Monday, October 29, 2012

முன்னுரை-பஞ்சதந்திரம்

 சதுரம் பதிப்பகம் மூலம் விரைவில் 'பஞ்சதந்திரம்' நூல் வெளிவர உள்ளது. அதற்கான முன்னுரை இது.

பஞ்சதந்திரம்: சிறு அறிமுகம்


    நாங்கள் புதுச்சேரியில் வசித்துவந்த போது டெல்லியில் இருந்துவந்த எழுத்தாள நண்பர் ஒருவர் வேலை மாற்றலில் புதுச்சேரிக்கு வந்தார்.  குடும்பத்துடன், அடிக்கடி அவர்களின் வீட்டிற்கு நாங்களும் எங்கள் வீட்டிற்கு அவர்களுமாக சந்தித்துக் கொள்வோம். (1984,85) அப்போது அவர்கள் ‘பஞ்சதந்திரம்' என்னும் இந்தப் புத்தகத்தை எங்களிடம் கொடுத்தனர். 

    பஞ்சதந்திரம் மிக அருமையான நூல் என்பதால் இதில் உள்ள பல விஷயங்கள் குறித்தும் நிறைய பேசி இருக்கிறோம். அப்போதெல்லாம் நூல் வெளியிடுவது என்பதெல்லாம் இல்லை. அந்தப் புத்தகம் அவர்களிடமிருந்து வந்த பின் எங்கள் வீட்டில் யார் கைகளிலாவது எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். அந்த அளவுக்கு ஆர்வத்தைத் தூண்டுவது பஞ்சதந்திரம். படிக்கத் தொடங்கியவுடன் அது உங்களை உள் இழுத்துக் கொண்டுவிடும். எந்தப் பக்கத்திலிருந்தும் படிக்கலாம்.

    கதைகள் என்பதால் பஞ்சதந்திரம் குழந்தைகளுக்கான நூல் என்பதாக ஒரு தவறான எண்ணம் மனதில் பதியவைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு குழந்தை களுக்கானதாகப் பார்க்கப் படுவதும் ஓரளவுக்கு சரிதான் என்றாலும் கூட, அரசியல் தந்திரங்கள் நிறைந்த இந்த ‘பஞ்சதந்திரம்' குழந்தைகளுக்கான கதையாக சிறு சிமிழில் அடைக்க முடியாதது. மேலும் குழந்தைகளுக்காக வடிவமைத்த பஞ்சதந்திரக் கதைகள் மிகவும் நீர்த்துப் போனதாக இருக்கிறது. எளிமைப் படுத்துவது என்பது வேறு, நீர்த்துப் போக வைப்பது என்பது வேறு.

    பண்டிட் ஜ்வாலா பிரசாத் மிஸ்ரா 1910ம் ஆண்டு,  பஞ்சதந்திரத்தை சம்ஸ்கிருத ஸ்லோகங்களுக்கு ஹிந்தியில் உரை தந்து முதன் முதலாக பதிப்பித் திருக்கிறார். அதில் விஷ்ணு சர்மன் நீண்ட காலத்திற்கும் முன்னதாக நமது நாட்டில் வசித்தவர். அவருடைய இரண்டாம் பாடலான அறிஞர்களுக்கு வந்தனம் என்னும் ஸ்லோகத்தில் சாணக்கியரின் பெயர் இடம் பெற்றிருப்பதனால் அவர் சாணக்கியருக்கும் பின்னான காலத்தவர் என்கிறார்.  வெகு காலத்திற்கு முன்னதாகவே பஞ்சதந்திரம் செவிவழிக் கதைகளாக இருந்து வந்திருக்கிறது. கால ஓட்டத்தில் இந்தப் பஞ்சதந்திரம் வெளி நாட்டவர்களால் உயர்வாக உணரப்பட்டு, ஆசியா, அமெரிக்கா, ஐரோப்பியா ஆகிய நாடுகளில் பரவலாக அறியப்பட்டு இருக்கிறது.  விஷ்ணுசர்மன்  என்பது அவரது உண்மைப் பெயராக இருக்க வேண்டியதில்லை. நம் நாட்டில் பல நூல்களை எழுதிய அறிஞர்கள் தமது அடையாளத்தை வெளியிடுவது இல்லை.  எந்த இடத்தைச் சார்ந்தவர்கள், என்ன குலம், எந்தப்பகுதி, எந்த சந்தர்ப்பத்தில் எழுதப் பட்டது போன்ற எந்த அடையாளத்தையும் அவர்கள் சொல்வதில்லை. அது தேவை என்றும் அவர்கள் கருதியதில்லை. மகாபாரதம், ராமாயணம் போன்ற நூல்களை எழுதியவர்களின் பெயர்கள் கூட காரணப் பெயர்களாக இருக்கின்றன. அவர்களின் உண்மைப் பெயர் நமக்குத் தெரியாது. புற்றிலிருந்தவர் அதனால் வால்மீகி என்றும், வேதத்தை உரைத்தவர் என்பதால் வேதவியாசர் என்ற பெயராலும் நாம் அறிகிறோம் என்கிறார்  ஜ்வாலா ப்ரசாத் சர்மா.

    ‘பஞ்சதந்திரம்' மற்றும் ‘ஹிதோபதேசம்' ஹிப்ரூ, லத்தீன், கிரேக்கம், இத்தாலி,  ஜெர்மனி, பிரெஞ்சு, ஸ்பானிஷ், அரபி, பாரசீகம், துருக்கி, சீனா, உருது ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு நூலாகி இருப்பதாக 1910 லேயே ஜ்வாலா பிரசாத் சர்மா பதிவு செய்திருக்கிறார்.

    ஒரு நவீன இலக்கியப் படைப்புப் போல, எதிர் எதிர் கண்ணாடிகளின் பிரதி பிம்பம் போல பஞ்சதந்திரக் கதை தொடங்குகிறது. மகிளாரூப்யம் என்ற நாட்டை ஆண்டு வந்தவன் அமரசக்தி. அவனது மூன்று மகன்களும் புத்தி சாதுர்யம் அற்றவர்கள். அவர்களுக்குப் பாடம் கற்பிக்க விஷ்ணுசர்மன் என்கிற எண்பது வயதான அறிஞர் அமர்த்தப்படுகிறார். நூலை எழுதியவரின் பெயரும் விஷ்ணுசர்மன். முட்டாள் அரசகுமாரர்களுக்குக் கதைகள் மூலம் பாடம் சொல்லித்தருகிறார். முதல் கதை நடைபெறும் இடத்தின் பெயரும் மகிளாரூப்யம்.

    ஒரு மன்னன் தன் நாட்டின் பாதுகாப்பை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற அரசாட்சி முறை இந்நூலில் மிகத் தெளிவாக சொல்லப் பட்டிருக்கிறது. ஆரம்பத்திலேயே தலைவன், அவனது ஆட்சி என்பவை சொல்லப் பட்டு உள்ளன. சதுர்மண்டலாஸ்தானம், நால்வகைப் படை, அரசைக் காக்கும் கவசம் என பிரிந்து நிற்கும் விதத்தைத் தெளிவாக்குகிறது.

    பிங்களகன் என்ற சிங்கத்திடம் மந்திரியாயிருந்த ஒரு நரியின் பிள்ளைகள் இருவர் என்று நகர்கிறது கதை. ‘சிங்கம் சாப்பிட்டு மிச்சமான ஆகாரம் நமக்கு இருக்கிறது. புத்திசாலிகள் அநாவசிய விஷயங்களில் தலையிடலாகாது' என்று ஒரு நரி சொல்வதாய் வருகிறது. இந்த இடத்தில் இரண்டு விதமான விவரங்கள் இருக்கின்றன. அரசன் நேர்மையானவனாகவும், சுயகௌரவத்துடனும் இருப்பவனாக இருந்தாலும், அவரது அடுத்த வட்டத்தைச் சேர்ந்த மந்திரிகள் எதிர் மாறாகக் கிடைத்ததைச் சுருட்டிக் கொள்கிறார்கள் என்பது தெரியவருகிறது. எப்போதும் இப்படித்தான். நரி சுயமாக வேட்டை ஆடாது. வேட்டையாடிய உணவின் பகுதியை, விட்டுச் சென்றதை சாமர்த்தியமாகத் தின்று பசி ஆறும். விலங்குகளின் வாழ்க்கை முறையை நன்கு உணர்ந்து அதைப் பயன்படுத்தி வாழ்க்கையைச் சொல்லும் அரசியல் நிர்வாகம் இந்த முறையைப் பஞ்சதந்திரத்தில் முழுவதுமாகக் காணமுடிகிறது.

    விலங்கினங்கள் பற்றிய ஆவணப் படங்களும், அதன் வாழ்க்கையைப் பற்றிய விவரங்கள் அடங்கிய புத்தகங்களும், ஊடகங்களும் இல்லாத அக்காலத்தில், நாம் கண்டறியும் விலங்கின வாழ்க்கையை மிக அழகாக நுட்பமாக மனித இனத்து குணாம்சங்களுடன் ஒப்பிட்டு எழுதியுள்ளார் விஷ்ணுசர்மன். ராஜ தந்திரம், ஞானம், விவேகம் மட்டுமல்லாமல், உயிரினங்கள் பற்றிய தெளிந்த அறிவும் கொண்டவராய் இருந்திருக்கிறார் விஷ்ணுசர்மன்.

    பிறருக்குத் தலை வணங்கிக் குழைந்து பேசும் வழக்கம் பிங்களகன் என்ற சிங்கத்திற்குக் கிடையாது. பொறுமையின்மை, கோபம், ஆக்ரோஷம், பரபரப்பு ஆகியவற்றைக் கொண்டு தன் காரியங்களைச் சாதித்து வந்தது. பயமின்றித் திரிவது, இச்சகம் பேசுவதை இகழ்வது, காலைப் பிடித்துக் கெஞ்சுவதை வெறுப்பது, மனக் கலக்கமின்றி இருப்பது இவைதான் சிங்கராஜனின் அடையாளங்கள். ஒரு அரசன் எப்படித் தலை நிமிர்ந்து நேர்மையாக சிங்கம் போல இருக்க வேண்டும் என்பது இதில் உணர்த்தப்படுகிறது. தற்கால அரசியல் போக்குகளின் எதிர்மறை நிலையிலிருந்துதான் கதை தொடங்கிறது.

    புத்தகம் நெடுகிலும் வரும் பாத்திரங்கள், விலங்குகள், மனிதர்கள், அரசர்கள், குடும்பங்கள் எந்த நேரத்தில் (விலங்கு மனிதனாக, மனிதன் விலங்காக) எதுவாக எந்த தளத்தில் மாற்றம் கொள்கிறார்கள் என்பதை இடைவெளிக் கோடிட்டுப் பிரித்தறிய முடியவில்லை.

    பஞ்சதந்திரம் முழுக்க முழுக்க அரசியல் தந்திர நூல். இன்றைய அரசியல் கூட்டணிகள், துரோகங்கள், பொய்கள், புரட்டுக்கள் இவை இந்தப் புத்தகத்தைப் படிக்கும் போது நினைவுக்கு வராமல் படிக்க முடியவில்லை. அதே சமயம் இதிலுள்ள ஸ்லோகங்கள் என்றென்றைக்குமாக மனித இனம் அறிந்துணர வேண்டிய பொன்மொழிகள். இந்த ஸ்லோகங்கள் ஆழமானவை. ஸ்லோகங்கள் சார்ந்த அனுபவங்கள் நமக்குக் கிட்டும் போது இன்னமும் ஆழமும், நெருக்கமும் அதிகமாகும்.

    அவரவர் குணத்திற்கும் நிகழ்வுகளுக்கும் பொருத்தமானதாக கதாப்பாதிரங் களுக்கு பெயர்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவை காரணப் பெயர்கள். இடங்களின் பெயர்களும் அப்படியேதான். ஆனால் பெண் பாத்திரங்களின் பெயர்கள் ஆண்களின் பெயர்களுடன் சேர்ந்தே வருகின்றன. விலங்குகளில் பெண்ணினப் பெயர்களும் அப்படியே. பெண்ணின் பெயர்கள் ஓரிரு இடங்களில் வந்துள்ளன. மற்றபடி முதலையின் மனைவி, குரங்கின் மனைவி, அரசகுமாரி, ராணி, என்பதாகவே வருகிறது. பெண்கள், சாதிகள் பற்றி பஞ்சதந்திரத்தில் கூறியிருப்பது பொருத்த மற்றதாகவும் சற்றே கோபம் கொள்ள வைப்பதாகவும் இருக்கிறது. அரசியல் நிர்வாகம் பேசப்படுவதால் பெண்கள் பெயர்கள் தவிர்க்கப் பட்டிருக்கின்றனவா? மூல நூலாசிரியருக்குத்தான் தெரியும். இந்தகாலத்திலும் கூட, நிர்வாகத்திலும், அரசியலிலும் பெண்களின் பங்கு மிகக் குறைவுதான். அன்றைய கால கட்டத்தில் அரச பரிபாலனத்தில் பெண்களின் பங்கு அறவே இருந்திருக்காது. அவர்களின் நடமாட்டம் அந்தப்புரத்துடன் சரி. 

    பெண்களைப் பற்றி பஞ்சதந்திரம் சொல்லும் கருத்துக்கள், மாதிரிக்குச் சில கொடுக்கப்பட்டிருக்கின்றன.

