Friday, November 23, 2012

பதினேழு கவிதைகள் (சென்னை வானொலி நிலயத்தில் படித்தவை)

மாற்று பிம்பம்

தெருவோரம் தேங்கிநிற்கும் தெளிவான
நீரில் விழுந்துவிட்ட நிலவையும்
உச்சி வெயில் வெளிச்சத்தில்
அடிக்கற்கள் தெரிய அசையாத கிணற்றையும்
இடைவெளி தூரத்தை மாற்றிக்காட்டும்
பிரதிபலிக்கும் பிம்பங்கள்.


ஒரேமண்

களிமண் பூமியில் சூளையிட்டு
அறுத்தெடுக்கும் செங்கற்கள்
களிமண் விளைபூமியைப் பிரிக்கும்;
அடுக்கடுக்காய் சிமென்டுடன்
அழகான சுவராக்கி- பயிரற்று.

உறக்கமல்ல, பறத்தல்

ஊர்ந்துவரும் புழு, நெளிந்து நெளிந்து.
இன்றோ அதுவுமற்று கூடுகட்டிக்கொண்டு.
சிறையில் மரண உறக்கம் என்றெண்ணி
எக்களிக்காதே! இது உறக்கமல்ல; பறத்தலின்
விஸ்தரிப்பு. வண்ணம் கொண்டு உந்திப்
பறக்கும் முன்னதான ஓய்வெடுப்பு. ( 9-4-2006-கல்கி)

சூரிய மலர்

வாசலில் சூரியன்(காந்தி மலர்)
இரவில் மலர்ந்து பகலில் உறங்கும்
மின்சாரத் தடைபாட்டில் மெலிதான மஞ்சள்
மேகம் சூழ்ந்த சூரியன், மழை வரும்
என்றெண்ணினேன், பின் மாயை அகன்றேன்.


ஓசோன்

விஞ்ஞானத்தால் வந்த துளை.
விரிந்து பெரிதாகும் என்றால்
ஊர்வன, பறப்பன ஏதுமற்றுக் காலியாகும் பூமி
செடிகளும் மரங்களுமற்று.
உடையும் உலகத்தை ஒட்டவைக்க-ஒரு
பசையுள்ள நாடா உண்டா உன்னிடம்?

கற்றாழை

பிரம்மாண்டமான பச்சை முள் தூண்கள்,
மேலொரு கலசமென விரிந்த சிவப்பு மலர்
மலர் பிரிதொரு நாள் முள்ளாய் மாறும்
மற்றொரு முட்செடி உருவாகும்- என்றாய் நீ;
மற்றொரு முட்செடியில் இன்னொரு
வண்ணமலர் உச்சிக் கொண்டையாய்-
என்றேன் நான்.


கணிப்பொறி

காற்றின் மூலம் காதில் மிதந்துவந்தன
அன்று, அனைத்துச் செய்திகளும்
வாழ்க்கைக் குறிப்பும் வாழும் முறையும் கூட.
அது, பிறகு கல்வெட்டாகி, காகிதமாகி,
அச்சாகி அரங்கேற, இன்றோ- அது
திரும்ப ஒளிரும் மின் அஞ்சல் எழுத்தாகி
மீண்டும் காற்றினூடே!

அவரவர் சதுரம்

கலந்துரையாடல் அனைவருடனும்- வீட்டின்
உள்ளேயும் வெளியேயும் மக்கள்
கூட்டமாய் சமூகமாய் உறவாய்.
இன்றோ, நகர வாழ்வில்
ஆளுக்கொரு பெட்டி, வசதிக்கேற்ப.
தொலை காட்சி, கணிப்பொறி விளையாட்டு என,
அவரவர் சதுரத்தில் அவரவர் தனித்தனியே.

உறவு

ஜடங்களின் உரசல் சப்தமும்
உயிர்களின் உணர்வில் குரல்களும்
அடிவயற்று ஓலமும், நுனிநாக்கு நளினமும்
இணையாத இரு குரல்கள்;
பல்லாண்டாய் ஓர் அறையில்
எதிர் எதிராய்.

சாம்பல் காடுகள்

எரிமலைக் காட்டிடை
வெடித்துச் சிதறும் எரிமலைத் தீயில்
எத்தனை எத்தனை வண்ணங்கள்!
ஆரஞ்சு, ஊதா, மஞ்சள், நீலமென
அனைத்தையும் விழுங்கி முன்னேற
எஞ்சி நிற்பது- சாம்பல் காடுகள்.

அன்பு

இளம்பிள்ளை அச்சமற்று நிற்கும்
எதிரி யாரென்று அறியாத தருணத்தில்;
எல்லாம் கடந்தவரும் அஞ்சார்; அன்பால்
எதிரி யாரென்று அறிந்தாலும் கூட.



நேர்மை

முளையிலேயே கண்டுணரப்படும்
நேர்மையின் முளை எதுவென்று.
பார்த்தனீயமும் பச்சைதான்-எனினும்
பயன்படாதது அழித்தெடுக்கப்படும்.
எங்கும் நேர்மை முளை பரவ
களையெடுப்போம் எல்லோரும்.

பிள்ளைப் பருவம்

வண்ணத்தோடு  ஒப்பிட்டு பெயரிடப்படும்
மலர்கள், உருவத்தோடு ஒத்ததாய் இருக்கும்
காய்கனிகள், இணைத்து சமைத்து
இணைந்து கூடி மகிழ்ந்த நாட்கள்- இன்று,
மற்றோரையும் தொடர்ந்து
சுமந்து செல்கிறது வாழ்க்கை.

நீரும் நானும்

மழை நடந்து வரும், என் இருப்பிடம் தேடி
வெள்ளம் ஓடிவரும், என்னைக் கடந்து
குளம் தேங்கி நிற்கும், என்னை எதிர்பார்த்து.
கடல், அலை கொணரும் கரை நோக்கி
என்னை அடைய, உள் இழுக்க.

வட்டம்

நிலவைச் சுற்றி சிறு வட்டம், கோட்டை
மேகக் கூட்டம் காட்டப்- பின்
வரும் மழை காட்ட. நிழல்
விளக்கைச் சுற்றி வட்டம்
இருளைக் கரைத்து ஒளியை உமிழும்
விளக்குக் காட்ட.

மரம்

மலையிடை உடைசலில் விழுந்த விதை
முளைத்து இன்று ஒரு மரமாகி.
மரத்தின் உடல் போலப் பரந்து
விரிந்த வேர் பாறை பற்றி
உள் ஓடும் நரம்பாய், எலும்பாய்
உயிர் காக்கும் தேவதையாய்.


கவிதை

அன்று ராவணன் தூக்கிச் செல்ல
தொடரும் வழி காட்டலுக்காய்
விட்டெறிந்த அணிகள் நிலத்தில்
வீழ்ந்து கூறியது கதை.
வழி தொலைத்து என்னை இழக்க
தேய்த்துத் தரும் கரைந்த கவிதைகள் இவை.