Monday, July 23, 2012

மாசறு (சிறுகதை)






மாசறு








    " ஆன்ட்டி, நான் ஒரு படம் வரையறேன் பாக்கறீங்களா? அம்மா! ஒரு பேப்பர் குடு".

    நிச்சயம் நான் அந்த இடத்தில் ஒரு சிறுமியை எதிர்பார்க்கவில்லை. மிகச்சிறிய -பகலிலும் மின் விளக்கின் உதவி தேவைப்படும்- ஜன்னல்கள் கொண்ட அறை அது. ஜன்னலை அடுத்த அடுத்த கட்டடச் சுவர் அடைத்தது. சுவர்களின் அருகே ஒரு கணினி சிறிய இடைவெளிவிட்டு. அதன்முன் ஒருவர். கணினிமுன் அமர்ந்திருப் போரைத் தவிர வருவோரும் போவோரும் என்று எல்லோரும் வளர்ந்தவர்கள், வளர்ந்து விட்டவர்கள், முதியோர்கள். ஒரு பக்கச் சுவற்றில் சிறு படங்கள், பள்ளிப் புத்தகப்பை சற்று தள்ளி சீருடை அவிழ்க்கப்பட்டு வெறும் 'சிம்மிஸி'லும் அச் சிறுமி.

    தூக்கம் விடுபட்டு எழுந்து மேஜை உயரத்தில் தலையை எட்டி அவள் வெளிப்பட்டபோது, பள்ளியில் இருந்து இன்னமும் விடுபடாத, அதையும் விட ஒரு சிறிய அறையில் காற்றற்று புழுக்கத்தால் முகத்தில் ஒட்டியிருந்த சிறு சிறு முடிகளுடன் தென்பட்டாள். தூக்கத்திலிருந்து விடுபட்டதும் என்னிடம் விளையாட ஆரம்பித்துப் பேசுகிறாள். விளையாட்டும் கூட குதித்து ஆடி ஓடாமல் ஒரு பேப்பரில் தன் நேரத்தைக் கழிக்க என்று.

" ஆன்ட்டி இதபாருங்களேன், இது ஒரு ஆள்."

    ஒரு கோடும் அதன்மேல் பக்கவாட்டில் இரு கோடுகள் கைகளாகவும், நீளக்கோட்டை இரண்டாக வகுந்து கால்களாகவும்  மாற்றப்பட்டு, அதன் ஒரு உருண்டை தலையாக ஆக்கப்பட்டது.  தலையில் இரு வட்டங்கள் கண்களாகவும் இடைப்பட்ட கோடு மூக்காகவும், அதன் மீது கீழான குறுக்குக் கோடு வாயாகவும்  வரையப்பட்டது. 

"இல்லை- ஒரு பொண்ணு"

    சட்டென்று நெற்றியின் மத்தியில் ஒரு சிறு வட்டம் பொட்டென.

"பொண்ணு பொடவை கட்டி இருக்கா"

    கைகளின் இடையில் இரண்டு மூன்று கோடுகள் தாவணியாயின.

"பொண்ணு வீட்ல இருக்கா"

    அந்தக்கோட்டொவியத்தைச் சுற்றி ஒரு சாதுரம் வரையப்பட்டு, மேற் புறச் சதுரத்தின் மீது முக்கோணம்--

" வீடுண்ணா கதவு வேண்டாமா?"

    சதுரத்தைக் கீறி ஒரு நீள் சதுரம் வரையப்பட்டது. பெண்ணை அவள் உயரத்தை உடலை ஒட்டி.

"வீடு எங்கேயிருக்கு? ரோட்டு மேலதானே? ரோட் போடறேன்."

    அந்தக் கீறப்பட்ட நீள் சதுரத்தையும் முன்பு வரைந்த வீட்டிற்கான சதுரத்தையும் முன்னும் பின்னுமாகக் கடந்து கரையென கோடுகள்  ரோடாகியது.

"ஆண்ட்டி ரோட்லே மரம் யெல்லாம் இருக்கணும் தானே?"

    அங்கொன்றும் இங்கொன்றுமாக ரோடின் மீதும் இரு மருங்கும் இலைகள், கிளைகள் அடுக்கி வைக்கப்பட்டு அவற்றை இணத்துக் கோடுகள் வரைந்து அவைகள் நிலத்தில் இழுத்துக் கட்டப்பட்டன; சிறு சிறு வேர் களுடன். ஒவ்வொரு மரத்தின் இலையும் சற்றே மாறு பட்டு இருந்தது.

"ரோட்லே வண்டி யெல்லாம் போகும். இது அம்மா. அம்மா ஸ்கூலேருந்து வர பொண்ணுக்காக வேனுக்காக நிக்கறாங்க, சரி பொண்ணு போட்டச்சு. அப்புறம்? மரத்தில காக்கா குருவி யெல்லாம் போடணுமே. அப்புறம் பூ போடணும்."

    மரத்தின் மீதாகவும், அள்ளையில் இறகும் காலும்  உடலும் வாயுமாக பறவைகளும் பூக்களும் மலரவும் உலவவும் ஆரம்பித்தன.

" வீட்டுக்கு மாடிப் படி போட மறந்துட்டேனே? மாடிக்குப் போக படி வேண்டாமா?அய்யே"

    தலையில் அடித்துக் கொண்டே பேப்பரைத் திருப்பி  செங்குத்தாக நிற்கும் கோடுகளை படுக்க வைத்து பற்கள் போல் படிகள் அடுக்கப் படுகின்றன. முக்கோணம் ஆரம்பிக்கும் முனைவரை.

"வீட்டுக்கு மேலே சூரியன், வானம் , நிலா, ஸ்டார்ஸ் யெல்லா இருக்கும்"

    வீட்டுக்கும் பேப்பரின் முனைக்குமாக மேகமும் சூரியனும், நட்சத்திரமும் நிலாவும் ஒரு சேர ஒளிர்கின்றன. வீடுக்குக் கட்டப்பட்ட படிதான் அவளுக்கு வானத்தைக் காட்டியது போல.

"ஆண்ட்டி ரோட்லெ மாடு போடட்டுமா. ஆனா மாட்டோட மூக்கு எனக்கு வரையத் தெரியாது கொஞ்சம் வரைஞ்சு தறீங்களா?"

    எதிர் முகமாக மாட்டின் முகம் வரையப்பட்டு பக்கவாடில் உடலும் கால்களுமாக,

"நீங்க போட்டிருக்கற கண்ணாடி மாதிரி  ரண்டு வட்டம் போட்டு, நடுலே ஒரு கோடு போடப் போறேன் மூக்குக்கு. சரியா? ஐய்யா, ஸ்கூல் வேன் வந்து பொண்ணு வந்திட்டா. இது பொண்ணு."

    அம்மா போலவே ஒரு நெடுங்குச்சியும், பக்கவாட்டுக் கைகளும், கவட்டை கால்களும், தலைக்கென சிறு வட்டமும் அளவில் சிறியதாக வரையப்பட்டது. கால்களின் கவட்டையில் நெளிந்து வளைந்த கோடுகள் கவுன் ஆயிற்று. முக வட்டத்தின்  இருபுறமும் காதுகளின் இடத்தின் இரண்டு சடைகள் தொங்க மகள் அன்னையின் அருகில் நின்றாள்; கீறி எடுத்த நீள் சதுரத்தையும், சற்றே கடந்து கட்டடத்தின் மற்ற வெளியிலும் பரவி.  மேலும் சில வாக்கியங்கள் பேப்பரிலிருந்து வாய் வழியாக உரைக்கப் பட்டது.

"சொன்ன பேச்சு கேட்கவே மாட்டா. வெளையாட தெருவுக்கு ஓடுவா. மாடிப்படி ஏறி தானே மேலெ போவா. ரோட்லெ எவ்ளவு கார் வரும்? ஆக்ஸிடெண்ட் ஆனா என்ன செய்யறது?  அன்னக்கி இப்படித்தா, மாடி ஏற்னா, படிலேருந்து கீழே விழுந்திட்டா. ஆண்டி, அடி பட்டா டாக்டர் வேணும், ஆஸ்பிடல் வேணும், படுக்கறத்துக்கு படுக்க வேணும் ."

    ரோடிற்கென வரையப்பட்ட வீட்டிற்கருகில் ஓடும் ஒட்டிய கோட்டின் எதிர் புறம் ஒரு கோட்டின் மீதாக, மீதமுள்ள வெள்ளைத்தாளின் முனை வரையில் கோடுகள் இழுக்கப்பட்டு, பெரிய ஒரு சதுரம் வரைந்து, அதை குறுக்காக கோடிட்டுத் தடுத்து, ஆஸ்பத்திரி கட்டினாள். ஒரு அறையின் சதுரத்தில் நட்ட நடுவில் பக்கவாட்டு நீள் சதுரம் போட்டு அதன் கீழாக நான்கு கால்கள்- கோடுகள்-- இட்டு கட்டில் ஆக்கினாள். ஒரு முறைக்கு இரு முறை கால்களின் எண்ணிக்கையை சரி பார்த்தாள்.

    இதற்குள்ளாகவே, அவளின் உரையாடல் கதையில் அந்த வீட்டின் சிறுமி அடிபட்டுக் கொண்டாள். எனவே கதையிலும், காகிதத்திலும் மருத்துவரின் அவசியம் உருவாயிற்று.

    அதே கவட்டைக்கால்கள், அதே தலை, பக்கவாட்டுக் கைகள், மேல் சுற்றிய முந்தானை. எனவே அதுவும் பெண். தலை வட்டத்தில் இந்த உருவத்திற்கு மட்டும் காதுகள் அரை வட்டங்களாக வரையப்பட்டன. ஏன் எனில் ஸ்டெதஸ்கோப் மாட்டிக் கொள்ள. டாக்டர், அம்மாவைக் கடிந்து கொண்டாள். குழந்தையை ஆறுதல் படுத்தினாள். சாக்லேட்  கொடுத்தாள். ஏற்கனவே  அறையில் கால்கள் நான்குதான் என நிச்சயக்கப்பட்டு வரையப் பட்ட கட்டிலின் மீது வெள்ளைத்தாளின் மீது கிடத்தினாள். ஊசி மட்டும் போடக்கூடாதென அடி பட்ட சிறுமி டாக்டரைக் கேட்டுக் கொண்டாள்.  

"ஆஸ்ப்பிடல் மட்டும் கட்டினா எப்படி? மெடிகல் ஷாப் இருக்கணுமே? எங்க போடலாம்? இடமே இல்லையே? அம்மா, இன்னோரு பேப்பர் தா."

    முன்னிருந்த வெள்ளைத்தாளின் முடிவுற்றுப் போன கோடுகளை இரண்டாவது தாளிலும் ஊடுவி வரும் சாலை என கோடுகள் வரைந்தாள். சாலை ஓரத்தில் மருந்துக் கடையும், பக்கத்தில் அவளுக்குப் பிடித்த ஐஸ்க்ரீம் கடையும் சதுரமாக உருவாயின. மருத்துவ மனையின் உள்ளும், வெளியிலும் உள்ள குழந்தை களுக்காகவும், நோயுற்றால் ஆறுதல் அளிக் கவும், அம்மாவுக்கு உடம்புக்கு வந்தால் குழந்தகளுக்கு பசிக்குமே என்றும் ஐஸ்க்ரீம் கடை திறந்ததாகக் கூறினாள். இரண்டாவது வெள்ளைத் தாளில் அதிக இடம் வெறும் வெள்ளையாயிருப்பதை எனக்கு சுட்டிக் காட்டினாள்.  என்ன வரையலாம் என்று என்னைக் கேட்டாள், ஒப்புக்கு. பிறகு, அவளே அந்த இரண்டு தாள்களின் முழுச் சதுரத்திலும் முன்னும் பின்னும் பக்க வாட்டிலும் அடுக்கடுக்காக கோடுகளைப் பரத்தினாள் சிறு சிறு சம்பவங் களைக் கூறி.  அவளின் கற்பனையும், என்னுள் ஆச்சிரியமும், வெளி வானில் சிவப்பும், கணினியில் எழுத்துக்களும் படங்களும், அறையில்  அதிக உரு வங்களும், வெளியில் இரைச்சல்களும், அறையினுள் புழுக்கமும், மனதினுள் மகிழ்ச்சியும் கிளர்ந்து வெளி எங்கும் எல்லை கடந்து பரவலாயின.

    (இந்தக் கதையில் வரும் படங்கள் பற்றிச் சொல்லியாகவேண்டும். கதையில் வரும் சிறுமி வரைந்த சித்திரங்களுக்கும் காணப்படும் படங்களுக்கும் சிறிது வித்தியாசம் காணக் கிடைக்கலாம். கதைச் சிறுமியின் வயது நான்கு அல்லது ஐந்து இருக்கலாம். அவளையே தேடி திரும்பவும் அதே படங்களைப் போட்டு வாங்க இயலாமல் கதை முடிந்ததும் அவள் அப்பால் சென்று விட்டாள். வேறு ஒரு சிறுமியைத் தேடினேன்; வெகு நாட்களுக்குப் பிறகு கிடைத்தாள்.

