Wednesday, October 26, 2011

இடப்பெயர்ச்சி (சிறுகதை)

இடப்பெயர்ச்சி



பாட்டியின் ஓயாத அறிவுரைகளும் எனது சந்தேகங்களுக்குமாக பந்துபோல எழும்பி எழும்பி திரும்ப வருகிறது இருவரிடமும்.

'எச்சப்பண்ணாதேடீ! வாழபழத்த கடிச்சுத்தான் திங்கணுமா? உரிச்சுப் பிச்சுப் போட்டுக்கோ'

'அப்போ முறுக்க கடிக்கலாமா பாட்டி'

'அதயும் விண்டுதான் வாயிலே போட்டுக்கணும்'

என்ன பாட்டி, எப்பப்பாத்தாலும் என்ன எச்சப்பண்ணாதேடீ, எச்சப் பண்ணாதேடீன்னுண்டே இருக்க'

'எச்ச எறக்க அடிக்கும், பத்து பறக்க அடிக்கும்டீ பொண்ணே'

'எந்த வயசு வரைக்கும் பாட்டீ?'

ஆயுசு முழுக்கவுந்தான்'

அண்ணா கடிச்சுத் திங்கறானே பாட்டீ'

'அதான் நீ அதைத் தொடச்சிடறேயேடீ ஜலம் தெளிச்சு'

'அண்ணா எச்சப் பண்ணலாமா?'

'எதுத்துப் பேசாதேடீ, அவன் ஆம்பள.'

'ஆம்பளேன்னாக்க எச்ச ஒசத்தியா?'

'பொம்மனாட்டிக்குட்டி எல்லாத்துக்கும் கேழ்வி கேக்கப் படாது.'

‘ஏன் பாட்டி?'

அதுக்குங்கூடவா கேழ்வி கேப்போ? ஈஸ்வரா! இந்தப் பொட்டகுட்டி எப்படித்தான் இன்னொரு ஆத்துக்குப் போயி காலந்தள்ளப்போறதோ? நீ தான் காப்பாத்தணும்.

'ஏ குட்டி! பரமாற வா, அண்ணாவும் அப்பாவும் சாப்படணும் பாரு, சாதம் போடு.'

'சரி'

'இதோ பாரு, கால அகட்டி வச்சிண்டு பரமாறப்படாது. கால ரெண்டையும் சேத்தி வச்சுக்கோ. இடுப்பக் குனிஞ்சு பரமாறு. உட்காந்துண்டு பரமாறக்கூடாது. கால சேத்தி வையி'

'பாட்டி, நான் ஒருநா அப்பாவோட சாப்பட உக்காந்துக்கறேனே, அண்ணா பரமாறட்டுமே எனக்கும்'

வாய மூடுடீ.'

‘குட்டி சாதத்த தூக்கிப் போடு. எச்சத்தட்டுலே இடிச்சுடப்போறது'

‘சரி, பாட்டி'

'கொழம்ப உசத்தி ஊத்த்துடீ, தட்டுலே கரண்டி இடிச்சுடப்போறது.'

'ஏன், பாட்டி'

'கரண்டி எச்சலாயிடும், அத அலம்பிட்டு அப்பறமாத்தான் கொழம்புலே போடணும்.'

''ஏம்பாட்டி?கரண்டி வழியா கொழம்பு தட்டுலே விழறதே? அப்ப எச்சல் ஒட்டிக்காதா? அப்பறமா அதே கரண்டியத்தானேத் திரும்ப கொழம்புலே போடறோம்?அப்ப முழுக் கொழம்பும் எச்சத்தானே?'

'ஒன்னோட யாரு மல்லுக்கு நிக்கறது? எப்பப்பாத்தாலும் கேள்வி, கேள்விக்கு எதிர்க்கேள்வி. கேள்விக்கு கேள்வி, எதிர் வாதம். விவாதம். நன்னாத்தான் வளத்தினா பொண்ண, உங்கம்மா?'

'ஏன் பாட்டி நான் நன்னாஇல்லயா? இதோ பார் பாவாட, சட்டை எல்லாம் போட்டுண்டு நன்னாத்தானே இருக்கேன்?'

'நாம்போறேண்டியம்மா, அந்தாண்ட, என்னால முடியாது.'

சில நிமிடங்களில் திரும்பவும் பாட்டி,

' ஏய்! குட்டீ, இங்கவாடீ. சோத்தபோட்டுட்டு, மோர ஊத்திட்டு ஓடாதேடி. எச்சலிடனும், பாரு.'

'சரி'

'தோ பாரு, கால ரெண்டையும் சேத்தி வச்சுக்கோ. இப்படி இடுப்ப குனி. எச்சலிடறதுக்கு முன்ன, பாவாடய தூக்கி இடுப்புலே சொருகிக்கோ. இடது கையால ஜலப்பாத்திரத்த வச்சுக்கோ, ஜலத்த கொஞ்சங்கொஞ்சமா ஊத்து. அத வலது கை நாலுவிரலாலெ இப்படியும் அப்படியுமா இழுத்துண்டு வா, மொழுகற மாதிரி,'

'பாட்டி, கைய எரியறது. வெறுமன துணி போட்டுத் தொடச்சுடறேனே?'

'அழகுதாம்போ. எப்போவோ லீவுக்கு வரும்போதுதான் உங்காத்து வண்டவாள மெல்லாந் தெரியறது? ஊர்லே இப்படித்தான் பண்ணுவாளா உங்கம்மா? நான் எப்படிடீ உங்காத்துக்கு வந்து சாப்படறது? வீடே எச்சலும் பத்துமா இருக்கும் போல இருக்கே? இதோ பருடீ, ஜலந்தீந்து போச்சு. இன்னுங் கொஞ்சமா ஜலம் விட்டுக்கோ. உட்காந்துண்டு எச்சலிடப்படாதுடீ. நின்னுக்கோ. நாலு எச்சலிடறத்துக்கே இந்தப்பாடா? எனக்கு உன்னோட வயசுலே நாலு புள்ளப் பொறந்தாச்சு. புக்காத்துலே ஒரு வேளைக்கு சாப்பாட்டுக்கு வீட்டு மனுஷாளே இருவது பேருக்கு மேல இருப்பா. ஒரு பந்தி பரமாற ஏந்துண்டாக்க எச்சலிட்டு துணி போட்டுத் தொடைக்கறத்துக்குள்ள முதுகு வலி கண்டுடும். ஆனா வாயத் தொறக்க முடியுமா?'

'போறும் பாட்டீ. எத்தன தடவ கேட்டாச்சு இதையே, போரடிச்சுப் போச்சு.'

'ஏய், என்னடி பாட்டிய எதுத்துப் பேசறே?'

இது அப்பா.

கேள்வி கேட்டுக் கேட்டுத்தான் எங்கும் வளர வேண்டி இருந்தது. கேட்கும் கேள்விக்கு பதில் தெரியாது, அல்லது பெண் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தேவையில்லை. எங்கும் எப்போதும் இதே போல பார்த்தும், கேட்டும் பழகிவிட்டிருக்கமாட்டேன் என்கிறது. இந்தக் குளிர் பிரதேசத்தில், அமெரிக்காவில் ஒரு சிறு நிலத்தில், எல்லோருடனும் கேக்கைக் கடித்து சாப்பிடவும் சற்றே யோசிக்க வேண்டியிருக்கிறது.

'எச்சலிட எச்சலிட தொடைக்கக்கூடாதுடீ பொண்ணே. எச்சலிட்டு முடிச்சப்பறந்தான் தொடைக்கணும். இல்லையானாக்க, சாணித்துணி எச்சலோட ஏகமாயி அதுவும் எச்சலாயிடும். எச்சலிட்டு முடிக்கட்டும். கொஞ்சம் காத்திண்டிரு.'

கேள்வி அம்மாவிடம்.

'அம்மா, எச்சலிடச் சொல்றே, செய்யறேன். ஆனாக்க என் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிடு.'

'என்னடீயம்மா, இன்னக்கிப் புதுக் கேள்வி?'

'ஏம்மா? எல்லோருந் தரையிலேதானே உட்காந்துண்டு சாப்படறோம். அப்ப தட்டு வச்ச இடமட்டுந்தான் எச்சலாகுமா? தரை முழுக்கதானே எச்சல் ஆகும்? அப்ப வீடே முழுக்க எச்சல்தானே? அப்படீன்னாக்க ஒவ்வொரு தடவையும் வீட்ட முழுக்கக் கழுவறோமா? தட்டு வச்சு சாப்பட இடத்த மட்டுந்தானே எச்சலிடறோம்? ஏன் தட்டச்சுத்தி நீர் சுத்தின இடத்த மட்டும் எச்சலிடணும்?"

'அது ஒரு விதமான சுத்தம்தான். சாப்ட இடத்திலே சாத்துப்பருக்க இருக்கும். அது கால்ல பட்டு வீடு முழுக்க பிசு பிசுன்னு அப்பும். எறும்பு, ஈ மொய்க்கும் அதுக்காகத்தான்.'

'அப்படியா, அப்ப சரி.'

'ஏ குட்டி! எச்சலிட வா. ஓடாதே. தாவணி போட்டுண்டாச்சு. அதிந்து நடக்காதே.'

'பாட்டி, நானுஞ்சாப்படறேன், அண்ணாவுந்தான் சாப்பறான் தினமும். அப்படீன்னாக்கா, ஒருநாள் நான் எச்சலிடறேன். ஒருநாள் அண்ணா எச்சலிடட்டுமே? ஏன் என்ன மட்டும் தினமும் எச்சலிடச் சொல்லி தொந்தரவு பண்றே? மாத்தி மாத்தி எச்சலிடக்கூடாதா?'

‘சிவ, சிவ! இந்தப்பொண்ணு ஏன் இப்படிக் கேழ்வி கேக்கறதோ தெரியல்லயேடா ஈச்வரா? நல்ல படியா காப்பாத்து.'

'பாட்டி எனக்கு பதில் சொல்லாம, எதேதோ பிராது கொடுக்கறேயே?'

'ஏண்டி? ஆம்பள தொடப்பத்தை எடுத்து பெருக்கினாக்க அவனுக்குக் கொழந்த பொறக்காம போயிடும். ஆம்பள சாணியைத் தொட்டு எச்சலிட்டாலும் அதுவேதான். அப்பறமா வம்ச விருத்தி ஆக வேண்டாமா? ஆம்பள சாணியத் தொட்டு எச்சலிடலாமா, சொல்லு, இப்போ?'

'போ, பாட்டி. நம்மாத்து மாட்டுத்தொழுவத்த பெருக்கி சாணி அள்ளறது, பால் கறக்கறது ஆம்பளதானே?'

'பூத்தொடுத்தாக்க நாரைக் கடிச்சுத்தான் அறுக்கணுமா? தோ பாரு, தரையிலே இப்படி ரெண்டு இழுப்பு இழுத்தாக்க நாரு அறுகப் போறது. எப்பப் பாத்தாலும் எச்சப்பண்ணிண்டு. என்ன விதியோ போ?'

அண்ணாவை மாட்டிவிட எனக்குத் தெரிந்த ஒரே வழி, அவன் காபி குடிக்கும் போது மட்டும்தான்.

'காபிய ஒசத்திக் குடி, என்ன கடிவாளம் போட்டுண்டு' என இருவருக்குமே வசவு விழும். வாரத்தில் இரண்டு நாட்களாவது அண்ணனின் அருகில் சென்று காபி குடிப்பேன். அப்போது அம்மாவோ, பாட்டியோ இருக்கும்படியாக பார்த்துக் கொள்வேன். என் டம்பளரில் என் நகத்தால் ஒரு சிறு தட்டு தட்டுவேன். ‘டங்' என்ற சப்தம் எழும்.

'பாட்டி, அம்மா, இதோ பாருங்கோ அண்ணா காபி குடிக்கும் போது டம்பளர் பல்லுலே பட்டுடுத்து. எச்சலாயிடுத்து. அவன அலம்பச் சொல்லுங்கோ. என்ன மட்டும் எதுக்கெடுத்தாலும் திட்டறேளே? என அலறுவேன். அது சில சமயம் அண்ணனை டம்பளர் அலம்ப வைப்பதில் முடியும்.

ஆனால் அதுவே எனக்கு எதிராகவும் முடியும்.

'பாட்டி, அது அவ டம்பளரிலிருந்து வந்த சத்தம். பொய் சொல்லறா பாரு, பொம்மனாட்டி போய் சொல்லலாமா?' அண்ணாவின் புகாரும், சில சமயம் மட்டுமே எடுபடும். என்ன முடிவு எப்போது பெரியவர்கள் எடுப்பார்கள் என்பது அறிய முடியாத புதிர்தான், எப்போதும்.

எம்.எஸ்ஸி படித்து முடித்த பின்னும் பி.ஹெச்டி செய்ய வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தேன். பாட்டியின் மறுப்பும், அம்மாவின் அரைச் சம்மதமும், அப்பாவின் ஊக்குவிப்பும், அண்ணனின் உறுதுணையும் என்னைப் படிக்க வைத்தது.

என் அம்மாவிற்கு என்னை வேலைக்கு அனுப்ப இருந்த தைரியம், என்னைத் திருமணம் செய்து கொல்ளாமல் தனித்திருக்க விரும்பிய முடிவிற்கு இல்லாமல் போயிற்று. இணங்க இயலவில்லை. பாட்டியின் மறைவிற்குப் பின் அம்மா, பாட்டியின் வேடத்தையும் சேர்ந்த்தே தரிக்கத் தொடங்கினாள். பாட்டியாயும் பல முறை மாறினாள்.

பணிக்குச் சென்று வரும் போது என்னைப் பார்த்த அவனின் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் மருமகளாக்கிக் கொள்ளும் எண்ணம் ஏற்பட்டது. அமெரிக்கா வரன். அப்பா, அம்மாவிற்கு அமெரிக்க வரன்மீது மகிழ்ச்சி. எனக்கும் ஆசாரத்திலிருந்து விடுதலை. விசா கிடைக்கும் வரை தொடர்ந்து வேலைக்குச் செல்ல அனுமதி கிடைத்தது. பரந்த மனம் கொண்டவர்கள் என்று அம்மா மிகவும் பாராட்டினாள்.

திருமணத்திற்குப் பின் கணவன் வீட்டில் எனக்கு நிறைய பசித்தது. எப்போதும் வயிறு பசி நிரம்பியதாகவே இருந்தது. ‘பெண் உணவுக் கட்டுப்பாட்டுடந்தான் இருக்க வேண்டும். வீணாக உடல் பருக்கக்கூடாது. பருத்த பெண்களை என் மகனுக்குப் பிடிக்காது' என்றனர். எப்போதும் பசியுடனே வேலைக்குச் சென்று வர இயலவில்லை.
அலுவலகமும் கணவனின் வீட்டிற்கு வெகு அருகிலேயே இருந்தது. வீட்டிற்கும், அலுவலகத்திற்கும் இடையில் உள்ள மற்றொரு தெரு வழியாக நான் சற்றே சுற்றி இளைப்பாறி, பின் வீடு அடைவதை வழக்கமாகக் கொண்டேன். இடையிலிருந்த தெருவில் என் தோழி இருந்தாள். தோழியின் வீட்டிற்கு சற்றே மூச்சுவிட சென்று வாருவதையும் வழக்கமாகக் கொண்டேன்.

ஒரு நாள் மிகுந்த பசியினால், என் நிலையை தோழியிடம் அறையும் குறையுமாகத்தான் சொல்ல முடிந்தது. அவள் வயிறு நிரம்ப உணவு அளித்தாள். தினமும் போக எனக்குத் தயக்கமாகவும், அவமானமாகவும் இருந்தது. ஆனால், அவளோ 'இது நிரந்தரமல்ல. கணவனிடம் சென்றுவிட்டால் இந்தக் கட்டுப் பாடுகள் இருக்காது. சில நாட்கள்தானே பொறுத்துக்கொள்' என்றாள்.

இடைப்பட்ட தெருவில் நான் வந்து கொண்டிருந்தபோது, கணவனின் வீட்டார் என்னக் கண்டு கொண்டனர். அன்று மிகுந்த கலவரத்துக் குள்ளானேன். வீடு திரும்பிய என்னை மிகவும் கேள்விகள் கேட்டதோடு அவமானப்படுத்தவும் செய்தனர். என்ன தோன்றியதோ அவர்களுக்கு என் வலது உள்ளங்கையை எடுத்து மூக்கருகில் கொண்டு சென்று, முகர்ந்து பார்த்து நான் சாப்பிட்ட விஷயம் அறித்தனர். ‘இதுதான் நீ தினமும் லேட்டா வரத்துக்குக் காரணமா?' என்று கேட்டுவிட்டு அன்று இரவு உணவை வெட்டிவிட்டனர்.

அன்றும் வழக்கம் போல நானே அனைவருக்கும் பறிமாரினேன். எச்சலிட்டேன். அதாவது டேபிள் துடைத்தேன். சொப்புப் போட்டுத் திரும்பத் துடைத்தேன். சாப்பாட்டு மணம் டேபிளில் வீசினால், மாமனாருக்குப் பிடிக்காது. அன்று நிரம்பிய பசியுடன் காலியான வயிற்றுடன் இரவு படுத்தேன்.

இங்கு அமெரிக்காவில், கணவன் டேபிள் துடைத்தான். சமயலறை வேலைகளைப் பகிர்ந்து கொண்டான். எச்சல் டேபிள் துடைத்தபோது அன்பென்று உணர்ந்தேன்.

ஆனால், ஒரு சில நாட்களில் மட்டுமே அவன் வேலைகளைப் பகிர்ந்து கொள்ளுவதும், அன்று படுக்கை உறவும் இருந்ததும் சில நாட்களிலேயே அனுமானிக்க முடிந்தது. உறவின் தேவைகளுக்காக வன் முகத்தருகில் வந்து முத்தமிட்டபோது ‘எச்சல், எச்சல்' என்று பாட்டியும், அம்மாவும் மாமியாரும் கூட அலறியதாகப் பட்டது. நானும் சிறிது முனகி இருக்கலாமோ என்னவோ.

அமெரிக்காவில் கணவனுடன் வாழ்ந்த நாட்களில் முதல் வீட்டு விலக்கு ஏற்பட்ட போது, என்னை அவன் தனியே படுக்கச் சொன்னான். ‘கட்டில் தீட்டாயிடும்' என்றான் கடுங்குளிரில் மற்றொரு அறையில் தனியே படுத்தேன்.

மறுநாள் காலையில், ‘குளிச்சுட்டு சமைச்சுடு. ஆபீஸ் போகணும் பாரு' என்றான். என்னுள் எப்போதும் போல கேள்விகள் எழும்பத் தொடங்கின.

'குளிச்சா தீட்டுப் போயிடுமா? ராத்திரி கட்டில்லே படுக்கக் கூடாதுன்னேள்? நான் சமைச்சா சாப்பிடுவேளா?'

முறைத்தான்.

அன்று என்னை டைனிங் டேபிளில் சாப்பிடக்கூடாது என்றான். தரையில் உட்கார்ந்து சாப்பிடச் சொன்னான்.

'சமயலே நான் செஞ்சதுதானே?'

குளிரில் தரையில் அமர்ந்து சாப்பிட்டேன்.

சொன்னபடி கேட்டு வளர்ந்த பிள்ளை. அம்மாவின் வளர்ப்பு. வளர்க்கப்பட்ட பிள்ளை. வளர்ந்த பிள்ளையல்ல.

எதிர்க் கேள்விகள் அற்ற ஆண்.

உணவருந்திய பின் எச்சலும் இட்டேன். சுடுநீர் கொண்டு.

அடுத்த முறை தீட்டு வராத போது சந்தோஷப்பட்டேன்; குளிரில் எச்சலிட வேண்டாம் என்று. பிரசவம் அமெரிக்காவில்தான் என்றான். அப்போதுதான் பிறக்கும் பிள்ளை அமெரிக்கப் பிரஜையாக முடியுமென்றான். 'மசக்க, சீமந்தம் ஒரு புண்ணாக்கும் வேண்டாம். இங்கேயே இரு. புள்ள சரியாத்தான் பொறக்கும்'

எச்சில் பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் உடல் விரியும்தான். உள் செல்லும்தான். இது அவ்வப்போது நிகழும்,
கருவும் உண்டாகும்

இரண்டாடுகளுக்குள் அவன் நிறையக் குடிப்பது தெரிய வந்தது. நிறையக் குடித்தான், நிறைய அடித்தான். எச்சில் ஒழுக ஒழுக குழறி குழறிப் பேசினான்.

சமைத்தேன்.

சாப்பாடு பறிமாறினேன்.

எச்சில் டேபிள் துடைத்தேன்.

குழந்தையின் ஜொள் துடைத்தேன்.

அவனின் வாந்தியையும் துடைத்தேன்

முத்தமே எச்சிலாயிருந்தது.

எச்சில் நாற்றமாயிருந்தது.

எச்சில் உணவுக்கானதாக இல்லாமல், உணவு வாசனைகளோடு இல்லாமல், நாற்றம் சம்பந்தப்பட்டதாய் இருந்தது.

எச்சில் உஷ்ணநாட்டோடு உணவாகவும், குளிர்நாட்டோடு நாற்றமுடையதாகவும், என் உடலில் இரு பாகங்களாக ஒட்டிக்கொண்டும், ரத்தத்தினுள் ஓடிக் கொண்டும் இருந்தது. எந்த நீரில் கழுவ இதை? எப்படி எச்சலிட்டுத் துடைக்க? எந்த சாணித்துணி போட்டுத் துடைக்க? சுத்தமாக்க பசுஞ்சாணி போட வேண்டுமா? எருமைச் சாணியா?

'பாட்டி நீ உன் அம்மாவின் எச்சில். அப்பா உன் எச்சில். நான் என் அம்மாவின் எச்சில். எச்சில் வாயிலிருக்கிறது. வாய் உடலில் இருக்கிறது. வாய் வழியாகப் பேசுகிறோம். எனவே எல்லா சொற்களும் எச்சில் எச்சில் நிரம்பியது. எல்லாச் சொற்களையும் கழுவி எடு. சாணி போட்டுக் கழுவு,

பாட்டி. பாட்டி! நீ பஸ்ஸில் போகும்போது சின்ன பாட்டிலில் நீர் கொண்டு போவாயே, கண்டக்டர் டிக்கட்டை எச்சில்படுத்திக் கிழித்துக் கொடுப்பதால் ஒவ்வொரு முறையும் டிக்கட்டை வலக்கையிலிருந்து மாற்றாமல், பத்திரமாக எடுத்துக் கொண்டு, பஸ்ஸை விட்டு இறங்கியவுடன், டிக்கட்டை தூர எறிந்து விட்டு, எச்சில் டிக்கட் பிடித்த கையையும் கழுவுவாயே. சொற்களை மட்டும் கழுவக் கூடாதா பாட்டி? சாப்பாட்டு எச்சில் இலையைப் போடுவதால், தெரு எச்சில் ஆகிவிட்டது. எச்சில் இலையை சாப்பிட்டதால் நாயும், அது நடந்து வரும் பாதையும் எச்சில் ஆகிவிட்டது. காகம் உட்காரும் காம்பவுண்ட் சுவரும் எச்சில் நிறைந்ததே. ஈக்கள் புழங்கும் சமயலறையும், காகத்தால் மற்றும் ஈயால் கிணறும், செடியும், கொடியும், மரமும் என எல்லாமே எச்சிலாகி விட்டது. அம்மா, இத்தனையும் எப்படிக் கழுவ?

நீ கவலையே படாதே அம்மா, அதற்காகத்தான் மழை பெய்கிறது. மழை எல்லா இடங்களையும் எச்சலிடுகிறது. கடல் நீர் உள் நுழைந்து தன்னால் ஆனவரை கடற்கரையின் எச்சில் போக்குகிறது. எல்லாமே வம்சவிருத்தி செய்கிறது. அதனால் எல்லாம் எச்சில். எனவே உலகம் முழுவதும் எச்சிலாக நிரம்பியுள்ளது.

'பாட்டீ, அம்மா! யாராவது சொல்லுங்களேன். என் பிள்ளை என் எச்சிலா? அவன் எச்சிலா? எனக்கு சிலசமயம் அவர்களைப் பார்க்கும்போது என் எச்சிலாகத் தோன்றுகிறது. ஆனால், பலசமயம் அவன் எச்சிலாகத்தான் தோன்றுகிறது. அவன் புழங்கிய இந்த உடல் கூட எச்சிலாகத்தான் இருக்கிறது. அதனால்தான் நான் இங்கும் அடிக்கடி குளிக்கிறேன். நிறைய வாசனை திரவியங்கள், இல்லாவிட்டால் எச்சில் போக்க உடல் முழுவதும் சாணி தேய்த்துக் குளிக்கிறேன். தலையிலிருந்து எச்சில் ஒழுகி, ஒழுகி எப்போதும் என் உடல் கொழகொழப்பாக என்னிலிருந்து வழுக்கிக் கொண்டே இருக்கிறது.

நான் நம் வீட்டு வாசலில் நிற்கும் போது உனக்கு பயம் தோன்றலாம் அம்மா. என்னைக் கேள்விகள் கேட்கத் தோன்றலாம், அம்மா. இந்த முறை பதில் என்னிடமிருந்து எதிர் பார்ப்பாய். ஆனால் என்னால் சரியான, சரியாக பதில் சொல்ல முடியுமா? தெரியவில்லை. ஆனாலும் இந்தக் குளிர் பிரதேசத் திலிருந்தும், எச்சில் கணவனிடமிருந்தும் எனக்கு விடுதலை. அவன் வீட்டிற்கு வந்து பார்க்கும் போது சாதம் போட, எச்சலிட நான் இருக்க மாட்டேன். நன்றாக ஏமாறட்டும். என்னை மட்டும் அவன், அவனின் அப்பா, அம்மா எல்லோரும் ஏமாற்ற வில்லையா? எனக்கு என் பணி இருக்கிறது. எச்சில் படாமல் எனக்காகவே. திரும்பவும் நான் வயிறு நிரம்பச் சாப்பிடுவேன், நன்றாக உடை அணிவேன். எங்கும் வலம்வருவேன். அம்மா சொல்லாமலே சாதம் போடுவேன், சமைப்பேன், எச்சிலும் இடுவேன். அவன் எச்சில் படாமல் என் குழந்தைகளை நான் வளர்ப்பேன்.

க்ருஷாங்கினி

2 comments:

V Mawley said...

நமஸ்தே/-
வெகு நாட்களுக்குப் பிறகு ஒரு போஸ்ட் பதிவு செய்திருக்கிறீர்கள் ; மிகவும் மகிழ்ச்சி ;தீட்டு ,
( மற்றும் -சாவுத்தீட்டு, பிறபபுத்தீட்டு , தீண்டத்தகாதவர்கள் தீட்டு ) எச்சில் , பத்து , மற்றும் அம்மை பற்றிய பாதுகாப்புணர்வு போன்றவை யாவும் based on extreme sense of hygiene என்று தான் தோன்றுகிறது...பல பழக்கவழக்கங்கள் பகுத்தறிவிற்கு ஒத்துவராவிட்டாலும்,புரியாவிட்டாலும் , அது ஒரு கலாச்சாராக் காலக்கட்டதைச்சேர்ந்த life -style என்று எடுத்துக்கொள்ளலாம் , என்று எனக்குப்படுகிறது ...இன்றைய மாறுபட்ட life -style க்கு அவை பொருந்தவில்லை தான் ...அதே சமயம் அவர்களுடைய நம்பிக்கைகள் , ' ஆன்மிகத்தில் ' நம்மால் சிந்த்துத்துப்பார்க்கமுடியாத எல்லைகளைக்கடந்துந்திருந்தன என்பதும் மறுப்பதற்கில்லை ..

மாலி .

www.ROOF911.com said...

I have a painting by I believe k.Srinivasulu from 1950's and was wondering if i could email the pictures to verify if this is the artist. dev@roof911now.com