‘மேலும்  ஸ்தீரிகள் விஷயம் தான் தெரிந்ததாயிற்றே ஒருத்தனோடு வம்பளப்பாள். இன்னொருத்தனைக் கனிவுடன் பார்ப்பாள். மூன்றாவனை மனதில் நினைத்துக் கொண்டே இருப்பாள். யாரைத்தான் பெண் திடமாகக் காதலித்தாள்'

‘எத்தனை கட்டைகள் போட்டாலும் நெருப்புக்குத் திருப்தி இல்லை.
எத்தனை நீரைக் கொட்டினாலும் சமுத்திரத்திற்குத் திருப்தி இல்லை.
எத்தனை ஜீவராசிகளைக் கொன்றாலும் யமனுக்குத் திருப்தி இல்லை.
எத்தனை ஆண்களைச் சேர்ந்தாலும் பெண்களுக்குத் திருப்தி இல்லை.'

    இதுபோல இன்னமும் பல நூல் நெடுகிலும் இருக்கின்றன.

    பஞ்சதந்திரத்தில் கடவுள் இடம் பெற்றதாகக் கூறமுடியாது. கடவுள் வாழ்த்து என்ற முதல் பாடல் உள்ளது. காளை மாட்டைப் பற்றிக்  குறிப்பிடும் பொழுது, சிவனுக்கு அது வாகனம் என்று வருகிறது. ‘தச்சனும் நெசவாளியும்' என்கிற கதையில் நெசவாளி விஷ்ணு வேஷம் தரித்து அரசகுமாரியை சந்திக்கிறான், அதற்கு விஷ்ணுவினுடைய வாகனம் போல கருட வாகனத்தை தச்சன் செய்து கொடுக்கிறான் என்று வருகிறது. கடைசியில் அரசர்களுக்கிடையில் சண்டை ஏற்படும் பொழுது நெசவாளியை உண்மையான விஷ்ணு என்று நினைத்துக் கொண்டிருக்கும் அரசன், மாப்பிள்ளையிடம் உதவி கேட்கும் பொழுது விஷ்ணு வேஷம் தரித்தவன் தோற்றால் நமக்கு அவமானம் என்று விஷ்ணுவின் மனைவி லட்சுமி கருதுவதால், அந்தக் கணம் உண்மையிலேயே நெசவாளிக்கு சக்தி உண்டாகி எதிரியைத் தோற்கடிப்பதாக வருகிறது. கடவுள் வாழ்த்துடன் தொடங்குவது அந்தக்கால மரபு என்பதால் இந்த நூலும் கடவுள் வாழ்த்துடன் தொடங்குகிறது.

    குழந்தைகளுக்கானது பஞ்சந்திரம் என்று எண்ணிக் கொண்டிருக்கும் நமக்கு பஞ்சதந்திரத்தில் குழந்தைகளே இடம் பெறவில்லை என்பது முரண் தானே. அரச குமாரர்கள் என்ற முட்டாள் சிறுவர்கள் நால்வரைத் தவிர நூல் நெடுகிலும் குழந்தைகளின் பங்கு இல்லை. அரசியலில் குழந்தைகள் இடம் பெறமுடியாது.

    பஞ்சதந்திரத்தில் கடவுள் வாழ்த்துச் செய்யுளில் விஷ்ணுசர்மன் ப்ரம்மா, விஷ்ணு, கார்த்திகேயன், மழை, காலன், நெருப்பு, இந்திரன், சந்திரன், குபேரன், சரஸ்வதி, கடல், நான்கு வேதங்கள், மலை, காற்று, பூமி, வாசுகி முதலான பாம்புகள், நதி, அஸ்வினி குமாரர்கள், லட்சுமி, காஸ்யபரின் மனைவி, தேவர்கள், புனித நீரிடங்கள் (காசி முதலாவை), யக்ஞம் (திதிகள்), வசு (எட்டு திசை) முனிவர் (வியாசர் போன்ற) கோள்கள் (ஒன்பது கிரகங்கள்) எல்லாவற்றையும் கூறி எங்களைக் காப்பற்றுங்கள் என்று வேண்டுகோள் வைக்கிறார்.

    அடுத்து தனக்கு முன்பு வாழ்ந்த அறிஞர்களுக்கு வந்தனம் சொல்கிறார். சுயமாய்த் தோன்றிய முனிவர், சுக்கிரன் வியாசர் பராசரர் போன்றவர்களுக்கும், சாணக்கியன் போன்று தனக்கு முன்னதாக நீதி சாஸ்திர நூல்கள் எழுதிய அனைவருக்கும் வணக்கம் சொல்கிறார்.

    அரசியல் பாடங்களும், அன்றாட வாழ்க்கைப் பாடங்களும் கதைகள் மூலம் எளிதாக எடுத்துச் சொல்லப் படுகின்றன. இடையிடையே வரும் ஸ்லோகங்களில் நீதியும், இலக்கிய நயமும் இருக்கின்றன.

    ‘மித்ரர்களுக்கு உபகாரமும், சத்ருக்களுக்கு அபகாரமும்  செய்து (அரசனின்) புத்திமான்கள் அரசனைத் திருப்தி செய்கிறார்கள்.'

    இன்றைய நாட்களில், சத்ருக்களுக்கு உபகாரம் செய்து அரசனின் பயத்தை அதிகரிக்கச் செய்து அருகில் அருகில் செல்கிறார்கள் அரசியல்வாதிகள்.

    ‘அரசர்கள், ஸ்திரீகள், கொடிகள் இவை மூன்றும் அருகில் எது இருக்கிறதோ அதைப் பற்றிக் கொள்கிறது'
    என்று விலங்கு மற்றும் செடி கொடி போன்ற  இயற்கையை சார்ந்தும் பலதும் பஞ்சதந்திரத்தில் இடம் பெற்றுள்ளன.

    விஷ்ணுசர்மன் முட்டாள்களுக்குச் சொன்ன அறிவுரையை விட அதில் விரவிக் கிடக்கிற விஷ்ணுசர்மனின் புத்திசாலித்தனமும், சொல்ல வேண்டியதை மிக எளிய முறையில் சிறு சிறு சம்பவங்களாகக் கோர்த்துக் கொடுக்கும் முறையும் பிரமிப் பூட்டுவதாக இருக்கிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட இவை, இன்றைக்கும் பொருத்தமாக இருப்பதால், இந்த நூல் நம்மை அதிசயத்தோடும் பார்க்க வைக்கிறது.

    அரசியல் நிர்வாகம் பற்றிய கருத்துக்கள் இன்றைக்கும் பொருத்தமாக இருக்கின்றன.

    அரசனிடம் நடந்து கொள்கிற மாதிரியே அரசனின் தாயார், ராணி, அரச குமாரன், முக்கிய மந்திரி, புரோகிதன், வாயில் காப்போன் ஆகியோரிடம் நடந்து கொள்ள வேண்டும் என்ற பொருள் தரும் இந்த ஸ்லோகத்திலிருந்து, அரசனுக்கு அருகிலிருக்கும் மனிதர்களை அனுசரித்துக் கொண்டு நற்பெயர் எடுத்துவிட்டால், மற்ற கதவுகள் விரைவில் திறக்கும் என்பதையும் அறியமுடிகிறது.

    ‘குத்தலும், ஏளனமுமாக அரசன் பேசும்போது யார் பதிலுரைப்பதில்லையோ, அவனை அரசன் விரும்புகிறான்'.

    ‘காலத்தில் பெய்த மழையால் ஒரு விதையிலிருந்து மற்ற விதைகள் முளைப்பது போல, வார்த்தைக்குக் கிடைக்கும் பதிலிலிருந்து மற்ற பேச்சுக்கள் முளைக்கின்றன.'

    ‘அரசன் விடாமல் சங்கடங்களில் மாட்டிக் கொண்டிருந்தால்தான் மந்திரிகளுக்கு சுகம்'

    இது போன்ற ஸ்லோகங்கள் ‘நட்பு அறுத்தல்' என்ற முதல் தந்திரத்தில் வருகின்றன.

    இது போலவே பரவலாக ஐந்து தந்திரங்களிலும் அதற்கேற்றவாறு கதைகளும், அதனுள் மற்றொரு கிளைக் கதையும், என்று பின்னிப் பின்னி கதை சொல்லும் முறை, இன்றைய பின்நவீனத்துவம், மாஜிக்கல் ரியலிஸம் அன்றே கையாளப் பட்டுள்ளது என்பதைத் தெரிவிக்கிறது. இன்றைய அரசியல் கூட்டணிகளும் அக்காலத்தியவையே என்றும் சொவது போல உள்ளன.

‘அரசர்கள் நாடுகளை விழுங்குகிறார்கள்.
வைத்தியர்கள் நோயாளிகளை விழுங்குகிறார்கள்.
வியாபாரிகள் சரக்கு வாங்குபவர்களை விழுங்குகிறார்கள்.
பண்டிதர்கள் மூடர்களை விழுங்குகிறார்கள்.
.....................................
எல்லோரையும் வேலை விழுங்குகிறது.'

இதுதானே வியாபாரம்?
இதுதானே அரசியல்?

‘பற்றற்றவன் அதிகார பீடத்தில் அமர மட்டான்.
புத்தியற்றவன் முகஸ்துதி செய்ய மாட்டான்.'

    இந்த ஸ்லோகம், சூரியனுக்கும் குடிகாரனுக்குமான சிலேடை.

    அரசனுக்கும், அவனுக்குக் கீழே உள்ளவர்களுக்குமான அரசியல் நிர்வாகம்.
அரசனின் அருகில் இருக்க வேண்டியவர்களுக்கான, அரசனின் குண தோஷங்களைக் கண்டு தனது இடத்தை நிர்ணயம் செய்ய வேண்டிய நிர்வாகம்.
கணவன், மனைவிக்கு இடையே ஏற்படும் குழப்பங்கள், அதைச் சீர் செய்யும் நிர்வாகம்.
ஆணுக்குத் தனியாகவும், பெண்ணுக்குத் தனியாகவும் நிர்வாக முறை.
பணத்தை சம்பாதிக்க நிர்வாகம்.
பணத்தை இழந்த பிறகு அடையும் வேதனையிலிருந்து வெளியேற நிர்வாகம்.
கிடைத்த இடத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும், தொடரவுமான அரசியல்.
ஒருவன் அடைந்த இடத்திலிருந்து அவனைக் கிளப்பி, அந்த இடத்தைப் பிடிப்பதற்கான அரசியல்,

    என்று எதிரெதிர் துருவங்களுக்குமான அரசியல் தந்திரங்களையும் பஞ்சதந்திரத்தில் விலாவாரியாக விஷ்ணுசர்மன், எடுத்தாளப்பட்ட ஸ்லோகங்கள் மூலமும், கதைகள் மூலமும் சொல்லியிருக்கிறார்.

    ஆங்காங்கே சிலேடை இருக்கிறது. தூணுக்கும், மந்திரிக்குமான சிலேடை, பாம்புக்கும் அரசனுக்குமான சிலேடை, சூரியனுக்கும் குடிகாரனுக்குமான சிலேடை போன்றவை இருக்கின்றன. மூல மொழியில் இருக்கும் இதன்  சிலேடைச் சுவையை அதில்தான் உணர முடியும்.
   
    சம்ஸ்கிருத மொழியில் ஸ்லோகங்கள் கவிதை நடையில் உள்ளன. ஸ்லோகங்கள் எவற்றிலிருந்து எடுத்தாளப்பட்டவை என்பது தெரியவில்லை.

    எல்லோரிடமும், எப்போதும் வியந்து சொல்லிக்கொண்டிருக்கும் பஞ்சதந்திரம்  பற்றியும், அதைப் பதிப்பிக்க வேண்டும் என்பது பற்றியும் என் நண்பர் ஹிந்து நடராஜனிடமும் சொன்னேன். அவர் பஞ்சதந்திரத்தை நிர்வாகவியல் கோணத்தில் விளக்கி புத்தகம் எழுதிக் கொண்டிருப்பதாகச் சொல்லிக் குறிப்புக்களைக் காண்பித்தார். தான் இதற்காக எடுத்துக்கொண்ட ஆதர நூலான சக்தி காரியாலயம் பதிப்பித்த அன்ன பூர்ணா ஈஸ்வரனின் மொழிபெயர்ப்பை நல்லி குப்புசாமி செட்டியாரிடமிருந்து வாங்கி ஜெராக்ஸ் எடுத்து பைண்ட் செய்து வைத்திருந்தார். உடனே அவரிடம் என் பதிப்புக்கு ஒரு அணிந்துரை கொடுக்க முடியுமா என்று கேட்டேன். என்னால் நம்பவே முடியவில்லை. இரண்டே நாட்களில் அதை எழுதி கணினியில் பதிவு செய்து அனுப்பியும் விட்டார். அணிந்துரைக்காக காத்திருந்த அனுபவம் உள்ளவர்களுக்கு இது ஒரு மாறுதல்.

    பஞ்சதந்திரம் முழுக்க முழுக்க நிர்வாக அரசியல் என்று இந்தப் பதிப்பிற்கு அணிந்துரை கொடுத்துள்ள ஹிந்து ஆர். நடராஜன் சொல்கிறார். அரசியல் நிர்வாகம், நிர்வாக அரசியல் இரண்டும் கலந்த வாழ்க்கை முறை முக்கியமாக சாதாரண மக்களுக்கு என்றில்லாமல் ஆளும் அரசர்களுக்கும், தலைமை ஏற்று நடத்தும் முன் வரிசை மக்களுக்கும் சொல்லப்பட்ட (எல்லாமே எளிய கதைகள் மூலம் கொடுக்கப்பட்ட)  நீதி போதனை என்று நேரடியாக இல்லாமல் கொடுக்கப்பட்ட நூல் இது. வாழ்க்கையின் பாடங்கள் எல்லாம் எளிமையாகவும், நேர்த்தியாகவும்  தெளிவாகவும் சொல்லப்பட்டிருக்கின்றன. மொழிபெயர்ப்பு மிக எளிமையாகவும், மூலத்திற்கு மிக நெருக்கமாகவும் அழகாகவும் உள்ளது. சம்ஸ்கிருத மொழி அறிந்தவர்கள் மிகவும் புகழ்ந்து சொல்லக் கேட்டேன். அன்னபூர்ணா ஈஸ்வரனுக்கு நன்றி.

    அரசியல், நிர்வாகம், இவற்றுடன் வாழ்வியலும் நிறைந்த பஞ்சதந்திரம் வெவ்வேறு தளங்களில் ஆராய்ச்சிக்கு இன்னமும் இடம் கொடுக்கிறது.

    மேலும் சில விஷயங்களை இந்த முன்னுரையில் கூற வேண்டும். இன்டெர் நெட் பற்றிக் குறிப்பிடாமல், கணினியைப் பற்றிக் குறிப்பிடாமல் எதையுமே சொல்ல முடியாத காலம் இது. ஆங்கிலத்தில் வலைத்தளத்தில் பஞ்சதந்திரம் பற்றிய குறிப்புக் களைக் கண்டு மகிழ்ந்தேன். எத்தனை அழகழகான ஓவியங்கள். அவற்றிலிருந்து சிலவற்றை எடுத்து முகப்போவியமாகவும், பின் அட்டை ஓவியமாகவும் உள்ளே சில கருப்பு வெள்ளைப் படங்களாகவும் கொடுத்திருக்கிறோம்.

    எல்லாவகையிலும் பிரமிப்பையே கொடுத்த பஞ்சதந்திரம் எனக்கு அதிர்ச்சியையும் தந்தது. வலைதளத்தில் பஞ்சதந்திரம் என்று தமிழில் தட்டினால், கொட்டுவது கலஹாசன் நடித்திருக்கும் பஞ்சதந்திரம் திரைப்படம் மட்டுமே.  இனிமேல் மொழிபெயர்ப்பு பஞ்சதந்திரமும் தமிழில் இடம் பெற வேண்டும். மற்றபடி  ஆங்கிலம், ஹிந்தி, சம்ஸ்கிருதம் என்று எல்லாவற்றிலும் விஷ்ணுசர்மனின் பஞ்சதந்திரம் பற்றிய தகவல்கள் கொட்டுகின்றன. பல்கலைக் கழகங்களில் (காசி போன்ற) இந்நூல் பாடத்திட்டத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவை எத்தனை பிரதிகள் அச்சிடப்பட்டன, எத்தனை பதிப்புக்களைக் கண்டது என, எல்லா விவரங்களும் கிடைக்கின்றன. தமிழ் வலைத்தளமும் பஞ்சதந்திரம் பற்றிய முழுமையான தகவல்களைத் தரவேண்டும் என்பது என் விருப்பம். அச்சில் படிக்க விரும்பும் அனைவருக்கும் இந்நூலின் மறுபதிப்பு மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்று நம்புகிறேன்.

    சக்தி. வை. கோவிந்தன் கூறியிருப்பது போல சில வாசகங்கள் இக்காலத்திற்கு ஒவ்வாததாக இருக்கிறது. அதைக் கால மாறுதல் என்று எடுத்துக்கொள்ள வேண்டும். இருந்தாலும் சொல்லப்பட்ட காலத்தையும், யார், யாருக்காக எழுதியது என்பதையும் மனதில் கொள்ள வேண்டியிருக்கிறது. உள்ளதுஉள்ளபடி பதிப்பிப்பதே பதிப்பாளரின் கடமை. அதையே அவர் செய்தார். 1958 இல் பதிப்பித்த அன்னபூர்ணா ஈஸ்வரின் மொழிபெயர்ப்பு இன்றும் சிறப்பாக இருக்கிறது. தமிழ் மொழிபெயர்ப்புக்கு ஆதரமான பஞ்சதந்திரம்  பூர்ணபத்திரரின் சம்ஸ்கிருத  நூல்.

    கணினியும், கைபேசியும் இல்லத தொடர்பு சாதனங்கள் அற்ற அக்காலத்தில் (இக்காலத்தில் கணினியின் அவ்வளவும் வேதவாக்கு என்று புகழ் பாடும் குழு ஒன்று இருக்கிறது.) இது தொடர்பான தகவல்களுக்காக அலைந்து, பாடுபட்டு, தகவல்ளைச் சேகரித்து, ஆதாரங்களுடன் வெளியிட்டிருக்கும் அவர் எவ்வளவு உழைத்திருப்பார்?  அவர் தமிழுக்கு, பதிப்பு உலகுக்குச் செய்த பணி அளவிட முடியாதது. பஞ்சதந்திரம் எந்த எந்த மொழிகளில் அக்காலத்தில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது என்ற தகவலையும் கொடுத்திருக்கிறார்.

    எழுத்துப் பிழைகளே அற்ற, தரமான அச்சில், மலிவு விலையில், நல்ல தாளில், கெட்டி அட்டையில், வெளிவந்த சக்திகாரியாலப் பதிப்பு இன்றையப் பதிப்பாளர் களுக்கு ஒரு முன்னுதாரணம். ஓரிரு நூல்கள் வெளிவந்த உடனேயே  தான் மிகுந்த தமிழ்ச் சேவை செய்து களைப்படைந்து விட்டதாகவும், இந்தத் தமிழ் கூறும் நல்லுலகம் அதற்குத் தகுந்த அங்கீகாரத்தைத் தனக்குக் கொடுக்கவில்லை எனவும், அடுத்தவர்களின் எழுத்துக்கள் வெறும் குப்பை என்றும், பரிசுகள் குவியவில்லை என்றும் புலம்பும் எழுத்தாள, பதிப்பாளர்களிடையே , நம்மிடையே இப்படியும் சிலர் வாழ்ந்து சென்றிருக்கிறார்கள்.

    நூலைப் பதிப்பிக்கத் தமிழ் வளர்ச்சித் துறையின் நிதி உதவிக்கு விண்ணப்பித் திருந்தேன். அதைத் தேர்வு செய்து எனக்கு ஊக்கம் அளித்த தமிழ் வளர்ச்சித் துறைக்கு நன்றி. ஐம்பத்து நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் அச்சிடப்பட்ட (1958) பழைய நூல், பழுப்பு நிறத்திற்கு மாறியிருந்த நூல். தொட்டால் பக்கங்கள் பொடிந்து உதிரும் நிலை. அதை தட்டச்சு செய்ய என் தோழி அமுதாவை அணுகிய போது மறுக்காமல், புத்தகத்திற்கு சேதாரம் விளைவிக்காமல் சரியான நேரத்திற்கு தட்டச்சு செய்து தந்தார். அமுதாவுக்கு நன்றி.

    நூலாவதற்கு முன்பு பஞ்சந்திரம் பலரைச் சென்றடைந்தால் நன்றாக இருக்குமே என்று ‘திண்ணை' இணைய இதழாசிரியர், நண்பர் ராஜாராமனை அணுகிய போது, தொடராகப்போட சம்மதித்துத் தொடராக இன்னமும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். அவருக்கும் நன்றி.

    பொருளிட்டுவதற்காக இதை மறுபதிப்பு செய்யவில்லை. தமிழில் தரமான நூல்கள் வெளியிட்டு லாபம் அடைந்ததாக வை.கோவிந்தன் காலத்திலும், தற்காலத்திலும் யாரும் உதாரணத்திற்குக் கூடக் கிடைக்க மாட்டார்கள். நூலக ஆணை இருந்தால்தான், நூல்கள் அடுத்தடுத்து வெளியிட பணமும், குடும்பத்தில் அனுமதியும், குழந்தைகளிடம் மரியாதையும் கிடைக்கும்.

சக்தி வை.கோவிந்தன் நூற்றாண்டில் இதை மறுபதிப்பு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நன்றி.
க்ருஷாங்கினி


அக்டோபர் 2012.
சென்னை-47. 










 

1 comment:

V Mawley said...

முன்னுரை மிக நேர்த்தியாகவும் , நூலை எதிநோக்கும் ஆவலைத்தூண்டுவதாகவும் உள்ளது என்பக்தில் சற்றும் ஐய்யமில்லை
......வாழ்த்துக்கள்
மாலி .