Wednesday, September 26, 2012

கவிதை

புன்னை மரம்

மரம் நடு விழா வைபவத்தில்
நட்டு நிறுத்தப்படுகிறது;
விழா எடுக்காமலும் தெருவோரம்
ஏதோ ஒரு பெயர் தாங்கிய
இரும்பு வேலியின் நடுவில்.

நீர் கோராது அதிகம்
விலங்குகள் அண்டாது, நின்று
வேகமாய் வளரும்;
கிளை நுனியில் பெரிதாய் விரிந்து
கண் பறிக்கும் கவர்ச்சி காட்டாமல்
வண்ணத்தால், வாசனையால்
திசை திருப்பாது மெல்லிய சிறு பூக்கள்
உச்சியில் பூக்கும். பூப்பது தெரியாமல்
தரை உதிரும் சிறு பூக்கள் கொண்டு
கண்டடையலாம் இதன் வசந்தத்தை.

மேன்மேலும் வளர்ந்து வானெட்ட
முயலாது ஒருபோதும்.
பாங்காக ஐந்தடிக்குள்
உடலை நிறுத்தி வைக்கும்
கிளை விரித்து நிழல் கொடுக்கும்
பெரும் கொடையாய்.

ரயிலடியில் ஒன்றுக்கும் மேலாய்
ஒரே சிமென்ட் வட்டத்துக்குள்
முரணின்றி இணைந்து வாழும்.
எல்லோருக்கும் உகந்ததாய்,
யாருக்கும் உறுத்தாததாய்
ஆங்காங்கே வளர்ந்து நிற்கும்
இப்புன்னை தன் கண்கள்
இமை மூடி சிதறவைக்கும்,
காலடித் தளம் பரப்பி.

ஆனாலும்கூட-

இட நெருக்கடியில் சற்றே இடம் மாறி
குறுக்காக வளர முற்பட்டால்
சட்டென்று முறிக்கப்பட்டு
மொண்ணையாகவே நிற்கும்
இப்புன்னை-
பெண்ணைப்போல

No comments: