Tuesday, March 10, 2009

தண்ணீர்க் கொலை-சிறு கதை

தண்ணீர்க் கொலை



காகம் தாகம் தணிந்த கதை, படம் பார்த்துக்கதை சொல்லில் பார்த்தது. காகம் மாறாமல் அதே உருவத்தில் ஆனால் நீர் குறைந்த குடம் மட்டும் பல வகைகளில். உள்ளிருப்பை வெளிக் காட்டும் ஊடுருவல் கொண்ட மண் பானைகள். உள்ளிருப்பைக் காட்டுவது கண்ணாடி அல்லவா? அது எப்படி மண் பானைஆக முடியும்? அல்லது மண்பானை தன்னுள்ளை எப்படி வெளிக்காட்ட இயலும்? எனவே கதைக்காக நான் வரைந்த ஓவியக் காகம் சிறியது. பானை, கண்ணாடிக் குடுவையானது. நீர் சிறு சிறு தொடரற்று வெட்டப் பட்ட கோடுகளாயின. வாழையிலையின் வெளிமுனையில் சுற்றிக் கொண்டிருக்கும் கருப்புச் சுருளை இடை வெளி விட்டு விட்டு இழுத்து மெலிதான தொடர் தொங்கலாக வெளித் தெரியும், கரும் சுருள் நிறமற்ற அரூப இழையையும் உடன் இருத்தி வித்தை காட்டும் வண்ணம் குடுவையில் தண்ணீர் கருப்பு பென்சில் கோடுகள் பாதி நிறைந்தன. சிறு கற்கள் காகம் கொத்தி குடுவையிலிட, நீர் வெளிவந்து தாகம் தணிந்தது. பறக்கும் காகத்தைப் பார்த்து, சிரிப்பு வந்தது. கல்லைச் சற்றுவேகமாக எறிந்து பானையை அல்லதுகண்ணாடியை - உடையும் பொருளானதை - உடைத்து ஏன் ஓட்டை வழியே நீர் அருந்தி இருக்கக்கூடாது இந்த காகம்? இது காகத்தின் புத்தி சாதுர்யத்திற்கானது மட்டுமல்ல, தாகம் தணிந்ததற் கானதாகவும் எடுத்துக் கொள்ளாமல் கனமான பொருளிட்டால் நீர் மேலேறும் என்பதாகப் புரிந்துக் கொள்ளப் படல் வேண்டும். ஆனால் இன்று அந்தப் புரிந்து கொள்ளல் தவறானது.

எந்தவொரு தனி வீடும் அல்லது நீண்ட அகல நிலமும் அடுக்க கத்திற்கானது என்பது இந்த நகர வாழ்க்கையில் எழுதப்படாத விதி । இதே விதியின் அடிப்படையில் அருகிருந்த வீடும் அழிக்கப்பட்டுவிடும்; அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது। சுற்றிலும் மரங்களும் அதன் பூக்களும், கனிகளும் இன்னும் சில நாட்களில் இருப்பற்றுப் போக நிச்சயம் நேரிடும்। வாழ்ந்து, வறுமைக்காளாகி அழிந்து கொண்டிருக்கும் ஒரு பெரிய குடும்பம் போன்று அடுத்திருந்த செவ்வக நிலம் மாறிக் கொண்டு வருகிறது. கடப்பாறை, பெரும் சுத்தியல், மண்வெட்டி, காலை முதல் மாலை வரை சூரியனின் கீழ் நடமாடும் கரும் மனிதர்கள் எல்லாமே. சத்தத்தையும் பார்வையையும் வடிகட்டி உட் செலுத்த ஒருபில்டர் பொருத்திக் கொள்ள நேர்கிறது. கண்ணுக்குத் தெரியாமல் கண்களின்மீதும், காதுகளின் பக்கவாட்டிலும் சிறு வடிகட்டிகள் எப்போதும் தொங்கிக் கொண்டிருந்தன. பாளம் பாளமாய்ச் சுவர்த் துண்டுகள் எங்கும் சிதறி உள்ளிருக்கும் சிமெண்டையும், சுண்ணாம்பையும் வண்ணப் பூச்சுகளையும் பிரித்து, பிரிந்து இணைந்து கிடந்தன எங்கும்.

இன்றும் அதிகாலையில் தொடங்கப்பட்டது அழிப்பு வேலை. வீட்டின் பின்புறம் தரையிலிருந்து எழுப்பட்டிருந்த வட்டச் சுவரும், உருளையைத் தாங்கும் கம்பமும் காணாமல் போயிருந்தது. வட்டச்சுவர் நொறுக்கப்பட்டு, கிணற்றுக்குள் எறியப்பட்டுக்கொண்டு இருந்தது. விழப்படும் கனப் பொருள்களின் எதிரொலி மனிதன் உள் குதிக்கும் சப்தத்திற்கு ஒப்பாகவே இருந்தது. நடமாடும் மனிதர்கள் எவரும் நீருக்குள்ளோ, சுவற்றுக்கடியிலோ சென்று விடக் கூடாது என்ற தவிப்பும் எதிர்பார்ப்பும் இருந்தது.

சுவரில்லா ஆழ வட்டத்தைச் சுற்றிலும் மனிதர்கள்; நடமாடி நடமாடிப் பெரும் சுவர்த் துண்டுகளை உருட்டியும், புரட்டியும் தூக்கி எறிந்தும் நீருக்கள் இட்டபடியே.

காகத்திற்கு மேலெழும்பிய நீர் இதிலிருந்தும் மேல் எழும்பும். சுவரற்ற தரை தாண்டிப் பெருக்கெடுத்து ஜி.எஸ்.டி. சாலை நெடுக ஓடி ஆங்காங்கே உயிர்களின் தாகம் தீர்த்து நகரத்தின் குதூகல நாளாக மாறி, நீர் விரோதமற்று, எல்லை அருகி, எங்கும் பாய்ந்து, எல்லோரையும் நேசிக்கும். மனிதனும், பயிரையும் உயிரையும், நீரையும் நேசிப்பான். அப்போதுகாதலர்கள், குழந்தைகள் ஒருவருக்கொருவர் நீர் அடித்துக் கொண்டும், மூச்சுத் திணறி சிரித்தும், நகரம், அகமும் புறமும் குளிர்ந்து, நீர் வழி பின் தொடரும் இசையும், ஓசையுமாய்.

ஏதும் நகழவில்லை. இதில் எதுவுமே நிகழவில்லை. அடிமை மிருகம் போல் தனக்குள் எறிந்த அத்தனை சுவர்த் துண்டுகளையும் ஏற்றுக் கொண்டது கிணறு. தண்ணீரைச் சுவரும், செங்கற்களும் உறிஞ்ச தனது வட்டத்தில் எறிந்தத்தனையும் உள்வாங்கிக் கொண்டு எதிர்ப்பின்றி. சலனமற்று இருந்தது கிணறு. சுவர் துண்டுகளுக்கு இடையிலேயும், மேலும் மேலும் எறியப்படும் முண்டுச் சுவர்களாலும் காயம் பட்டு நசுங்கி, அனைத்து உயிர்களையும் காக்கும் நன்னீர் இறந்து கொண்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாய்ப் பள்ளம் மறைய தரை நோக்கி இளகிய நீர் எழும்பாமல் இறுகிய சுவர் எழும்ப, நீர் இருந்த தடமுமற்று, கிணறு முழுதுமாக இறந்து கிடந்தது சமதரையாக .

Thursday, February 12, 2009

குருவேசரணம்

விநாயக் ராம்

கடமும், உடலும், மண்ணும்.

நான் இந்த கடம் என்ற வாத்தியத்தை எடுத்துக் கொண்டதற்கு மிகவும் பெருமைப்படுகிறேன். ஏனெனில், கடம் என்பது மண்ணால் னது. எந்தக் கலப்பும் இல்லாத பூமிதேவியின் அருளில் ன வாத்யம். என் பெயர் விநாயக் ராம் அல்ல. நிஜப் பெயர், ராமகிருஷ்ணன். நானும் என் சகோதரியும் இரட்டைப் பிறவிகள். இரண்டில் ஒன்றுதான் பிழைக்கும் என்று மருத்துவர் சொல்லிவிட்டார். நான் உடம்நலம் குன்றி இறக்கும் நிநலையில் இருந்தேனாம். அப்பொழுது என் அப்பாவிற்கு அசரீரி வாக்காக 'ஒரு குழந்தையைத் தத்துக் கொடுத்தால் இன்னொன்றும் பிழைத்துக் கொள்ளும்' என்று கூறினாற்போல் கேட்டிருக்கிறது அப்பாவிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அந்தக் காலத்தில், பெண் குழந்தையை யாரும் தத்து எடுத்துக்கொள்ள மாட்டார்கள். எங்கள் அப்பாவிற்கு இஷ்ட தெய்வம் பிள்ளையார். உடல் நலம் குன்றிய என்னையும் கொடுக்க இயலாது.

எனவே பிள்ளையாருக்கு என்னைத் தத்து கொடுப்பது என்று முடிவு செய்து, திருச்சிக்குப் பக்கத்தில் தின்னூரில் உள்ள ஒரு பிள்ளையார் கோவிலில் ஒரு சாஸ்திரிகளுடன் சென்று மறுநாள் என்னை பிள்ளையாருக்கு தத்துக் கொடுத்துவிட்டார்களாம்। என்னை தத்துக் கொடுத்து விட்டதால் அதிகாரபூர்வமாக என் பெயரை மாற்றியாக வேண்டும்। எனவே என் தாத்தாவின் பெயரான ஑ராம்ஒ உடன் பிள்ளையாரின் பெயரையும் இணைத்து ஑விநாயக் ராம்ஒ என்று பெயர் வைத்துவிட்டனர்। இந்த இணைப்பு கொஞ்சம் புதுமை. வேடிக்கை என்னவென்றால், பிள்ளயாரையும் மண்ணால்தான் செய்வார்கள். என் வாத்யமான கடத்தையும் மண்ணால்தான் செய்வார்கள். எனவே முன் நீங்கள் சொன்னது போல 'கடம் என்றால் விநாயக் ராம், விநாயக் ராம் என்றால் கடம்' என்றானது போன ஜன்மத்தின் தொடர்பு.

தந்தையே தெய்வம் - தந்தையே குரு

இது போன்று நான் புகழ்பெறக் காரணமானவர் என் தந்தை. அவரின் முழு முயற்சியால்தான் நான் கடம் கற்றுக் கொண்டேன். எங்கள் குடும்பத்தில் நாங்கள் ஆறு குழந்தைகள். மிகவும் ஏழ்மையான குடும்பம். என்னுடைய அப்பா மோர்சிங் வாசிப்பார். வேதாரண்யத்திலிருந்து, நடந்து வந்து தஞ்சாவூர் வைத்தியநாத ஐயரிடம் மிருதங்கம் கற்றுக்கொண்டார். இப்படி நடந்து வந்து குருகுலத்தில் இருந்து கற்றுக்கொண்டு கச்சேரிகளுக்கு மிருதங்கம் வாசித்தார். ஒரு கலையைக் கற்றுக்கொள்ள எவ்வளவு கஷ்டப்பட வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். பள்ளியில் சிரியராக இருந்தவர் சங்கீதத்துக்கு வரவேண்டும் என்று மிகுந்த சிரமத்திற்கு ளாகி இதற்குள் வந்தார். கச்சேரி வாசித்துக்கொண்டு இருந்த அவருக்கு டேபிள் மின்விசிறியில் அடிபட்டு கை விரல் துண்டாகி விட்டது. இனி மிருதங்கம் வாசிக்க முடியாது என்றாகி விட்டது. எனவே மோர்சிங் கற்றுக் கொண்டு அதை வைத்துக் கச்சேரிகளில் பங்கு பெற்றார். குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய கடமை என்று ஒன்று உள்ளதல்லவா? அகில இந்திய வானொலியில் நிலைய வித்வானாக இருந்தார். அப்போது மோர்சிங் ஒரு வாத்யமே கிடையாது அதை எடுத்து விட வேண்டும் என்று நிலையம் முடிவெடுக்க, அந்த வேலையும் போயிற்று. பிறகு என்ன செய்ய? மெட்ராஸ் வந்து சினிமாவில் மோர்சிங் வாசித்துக் குடும்பத்தைக் காப்பாற்றினார். கச்சேரிகளிலும் வாசித்தார்.
எனது கலைப் பயிற்சி

குழந்தைகளுக்கும் ஏதாவது கற்றுத்தந்து வித்வானாக வைக்க வேண்டும் என்று என்னை மிருதங்கத்தில் சேர்த்து விட்டார். நான் அதை சரியாகக் கற்றுக் கொள்ள மாட்டேன். சிறு பிள்ளை விளையாட்டுத்தனம்தான். பள்ளிக்கூடமும் செல்ல மாட்டேன். காலை நான்கு மணிக்கு எழுப்பி, சொல்லிக்கொடுத்து, பழையது போட்டு, சாப்பிட வைத்து, படிப்பை இரண்டாவதாக வைத்து மிருதங்கத்தை முதலாவது இடத்தில் வைத்து, எனக்குக் கற்றுக் கொடுத்தார். பிறகு கடம் வாசிக்கவும் கற்றுக் கொடுத்தார். ஒரு கச்சேரிக்கும் அனுப்பினார். 12 வயதில் கற்றுக்கொள்ள ரம்பித்து 13 வது வயதில் (1955) கச்சேரி வாசிக்க ரம்பித்தேன். என் கூடவே எல்லாக் கச்சேரிகளுக்கும் வந்து இருந்து எப்படி வாசிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்து என்னை கவனித்துக் கொண்டார் என் அப்பா. இப்போது நினைத்தாலும் கண்களில் கண்ணீர் மல்குகிறது.

முதல் நிகழ்ச்சி

வி.வி. சடகோபன் அவர்களுக்கு வாசித்ததுதான் எனது முதல் கச்சேரி. டி.வி.குப்புசாமி என்பவருக்கு, தூத்துக்குடியில் ஸ்ரீ ராமநவமி கச்சேரியில் வாசித்தேன். தூத்துகுடியில் நான் விளையாட சிப்பி வாங்கிக் கொடுக்கும்படி கேட்டேன். அப்பா வாங்கிக் கொடுக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டார். நான் பிடிவாதம் பிடிக்க எனக்கு ஆறு அணாவுக்கு சிப்பிகள் வாங்கித் தந்தார். அதில் ஒரு சிப்பியில் முத்து இருந்தது. முத்தின் விலை ரூ. 100, 200 இருக்கும் என் அதிர்ஷ்டம் அது எனக்குக் கிடைத்தது. எல்லோரும் இவன் முத்தைப் போல் பிரகாசிக்கப் போகிறான் என்றனர். அந்த ஸ்ரீ ராமநவமி கச்சேரியில் எனக்குக் கிடைத்த ஆசீர்வாதம் அது.

பிறகு நிறைய கச்சேரிகள் வாசித்தேன். நான் தனியாக வாசிக்க ஆரம்பித்தேன். தனியாகச் செல்லவும் துவங்கினேன். அந்தக் காலத்தில் பெண்பாடகிகள்தான் கடத்தைப் பக்க வாத்யமாக வைத்துக் கொள்வார்கள். சூலமங்கலம் சகோதரிகள், பி.லீலா, டி.வி.ரத்னம் போன்றோருக்கு நிறைய வாசித்திருக்கிறேன். சினிமாவிலும் வாசித்திருக்கிறேன் சினிமாவில், டி.ஆர்.மஹாலிங்கம் போன்றவர்களுக்கும் வாசித்தேன். அந்தக் காலத்தில் ஆண்களுக்கு வாசித்தால்தான் கௌரவம் என்னும் போக்கு இருந்தது. பெண்களுக்கு வாசித்தால் கௌரவம் இல்லை என்று நான் சொல்லவில்லை. நான் பிரபலம் ஆனதே அவர்களால்தான். என் அப்பா என்னை செம்பை வைத்யநாத பாகவதர், ஜி.என்.பாலசுப்ரமணியம், அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் போன்றவர்களின் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போய், என்னைப் பற்றிச் சொல்லுவார். டி.என். கிருஷ்ணன் அவர்களோடு கடத்தைத் தூக்கிக் கொண்டு சிஷ்யன் போல் போவேன். அப்பொதெல்லாம் கச்சேரிக்கு 'ரேட்' எனப்படும் பணம் பற்றிய நிர்ணயமெல்லாம் கிடையாது. சிறுவன் என்னுடன் வந்திருக்கிறான். நன்றாக கடம் வாசிப்பானென்று கூறுவார்கள். அவர்களும் சரி வாசிக்கட்டும் என்று சொல்லுவார்கள். அப்படி வாசித்து வாசித்துத்தான் பிரபலம் ஆனேன்.

அந்தக் காலத்தில் திரு வில்வாத்திரி அய்யர், கோதண்டராம அய்யர் போன்றோர்தான் கடம் வாசித்தனர். எல்லாக் கச்சேரிகளுக்கும் கடம் இருக்கும் என்றும் கூற முடியாது. சில ஆண் வித்வான்கள் கச்சேரிக்கு கடம் வைத்துக் கொள்வார்கள். பிறகு அரியக்குடி ராமானுஜ அய்யங்கார், ஜி.என்.பால சுப்ரமணியம், லால்குடி ஜெயராமன், டி.ர்.மஹாலிங்கம் (புல்லாங்குழல்), மஹாராஜபுரம் விஸ்வநாத அய்யர், மதுரை மணிஅய்யர், செம்மங்குடி ஸ்ரீநிவாச ஐயர் போன்றோருக்கும் வாசிக்க ரம்பித்தேன். அப்படியே நிலை உயர ரம்பித்தது.

சபாக் கச்சேரி

1960-61 இல் மியூசிக் அகாடமியில் செம்மங்குடி ஸ்ரீநிவாச அய்யருக்கு மாலை 5.30 மணி கச்சேரியில் வாசித்தேன். பக்கவாத்தியமாக பாலக்காடு மணி அய்யர், உமையாள்புரம் சிவராமன் போன்றோர் வாசிக்கும் நேரம். அன்று செம்மங்குடி ஸ்ரீநிவாச ஐயர் பாட்டு, லால்குடி ஜெயராமன் வயலின், உமையாள் புரம் சிவராமன் மிருதங்கம். அவர்களுடன் நான். அந்தக் காலகட்டத்தில் அகடமியில் வாசிப்பது என்பது அதிசயமான ஒரு செயல். அது ஆட்களைப் பிடித்து இடம் வாங்கும் நேரம். முதல் முறையாக பெரிய வித்வான்களுடன் வாசித்தேன். அது எனக்கு பெரிய திருப்புமுனை. கச்சேரி மிகவும் நன்றாக அமைந்தது. சிவராமன் மிக நன்றாக வாசித்தார். 'தனி'யில் நான் கடம் வாசித்து முடித்தவுடன் கட்டிடமே இடிந்து விழுந்து விடும் போல ஒரு கைதட்டல். செம்மங்குடி மாமா என்னைப் பார்த்து 'சபாஷ்' என்று சீர்வதித்தார். என் அப்பா இவற்றை எல்லாம் பார்த்து மிகவும் மகிழ்ந்தார். அப்போதெல்லாம், பெரிய வித்வான்களின் சீர்வாதம் இருந்தால்தான் முன்னுக்கு வரமுடியும். அவர்களிடம் நல்லபெயர் வாங்க வேண்டும், மரியாதையாக இருக்க வேண்டும். இது என் அப்பா கற்றுத்தந்த பாடம்.

வழ்க்கையின் முக்கிய திருப்பம்

பின்பு, செம்மங்குடி ஸ்ரீநிவாச அய்யர் அவர்கள் வீட்டிற்குச் சென்று வெற்றிலை பாக்கு வைத்து நமஸ்காரம் செய்தேன். அப்பொழுது அவர் என்னிடம், 'நீ ஏன் பெண் பாடகிகளுக்கு வாசிப்பதில்லை?'' என்றார். அதற்கு நான், 'நான் அவர்களால்தான் முன்னேற்றம் அடைந்தேன். இப்போது வேண்டாம் இன்னமும் சிறிது காலம் போகட்டும் என்றிருக்கிறேன்' என்றேன். அதற்கு அவர், எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மாவுக்கு வாசிக்கும்படி கூறினார். அந்த சமயத்தில் அவர்களுக்கு கோதண்டராமய்யர் கடம் வாசித்துக்கொண்டு இருந்தார். அவருக்கு 75 வயது. உடம்பு முடியாத சமயம். எம்.எஸ். அவர்கள் மியூசிக் அகாடமிக்கு வந்து அன்றையக் கச்சேரியைக் கேட்டு இருப்பார் என்று எண்ணுகிறேன். தனக்கு கடம் வாசிக்க என்று நிரந்தமாக ஒருவர் வேண்டு மென்று கேட்டிருப்பார் என்று தோன்றுகிறது. செம்மங்குடி மாமா என்னைக் கேட்டவுடன், 'நீங்கள் சொன்னால் நான் வாசிக்கிறேன்' என்றேன். 'நாளைக்கு "கல்கி கார்டனு"க்குப் போய் அவர்களைப் பார்' என்றார்.

எம்.எஸ் அம்மாவுக்கு வாசிக்கிறதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சிதான். ஏனெனில், அப்போதுதான் ஒரு 'பச்சை நோட்டு' பார்க்க முடியும். பச்சை நோட்டென்றால் நூறு ரூபாய். அது இப்போது வாங்குகிற 10,000 ரூபாய்க்கு சமம். அப்பொழுதெல்லாம் ரூ.50, 60, 25/- என்றுதான் 'ரேட்'. ஆரம்ப காலத்தில் நான் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய்க்கெல்லாம் வாசித்திருக்கிறேன். மேலும் எனக்கு அந்த மாதம் வரவு ஏதாவது இருந்தால்தான் குடும்பம் ஓட்ட முடியும் என்ற நிலை. எனவே நான் எம்.எஸ். அம்மாவைப் போய் பார்த்தேன். 'வா, விநாயக் ராம்' என்று கூப்பிட்டார். என்னிடம் ஒரு பட்டியல் தந்தார். மாசம் 10 கச்சேரி. ஆறு மாதங்களுக்கு டெல்லி, கல்கட்டா, பம்பாய், அமெரிக்கா, என்று லிஸ்டைப் பார்த்த என் மனோநிலையை விவரிக்க இயலாது. மாதத்திற்கு இரண்டு மூன்று கச்சேரி வாசித்து குடும்பம் நடத்துபவன் நான்.

இது வாழ்க்கையில் இன்னொரு திருப்பம். அதிலிருந்து இன்று வரை நான் கஷ்டப்படாமல் நன்றாக இருக்கிறேன். இதெல்லாம் கடவுளுடைய செயல் என்றாலும் இதில் என் அப்பாவின் உழைப்பும், அவர்களின் ஆசியும் கண்டிப்பாக கலந்து இருக்கிறது. இதையெல்லாம் பார்க்க என் அப்பாவும் இருந்தார். அதுதான் எனக்கு மிக்க சந்தோஷம் தரும் நினைவு. அது முதல், நிறைய வாசிக்க ஆரம்பித்துவிட்டேன் அவர்களுடன். ஆனால், அதன் பிறகு ஆண் வித்வான்கள் என்னைக் கூப்பிடுவது நின்று விட்டது. ஏதாவது ஒன்றுக்குத்தான் வாசிக்க முடியும். அவருக்கு வாசிப்பதும் கௌரவம்தான்.

அக்காலத்தில், இசை நிகழ்ச்சிகளில் அரியக்குடி ராமானுஜ அய்யங்கார், மதுரை மணி, போன்ற பெரிய வித்வான்களின் லிஸ்டில்தான் எம்.எஸ். அம்மாவுடையதும் இருக்கும். 1964 இல் இருந்து கடைசிவரை நான் வாசித்துக் கொண்டு இருந்தேன். முதல் முதலில் வெளிநாடு சென்றது கடத்துடன், எம்.எஸ் அம்மாவுடன் தான். அதன் பிறகு இன்று வரை வெளிநாடுகளுக்குப் போய்க்கொண்டுதான் இருக்கிறேன்.

கடம் வாசித்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்

முன் காலத்தில் சுந்தரமய்யரும், பழநி கிருஷ்ண அய்யரும்தான் கடம் வாசித்துக்கொண்டு இருந்தார்கள். இவர்கள் இரண்டு பேருடைய 'பாணி' தான் கடம் வாசிப்பது. ஆனால், பழநி கிருஷ்ண அய்யர் பாணியில்தான் கடம் வாசிப்பதில் ஒரு வடிவமைப்பு வந்ததெனலாம். அவர் பத்துவிரல் சொல்லும் சேர்த்து வாசிப்பார். அதன் பிறகு கடம்போய் விட்டது. பிறகு அதை மறுபடி கொண்டு வந்தவர் என்று ஆலங்குடி சோமு அவர்களைத்தான் சொல்ல வேண்டும். அவருக்கு, தந்தி விலாசம் என்று ஒன்று உண்டு, இப்போ கம்ப்யூட்டரில் ஈ மெயில் இருப்பது போல. தந்தி விலாசத்தில் நம் பெயரையும் இணைத்து விட்டால், நாம் எங்கிருந்தாலும் கடிதம் வந்துவிடும். 'கடம்' என்றே தந்தி விலாசம் கொடுத்து, 'கல்கி'யில் கால் பக்கம் விளம்பரம் கொடுத்து கடத்திற்குத் தனியிடம் கொண்டுவந்தார் ஆலங்குடி சோமு. எம்.கே. தியாகராஜ பாகவதர், கே.பி.சுந்தராம்பாள் ஆகியோருக்கு கடம் வாசித்தார். வில்வாத்திரி அய்யர் எம்.எல்.வசந்தகுமாரிக்கும், கே.எம்.வைத்தியநாதன் டி.கே.பட்டம்மாளுக்கும் வாசித்தார்கள். இவர்களைத் தவிர வேறுயாரும் அப்போது கிடையாது.

அதன் பிறகுஆ ர்.எஸ். கிருஷ்ணமூர்த்தி ராவ், பாலக்காடு சுந்தரம் போன்றவர்கள் வாசித்துக்கொண்டு இருந்தார்கள். கே.எம். வைத்தியநாதனை என் அப்பாதான் முதன்முதலாகத் தயார் செய்தார். ஆலங்குடி சோமுதான் முதன் முதலாக எடின்பரோ விழாவில் வாசித்தவர். அதற்கு முன்பாக எஸ். பாலசந்தர் வீணைக்கு, உமையாள்புரம் சிவராமன் மிருதங்கம், கடம் வாசிக்க வேலூர் ராமபத்திரன் வெளிநாடு போனார். எனவே நான்தான் முதன் முதலாக வெளிநாட்டிற்கு கடம் வாசிக்கச் சென்றேன் என்று சொல்லக் கூடாது. நான் அமெரிக்கா போகும்போது அகில இந்திய வானொலியில் நிலைய வித்வானாக வேலையில் இருந்தேன். அப்போதைய நிலைய இயக்குனர், எம்.எஸ். கோபால். அவர் எல்லோரையும் நிரந்தரப் பணியாளராக்க ஏற்பாடு செய்திருந்தார். அப்போது ஒரு திருப்புமுனை எனக்கு.

மற்றொரு திருப்பு முனை

1966ல் அமெரிக்காவில் கர்னாடக சங்கீதத்திற்காக, நங்கள் அமெரிக்கா போகிறோம். அங்கே, வசிக்கும் இந்தியர்கள்தான் சங்கீதம் கேட்க வருவார்க்கள். அமெரிக்கர்கள் அவ்வளவாக வர மாட்டார்கள். ஆனால், எம்.எஸ். அவர்கள், சங்கீதம் என்றால் என்ன, ராகம் என்றால் என்ன, யார் யார் சங்கீதத்திற்காக என்ன செய்து இருக்கிறார்கள், நிரவல் என்றால் என்ன, பாடும் பாட்டு என்ன ராகம், யார் இயற்றியது, அதன் பொருள் என்ன என்பன போன்ற அனைத்தையும் பட்டியலிட்டுத் தயார் செய்து அங்குள்ள மக்களுக்கு அறிமுகப்படுத்தினார்கள். தாளம் பற்றியும் செய்தார்கள். அதைப் அச்சுக் கோர்த்து அதை பிரதி எடுத்து அனைவருக்கும் கொடுக்க, அதைப் பார்த்த மக்கள் அவர் பாடப் போகும் பாட்டு பற்றித் தெரிந்து கொண்டு அதை ரசிக்க ரம்பித்தனர்.'சாரசாக்ஷ' என்ற பாட்டு என்றால், என்ன ராகம், என்ன ஸ்வரம், நிரவல் எப்படி, என்ன தாளம் என்று எல்லாவற்றையும் தெளிவாக விவரமாக எழுதி அச்சில் கொடுத்தவுடன், இந்த சங்கீதத்தில் இவ்வளவு விஷயங்கள் உள்ளனவா என ச்சர்யப்பட்டுப் போனார்கள். மேலும் இந்தப் பாட்டில் இவ்வளவு விஷயங்கள் உண்டா என்ற பிரமிப்புடன் ரசித்துப் பாராட்டினார்கள். இந்தப் பெருமை எம்.எஸ். அம்மாள் அவர்களையே சாரும்.


சக்தி குழு

இது நடந்தது 1977ல். நான் அகில இந்திய வானொலியில் பணி புரிந்து வந்தபோது, ஜான் மெட்ரோ என்னும் கிதார் வாசிப்பவர் இந்தியா வந்தார். அவர், தான் ஒரு புதிதான குழு ரம்பிக்கப் போவதாகவும், அதில் நானும் இணையவேண்டும் என்றும் சொன்னார். 'சக்தி' என்று அந்தக் குழுவுக்குப் பெயர். எல்.சங்கர் இருந்தார். இதில் கிடார், தபேலா, வயலின், கடம் நான்கும் ஏற்படுத்தப்பட்டது. மிருதங்கம், தபலா இரு வாத்யங்களிலுமே தோல் சம்பந்த மாக ஒரே போல சத்தம் வருகிறது. சற்று வேறு மாதிரி, உலோக சப்தம் வர வேண்டும் என்றும் அதற்கு கடம்தான் ஏற்ற வாத்தியம், அதற்கு நான்தான் ஏற்றவன் என்று கூப்பிட்டார்கள். இது கர்னாடக இசையை போன்றது அன்று, 'பியூஷன்' என்ற இணைப்பு வகையைச் சார்ந்தது என்றும் தெரிவித்தார்கள். நான் கடம், மிருதங்கம் இரண்டும் வாசித்தேன்.
எல்லோரும் ஒருவர் பின் ஒருவராகத் தனித் தனியாக வாசித்ததையே வாசிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. நிகழ்ச்சியில் எல்லோருக்கும் சம பங்கு உண்டு. எனக்கு இதற்குப் போவதா, அகில இந்திய வானொலியில் நிரந்தரப்பணி நியமனத்தில் நிரந்தர வருமானத்தில் தொடர்வதா என்ற குழப்பம். அம்மாவுக்கு நான் வேலையில் தொடர ஆசை, குடும்பம் முழுமைக்கும் அதுதான் சரி என்று பட்டது. ஆனால் அப்பா மட்டும், 'நீ நன்றாக வாசிக்க ஆரம்பித்து விட்டாய். நீ கடத்தில் தனித்தன்மையுடன் செயல் படவேண்டும். நீ பிரபலம் கிவிட்டால் வானொலி உன்னைத் தானே கூப்பிடும். 'கபியூஷ'னில் சேர்வதுதான் நல்லது, நல்ல சந்தர்ப்பம் ஒரு முறைதான் கதவைத் தட்டும்' என்று சொல்லி என்னை அனுப்பினார். பிரதி பலன் பார்க்காமல் உழைக்க வேண்டும். வாழ்க்கையில் கஷ்டப்பட்டால் எல்லாம் தானே வரும். உழைத்தால்தான் உலக அளவில் உயரலாம் என்றும் கூறினார். அத்துடன், 'உன் எண்ணப்படி யோசித்துத் தேர்வு செய். உனக்கு முழு சுதந்திரம் உண்டு' என்றும் சொன்னார்.

வானொலி வேலை

அப்போது ஈமனி சங்கர சாஸ்திரிகள் நிலைய இயக்குனராக இருந்தார். எல்லோரையும் நிரந்தரம் செய்யப் போகிறோம் என்று கூறியவுடன் அனைவரும் கையெழுத்துப் போட ஓடினார்கள். எனக்கு மட்டும் ஒரே குழப்பம். அப்பா சொன்னதும், இந்த வேலையின் நிரந்தரத் தன்மையும், வருமானமும் எல்லாமே என் மனதினுள் ஓடியது. அப்போது, வானொலியில் நல்ல சம்பளம். சங்கர சாஸ்திரியும் என்னை கையெழுத்துப் போட வேண்டாம் எதிர்காலத்தில் தனித்து நிற்கலாம் என்றார். கையெழுத்துப் போடவில்லை என்றால் நிரந்தரம் கிடையாது. கையெழுத்துப் போட்டுவிட்டுப் போனால் விடுப்பும் உண்டு. ஆனால் நான் வேலையை 'ரிசைன்' பண்ணிவிட்டேன். அதில் எல்லோருக்கும் மிகுந்த கோபம்.

நான் 'சக்தி' குழுவுடன் இணைந்து 'பியூஷன்' வாசிக்க அமெரிக்கா சென்றேன். அப்படியே 'பிளேட் டிரம்' என்ற குழுவில் இணைந்து வாசிக்கஆ ரம்பித்தேன். நான் அந்த முடிவு எடுத்ததால்தான் வித்வான்கள் யாருக்கும் கிடைக்காத 'கிராமி அவார்ட்' எனக்குக் கிடைத்தது. இது 1990ல் கிடைத்தது. அங்கே கற்றுக் கொடுக்க 1994ல் கூப்பிட்டார்கள். அப்போது எப்படி சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று அப்பாதான் எனக்கு கற்றுக் கொடுத்தார். எனக்கு குரு, தெய்வம், எல்லாமே அப்பாதான். ஏனெனில் எனக்கு கிரகிக்கும் சக்தி அதிகம் கிடையாது. எப்போதும் விளையாட்டுத் தனமாயிருப்பேன். யாரிடம் விட்டாலும், அவர்கள் அடிப்பார்கள், திட்டுவார்கள். நம் மகன் கஷ்டப்படக் கூடாது என்று எனக்கு அப்பாவே சொல்லிக் கொடுத்தார்.

காஞ்சி மடத்துடன் என் அனுபவங்கள்

இப்படி நிறைய வாசித்துக்கொண்டு இருக்கும் போது எனக்கு காஞ்சி சங்கர மடத்தின் பெரியவர் சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளின் அருள் கிடைத்தது. மடத்திற்கு 88, 89 லிருந்தே போவேன். அவர்கள்தான் தெய்வம் என்று எண்ணி உள்ளேன். எம்.எஸ் அம்மாவுடன் மடத்தில் வாசித்திருக்கிறேன். அப்பா இறந்து போன பிறகுதான் எனக்கு கலைமாமணி போன்ற எல்லாப் பட்டங்களும் கிடைத்தன. அக்காலத்தில் சங்கீத நாடக அகாடெமி விருது பிரதான வித்வான்களுக்குத்தான் கிடைக்கும். பிறகு வயலின், மிருதங்கத்திற்குக் கொடுக்க ஆரம்பித்தனர். உப பக்க வாத்தியங்களுக்கு கிடையாது. இவர்களையெல்லாம் தாண்டி கடத்துக்கு கிடையவே கிடையாது. ஆனால் எனக்கு சங்கீத நாடக அகடெமி அவார்டு கிடைத்தது. கிடைத்தவுடன் பெரியவரிடன் சென்றேன். சீர்வாதம் வாங்கப் போனேன். அவரிடம் கூறியபோது, 'இது அவார்டா, இல்லை விருதா?' என்றார். இரண்டிற்கும் வித்யாசம் எனக்கு புரிய வில்லை. 'என்ன அவார்ட் பணம் அவார்டா, எவ்வளவு, ஒருதரம் தான் கொடுப்பார்களா அல்லது ஒவ்வொரு ஆண்டுமா?' என்று கேட்டார். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

டெல்லியில் அப்போது அவார்ட் வாங்குகிறவர்கள் கச்சேரி செய்ய வேண்டும். பாட்டு, வயலின், மிருதங்கம் எல்லாம் தனித்தனியாக வாசித்து விடுவார்கள். ஆனால் கடத்திற்கு தனியாக கச்சேரி கிடையாது. மிருதங்கத்துடன்தான் வாசிக்க வேண்டும். அப்போது செகரெட்டரி, 'கடத்திற்கு தனி அந்தஸ்து கொடுத்து இருக்கிறோம். நீங்கள் தவிலுடன் வாசிக்கிறீர்களா' என்றார். சரி என்று சொல்லிவிட்டேன். வலையப்பட்டியுடன் வாசிக்க வேண்டும். அவர், நான் தனியாக தவில் வாசிக்க மாட்டேன் எனக்கு உடன் திருவிழா ஜெய்சங்கர் நாகஸ்வரம் வாசிக்க வேண்டும் என்று கூறி விட்டார். சரி என்று சொல்லிவிட்டனர். இப்போது நாதஸ்வரத்திற்கு தவில், கடம் என்றானது. முதன் முதலில் நாதஸ்வரத்திற்கு நான் கடம் வாசித்ததால் பெரும் பெயர் கிட்டியது. உப பக்க வாத்யம் மாதிரி இல்லாமல் நாகஸ்வரத்திற்கு கடம் என்றானது. அவர் வாசிக்க, எனக்கு பரிபூரணமாக என்னுடன் இருக்கும் காஞ்சிப் பெரியவரின் ஆசியுடன் நான் வாசிக்க, ரசிகர்கள் மனதில் மிகவும் சந்தோஷத்தைக் கொடுத்து. அது எனக்கு பெரிய கைதட்டலை வாங்கிக் கொடுத்தது.
ஆர்.வெங்கட்ராமன் அவர்கள்தான் அப்போது ஜனாதிபதி, கிரீஷ் தான் செகரெட்டரி. இதுவரை இந்த அவார்டுக்கு, 10,000, 15,000 ரூபாய்தான் கொடுத்துக்கொண்டு இருந்தார்கள். இந்த ண்டு முதல் 25,000 ரூபாயாக ஆக்குகிறோம் என்று சொல்லி, ரூ25,000/- கொடுத்தார்கள். காஞ்சிப் பெரியவரின் கேள்வியின் அர்த்தம் எனக்கு அப்போதுதான் புரிந்தது. திரும்பி வந்தவுடன் அப்பாவிடம் இதைக் கூறினேன். பதினைந்தாயிரம்தான் தருவார்கள். எனவே அந்தப் பத்தாயிரத்தை பெரியவர் பாதத்தில் சமர்ப்பித்துவிடு என்றார். பெரியவர் லேசில் பாதம் காட்ட மாட்டார். அவர் என்னை வாசிக்கச் சொன்னார். என்னுடைய அண்ணா, அவர் நிறுத்தச் சொல்லும் வரை வாசி என்றார். நீயாக நிறுத்தாதே என்றும் சொன்னார். நான் அரை மணி வாசித்தேன், ஒரு மணி வாசித்தேன், அவர் என்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. வாசித்து வாசித்து என்னிடமிருந்த சரக்கெல்லாம் தீர்ந்துவிட்டது. அவர் பாட்டுக்கு வருபவர்களுடன் பேசுகிறார். பிரசாதம் தருகிறார். நானோ வாசித்ததையே திரும்ப வாசிக்கிறேன். எனக்கு அசந்து போய்விட்டது. பெரியவர் திரும்பிப் பார்க்கும் போது, போதும் வா என்று கூப்பிடுவார் என்று எண்ணினால் இன்னும் வாசி என்று சொல்லிவிட்டார். எனக்குக் கையெல்லாம் ஓய்ந்து கண்களில் கண்ணீர் வந்து விட்டது. அதன் பிறகும் ஒரு மணிநேரம் கழித்து போதும் என்றார். நான் உன்னை வாசி என்றேன். அதைத் திருப்பிப் போட்டு வாசி என்றார். இது சிவனுக்கு அர்ப்பணம் என்று சொல்லி பிரசாதம் கொடுத்தார். சீர்வாதம் செய்தார். அவர் பாதத்தில் 10,000 ரூபாயை வைத்து காணிக்கையாக செலுத்தி விட்டு வந்தேன்.

கதையல்ல, உண்மை

அதன் பிறகு நிறைய வாசித்தேன். ரவிசங்கர், அல்லா ராக்கா, ஹரிப் பிரசாத் சௌராஸ்யா போன்ற வட இந்தியக் கலைஞர்கள் பலருடனும் வாசித்தேன். ஒரு மாதம் டூர் ஜெர்மனியில். நான், ஜாஹிர் ஹுசைன், ஹரிப்பிரசாத் சௌராஸ்யா எல்லோரும் போயிருந்தோம். எல்லாம் முடிந்து கடைசிக் கச்சேரி. ஏர் போர்ட்டில் இறங்கியவுடன் டிராலி என்ற தள்ளு வண்டி இருக்கும். இங்கேயும் இருந்தது. னால் இங்கே கைப்பிடியைப் பிடித்தால் நிற்கும் விட்டால் போய்விடும் என்பது எனக்குத் தெரியாது. நான் மற்ற பொருட்களுடன் கடத்தையும் வைத்துவிட்டு, கையை விட்டுவிட்டேன். வண்டி நேரே சென்று சுவற்றில் மோதி கடம் சுக்கல், சுக்கலாக உடைந்து விட்டது. ஜெர்மனியில் இருந்து எழுபது கிலோமீட்டர் தள்ளிக் கச்சேரி. என்ன செய்வது என்று ஒருவருக்கும் ஒன்றும் புரிய வில்லை. ஒருமணி நேரம் பயணம் செய்து கச்சேரிக்குச் செல்ல வேண்டும். அவர்கள் 'கொன்னக் கோல்' சொல்லி விடுங்கள்' என்றனர். முதலில் ஒரு மணி நேரம் ராகம் வாசிப்பார்கள் அப்புறம்தான் தபலா, கடம் எல்லாம். நான் அவர்களை போகச் சொல்லிவிட்டு, பசை ட்யூப் ஒன்றும் கொஞ்சம் கயிறும் வாங்கிக் கொண்டேன். 'க்ளு' (GLUE) என்பது 'பெவிகால்' போன்றது. அதைக் கயிற்றில் தடவி கடம் உருவத்திற்கு அத்துடன் ஒட்டி விட்டேன். தட்டிப் பார்த்தேன் சுருதி மிகச் சரியாக இருந்தது, பெரியவர் ஆசிதான். கடத்தைக் கட்டவோ ஒட்டவோ முடியாதுதான். அங்கு அவர்கள் ராகம் வாசித்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் ஒட்டிக்கொண்டு கடத்துடன் வருவேனா என்ற சந்தேகம்தான். வாசிப்பவர்களுக்குத் தெரியும் கடம் சுருதி சேராது. 'சுருதி சேர்ந்தால் கடம், இல்லாவிட்டால் சங்கடம்' என்று ஒரு பழ மொழி உண்டு

நான் கடத்துடன் மேடை ஏறி சுருதி தட்டிப் பார்த்தேன் மிக சரியாக இருந்தது. உடைந்திருந்த கடம் முழு ரூபத்திற்கு வந்திருந்தது. அனைவருக்கும், -விஷயம் தெரிந்தவர்கள் அனைவருக்கும் - ஒரே ச்சரியம். அன்று மிகவும் நன்றாக வாசித்து மிகப் பெரிய கைதட்டல் வாங்கினேன். இது மிகப் பெரிய அதிசயம் இல்லையா? இது நடந்தது பெரியவரின் ஆசியால்தான். அதைவிட மிகப் பெரிய அதிசயம், கச்சேரி முடிந்து வந்தால், கடம் சுக்கல் சுக்கலாகப் போய்விட்டது. இது என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சி ஆகும். கடம் உடையும், வேறு கடம் எடுத்து வாசிப்பார்கள், ஆனால் இது இதுவரை யாருக்குமே நடக்காத ஒரு அதிசய நிகழ்வு கும். இதை நான் புகைப் படம் எடுத்துக்கூட வைக்கவில்லை. நம்புவது கூட கடினம்தான், ஆனால் உண்மை.

வாசிப்பது கடவுளுக்கு மட்டும்

என்னுடன் கற்றுக் கொண்டவர், சாமிநாதன் என்று ஒருவர். அவர் இப்போது இல்லை. என்னுடன் கடம் படித்தவர்கள் யாரும் இல்லை. காரைக் குடி மணிக்கு என் அப்பாதான் சொல்லிக் கொடுத்தார். ஜி.என்.பாலசுப்ரமணியம் பாடி, பாலக்காடு மணி அய்யர் மிருதங்கம் வாசித்த ஒலிநாடாவை நானும் காரைக்குடி மணியும் போட்டுக் கேட்டு நிறைய பயிற்சி எடுத்து இருக்கிறோம். அதை ராய்ந்தும் இருக்கிறோம். நாங்கள் - அதாவது நானும், காரைக்குடி மணியும் - ஒரே பாணியைச் சார்ந்தவர்கள். நான் இப்பொது அதிகம் கச்சேரிகளுக்கு வாசிக்கறதில்லை. வாசிக்க முடியும். ஆனாலும் கடவுளுக்கு என்று மட்டும் வாசிக்கிறேன். என் மகன் செல்வ கணேஷ், நான் வாசித்துக்கொண்டு இருந்த 'சக்தி' குழுவில் ஜாஹீர் ஹுசைனுடன் வாசித்துக்கொண்டு இருக்கிறான்.

கை கொடுத்த பாஷ்யம்

நான் மற்றொரு சம்பவத்தையும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். நான் முதல் முதலாக, எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மாளுடன் அமெரிக்கா செல்லப் போகிறேன். நாளை காலை நான்கு மணிக்கு விமானம் ஏற வேண்டும். எனக்கு அவர்களின் சுருதிக்கான கடம் கிடைக்கவில்லை. எங்கெங்கோ கேட்டுப் பார்த்துவிட்டேன். எந்தக் கடத் தயாரிப்பாளரிடமும் இந்த சுருதியில் இல்லை. கே.எம். வைத்தியநாதன் அவர்களிடமும் கேட்டேன். கிடைக்கவில்லை. என் தம்பி சுபாஷ் சந்திரன் தாம்பரத்திலுள்ள பாஷ்யம் என்பவரிடம் இந்த சுருதிக்குச் சரியாக கடம் உள்ளது என்று கூறினார். நான் காலை பத்து மணிக்கு அவரிடம் போய்க்கேட்டேன். எந்தக் கலைஞரும் தனக்கு சந்தர்ப்பம் வரவில்லையே என்றுதான் எண்ணுவார்கள். ஆனால், அவரிடம் கேட்டபோது எந்தத் தயக்கமும் இல்லாமல் இதை எடுத்துக் கொண்டு போய் வாசியுங்கள் என்று கடத்தை கொடுத்தார். அப்படியென்றால் அவருடைய குணம், பெருந்தன்மை ஆகியன புலப்படும். அவர் கொடுத்த கடம் இன்றும் நாத வடிவில் ஊர் முழுவதும் உலகம் முழுவதும் ஒலித்துக் கொண்டுதான் உள்ளது. அப்பேர்ப்பட்ட இந்த பாஷ்யம் என் வீட்டிற்கு வந்து என்னைப் பற்றி எழுதுகிறார் என்றால், எனக்கு மிகவும் பெருமையாய் உள்ளது. நான் அவருக்கு மிகவும் நன்றிக் கடன் பட்டுள்ளேன். நான் இந்த நிலைமைக்கு வந்ததற்கு முக்கிய காரணமே திரு பாஷ்யம் தான்.

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை

என் அப்பாவின் வார்த்தைகளை இறுதியாகப் பதிவு செய்யலாம் என்று எண்ணம். என் அப்பா, 'நீ முன்னேற வேண்டும் என்றால், அவமானப்பட வேண்டும். தைரியம் வேண்டும். துணிச்சல் வேண்டும். கடல் அலை ஓய்ந்து சமுத்திரத்தில் குளிப்பது என்றால், அது இயலாத காரியம். எனவே வாழ்க்கையில் முன்னேற, துணிவே முக்கியம்'' என்று உபதேசித்தார். அது உண்மைதானே?

Wednesday, December 5, 2007

க்ருஷாங்கினி

Posted by Picasa

தலை அலங்காரம்-2-சிறுகதை

தலை அலங்காரம்-2

என் இருப்பிடத்திலிருந்து ஏதேதோ பாதைகள் கடந்து, நான் செல்ல வேண்டிய இடத்தை அடைய பலவிதமான வாகனங்களும்; கூட நடையுமாக எதனூடாகச் செல்லும்போதும் ஏதாவது ஒரு இடத்தில் பதிக்கப்படும் தார் கற்களையோ அல்லது அப்போதுதான் பதித்த தார் அடைந்த சாலைகளையோ கண்டிப்பாக இப்போது கடந்து போகிறேன்.

சித்தியை நான் கண்டதே காவி உடையும் முக்காடிட்ட ரவிக்கையற்ற உருவத்துடந்தான். எனக்கு மடாதிபதிகள் எப்போதும் சித்திதான். மற்றவர்கள் சொல்லுவார்கள் சித்தி மிக அழகி என்று. எனக்கு எப்போதும் அப்படி தோன்றியதே இல்லை. கழுத்து மூடி இழுத்துச் சொருகப்பட்ட ஒரே வண்ணப் புடவையில் எந்த ஓரத்து வழியாகவும் அழகு வெளி வழிந்த தில்லை. மூடியதினுள்ளான அழகு காண என் அறிவுக்கு எட்ட வில்லை. உடை, மடம் பூஜை, தன்னலமற்றிருத்தல், இரவு பலகாரம், யாரோடும் எதிர்படாதிருத்தல், பெரிய வீட்டில் கூட நடமாட்டம் ஒருசில அடிக்களுக்குள் என்ற சிறு பட்டியல் தான் சித்தியிடம். பசி சொல்லிக் கேட்டதில்லை.

அன்றைய நானின் ஊடாக இன்றைய நானும் எங்கெங்கு கலந்து வருமோ? எங்கும் நிறைந்துவிடுமோ?

மடிப்புடவையின் நிறம் வறுமைக்கானது, மரக்கலர் துக்கத்திற்கானது. துக்கம் வறுமையினால். வறுமை எதனால்? எப்போதும் வாசம் மிகுந்த தின் பண்டங்கள் சித்தி மடியிலும், துணியிலும் அருகிலும் நிறைந்திருக்கும்.

இரவு படுத்திருக்கும் போதோ குளித்துத் துணி மாற்றும் போதோ சற்றே வளர்ந்த கருமையான தலைமுடி பார்வைக்குப் படும், தார் வண்ணத்தில். சட்டென்று இயல்பாக இழுத்து மூடும் சித்தியின் கை சற்றே பதட்டத்துடன். துணியிலிருந்து வெளி வழிந்து முகம் அடையும் முன்னரே அவை மழிக்கப்பட்டு இருக்கும். விடியற் கருக்கலில், வீட்டின் பின்புறம் இருட்டும் முடியும் களையப்பட்டு யாராவது ஒருவர் தலைக்கு நீர் விட்டு வேறு துணி கொடுத்து வீட்டிற்குள் கூட்டி வருவர். பருவ கால மாற்றம் பாதிக்கப்படாத தொடர்செயல் இது. விஷ ஜந்துக்களுக்கும், செடி, தலை முடிக்கும் தடை நிறைந்த அப்பாதையில் அன்று சித்தி பயணப்பட்டு வருவாள். புடவைக் கலரில் தலையும் மின்னும்.

நிறைய ராஜ குமாரன்கள் வருவார்கள், குமரிகளைக் கொத்திக் கொண்டு செல்வார்கள், குறுக்கே நிற்கும் குண்டோதரக் கல் திறந்து தங்கம் தரும், கிளி பெண் குழந்தை வளர்க்கும், ராட்சசன் நகம் வளர்ப்பான், சின்னப் பெண் கொடுமைப் படுத்தப்படுவாள், பகவான் க்ருபையால் கஷ்டம் நீங்கும், காலுடைந்த குதிரையில் பல தேசங்களையும் மனிதன் 'கடக் கடக் கடக்' என்ற சப்தத்துடன் கடப்பான், உதடு பெருத்த ஆணை விருப்பம் இன்றி மணம் செய்து கொண்ட பெண் பல விதத்திலும் சித்திரவதைக்கு ஆளாவாள், புருஷனை 'உதடா! உதடா!' என்று வெறுப்பேத்துவாள், கடைசியில் செத்து மண்ணாவாள், இப்படி பலப் பல இரவுகள் பகல்கள். தேவைக்கு ஏற்ப இரவோ பகலோ நீளும் அல்லது சுருங்கும், அகலமாகும், பயமுறுத்தும், கண் கசிய வைக்கும். சித்தி மணம் என் மீதும் படியும்.

என் இருப்பிடத்திலிருந்து ஏதேதோ பாதைகள் கடந்தடைய வேண்டியவை விதவித வாகனங்கள்கால் நடையாகவும் ஏதோ ஒரு இடத்தில் இட்டுப் புதைத்த தார் சாலை புதைந்து கொண்டிருக்கும் புழுதி இருபுறமும் மலை என எழும்பித் தார் கொதித்துக் கொண்டிருக்கும், தெருவோரம் மஞ்சள் நெருப்பு சப்தமிட சாக்கு சுற்றிய காலுடன் தார் எடுத்துக் கோல மிடுவார்கள். தாருடன் கலந்து கல் கொட்டி இழுப்பார்கள். தாருடனும் ரோட்ரோலருடனும் நானும் காய்ந்துவிட்டு அதிசயத்தை அனைவரிடமும் பகிர வேண்டி ஓட்டமும் நடையுமாக வீடு திரும்பினேன். வழி நெடுக கருங்கற்கள் உப்பி உப்பி ரோடோரம் படுத்திருந்தது. ரோடுமீது பரப்பக் காத்து இருந்தது.

சித்தி படுத்து விட்டார்; சில நட்களாயிற்று. அவர் உடல் முழுவதும் தரை பரவி நிமிர்ந்தபடி படுத்துக் கிடக்கும் அவரின் முழு உடலும் வயிறாக உப்பி ஊதி மேடிட்டிருந்தது. நார்மடி, தலையில் தனிந்திருக்கிறது. கருப்புத் தார் பொங்கி வழிகிறது சித்தியில் தலையிலிருந்து. படுக்கையைச் சுற்றி யார் யாரோ? அனேகர் வந்து பார்க்கின்றனர். குரலும் வார்த்தையும் மங்காமல், ஏதேனும் தின்ன வாங்கித் தரும்படி எல்லோரிடமும் முறையிடுகிறார் சித்தி. அவரவர் வசதிக் கேற்ப சின்னதாகவோ பெரியதாகவோ உள் நுழைகின்றன தின் பண்டங்கள். வெங்காயமும் வேண்டும் பூண்டும் உடன் வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறார் சித்தி. வம்பு பேசும் ஊர் என பயந்தாலும் ஏதோ ஒரு சமயம் உள் நுழையும் அவைகளும். நான் உள் நுழைவதில்லை அழைத்தாலும்.

வீடொழிக்கும் போது வேண்டாததை அடைத்து வைக்கும் சாக்கென சித்தி வயிறு பெருக்கிறது. எல்லவற்றையும் உள் தள்ளிப் புதைக்கும் சித்தி, அருகில் யாரும் வந்து பங்கு கேட்டு விடுவார்களோ என்று அள்ளி அள்ளி அடைத்துக் கொள்ளும் சித்தி, பசியாகவே உருமாறிவிட்டாரோ? படுத்தபடி எல்லா பண்டங்களும் வாய் வழி நுழைந்து வயிறு அடைந்து கல்லாகி விடுகிறது. கற்களால் கட்டப்பட்ட வட்டம் அல்லது கருங்கற் குவியல் என வயிறு இடம் மாறி இடம் மாறி இளைப்பாறுகிறது.

சாலை ஓரத்தில் கருங்கற்கள் வெளியில் வீட்டின் எதிரில், தார் கொதித்துக் கொதிக்கும் மணம். சித்தியின் வயிற்றுக் கற்கள், தலைமுடி. தார், கருப்பு முடிகள், கற்கள், வயிறு, முடி, சித்தி, ராஜகுமாரன், நான், சித்தி வாசனை, தின் பண்டம், சித்தியின் துர் நாற்றம், நான். . . . .

தரையின் சிறு சிறு சிமெண்ட் சதுரங்கள் என் முன் பரந்து பெரிதாகி சித்தியின் வயிறு என குமிழ் குமிழாய் எழும்பி மேடிட்டு, மேடிட்டு அறை முழுதும். மதியம் அப்படியே உறங்கிப் போனேன். எழும்போது தார் வாசனையும், தலைவலியுமாய் நான். முதல் பகல் தூக்கம், முதல் தார்வாசனை, முதல் தலைவலி.

இருப்பிடத்திலிருந்து எதேதோ பாதைகளைக் கடந்து நான் அடைய வேண்டிய இடத்தை அடைய பல விதமான வாகனங்களும், கூட நடையுமாக. எதனூடாகச் செல்லும் போதும், ஏதோ ஒரு இடத்தில் பதிக்கப்படும் தார் கற்களையோ அல்லது அப்போதுதான் தார் அடைத்த சாலைகளையோ கண்டிப்பாக இப்போது நான் கடந்து போகிறேன். தார் மணமும், தலைவலியும், வயிறுமாக.

Saturday, December 1, 2007

தலை அலங்காரம்-1-சிறுகதை

 தலை அலங்காரம்-1

எங்கள் வீடு விஸ்தாரமானதுதான். தெருவில் ஆரம்பித்து, தெருவில் முடியும். இருபுற வாசலிலும் போக்கு வரத்து இருக்கும். மொண்ணைப் பாம்பென இருதலை கொண்ட வீடு. அம்மாதான் எப்போதும் தலை வாரி விடுவாள். அம்மா வீடு விட்டு ராத்தங்கியதாக--எங்களை விட்டு--நினைவே இல்லை. அத்தனை பெரிய வீட்டிலும், அம்மா தலை வாருவது என்னவோ வாசல் படிக்கு சற்று மேலே, கீழ் திண்ணை, அதனினும் நான்கு படிகள் உள் நோக்கிச் செல்ல படிகள் சமன் படுத்தி எடுத்துச் செல்லும்மேல் திண்ணைமீது. எப்போதும் யாருடனாவது நிறைந்தே இருக்கும, திண்ணை. இழு கதவு போட்டு இருக்கும் வாசல் இரவு மட்டுமே அடைபடும். மேல் திண்ணையில் அம்மா அநேகமாக பின்னல் தொழிற்சாலையைத் தொடங்குவாள். ஒற்றைச் சடை, இரட்டைசடை,நாகர் பின்னல், ஆத்திக் கட்டு, குடலைப் பின்னல், தேவகிப் பின்னல், தாழம்பூ தைத்து, மல்லி முல்லைதைத்து, குஞ்சலம் வைத்து, ரிப்பன் வைத்து, உல்லன் நூல்வைத்து, ஆயிரங்கால் பின்னல், அஞ்சு கால் பின்னல் என, பருவத்தையும், காலத்தையும் விசேஷத்தையும் கொண்டு தலை அலங்காரம் மாறுபடும். அம்மாவின் கலை நயமும், அழகுணர்வும் உறவுப் பெண்களின் பின்னலையும் கவர்ந்திழுக்கும். யாராவது ஒருவர் கிராப் சீப்பு, பேன்சீப்பு, எண்ணை சகிதம் அம்மாவை அழைத்துப் பின்னலை ஆரம்பிக்க அவ்வப்போது கற்பனைகேற்ப தலையின் பின் வடிவம் மாறுபடும்.

மதிய வேளைகளில் படுக்கத் தலையணை மறுக்கப் பட்ட குடும்பம் அது. ஆனால் அம்மாவுக்குத் தலையணை எப்போதும் அவள் கொண்டையே. புத்தகம் படிக்க, படுத்துக் கொண்டே அரட்டை அடிக்க, எப்போதாவது கண் அசர என்று தலையின் கீழ் மடிந்த தலையணை. படுத்தால் கழுத்து வளைவை நிரப்பி, தலையையும் மேலெழுப்பி, இதமான படிமானமாகக் கொண்டை மாறும். வாசலின் அழைப்போ அல்லது தீவிரமான பேச்சோ, மறுத்தளிப்போ, கோவமோ, உபதேசமோ, என எல்லா உணர்வுக்கும் படுத்திருக்கும் அம்மா எழுந்தவுடன் வெளிப் படுத்தும் முதல் வினை தலை முடியை அவிழ்த்து உதறி, முடிச்சலிட்டு தலைமீது நிறுத்துவதைத்தான். அம்மாவின் உணர்ச்சிகள் வேகம் எல்லாம், தலையை முடியும் நிலையிலிருந்து அறிய முடியும் அளவுக்கு வேறுபட்டிருக்கும். அலுப்பு, உடல் வாதை, வாழ்க்கைச் சலிப்பு என எல்லாவற்றிற்கும் முன்னுரையாக தலைமுடித்துக் கொண்டையிடுதல் அறியப் படும். அவிழ்ந்த முடியின் அடர்த்தியும், நீளமும் விரிந்து முறம் போலத் தரை தொடும்.

ரேழியில் வாசம்செய்யும் நாட்களில் மட்டும் அம்மா தலைவாரி, ஓய்வாக பின்னலிட்டுக் கொள்வாள். அதையும் தொங்கவிடாமல் அடக்கி மேலெடுத்து, பிச்சோடாவாக முடிந்திருப்பாள். அந்த நேரங்களில் எனக்கும் தலைவாரல் இருட்டு ரேழியில்தான். வீழ்த்தியிடப்பட்ட உடை ரேழியின் விளிம்பில் காவல் நிற்க, உள்ளிருந்து தலைவாரும் அம்மா பின்னலின் நுனியில் உல்லன் வைத்து விடுவாள். ரோஸ், பச்சை, சிகப்பு, நீலம் என எல்லாமே ஒளிர் விடும் வண்ணத்தில் தனித் தனியாகவோ அல்லது இரு கலர் இணைந்தோ பின்னலின் நுனியில் தொங்கும். கனமற்ற நுனி வளைந்து மேல் நோக்கித் திரும்பி நிற்கும். உதிர்த்த துணி தரித்து, பள்ளி செல்வேன்.

அம்மாவைத் தவிர மற்ற யார் பின்னினாலும், கோடி முடியில் ஏதாவது ஒன்று இழுபட்டு ஓர் முனையில் வலிக்கும். ஆயின் அம்மா என்றுமே பின்னிய பின் முன் நெற்றி வார மாட்டாள், பின்னல், பின்னால் குளம் தூக்குமென்று. ஆனால் எப்போதாவது பின்னிவிடும் மற்றெல்லோரும் முன் நெற்றி அழுத்தி வாருவார். 'என் முகத்தைப் பாரடீ,' என்று கண்ணோடு கண் பார்த்து ' முன் நெற்றி வாரலைன்னா முகம் மறந்து போகும்' என்பார்கள். 'அப்படியா' என அம்மாவை வினவினால், ஆண்கள் பின்னறாளா என்ன? அவா முகமெல்லாம் மறந்தா போச்சு?' என்று திரும்பக் கேட்பாள். அதுவும் வாஸ்தவம்தானே?


' எப்போவாவது பின்னிப் பழகிக்கோ. சீப்பைக் கொண்டு வந்து நீட்டாதே விரிச்ச தலையோட; அப்புறமா பெரியவளானா பிரச்சனைதான்.'' என்பாள் அம்மா. பின்னும் முன்னால் அம்மாவின் மடி ஏறி அம்மாவின் முகத்தில் என் முதுகிட்டு, பின் தொங்கும் முடியைப் பிடித்து இழுத்து என் கழுத்தில் தொங்க விடுவேன். கால் தொடும், தரை புரளும். எனதேயான பிரமையில் இடுப்பு நெளித்து மகிழ்வேன். ''எல்லாம் உனக்கும் தானே வளரும் விடுடீ வலிக்கிறது'' என்று மடியில் இருந்து எழுப்புவாள். தாழம்பூ வைத்து மயிர் மூடிப் பின்னித் தொங்கவிடுவாள். முடியின் அளவு வெளியில் தெரியாமல் தலைக் கருமையிலிருந்து பொன்னிறத் தாழைமடல் கழுத்தில் முள்குத்தி மடித்து மடித்துப் பின்னலிடப்படும். தயாராய் வாழை நாரை நான் உரித்து வந்து நீளமாய் வைத்திருப்பேன். எங்கோ ஒரு கண்ணியில் முடியுடன் நார் சேர்த்து இழைந்து வளர்ந்து விடும். ஆனாலும் தாழை மேல் மூடி மறைக்கும் இடுப்புக்குக் கீழே வளைந்தாடாமல் விறைத்துத் தொங்கும் தாழம்பூப் பின்னல் ஒரு நாளில் என் முடியை இருமடங்காக்கும். பொன்நிறம் மாறி, பழுப்பேறிச் சுருங்கி இடையிடை நார் தெரியும் வரை அவிழ்க்க மாட்டேன். அப்பின்னலை. மறு தலைக்குளியல் வரை தலை அவிழ்த்தால் மூச்சு முட்டும் தாழை வாசம்.

விசேஷ நாட்களில் வீடு நிறையப் பெண்கள். அம்மா சீப்பையும், எண்ணெயையும் எடுத்துக் கொண்டு அமர்ந்தால் மணிக்கணக் காகும் பின்னல் கடைமுடிய. அம்மா தன் தலையை வாரிக் கொண்டையிட்டு கை சொடக்கிக் கொள்வாள். யார் யார் பின்னிக் கொள்கிறார்களோ, அவர்கள் அலங்காரம் முடிந்ததும், சீப்பில் சிக்கி இருக்கும் முடியை விரல் கொண்டு சுற்றித் திரித்துப் பின் தரை துடைத்து, அம்மா சுருட்டித் தரும் முடியை வாசலில் இட வேண்டும். அனைவரும் கலைந்த பின் அம்மா தன் தலைவாரிய பின் தரை வழித்து வீழ்ந்த முடி எடுத்து விரல் சுற்றி என் கையில் இட்டு வெளி வாசல் சென்று வீசி விடச் சொல்லுவாள். வெள்ளையும், பழுப்பும், கறுப்புமாக இருக்கும் அந்தச் சிறு வட்டம் என் விரல் நுனியில் விழுந்து விடும் போல தொங்கிக் கொண்டு வரும். வாசல் அடைவதற்குள் பல முறை வயிறு புரட்டி வாந்தி வரும். தலையில் இருந்த முடி கைவர மனத்தில் ஏறும் அருவருப்பு.

விசேஷ நாட்களில் சமையல், டிபன், பலகாரம் என எப்போதும் அடுக்களை நிறைந்திருக்கும். யார்யாரோ சமைப்பார்கள். எல்லோரும் அமர்ந்து உணவு அருந்துவோம். அது வரைக்கும் மகிழ்ச்சியாய் இருக்கும். அடுத்த கணம் சோர்ந்து போகும். வரிசையாய் 'ட' வடிவில் அல்லது 'ப' வடிவில் இடப்பட்டிருக்கும் இலை எடுத்து எச்சலிட வேண்டும். அடிக்கடி யாருக்காவது சாப்பாட்டில் முடி வரும். முடி உறவு வளர்க்கும் என்ற மற்றவர் கூற்றை மறுப்பாள் அம்மா 'உறவு, முடியால் வளராது, கீழ் விழுந்த முடியும் வளராது ' என்று. எச்சலிட்ட கையைத் தரையிலிருந்து எடுக்க ஏதாவது ஓரிரண்டு முடி விரல் மாட்டும். வாய் ஓக்காளிக்கும். ''எப்படிடீ உனக்கு மட்டும் இடுப்புக் கீழே தரையை எட்டுமோன்னு வெறுந் தேங்காயெண்ணைக்கு முடி வளரறது? எனக்குத் தைலமெல்லாந் தேச்சாலும் பொடனிக்கு மேலே வறள்றது ? ' என்பாள் அத்தை. அம்மாவிடம் வெறும் சிரிப்புத்தான் பதிலாக வரும்.

மாத இடை வெளியில் பின்னிப்பழகு என்பாள் அம்மா. தலை முடியை மூன்றாக சரியான அளவில் வகுக்காமல் இறை தின்ற பாம்பும், சணல் கயிறுமாகப் பிரித்து மணிக் கணக்கில் நேர மொதுக்கி நானே பின்னிக் கொண்டு உல்லனுடன் பள்ளி செல்லும் நாட்களில் '' அம்மா ஊருக்குப் போயிருக்காங்களா? '' என்னிடம் கண்ணில் சிரிப்பும் முகத்தில் கள்ளமற்றும் வினவும் தோழிகளுக்கு ஆம் என்று பதிலுரைப்பேன். கோணைப்பின்னலும் உல்லன் நூலுமாக வரும் மற்றவர்களை நானும் கேட்பேன் குறும்புடன். அந்தரங்கம் வெளியே வர கேள்விக்குள்ளானவள், கோபிப்பாள் அல்லது தலை குனிவாள்.

நானே பின்னிக் கொள்ளக் கற்றுக்கொண்டேன். மற்றவர்க்கும் பின்னி விடவும்தான். விதம் விதமாக்கக் கொண்டையிட்டுச் சொந்தக் கற்பனைக்கு மற்றவர்களைத் தலையாட்ட வைத்தேன். என் குழந்தைக்கும் பின்னி விட்டேன். அவள் வெகு சீக்கிரம் என் பின்னல் மேவாமல், தானே பின்னிக்கொண்டாள். பல நாட்கள் விரித்த தலையுடன் அலைய ஆசைப் பட்டாள். அம்மாவிடம் தலை பின்னிக்கொள்ளல் ஏதோ ஒரு அந்யோன்யம் என்ற எனது எண்ணத்தை வலிந்து மாற்றினாள். அது தன் சொந்த அந்தரங்கம், அம்மாவின் தொடல் அந்நியம் என உணர்ந்தாள். பின்னல், விட்டொழித்த வழக்கு என்றாள். தன் எண்ணத்தில் என் குறுக்கீடு என்றாள். உடைப் பொருத்தமற்றது பின்னல் என்றாள். பூவைத்தல் தவறென்றாள். பூப் பறித்தால் செடிக்கு வலிக்கும் என்றாள். அதை நானும் உணர்ந்தேன். பூப்பறித்தல் கொலை என்று நானும் உணர்ந்து விட்டொழித்தேன்.

உடை குறுகிய காலமிது. பின்னல், கால் பிளந்த உடைக்களுக்குப் பொறுந்தாமல்தான் போயிற்று. தலை முடி பராமரிப்பு பெரும் சுமையாயிற்று. என் பெண்ணுக்கு நேரமற்று அவள் பறக்கும் சமயம் எனக்கும் அது சரி என்றே பட்டது. நீர் பற்றாக் குறை மற்றொரு உண்மையாயிற்று.

என் தலைவாரலில் சீப்பில் சிக்குண்டு உதிரும் முடிகள் கருப்பு, பழுப்பு வெளுப்பு என்று சுழன்று சுழன்று மூவண்ணம் பிணைந்த உதிரிகளாய் சிக்கி வரவாரம்பித்தது. சீப்பு மாயத் தோற்றத்தைக் கொடுத்தது. கொத்து முடியுடன் கீழிறங்கிய சீப்பு என்னதா? அல்லது அம்மாவுடையதா? நான் மகளா? அல்லது அம்மாவா? இந்த விழுந்த முடிகளை நான் விரல் நுனியில் அருவருப்புடன் வாசலில் இடுவதா? அல்லது என் மகளிடம் அளிப்பதா?அம்மாவாய் நானும் ஆகி மகளிடம் உதிர்ந்ததைப் பொறுக்கிக் கொடுக்க எதிரில் யாரும் இல்லை. மகள் வெளி நாட்டில் வெட்டிய குட்டை முடியுடன். மின் அஞ்சலிலும், ஊடுருவி ஒளியூட்டும் பிம்பப் படங்களிலும், எப்போதாவது நேரிலும். அது கனவு போல மங்கி மங்கி அழியும்நினைவுகளிலும், தொலைபேசியிலும், ஏதோ ஒரு நுனியில் இழைந்தும் பிரிந்தும், பின்னியும், இழைந்தும் பிரிந்தும், பின்னியும்... .. .. . .. ..
காலம் பிழன்ற நினைவுச் சங்கிலி மாறி மாறி என் முன் வந்து சென்றது.