Friday, December 21, 2012

கவிதை

மெய்__ஞானம்

அறியாத வயதில் கேட்டதுண்டு,
காயம் போய், காற்றடைத்த பை என்று.

ஒரு நாள்,

பிளாஸ்டிக் பையில்  காற்றடைத்து
பின் நீரில் விட்டேன் அது பெரும்
உருவெடுத்து உப்பி கம்பீரமாக --
மிதந்து மிதந்து சென்றது.

பின்னர் ஒரு நாள்,

மழையில் ஓடும் சிறு நீர்த் தாரையில்
காகிதப் படகு செய்து மிதக்க விட்டேன்
காற்று நிறைந்து அது காற்றுடன் கலந்து
காற்றிருந்த மட்டும்
மிதந்து பின் நீர் நிறைந்தவுடன் --
மிதக்காமல் மூழ்கியது.

பிறகும் ஒரு முறை,

காலியான டப்பாவில் மூடியிட்டுக்
காற்றடைத்துத் தொட்டியிலிட்டேன்
அதுவும் நீரில் மிதந்து அலை அலையென
அசைந்து அசைந்து நெளிந்தது.
திரவம் நிரம்பிய அக்கணமே
உள்சென்று மூழ்கியது.

விவரம் அறிந்து,
விஞ்ஞானமும், மெய்ஞானமும் கற்றபின்


நீரைவிட அடர்த்தி குறைவெனில்
திரவத்தில் மிதக்கும்
கெட்டிப்படுத்தப்பட்ட நீரும்
நீரில் மிதக்கும், அசையும்.

பிரம்மாண்டமான கப்பலும்
பெரும் நீரில் மிதக்கும் காற்று மட்டும்
உள்ளிருந்தால் அடிநீர் 
மூழ்கித்தான் போகும் என்றும் அறிந்தேன்.

எல்லா உயிர்களிலும் மேலானவன்.
ஆறறிவு உள்ளவன்.
அவனே கடவுள்.
அவனே மனிதன்.

ஆனால்,

நானறிந்த பெண் ஊர் அறியா
வயிற்றுச் சுமையுடனும், வளர்ந்த
தன் மற்றொரு சிசுவை வயிற்றுடன்
துண்டிணைத்துக் கட்டி
சப்தமின்றி நடுநிசியில்
வீட்டுக்கினற்றுள்
காற்று நிறைந்த பைகளாய்
கீழிறங்கி வீழ்ந்தனர்.

காற்றுடன் பைகளாக இருந்த போது
நீருக்குள் மூழ்கியும், மூச்சற்றுப்
பேச்சற்றுக் காற்றும் அற்ற பைகளாய் நீர் நிறைந்திட்ட பின்
ஈருயிரும் சிசுவும்  மேலெழும்பி
அசைந்தன உப்பி, அப்போது

என்னுள் இருந்த விஞ்ஞானமும்
சித்தரின் மெய்ஞானமும்
என எல்லாமே நொறுங்கிப்போய்
ஏன், ஏன், ஏன் என்ற கேள்வியே
மேலெழும்பி மிதந்தது என்னுள்
காற்றும் நீரும் நிறைக்காமலேயே.

No comments: