமுன் அமர்ந்திருப் போரைத் தவிர வருவோரும் போவோரும் என்று எல்லோரும் வளர்ந்தவர்கள், வளர்ந்து விட்டவர்கள், முதியோர்கள். ஒரு பக்கச் சுவற்றில் சிறு படங்கள், பள்ளிப் புத்தகப்பை சற்று தள்ளி சீருடை அவிழ்க்கப்பட்டு வெறும் 'சிம்மிஸி'லும் அச் சிறுமி.

    தூக்கம் விடுபட்டு எழுந்து மேஜை உயரத்தில் தலையை எட்டி அவள் வெளிப்பட்டபோது, பள்ளியில் இருந்து இன்னமும் விடுபடாத, அதையும் விட ஒரு சிறிய அறையில் காற்றற்று புழுக்கத்தால் முகத்தில் ஒட்டியிருந்த சிறு சிறு முடிகளுடன் தென்பட்டாள். தூக்கத்திலிருந்து விடுபட்டதும் என்னிடம் விளையாட ஆரம்பித்துப் பேசுகிறாள். விளையாட்டும் கூட குதித்து ஆடி ஓடாமல் ஒரு பேப்பரில் தன் நேரத்தைக் கழிக்க என்று.

" ஆன்ட்டி இதபாருங்களேன், இது ஒரு ஆள்."

    ஒரு கோடும் அதன்மேல் பக்கவாட்டில் இரு கோடுகள் கைகளாகவும், நீளக்கோட்டை இரண்டாக வகுந்து கால்களாகவும்  மாற்றப்பட்டு, அதன் ஒரு உருண்டை தலையாக ஆக்கப்பட்டது.  தலையில் இரு வட்டங்கள் கண்களாகவும் இடைப்பட்ட கோடு மூக்காகவும், அதன் மீது கீழான குறுக்குக் கோடு வாயாகவும்  வரையப்பட்டது. 

"இல்லை- ஒரு பொண்ணு"

    சட்டென்று நெற்றியின் மத்தியில் ஒரு சிறு வட்டம் பொட்டென.

"பொண்ணு பொடவை கட்டி இருக்கா"

    கைகளின் இடையில் இரண்டு மூன்று கோடுகள் தாவணியாயின.

"பொண்ணு வீட்ல இருக்கா"

    அந்தக்கோட்டொவியத்தைச் சுற்றி ஒரு சாதுரம் வரையப்பட்டு, மேற் புறச் சதுரத்தின் மீது முக்கோணம்--

" வீடுண்ணா கதவு வேண்டாமா?"

    சதுரத்தைக் கீறி ஒரு நீள் சதுரம் வரையப்பட்டது. பெண்ணை அவள் உயரத்தை உடலை ஒட்டி.

"வீடு எங்கேயிருக்கு? ரோட்டு மேலதானே? ரோட் போடறேன்."

    அந்தக் கீறப்பட்ட நீள் சதுரத்தையும் முன்பு வரைந்த வீட்டிற்கான சதுரத்தையும் முன்னும் பின்னுமாகக் கடந்து கரையென கோடுகள்  ரோடாகியது.

"ஆண்ட்டி ரோட்லே மரம் யெல்லாம் இருக்கணும் தானே?"

    அங்கொன்றும் இங்கொன்றுமாக ரோடின் மீதும் இரு மருங்கும் இலைகள், கிளைகள் அடுக்கி வைக்கப்பட்டு அவற்றை இணத்துக் கோடுகள் வரைந்து அவைகள் நிலத்தில் இழுத்துக் கட்டப்பட்டன; சிறு சிறு வேர் களுடன். ஒவ்வொரு மரத்தின் இலையும் சற்றே மாறு பட்டு இருந்தது.

"ரோட்லே வண்டி யெல்லாம் போகும். இது அம்மா. அம்மா ஸ்கூலேருந்து வர பொண்ணுக்காக வேனுக்காக நிக்கறாங்க, சரி பொண்ணு போட்டச்சு. அப்புறம்? மரத்தில காக்கா குருவி யெல்லாம் போடணுமே. அப்புறம் பூ போடணும்."

    மரத்தின் மீதாகவும், அள்ளையில் இறகும் காலும்  உடலும் வாயுமாக பறவைகளும் பூக்களும் மலரவும் உலவவும் ஆரம்பித்தன.

" வீட்டுக்கு மாடிப் படி போட மறந்துட்டேனே? மாடிக்குப் போக படி வேண்டாமா?அய்யே"

    தலையில் அடித்துக் கொண்டே பேப்பரைத் திருப்பி  செங்குத்தாக நிற்கும் கோடுகளை படுக்க வைத்து பற்கள் போல் படிகள் அடுக்கப் படுகின்றன. முக்கோணம் ஆரம்பிக்கும் முனைவரை.

"வீட்டுக்கு மேலே சூரியன், வானம் , நிலா, ஸ்டார்ஸ் யெல்லா இருக்கும்"

    வீட்டுக்கும் பேப்பரின் முனைக்குமாக மேகமும் சூரியனும், நட்சத்திரமும் நிலாவும் ஒரு சேர ஒளிர்கின்றன. வீடுக்குக் கட்டப்பட்ட படிதான் அவளுக்கு வானத்தைக் காட்டியது போல.

"ஆண்ட்டி ரோட்லெ மாடு போடட்டுமா. ஆனா மாட்டோட மூக்கு எனக்கு வரையத் தெரியாது கொஞ்சம் வரைஞ்சு தறீங்களா?"

    எதிர் முகமாக மாட்டின் முகம் வரையப்பட்டு பக்கவாடில் உடலும் கால்களுமாக,

"நீங்க போட்டிருக்கற கண்ணாடி மாதிரி  ரண்டு வட்டம் போட்டு, நடுலே ஒரு கோடு போடப் போறேன் மூக்குக்கு. சரியா? ஐய்யா, ஸ்கூல் வேன் வந்து பொண்ணு வந்திட்டா. இது பொண்ணு."

    அம்மா போலவே ஒரு நெடுங்குச்சியும், பக்கவாட்டுக் கைகளும், கவட்டை கால்களும், தலைக்கென சிறு வட்டமும் அளவில் சிறியதாக வரையப்பட்டது. கால்களின் கவட்டையில் நெளிந்து வளைந்த கோடுகள் கவுன் ஆயிற்று. முக வட்டத்தின்  இருபுறமும் காதுகளின் இடத்தின் இரண்டு சடைகள் தொங்க மகள் அன்னையின் அருகில் நின்றாள்; கீறி எடுத்த நீள் சதுரத்தையும், சற்றே கடந்து கட்டடத்தின் மற்ற வெளியிலும் பரவி.  மேலும் சில வாக்கியங்கள் பேப்பரிலிருந்து வாய் வழியாக உரைக்கப் பட்டது.

"சொன்ன பேச்சு கேட்கவே மாட்டா. வெளையாட தெருவுக்கு ஓடுவா. மாடிப்படி ஏறி தானே மேலெ போவா. ரோட்லெ எவ்ளவு கார் வரும்? ஆக்ஸிடெண்ட் ஆனா என்ன செய்யறது?  அன்னக்கி இப்படித்தா, மாடி ஏற்னா, படிலேருந்து கீழே விழுந்திட்டா. ஆண்டி, அடி பட்டா டாக்டர் வேணும், ஆஸ்பிடல் வேணும், படுக்கறத்துக்கு படுக்க வேணும் ."

    ரோடிற்கென வரையப்பட்ட வீட்டிற்கருகில் ஓடும் ஒட்டிய கோட்டின் எதிர் புறம் ஒரு கோட்டின் மீதாக, மீதமுள்ள வெள்ளைத்தாளின் முனை வரையில் கோடுகள் இழுக்கப்பட்டு, பெரிய ஒரு சதுரம் வரைந்து, அதை குறுக்காக கோடிட்டுத் தடுத்து, ஆஸ்பத்திரி கட்டினாள். ஒரு அறையின் சதுரத்தில் நட்ட நடுவில் பக்கவாட்டு நீள் சதுரம் போட்டு அதன் கீழாக நான்கு கால்கள்- கோடுகள்-- இட்டு கட்டில் ஆக்கினாள். ஒரு முறைக்கு இரு முறை கால்களின் எண்ணிக்கையை சரி பார்த்தாள்.

    இதற்குள்ளாகவே, அவளின் உரையாடல் கதையில் அந்த வீட்டின் சிறுமி அடிபட்டுக் கொண்டாள். எனவே கதையிலும், காகிதத்திலும் மருத்துவரின் அவசியம் உருவாயிற்று.

    அதே கவட்டைக்கால்கள், அதே தலை, பக்கவாட்டுக் கைகள், மேல் சுற்றிய முந்தானை. எனவே அதுவும் பெண். தலை வட்டத்தில் இந்த உருவத்திற்கு மட்டும் காதுகள் அரை வட்டங்களாக வரையப்பட்டன. ஏன் எனில் ஸ்டெதஸ்கோப் மாட்டிக் கொள்ள. டாக்டர், அம்மாவைக் கடிந்து கொண்டாள். குழந்தையை ஆறுதல் படுத்தினாள். சாக்லேட்  கொடுத்தாள். ஏற்கனவே  அறையில் கால்கள் நான்குதான் என நிச்சயக்கப்பட்டு வரையப் பட்ட கட்டிலின் மீது வெள்ளைத்தாளின் மீது கிடத்தினாள். ஊசி மட்டும் போடக்கூடாதென அடி பட்ட சிறுமி டாக்டரைக் கேட்டுக் கொண்டாள்.  

"ஆஸ்ப்பிடல் மட்டும் கட்டினா எப்படி? மெடிகல் ஷாப் இருக்கணுமே? எங்க போடலாம்? இடமே இல்லையே? அம்மா, இன்னோரு பேப்பர் தா."

    முன்னிருந்த வெள்ளைத்தாளின் முடிவுற்றுப் போன கோடுகளை இரண்டாவது தாளிலும் ஊடுவி வரும் சாலை என கோடுகள் வரைந்தாள். சாலை ஓரத்தில் மருந்துக் கடையும், பக்கத்தில் அவளுக்குப் பிடித்த ஐஸ்க்ரீம் கடையும் சதுரமாக உருவாயின. மருத்துவ மனையின் உள்ளும், வெளியிலும் உள்ள குழந்தை களுக்காகவும், நோயுற்றால் ஆறுதல் அளிக் கவும், அம்மாவுக்கு உடம்புக்கு வந்தால் குழந்தகளுக்கு பசிக்குமே என்றும் ஐஸ்க்ரீம் கடை திறந்ததாகக் கூறினாள். இரண்டாவது வெள்ளைத் தாளில் அதிக இடம் வெறும் வெள்ளையாயிருப்பதை எனக்கு சுட்டிக் காட்டினாள்.  என்ன வரையலாம் என்று என்னைக் கேட்டாள், ஒப்புக்கு. பிறகு, அவளே அந்த இரண்டு தாள்களின் முழுச் சதுரத்திலும் முன்னும் பின்னும் பக்க வாட்டிலும் அடுக்கடுக்காக கோடுகளைப் பரத்தினாள் சிறு சிறு சம்பவங் களைக் கூறி.  அவளின் கற்பனையும், என்னுள் ஆச்சிரியமும், வெளி வானில் சிவப்பும், கணினியில் எழுத்துக்களும் படங்களும், அறையில்  அதிக உரு வங்களும், வெளியில் இரைச்சல்களும், அறையினுள் புழுக்கமும், மனதினுள் மகிழ்ச்சியும் கிளர்ந்து வெளி எங்கும் எல்லை கடந்து பரவலாயின.

    (இந்தக் கதையில் வரும் படங்கள் பற்றிச் சொல்லியாகவேண்டும். கதையில் வரும் சிறுமி வரைந்த சித்திரங்களுக்கும் காணப்படும் படங்களுக்கும் சிறிது வித்தியாசம் காணக் கிடைக்கலாம். கதைச் சிறுமியின் வயது நான்கு அல்லது ஐந்து இருக்கலாம். அவளையே தேடி திரும்பவும் அதே படங்களைப் போட்டு வாங்க இயலாமல் கதை முடிந்ததும் அவள் அப்பால் சென்று விட்டாள். வேறு ஒரு சிறுமியைத் தேடினேன்; வெகு நாட்களுக்குப் பிறகு கிடைத்தாள்.

    ஆனால் நான் இந்த இரண்டாவது சிறுமியின் சுதந்திரத்துக்குத் தடை விதித்து என் தேவையைக் கூறி படங்கள் வாங்கவேண்டும். அது சிறுமிக்கு எதிரான செயல்தான். என்னுடன் சிறுமியின் பெரியோரும் அமர்ந்துகொண்டு சிறுமி படம் வரைய வழிநடத்தத் தொடங்கினார்கள். நானும்தான். சிறுமி செய்யும் காரியத்தை செவ்வனே செய்ய எண்ணி முதலில் அழிப்பானும் தாளும் எடுத்துக்கொண்டு பின் ஒரு பென்சிலையும் கொணர்ந்தாள். வட்டம் வரையும்போதே சரியாக வரவில்லையோ என்ற அச்சமும் தயக்கமும் கொண்டு அடிக்கடி என்முகம் பார்த்தாள். பிறகு சொல்லச் சொல்லக் கேட்டுக்கொண்டு படங்களை வரைந்துகொடுத்தாள். அப்போதே அவளுக்கு இது அலுத்துப் போய்விட்டது. எனக்கோ ஒவ்வொரு நிலையிலும் படங்கள் அடுக்கப்பட்டுக் கொண்டே வருவற்கேற்ப பிரதி எடுத்து வரையச் சொல்லலாமா என்று எண்ணம் ஓடியது. ஆனால் ஜெராக்ஸ் கடைக்கு அவளைக் கூட்டிச் சென்று சிறுமியின் நேரத்தை மேலும் எனதாக்கிக் கொள்ள ஒப்பவில்லை. எனவே அத்துடன் நிறுத்திக்கொண்டு கிளம்பி விட்டேன். இதனிடையே, குடும்ப விசாரிப்புகள், வரும் விருந்தினர்கள், காபி உபசாரம், டி.வி.யில் சினிமா என்று பலவிதத்தில் கவனம் கலைய நேர்ந்தது. சிறுமி தனது சுதந்திர ஓவியங்கள் சிலவற்றை எனக்கு இலவச இணைப்பாக மிகப் பெருந்தன்மையுடன் அளித்தாள்.

    மறுநாள் சற்றே கசங்கியிருந்த பென்சில் படங்களை ஜெராக்ஸ் பிரதி எடுத்துப் பார்த்தபோது படத்தில் கோடுகள் சாம்பல்பூத்துத் தெளிவில்லாமல் இருந்தன. பென்சில் படங்களை கருப்பாக்க நான் மற்றொரு சிறுமியை நாடவேண்டி வந்தது. ஏறக்குறைய அதே வயதிற்கு, என் வீட்டினருகில் உள்ள ஓர் அரசுப் பள்ளியிலிருந்து. கணினிக்கும், வீட்டிற்கும், மூன்றாம் சிறுமிக்கும் தளம் வேறு வேறு. மூன்றாம் சிறுமியை நான் நாடி வரையச் சொன்னபோது - வரைதல் என்றுகூடக் கூற இயலாது; இருக்கும்கோட்டிற்கு மேலாக வண்ணத்திலோ அல்லது கருப்பு மசியிலோ விளம்புதல் மட்டுமே -அது அந்தச் சிறுமியின் மீது நான் செலுத்தும் வன்முறை என்று உணர்ந்தேன். ஆனாலும் செய்தேன். இச்சிறுமியோ கோட்டின்மீது வரைய மிகப் பயந்தாள். கோடு தவறாகிவிட்டால்? கோணலாகிவிட்டால்? என்று என்னிடம் கேட்டுக் கேட்டுத் தயங்கித் தயங்கி வரைந்தாள். சில நெளிதல்களுடனான கோடுகள் உருவான போது மிரண்டாள். சிறிது சிறிதாக தைரியம் அடைந்து பேசிக்கொண்டே வரைந்தாள். தனது தந்தை அலுவலகத்தில் மேனேஜர் என்றாள். வேனில் பள்ளி வருவதாகச் சொன்னாள். படம் போடுவது தனக்குப் பிடிக்கும் என்றாள். நாட்டியம் ஆடுவேன் என்றாள். முடித்தபின் திரும்பவும் இதுபோல வரைய எப்போது கூப்பிடு வேன் என்று கேட்டாள். பலரில் தன்னை தெரிவு செய்ததற்காகப் பெருமை கொண்டாள்.

    சில தாள்களையும் வண்ணப் பெட்டியையும் கொடுத்து அவளுக்கு விருப்ப மானதை வரையச் சொன்னேன். மகிழ்ச்சியுடன் வரைந்து வண்ண மிட்டாள். பெட்டி வண்ணங்களில் மாட்டுக்கு தீட்ட என்று வண்னம் ஏதும் இல்லையே என்றபோது எனக்கும் அது சரிதான் என்று தோன்றியது. சிவப்பு, பச்சை, மஞ்சள் இவை மிருகங்களில் இல்லாத வண்ணம் அல்லவா?  வெள்ளை மாடு என்று சொல்லிவிட்டு வெள்ளைத் தாளில் வெள்ளை வண்ணம் தீட்டினாள். அதற்குள் அவளது ஆசிரியை நேரமாகிவிட்டதாகச் சொல்லி அவளைக் கூட்டிச் சென்றாள். செல்லும்முன் சிறுமி தனது ஓவியங்களை எனக்கே பரிசளித்தாள்.

    இப்போது நான் எல்லாவற்றையும் இணைத்துத் தங்களுக்கு அனுப்பி யுள்ளேன். மழைத்துளி சிற்றோடையாய் வழிவதுபோன்று இந்த அனுபவம் தங்களை வந்து அடைந்துள்ளது.

க்ருஷாங்கினி