    ஆனால் நான் இந்த இரண்டாவது சிறுமியின் சுதந்திரத்துக்குத் தடை விதித்து என் தேவையைக் கூறி படங்கள் வாங்கவேண்டும். அது சிறுமிக்கு எதிரான செயல்தான். என்னுடன் சிறுமியின் பெரியோரும் அமர்ந்துகொண்டு சிறுமி படம் வரைய வழிநடத்தத் தொடங்கினார்கள். நானும்தான். சிறுமி செய்யும் காரியத்தை செவ்வனே செய்ய எண்ணி முதலில் அழிப்பானும் தாளும் எடுத்துக்கொண்டு பின் ஒரு பென்சிலையும் கொணர்ந்தாள். வட்டம் வரையும்போதே சரியாக வரவில்லையோ என்ற அச்சமும் தயக்கமும் கொண்டு அடிக்கடி என்முகம் பார்த்தாள். பிறகு சொல்லச் சொல்லக் கேட்டுக்கொண்டு படங்களை வரைந்துகொடுத்தாள். அப்போதே அவளுக்கு இது அலுத்துப் போய்விட்டது. எனக்கோ ஒவ்வொரு நிலையிலும் படங்கள் அடுக்கப்பட்டுக் கொண்டே வருவற்கேற்ப பிரதி எடுத்து வரையச் சொல்லலாமா என்று எண்ணம் ஓடியது. ஆனால் ஜெராக்ஸ் கடைக்கு அவளைக் கூட்டிச் சென்று சிறுமியின் நேரத்தை மேலும் எனதாக்கிக் கொள்ள ஒப்பவில்லை. எனவே அத்துடன் நிறுத்திக்கொண்டு கிளம்பி விட்டேன். இதனிடையே, குடும்ப விசாரிப்புகள், வரும் விருந்தினர்கள், காபி உபசாரம், டி.வி.யில் சினிமா என்று பலவிதத்தில் கவனம் கலைய நேர்ந்தது. சிறுமி தனது சுதந்திர ஓவியங்கள் சிலவற்றை எனக்கு இலவச இணைப்பாக மிகப் பெருந்தன்மையுடன் அளித்தாள்.

    மறுநாள் சற்றே கசங்கியிருந்த பென்சில் படங்களை ஜெராக்ஸ் பிரதி எடுத்துப் பார்த்தபோது படத்தில் கோடுகள் சாம்பல்பூத்துத் தெளிவில்லாமல் இருந்தன. பென்சில் படங்களை கருப்பாக்க நான் மற்றொரு சிறுமியை நாடவேண்டி வந்தது. ஏறக்குறைய அதே வயதிற்கு, என் வீட்டினருகில் உள்ள ஓர் அரசுப் பள்ளியிலிருந்து. கணினிக்கும், வீட்டிற்கும், மூன்றாம் சிறுமிக்கும் தளம் வேறு வேறு. மூன்றாம் சிறுமியை நான் நாடி வரையச் சொன்னபோது - வரைதல் என்றுகூடக் கூற இயலாது; இருக்கும்கோட்டிற்கு மேலாக வண்ணத்திலோ அல்லது கருப்பு மசியிலோ விளம்புதல் மட்டுமே -அது அந்தச் சிறுமியின் மீது நான் செலுத்தும் வன்முறை என்று உணர்ந்தேன். ஆனாலும் செய்தேன். இச்சிறுமியோ கோட்டின்மீது வரைய மிகப் பயந்தாள். கோடு தவறாகிவிட்டால்? கோணலாகிவிட்டால்? என்று என்னிடம் கேட்டுக் கேட்டுத் தயங்கித் தயங்கி வரைந்தாள். சில நெளிதல்களுடனான கோடுகள் உருவான போது மிரண்டாள். சிறிது சிறிதாக தைரியம் அடைந்து பேசிக்கொண்டே வரைந்தாள். தனது தந்தை அலுவலகத்தில் மேனேஜர் என்றாள். வேனில் பள்ளி வருவதாகச் சொன்னாள். படம் போடுவது தனக்குப் பிடிக்கும் என்றாள். நாட்டியம் ஆடுவேன் என்றாள். முடித்தபின் திரும்பவும் இதுபோல வரைய எப்போது கூப்பிடு வேன் என்று கேட்டாள். பலரில் தன்னை தெரிவு செய்ததற்காகப் பெருமை கொண்டாள்.

    சில தாள்களையும் வண்ணப் பெட்டியையும் கொடுத்து அவளுக்கு விருப்ப மானதை வரையச் சொன்னேன். மகிழ்ச்சியுடன் வரைந்து வண்ண மிட்டாள். பெட்டி வண்ணங்களில் மாட்டுக்கு தீட்ட என்று வண்னம் ஏதும் இல்லையே என்றபோது எனக்கும் அது சரிதான் என்று தோன்றியது. சிவப்பு, பச்சை, மஞ்சள் இவை மிருகங்களில் இல்லாத வண்ணம் அல்லவா?  வெள்ளை மாடு என்று சொல்லிவிட்டு வெள்ளைத் தாளில் வெள்ளை வண்ணம் தீட்டினாள். அதற்குள் அவளது ஆசிரியை நேரமாகிவிட்டதாகச் சொல்லி அவளைக் கூட்டிச் சென்றாள். செல்லும்முன் சிறுமி தனது ஓவியங்களை எனக்கே பரிசளித்தாள்.

    இப்போது நான் எல்லாவற்றையும் இணைத்துத் தங்களுக்கு அனுப்பி யுள்ளேன். மழைத்துளி சிற்றோடையாய் வழிவதுபோன்று இந்த அனுபவம் தங்களை வந்து அடைந்துள்ளது.

க்ருஷாங்கினி


No comments: