Thursday, December 12, 2013

பஞ்சாயத்து,.. ஒரு மரணத் தீர்ப்பு

பஞ்சாயத்து,.. ஒரு மரணத் தீர்ப்பு, மற்றொரு பஞ்சாயத்து, மற்றுமொரு தீர்ப்பு. சமூகம் விசித்திரமான சித்ரவதைக் கூடமாகி விட்டது. கடந்த சில நாட்களில் மட்டும் இருபதுக்கும் மேற்பட்ட கௌரவக் கொலைகள் பதிவாகி இருக்கின்றன.. பிறகு பஞ்சாப்பில், இப்போது புதிதாக புலந்த் நகரில். அப்துல் ஹகீமின் கொலை நிகழ்த்தப்பட்டுள்ளது. மற்ற சாதாரண கௌரவக் கொலைகளிலிருந்து (இவை கௌரவக் கொலைகளா?  அல்ல, உண்மையில் இவற்றை அகௌரவக் கொலைகள் என்று சொல்லுவதுதான் பொருத்தமாக இருக்கும்.) இது ஹைப்ரொபைல் நிகழ்ச்சி ஆகிவிட்டது. அமீர்கானின் ‘சத்யமேவ ஜயதே' நிகழ்ச்சியில் இடம் பெற்றிருக்கிறது. இப்போது உத்திரப் பிரதேச மாநில அரசும் அந்தக் குடும்பத்திற்கு பொருளாதார உதவி செய்யப்போகிறது. மேலும், கொலையை விசாரிக்கவும் உத்திரவிடப் பட்டுள்ளது. எது எப்படியோ, காரனம் ஏதுவானால் என்ன? மற்றும் ஒரு மோசமான வெறுக்கத்தக்க நிகழ்வு. முன் நாட்களைப் போலவே சமூகத்தின் நீதியையும் சாதியையும் நிலைநாட்ட ஒளி பொருந்திய ஒரு நிகழ்வு எனலாம் சமூகம். எப்போதும் போலவே இப்போதும் பல கேள்விகள் முளைத்துள்ளன.
    புலந்த் நகரத்தில் அடோலி என்ற கிராமத்தில் வசிப்பவர், அப்துல் ஹகீம். நவம்பர் மாதம் இருபத்தி இரண்டாம் தேதி அவர் அலற அலற சுடப்பட்டு கொல்லப் பட்டார். இருபத்து ஒன்பது வயதே ஆன அப்துல் ஹகீம் செய்த குற்றம் என்ன? மஹ்விஷ் என்ற பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டதுதான். ஹிந்து சமூகத்தில் மட்டுமே சாதி என்ற விஷக் கொடுக்கு தன் விஷத்தைச் செலுத்துகிறது என்று இனி நம்பவேண்டாம். மற்ற சமூகத்தைச் சார்ந்தவர்களும் இதே  மனப் பாங்குடன்தான் இருக்கிறார்கள்.
    விவசாயத்தை நோக்கி சமூகம் மெல்ல மெல்ல எப்படி உறுதியாக வளர்ந்து வருகிறதோ, அதே போல சாதியின் நிலைப்பாடும் மெல்ல மெல்ல மிகவும் திடமாக வளர்ந்து வருகிறது. ஹிந்து மதத்தின் (மனு) சாஸ்திரத்தின் அடிப்படையில் பிரம்மாவின் கால்களில் உற்பத்தியான சூத்திரர்கள், மேல் சாதியினரின் அடிமைகளாகவும், வேலைக்காரர்களுமாக இருந்து வந்தனர்.
    விவசாயத்தை நம்பி இருந்த இந்த சமூகத்தின் வளர்ச்சி, அடிமட்டத்தில் இருக்கும் உழைப்பாளிகளான இந்த நான்காவது பிரிவினர்கள் என்று சொல்லப் படும் சூத்திரர்கள் இன்றி சாத்யமாகி இருக்காது. அதனாலேயே இவர்களைச் சுரண்டுவதற்கும், நாசமாக்குவதற்கும் மனு நீதியும் வேத சாஸ்திரங்களும் உண்டாக்கப்பட்டு கொண்டே வருகின்றன. உழைப்பாளர்களான இந்த மக்கள் இப்படியே இருக்கட்டும் என்பதில் அனைவரின் சுயநலமும் அடங்கி உள்ளது. ஹிந்து மதத்தின் எல்லாத் தரப்பினரும் இந்த சமூகப் படி நிலையை இன்னமும் வலுப்படுத்துவதற்கான முக்கிய நிலைப்பாட்டையும் எடுத்துள்ளனர். எல்லா இதிகாச, புராணக் கதைகளும் இதை திடமாக வளர்த்தெடுக்கின்றன. ஆயிரக் கணக்கான ஆண்டுகளாகப் பின்பற்றப்படும் இந்த வகையன மதக் கருத்துக்கள், சாதி என்னும் நஞ்சு இந்திய சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரது நாடி நராம்பிலும் பரவி இருக்கிறது. அது இப்போது ஒரு மனப்பாங்காக மட்டும் இல்லை இங்கிருக்கும் ஒவ்வொருவரது உயிரணுக்களிலும் பரவி, அது ஒரு மரபணு என்றாகி விட்டது. குரங்கிலிருந்து உயிரியல் மாற்றம் மெல்ல மெல்ல நிகழ்ந்து மனித உருவம் அடைந்ததைப் போல, வால் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தாற் போல, வால் சுருங்கி இன்னமும் கடைசியில் ஒரு சிறு முடிச்சாக நிலைத்து விட்டாற்போல, கண்களில் மேலாக பரவி இருந்த ஜவ்வு மறைந்தாற் போல, சாதியும் மரபணுவில் கலந்துவிட்டு இருக்கிறது.  இயற்கையின் பருவ மாற்றம் இடத்திற்கு ஏற்றாற் போல, ஒட்டகச் சிவிங்கியின் கழுத்து அசாதாரணமாக, வெகு நீளமாக மாறியதோ, அதைப் போல என்றும் சொல்லலாம்.
    அப்துல் ஹமீதின் கொலை நிகழ்விற்குப் பின் இந்திய சமூகத்தில் இந்த மரபணு குணம் இன்னமும் ஒரு முறை மிகவும் சுடர்விட்டு பிரகாசிக்கிறது. இது மக்களின் க்ரோமோசெம்களில் ஒரு பகுதியாகி விட்டதோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது. ஆலிகட் டெல்லியின் நெடுஞ்சாலையில் உள்ளது புலந்த் நகரம். அந்த முக்கியமான நெடுஞ்சாலையின் பின்புறம் உள்ளது, அடோலி கிராமம். அங்கு மஹ்விஷ், அப்துல் ஹகீம் இருவரும் வசிக்கிறார்கள். ஏறக்குறைய நூறு குடும்பங்கள் வசிக்கும் இக்கிராமம், முஸ்லீம் அதிகம் உள்ள ஒரு சராசரி கிராமம். இவர்கள் ஹிந்து மதம் சார்ந்த ராஜபுத்திரர்களிலிருந்து முஸ்லீம் மதத்தைத் தழுவியவர்கள். அவர்கள், தங்களை ராஜபுத்திர வம்சத்தினர் என்று மனத்தளவில் எப்போதும் எண்ணிக் கொண்டு வாழ்பவர்கள். மற்ற சாதியினர் இங்கு மிகக் குறைந்த அளவிலேயே வசிக்கின்றனர். இக்கிராமம் ராஜபுத்திரரின் ஜோத்தா பிரிவினரின் முக்கிய அதிகாரத்தின் கீழ் இருந்தது. குறைந்த அளவில் இங்கு ஃபகீர் எனப்படும் பிரிவினரும் வசிக்கிறார்கள். இவர்கள் முஸ்லீம் பிரிவினரில், அவர்களின் சாதீயப் பிரிவில் மிகவும் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற பிரிவில் வருபவர்கள். உயர் பிரிவினரின் கருணையையும், உதவியையும் எதிர்பார்த்து இருப்பவர்கள். உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்தவர்கள். இவர்களில் சிலர் தங்களின் சிறிய அளவிலான நிலத்தில் உழுது விவசாயம் செய்பவர்கள். நிலத்தின் உரிமையாளரும் கூட.. ஆனால், இந்த கிராமத்தில் வசிக்கும்  பலர் கட்டிடத் தொழிலாளர்களாக வேலை  செய்து வருகிறார்கள். அக்கம் பக்கத்திலு:ள்ள நகரங்களுக்குச் சென்று வேலை செய்கிறார்கள். நகரங்களுடன் தொடர்பில் இருப்பதால்,  இவர்களின் பிள்ளைகள் படிக்கவும் செல்கின்றனர். வேலையும் செய்கின்றனர்.

    அடோலி கிராமத்தில் ராஜபுத்திர ஜோத்தா குடும்பங்கள் இந்த ஏழை சமுதாயத்துடன் நல்லுறவு வைத்திருக்கின்றனர். ஒரு விதத்தில் இவர்களைப் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் என்று சொன்னாலும், சாதி சமூகத்தில் வேறுபாடு இருந்தாலும் இந்த இரு சமூகத்தினருக்கும் இடுகாடு ஒன்றுதான். இவ்வளவு சமமான இடம் இருந்தாலும் சாதியால் உயர்வு தாழ்வு இவர்களிடையே உண்டு.  ஆனால் பொருளாதார வேறுபாடு மிகவும் ஏற்ற தாழ்வு கொண்டதல்ல. சாதிப் பிரிவில் உண்டு. மஹ்விஷ்ஷின் தந்தை ஷகரூக் விவசாயி. ஒரு சில ஏக்கரில் விவசாயம்  செய்து கொண்டு இருக்கிறார். இந்த நிகழ்வால் மிகவும் வருத்ததில் இருக்கிறார். அப்துல் ஹகீம் இவருடைய வீட்டிற்கு அடுத்தாற்போல் வசித்து வந்தான். மஹ்விஷ்ஷுக்கும், அப்துல் ஹகீமிற்கும் இடையே ஏற்பட்ட ஈர்ப்பு என்பது சாதாரணமாக வரக்கூடியதுதான். ஆனால், இதன் முடிவு என்பது இன்றைய காலகட்டத்தில் பல இடங்களிலும் ஏற்படுவதைப் போலவே நிகழ்ந்தது. இவர்களிடையே காதல் ஏற்பட்டது. நவம்பர் 29, 2010ல் இருவரும் தங்கள் கிராமங்களிலிருந்து வெளியேறி திருமணமும் செய்து கொண்டுவிட்டனர். தங்கள் கிராமங்களில் நிகழ்ந்து கொண்டிருக்கும் தீவிரமான எதிர் விளைவுகளைக் கண்டு, தங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்ள ஊரூராய் மறைந்து திரிகின்றனர். கடைசியில் டில்லியில் வாழத் துவங்கிகின்றனர். அங்கு அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறக்கிறது. அப்துல் ஹகீம் அங்கு ஆட்டோ ஓட்ட, ,பிழைப்பு நடந்து வந்தது.  இவர்கள் இருவரின் கிராமம், இவர்களின் ஒவ்வொரு தலைக்கும் 25000 இனாம் என்று  அறிவிப்பு செய்திருக்கிறது. இருவரும் பயத்தில் இருந்தனர். தேசிய மனித உரிமைக் கழகம், அகில இந்திய மகளிர் ஆயோக் ஆகியவற்றுடன் தங்கள் வாழும் பகுதியின் காவல் நிலையத்திலும் தங்கள் உயிருக்கு பாதுகாப்புக் கேட்டிருந்தனார். ராஜபுத்திர ஜோத்தா சமுதாயத்தின்  தாக்குதல்களுக்கு பயந்து அப்துல் ஹகீமின் குடும்பம் பக்கத்து கிராமமான பாட்காடிக்குச் சென்று விட்டது. அங்கு தங்கள் உறவினர்களுக்கு அருகாமையில் வாழத் துவங்குகின்றனர். அங்கு ராஜபுத்திர ஜோத்தா குடும்பம் இல்லாதிதினால் அவர்கள் அந்த இடத்தை பாதுகாப்பானதாகக் கருதுகின்றனர்.
    இதற்கிடையில் இரண்டாவது முறையாக கருவுறுகிறாள், மஹ்விஷ். எனவே ஜூலை 2012ல் இவர்கள் இருவரும், பாட்காடி கிராமம் வந்து அப்துல் ஹகீமின் குடும்பத்தினருடன் சேர்ந்து வாழத் துவங்குகின்றனர். அவர்கள் இங்கு பாதுகாப்பாக இருப்போம் என்று எண்ணினார்கள். காரணம், அமீர்கானின் ‘சத்யமேவ ஜயதே' நிகழ்ச்சியில் இவர்கள் பற்றிய விவாதம் எழுந்தது. வெறோரு இடத்தில் இவர்களுக்கு பாதுகாப்புத் தருவதாக வாக்குறுதியும் அளித்திருந்தனர். அந்தப் படக் குழுவினர். அதனால் இருவரும் சற்றே ஆறுதல் அடநிதிருந்தனர். இவ்வளவு இருந்தும், அப்துல் ஹகீம் கொலை செய்யப்படுகிறான். 

    இந்த வழக்கு சம்பந்தமான ஐந்து நபர்கலை குற்றவாளிகள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பிடிக்க்ப்பட்டு இருக்கின்றனர். மஹ்விஷ்ஷுக்கு இன்னமும் ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. மஹவிஷ்ஷுக்கு நன்றாகத் தெரியும், இந்தக் கொலை தன் உடன் பிறந்த சகோதரர்களால் செய்யப்பட்டதே என்று.
    நமது அறிவுஜீவிகள் பலர், நண்பர்கள் பலர், இது பற்றி கேள்விகளை எழுப்பி இச்சம்பவம் மற்றவற்றில் இருந்து வேறுபட்டது என்று பிரிக்கிறார்கள். இங்கு காதலர்கள் இருவரும் ஒரே மதத்தவர்கள். இதுதான் வேறுபாடு என்கின்றனர். ஒரே மதத்தில் செய்யப்படும் திருமணங்கள் ஆனாலும் பெரிய மனிதர்களின் மானம் போகிறது. 2007-ல் வங்காளத்தில் ரிஜ்வான் உர் ரஹ்மான், கம்ப்யூட்ட கிராபிக் கற்றுக் கொடுப்பவராக பணி புரிந்து வந்தார். அறிந்தும், அறியாததுமான இவரின் கொலை நிகழ்வில், இதே சாதியைச் சார்ந்த பலரும் மௌனமாயிருந்தனர். இது ஒரு உயர் தொழில் கொலைதான். ஏன் எனில், இவர் திருமணம் செய்து கொண்ட பிரியங்காஎன்ற பெண் மிகப் பிரபலமான தொழிலதிபர் அஷோக் தோதியின் மகள். இதில் காவல் துறையில் பணி புரியும் உயர் அதிகாரிகளின் ஆயுதங்களும் களம் இறங்கியுள்ளன. இதுவும் தெரியும். இன்னொரு புறம் தலைவி மமதா பானர்ஜி இதை இடதுசாரிகளின் வேலை என்றும் அரசாங்கத்திற்கு எதிரானது என்றும் பெருங்குரல் எழுப்புகிறார்.
    பரம்பரையான பஞ்சாயத்துத் தீர்ப்பானது காதலர்களுக்கு எதிரானதாக இருக்கிறது. அதாவது, அந்த உரிமை என்பது வாழ்தல் சார்ந்தது அல்ல. சாவதற்கானது. அவர்கள் இருவரும் ஒரே மத்தைச் சார்ந்தவர்கள் ஒரே இடத்தைச் சார்ந்தவர்கள். மாற்று சாதியினர், ஒரே சாதியினர் திருமணம் செய்து கொண்டாலும், அங்கும் மரணம் என்ற பெரும் பள்ளம் காத்திருக்கிறது.
    பீகாரில், கோபால்கஞ்ச் என்ற கிராமத்தில் நடந்தது இது. அங்கு ஒரு முஸ்லீம் சமூகத்தைச் சார்ந்த பெண்மணிக்கு அந்நிய ஆடவனுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம் ஏற்படுகிறது. பஞ்சாயத்துக் கூடி எல்லோர் முன்னிலையிலும் அவளுக்கு மரண தண்டனையைத் தீர்ப்பாக கூறப்படுகிறது. அவளைக் கொலையும் செய்துவிடுகின்றனர். இவ்வளவுக்கும் அந்தப் பெண், கல்வி அறிவு பெற்றவர். கிராம மேம்பாட்டுக்காகவும் உழைத்து வருபவர். தானே ஒரு மகளிர் சுய உதவிக் குழுவும் நடத்தி வருகிறார். தாலிபான்களின் தீர்ப்பு வழங்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றன.பஞ்சாப்பில், பீகாரில், இப்போது புலந்த் நகரில்.

மரியாதை, மானம் இவற்றை நிலை நிறுத்துவதற்காகவே செய்யப்படும் கொலைகள், தமது சாதீயப் பிரிவின், மதப் பிரிவின் கொடுப்பினை. நல்ல வேளை. பல சமயங்களில் சாதி வேறுபாடு காரணமாக கொலைகள் நிகழ்த்தப்படுகின்றன. பொருளாதார நிலை இல்லாவிட்டாலும், வேறுபாடு இருந்தாலும். புலந்த் நகரத்தின் பிரபலமானவரான டி.பி. யாதவ் வின் பெண் பாரதி..-நிதீஷ் கட்டாரவின் நிகழ்வு இன்னமும் மனதில் பசுமையாக இருக்கிறது. நிதீஷ் பெரும் செல்வந்த பிராம்மணக் குடும்பத்தில் பிறந்தவர்.

    சாதி மதம் என்ற பேய் எல்லா மதத்தையும், எல்லா சமூகத்தையும் பிடித்து ஆட்டுகிறது. அதிகாரம் செய்கிறது. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இந்தப் பாறை, இளகிவிடாமல், காலம் செல்லச் செல்ல இன்னமும் இறுகிப் போய் கூடுதல் கடினமாகிக் கொண்டு வருகிறது.
    யோசிக்க வேண்டிய காலம் இது. பகுத்து ஆராய வேண்டிய காலம் இது. பழைய பாரம்பரிய பொருளாதார ஏற்ற தாழ்வு என்ற பிரிவுகளுடன் கூடவே புதிய புதிய மாற்றங்களும் இப்போது ஏற்பட்டுக்கொண்டு இருக்கின்றன. இந்தப் பிரிவுகள் ஏன் இன்னமும் பலம் பெற்று திகழ்கின்றன? நம்நாட்டில் புதிய எழுச்சி நிலை ஏற்பட்டு, அந்தச் சொல் நவ ஜாக்ரன் ஏற்பட்டு 150 ஆண்டுகள் ஓடிவிட்டன. பத்தொம்பாதாம் நூற்றாண்டின் முழுக்காலமும், இருபதாம் நூற்றாண்டின் பாதி வரைக்கும்கூட நாம் தொழில் துறையில் இன்னமும் முழு வளர்ச்சி எட்டவில்லை. அண்டை நாடுகளுடனான  மேடு பள்ளம் கவலை அளிக்கிறது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகும் இதே நிலையை வளர்ச்சி என்று சொல்கிறோம். கல்வி ஏற்றம் காண்கிறது விட்டு விட்டு. பெண்கள் விழிப்புணர்வு வலிமை பெறுதல் என்று குரல் எழும்புகிறது. ஆனால் மிகவும் மந்தமாக, தட்டுத் தடுமாறி. இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் கூட பெண்களில் நாற்பது சதவிகிதத்திற்கும் குறைவானவர்களே கல்வி பெற்றிருக்கின்றனர். இன்னமும் அறுபது சதவிகிதத்திற்கும் அதிகமானோர் கல்வியை அடைய முடியவில்லை. அண்டை மக்களுடன் நெருக்கம் என்பது அப்புறம், அடுத்த வீட்டில், அடுத்த தெருவில், அடுத்தடுத்த குடும்பங்களிடையே கூட வேற்றுமை இருக்கிறது. இந்த நிலையை மாற்றத்  தீவிரமான முயற்சி எடுக்கப்படவில்லை.

    முஸ்லீம் மதம் ஒரு சமத்துவ, சகோதரத்துவ மதம் என்று புரிந்து கொள்ளப்படுகிறது. அங்கு சாதி பேதம் இல்லை, வேறுபாடு இல்லை என்றெல்லாம் சொல்லப்படுகிறது. ஆனால், இவர்களிடையேயும் ஹிந்துக்களைப் போலவே பல பிரிவுகள், பல சாதிகள், பல தளங்கள் அங்கீகரிக்கப்படுள்ளன. இந்த அமைப்பைப் பற்றிய பேச்சுக்கள் இல்லை. இது பல அரசியல் நன்மைக்காகவும், ஆளும் அரசியலுக்கு ஏற்றதாகவும் இருக்கிறது. ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்திலேயும் இந்த சமூக சாதிப் பிரிவுகளைக் களைய எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. அவர்கள் ஏன் ‘யானை தன் தலையிலேயே மண்ணை அள்ளிப் போட்டுக்கொள்கிறார்போல' செயல்பட வேண்டும்? ராம் மோஹன் ராய், ஈஸ்வர சங்கர வித்யாசாகர் போன்ற சமூக சீர்திருத்தவாதிகளை இன்னமும் ஒரு முறை நாம் நன்றியோடு நினைத்துப் பார்க்க வேண்டும். ஆணாதிக்க சமுதாயத்தில், பெண்களின் பலவீனமான நிலைக்காக தொடர்ந்து போராடினர்கள். அதன் விளைவாக (பால்ய விவாகம்) குழந்தைத் திருமணம் தடை செய்யப்பட்டது. கணவனை இழந்த விதவைப் பெண்களுக்கு- அவர்களின் ஆதரவற்ற நிலைக்கு மருந்தாக- விதவைத் திருமணம் நடைமுறைச் சட்டமாக்கப்பட்டது. மிகக் கொடூரமான சமூகப் பழக்கம் ‘சதி' உடன் கட்டை ஏறுதல் -ஒழிக்கப்பட்டது. இந்த சமூக சீர்திருத்தங்களுக்கு எல்லா இடங்களில் வசிக்கும் எல்லா ஹிந்து மக்களிடமிருந்தும் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. இதை ஆங்கிலேயர்கள் மூலமாக ஹிந்து சமுதாயச் சட்டத்தில் கையெழுத்து இடவைக்க நிறைய எதிர்ப்புக் குரல்கள் கடுமையாகக் கிளம்பின. ஆனால், சாதி மற்றும் வகுப்புப் பிரிவின் அடிப்படையில் சமூகப் பிரிவு என்பதையும், இந்தப் பழக்க வழக்கங்களையும் உள்ளது உள்ளபடி அப்படியே ஏற்றுக் கொண்டனர். உண்மையில் வகுப்பு, சாதி-பிளவுகளின் மூலம் தனது அரசியல் ஆதாயம் தேடிக் கொண்டனர். தனது பலத்தை இன்னமும் திடமாக்கிக் கொண்டனர். அவர்கள் படையில் இணைந்த சிப்பாய்கள் சாதிவாரியாக வேறு வேறாக இருந்தனர். அவர்களின் சாப்பாடு, தங்குமிடம் எல்லாமே வேறு வேறாகவே இருந்தது. இந்த நயவஞ்சகமான சாதி ஏற்பாடு ஏற்ற தாழ்வு எத்தனை எத்தனை துன்பங்களுக்குக்  காரணமாக இருந்திருக்கிறது. இது தனியே விவாதித்து எழுதப்பட வேண்டிய ஒன்று.

    இந்த சாதீய, வகுப்புப் பிரிவுகள், உயர்வு தாழ்வு நடுத்தரவர்க்க மக்களை ஒடுங்கிக் கூனிக் குறுகி, மனம் மறுக வைக்கிறது. இந்த பழக்க வழக்கங்கள் பெரிய பெரிய பதவியில் இருக்கும் மனிதர்களைக் கண் மூடித்தனமாக பின்தொடர வைத்தது. நமது சரித்திரம் இது போன்ற நிகழ்வுகளால் நிறைந்து இருக்கிறது.  பஞ்சாப்பைச் சார்ந்த அகாலிதளத் தலைவர் ப.£பீ.ஜாஹீர்கௌர்  அவரின் மகள் இருவரின் கொலை நிகழ்வு இன்னமும் மங்காமல் கண்முன்னே நிற்கிறது, எடுத்துக்காட்டாக.  சமூகம் இத்தகைய நிகழ்வுகளை மிகவும் சாதாரணமானதாக எடுத்துக் கொண்டு விடுகிறது. சாதீய சமூக வேறுபாடுகள், சாதீய விழிப்புணர்வின் ஒரு பகுதி என்றாகி விட்டது. காவல் துறையும் இதே மனப்பாங்கோடுதான் வேறுபாட்டோடுதான் செயல் புரிகிறது. இத்தகைய தீய உணர்வுகளால் இவர்கள், பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்வதில்லை.

    சமூகத்தில் ஒருவர் என்ற எண்ணம் ஹிந்து முஸ்லீம் இருவரிடமும் இல்லை. இன்றும் கூட மஹ்விஷ்ஷின் குடும்பம் தாங்கள் ராஜபுத்திரர்கள் என்ற எண்ணத்தைக் கைவிடுவதாக இல்லை. ஹிந்துக்கள், தலித் மக்களை எப்படித் தாழ்வானவர்கள், தீண்டத்தகாதவர்கள் என்று பார்க்கின்றனரோ, அதே மாதிரியான வேறுபாட்டு உணர்வோடுதான் முஸ்லிம்களும் தலித மக்களைப் பார்க்கின்றனர்.

    வெவ்வேறு சமூகத்தைச் சார்ந்தவர்கள் அருகருகே வசித்து நிறையக் கொடுத்தும், வாங்கியும் ஆகிவிட்டது.  பழக்க வழக்கங்கள், வாழ்வியல் முறை சமூக மதிப்பீடுகள் போல, தீயவைகளையும் மக்கள் கற்றுக் கொள்கின்றனர். முஸ்லீம் சமூகத்தினரிடையேயும் இப்போது வரதட்சனை வாங்குவதும், சீர் வரிசை கேட்பதும் திருமணங்களில் நீக்கமற நிறைந்துவிட்டன.  மற்ற எந்த சமுதாயத்தினருக்கும் குறைந்துவிடாதபடி கடைபிடிக்கப்படுகிறது. வியாபாரக் கலாச்சாரம் எல்லா சமுதாயத்திலும் பரவி இருக்கிறது. இத்தகைய கால மாற்றங்களுக்கு இடையில் ஒரு புதிய ஒளிக்கீற்றும் தென்படுகிறது. சமுதாயத்தை அது முன்னெடுத்துச் செல்லும். அடிமை ஏவல் புரியும் மக்களும் இப்போது படிக்கத் தொடங்கி விட்டனர். எழுதப்படிக்கத் தெரிந்தவர்களாகிவிட்டனர். சமூகத்தின் மைய ஓட்டத்தில் இணையத் தயாரானவர்களாக இருக்கட்டும், கிராமத்திலிருந்து பிற நகரங்களில் வளர்ந்து கொண்டிருப்பவர்களாகட்டும் புதிய வாழ்க்கையை ஏற்றுக் கொள்பவர்களாகட்டும், புதிய பொருளாதார வழிமுறைகளில் தங்களைப் பதித்துக் கொண்டவர்களாகட்டும் புதிய வாழ்க்கையை தனதாக்கிக் கொண்டவர்களாகட்டும் இத்தகைய மக்களிடையே ஆண்-பெண் கலந்து பழகுதல் என்ற சகஜ நட்பு பரிமளிக்கத் தொடங்கி உள்ளது. ஆனால், சினிமாவில் மட்டும் அல்ல, வீட்டுக்கு வீடு ஆக்ரமித்துக் கொண்டிருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியிலும், அவற்றின் தொடர்களிலும் காதல் என்பது புதுப் புது முறையில் புதுப் புது வண்ணத்தில் காட்சி படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அது மனங்களில் சலனத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது. காதல் சொற்பொழிவுகள், வர்ணனைகள், காதல் கதைகள் இன்ப முடிவுகள் அல்லது துன்ப முடிவுகளுடன் காணக்கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. புதிய தலைமுறை சமுதாயத்திற்கு இது புதிய அமைப்பாகவும் அவைகள் இளைப்பாறும் இடமாகவும் குறிப்புணர்த்துகின்றன. இன்றைய வாழ்வியலில் இத்தகைய பகுப்பாய்வுக்கு முக்கிய இடம் உண்டு.
    ‘ஒரே தட்டு, ஒரே கோப்பை' என்பது எங்கு இருக்கிறது? எனவே இஸ்லாமியர்களில் எவ்வளவு சகோதரத்துவமும், சமத்துவமும் இருக்கிறது என்று ஆராய வேண்டி இருக்கிறது. ஹிந்துக் குடும்பங்களில் எத்தனை குடும்பங்கள் ‘எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் ஓர் நிறை'  என்ற குரலில் இருக்கின்றனர். இத்தகைய குரல்களின் இடையில் விதம் விதமான பிரிவுகளுக்கு கோலூன்றுகின்றனர்.
    கல்வி அறிவு பெற்ற உயர் மட்டக் குடும்பங்களில் ஏற்படும் முக்கிய நிகழ்வுகளுக்கு எப்படியோ மனம் மறுகி, காதோடு ரகசியம் பேசி கண் காது மூக்கு வைத்து ஏற்றுக் கொண்டு விடுகின்றனர். மத்திய தர மக்களுக்கு மரியாதைக்கான களம் இல்லை. யாரும் கண்டு கொள்வதில்லை. எனவே அவர்கள் வகுப்பு, சாதி ஆகியவைகளைச் சுமக்கிறார்கள். தன்னுடைய மான மரியாதைகளை எல்லைக்கு உட்படுத்திக் கொள்கிறார்கள். பொருளாதார சேமிப்பின் கூடவே, தனது சாதியை நிலை நிறுத்த, தனது குடும்ப மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள ஆயுதத்தையும் தங்கள் கைகளில் எடுத்துள்ளனர்.

ஹிந்தி மூலம்-நமீதா சிங்.
தமிழ் மொழி வழி-க்ருஷாங்கினி.

பதிவாக மாறும் நிகழ்வு



நிகழ்வு சலனங்கள் கொண்டது
முன் பின் அடுக்குகளுக்கு இடையில்
சில மாற்றங்களையும், சில கண்ணிகளையும்
உள்ளடக்கியது.

நிகழ்வு தொடர்ச்சியானது
ஒவ்வொன்றுக்கும் தொடர்பு
இருந்தும் இல்லாமலும்
தனித்தும் இணைந்தும்
மேலும் கீழும் என
சங்கிலிகளாய் வழி நெடுக-பரவிக்
கிடக்கிறது.

நிகழ்வு பதிவாக மாறும் பொழுது
அந்தக் கணம் சலனம் இன்றி
உறைந்து நின்றுவிட்டிருக்கிறது.
முன் பின், மேல் கீழ் ஏதுமற்ற அந்த
ஒற்றைக் கணம் மட்டுமே.
உறைந்த நிலையில் அக்கணம்
திரும்பத் திரும்ப பார்க்கப்படுகிறது
எடுத்து, எடுத்தும்.
பார்ப்போரின் பார்வையில் ஒற்றைக் கணம்
மாற்றி, மாற்றி, மாறி மாறி
பதிவாகிறது.
பதிவு செய்யப்படும் பொழுதெல்லாம்
பதிப்போரின் சலனத்துடன் பதிவு
நிகழ்வாக பதிவாகிறது.
அவரவர் தளங்களில், அவரவர் நிறங்களில்.
அந்தக் கணத்தின் உறைவு காணாமல்
நிகழ்விலிருந்து பதிவான உறைவு
எல்லா சலங்களுடனும் அதுவே
நிகழ்வாய்ப் போனது.
நிகழ்வே பதிவாக, பதிவே நிகழ்வாக......

அம்பேத்கார் வகை இலக்கியம்- ஒரு பார்வை

.

    அம்பேத்கார் இலக்கியவகைப் புரட்சி 1960களின் ஆரம்பத்தில் தொடங்கி உள்ளது எனலாம். மராட்டிமொழியில் அறுபதுகளில் அம்பேத்கார் வகை இலக்கியங்கள்- அம்பேத்காரின் எண்ணங்களைத் தாங்கிய எழுத்துக்கள்- காணக் கிடைத்தன. குறுகிய காலத்திலேயே மராட்டி இலக்கிய உலகில் அம்பேத்கார் வகை எழுத்துக்கள் என்ற தலித் இலக்கியம் இன்றியமையாததாக, ஒதுக்கித்தள்ள முடியாத முக்கியமான இடத்தை அடைந்துவிட்டிருந்தது. ‘சுகாவா', ‘அஸ்மிதா ‘தர்ஷ்', ‘சமுசித்' ஆகிய இதழ்களில் அம்பேத்காரின் முழக்கங்கள் முன்னமேயே காணக்கிடைக்கின்றன. இத்தகைய இதழ்கள் பிராமண்யத்தை எதிர்த்துத் தாக்கும் எழுத்துகளுக்கு முதலிடம் கொடுத்துப் பிரசுரித்தன. அத்தகைய நிகழ்வுகளுக்கு அதிக முக்யத்துவம் கொடுத்தன. மேல் சாதியினராலும், நிலச்சுவாந்தார்களாலும் அடக்குமுறைக்கு ஆளான, உதவியற்ற தலித் மக்களின் துன்பங்களை வெளியிட்டு வந்தது. தலித்துகளால் படைக்கப்பட்ட மேல்சாதியினருக்கு எதிரான கருத்துக்களை அடிப்படையாகக கொண்ட படைப்புக்களுக்கு சிறப்பான இடம் கொடுத்துப் பதிப்பித்தன. “சமூக-பொருளாதார சமன்பாடு என்பது சமூகத்தில் உள்ள நச்சுத்தன்மை கொண்ட ‘உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள்' என்ற சாதி நிலையை அழிந்து ‘எல்லோரும் சமமே' என்பதை நிலைநாட்டுவதுதான்” என்று அம்பேத்கார் தனது எழுத்துக்களில் பதிவு செய்துள்ளார். அம்பேத்கார்  ‘வகுப்புப் பிரிவுகள் மனித விரோத செயல்' என்று தனது எழுத்துகளில் சொல்லி இருக்கிறார்.  அவர், தனது எழுத்துக்கள் மூலம் வேறு ஒரு சமூக அமைப்பை, வழிமுறையைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டார் எனலாம். அது அம்பேத்காரின் எழுத்துக்களை முன்னெடுத்துச் செல்லும் இந்த வகை இலக்கியங்களில் தீண்டாமை, விலக்கிவைத்தல் ஆகிய சொற்களுக்குப் புதிய பொருள்விளக்கம் அளிக்கப் பட்டது. இத்தகைய சொற்கள் இழிவானவை என்று எடுத்துரைக்கப் பட்டன.

    மராத்தி மொழியில் கவிஞர் நாம்தேவ் டசாலின் ‘கோல்பீடா' (முழுவட்டம்), அம்பேத்காரின் எழுச்சியை விவரித்தது. இவரின் கவிதைகளில், கலகமும், தீண்டாமை எதிர்ப்பும் தீவிரத்துடன் வெளிப்பட்டு இருக்கும். அவைகள் அனைவரையும் எழுச்சி பெற வைக்கும் தகுதி வாய்ந்தது. பாபுலால் பாகுல்-உடைய படைப்புகள் டசாலின் படைப்புக்களிலிருந்து வேறுபட்டது. பாபுலால் பாகுலின் எழுத்துக்களில் முதிர்ச்சியும், மார்க்சீசியக் கொள்கைகளின் சார்பும் இருக்கும். இவரின் படைப்புக்கள் வேறு விதமாக சிந்தனைக் கவரும். மராட்டி மொழியில் நவீனப் படைப்பு முறைக்கு பாகுல் அவர்களின் எழுத்து பெரும் தூண்டுதலாக இருந்தது. மராட்டி மொழியில் தலித் இலக்கியத்தில் கவிதையுடன் கூடவே உரைநடை இலக்கியமும் நவீனத்தையும் எழுச்சியையும் உடன் கொண்டதாக வெளிவந்தது. இவை ஏற்கனெவே முந்தைய கால கட்டத்தில் இருந்த படைப்புகளின் சாயலற்று வெளியாயின.
    மராத்தி மொழியில் படைக்கப்பட்டு வரும் சிறுகதைகளில், தலித் மக்களின் இயல்பான வாழ்க்கை, இயல்பாகவே பதிவு செய்யப்பட்டிருக்கும். தலித் மக்களை நல்ல முறையில் நிலை நிறுத்தவும், அவர்களுக்கு இன்னமும் மரியாதை சேர்க்கும் விதமாக இவ்வகை எழுத்துக்கள், இலக்கியங்கள் புதிய புதிய கருப்பொருளைக் கொண்டு இருந்தன. அதாவது, மராத்தி மொழியின் புத்திலக்கியம் அம்பேத்கார் வகை எழுச்சியின் வரமே.
    இந்தக் கட்டுரையில் மக்களின் நிலை பற்றியும், மதிப்பீடு பற்றியும் சொல்லப் பட்டிருக்கிறது. இந்தப் பார்வையில் தலித் மக்களின் வளர்ச்சியும் எப்படி மாற்றம் அடைந்தது என்பதும் சொல்லப் பட்டிருக்கிறது.  மராத்தி மொழியில் அம்பேத்கார் வகை இலக்கிய எழுத்தாளர்களின் நீண்ட பட்டியல் இருக்கிறது. அதில் வாமன்ஹோவால், கேஷவ் மேஷ்ராம், அர்ஜுன் டாங்கலே, சுகராம் ஹிம்வாலே, யோகிராஜ் வாக்மரே, ஷரண்குமார் லிம்பாலே, பாஷ்கர் சந்தனாஷிவ், ப்ரகாஷ் காரத், யோகேந்திர மேஷ்ராம், ஊர்மிளா பவார், பீமசேன தேடே ஆகியவர்கள் குறிப்பிட தகுந்தவர்கள். மராத்தி மொழியில் அம்பேத்காருக்கும் முன்னதாகவே ஜோதிபா புலே தன் எழுத்துக்களால் சமூகத்தின் பண்பாடு, தூய்மை ஆகியன குறித்துக் கேள்விகளை எழுப்பி உள்ளார். அதன் மூலம் இந்தவகை எழுத்துக்களுக்கான ஒரு பாதையை முன்னமே உண்டாக்கி விட்டிருக்கிறார். அம்பேத்கார் தன் எழுத்துக்களில் புலேயின் கருத்துக்களை வெளியிட்டார். அவைகள் வெடித்துக் கிளம்பிப் பண்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கின.
    அம்பேத்கார் அகை எழுத்துக்கள் சாதியையும், வகுப்புப் பிரிவுகளையும் அதன் ஏற்ற தாழ்வுகலையும் நிராகரிக்கிறது. இத்தகைய பிரிவுகள் பிராம்மணர் களால் ஏற்படுத்தப்பட்டது என்றும் கூறுகிறது.

    மராத்தி மொழியுடனேயே, மலையாளத்திலும் அம்பேத்கார் வகை படைப்புகள் உருவாகத் தொடங்கிவிட்டன.  அதன் குரல் பிராம்மண எதிர்ப்பு. இந்தவகை எண்ணங்களுக்கு அம்பேத்காருடன் கூட நாராயணகுருவும் இருக்கிறார். இவற்றிற்கு நல்ல பரந்துபட்ட வாசிப்பும், ஆதரவும் கிடைத்தன. கல்லாட ஷஷி, ராகவன் அத்தோலி, கே.கே.தாஸ், சஜ்ஜி கவிக்காடு, ஜி.சஷி ஆகியோர் அறுபதுகளின் ஆரம்பத்திலேயே  தலித் மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்திய படைப்பாளிகள் எனலாம். கல்லாட ஷஷி தன் கவிதைகளில் தலித் அழகியலைப் படைத்தவர். அவருடைய கவிதைகளில், தொழிலாளர் வர்க்கத்தினரைப் பற்றி எழுதப்பட்டவற்றில் இந்த அழகியல் வெளிப்பட்டது. அவருடைய கவிதை தொகுதியான ‘பாரத மகள்'  விவாதத்தை உண்டாக்கியது.  அதில் அவர் ஒழுக்கத்தைக் கேள்விக் குறி ஆக்கியிருக்கிறார். அவர் ஒழுக்கம் என்பதை நிறுவிய மக்களை எதிர்க்கிறார். இவருடைய ‘சிலந்தி' கவிதை பசியைப் பற்றியது. ராகவன் அத்ஹோலியின் கவிதைத் தொகுப்பான ‘மௌன சிலைகளின் காதல்' தலித் மக்களின் அனுபவங்களின் தொகுப்பு. தலித் கவிஞர்களில் ஒருவரானவர் கே.கே.எஸ். சாதிப் பிரிவுகளை மறுக்கும் கவிதைகள் இவருடையது. இதில் மிகவும் சிறப்பானவரும் கூட. இவருடைய கவிதை வரிகள் இவை- ‘நான் மீண்டும் பிறப்பெடுப்பேன்/ வைகறையின் துகில் அணிந்து/சிங்கத்தின் பற்களுடன் காத்திருப்பேன்/இந்த பூமியின் வசந்தம் எங்களுடன் பகிரப்பட வேண்டும்'.
    இதே வரிசையில் அப்பையன் கவிதைத் தொகுதியான ‘மதிய உறக்கத்தின் கனவுகள்' பெரும் சர்ச்சைய ஏற்படுத்தியது. இவர் கவிஞர் மட்டுமல்ல. ஒரு சிற்பக் கலைஞரும் கூட. இரண்டிலும் அம்பேத்காரின் எழுச்சி காணக் கிடைக்கிறது.
    கன்னட மொழியில் ‘தலித்' என்ற இதழ் அம்பேத்கார் வகை எழுத்துக்களை சிறந்த முறையில் வெளியிட்டிருக்கிறது. புட்டண்ணா, டி.வி. ராஜசேகர், சந்திரசேகர் பாட்டீல் ஆகியோர் இவ்வகைப் படைப்புக்களைத் தீவிரமாக தந்துள்ளவர்கள். கவிதை, சிறுகதை, நாடகம் ஆகிய அனைத்து வடிவங்களிலும் தலித்துகளின் வாழ்க்கைக்கரு படைப்பாகி இருக்கிறது. சென்னப்பா, வாலிகார், பர்கூர் சந்திரப்பா, தேவனூர் மகாதேவன் ஆகியோர் இந்த வகை படைப்பாளிகள். இவர்கள் தலித்துகளின் களத்தை பரந்துபட்டதாக அகலப்படுத்தியிருக்கிறார்கள். இவர்களில் பலர் மார்க்சீய சிந்தனை உடையவர் களாகவும் இருந்திருக்கிறார்கள். கன்னட மொழியில் அம்பேத்கார் வகை படைப்புக்களை எழுத்தாளர்கள், எந்தவிதமான மேல் பூச்சும் அற்று பதிவு செய்திருக்கின்றனர். இயல்பான சொற்கள் கொண்டவை இவை. கன்னட மொழி இலக்கியத்தில் புரட்சி, கலகம், பஞ்சமர், சூத்திரர் ஆகியவை இவ்வகை எழுத்துக்களைப் பதிவு செய்த இதழ்களில் குறிப்பிடத்தக்கவை. சந்திரசேகர பாட்டீலின் படைப்புக்களில் கரு தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலையே. இவரின் படைப்புகள் மிகுந்த கொந்தளிப்பைக் கொண்டவை.

    ஹிந்தி மொழியில் தற்காலத்தில் அம்பேத்கார் வகை எழுத்து மெல்ல மெல்ல விழிப்படைந்து  உள்ளது. மராத்தி, கன்னடம் போன்ற மொழிகளில் தலித் இலக்கியம் வந்து வெகு காலத்திற்குப் பிறகுதான் ஹிந்தியில் இவ்வகை இலக்கியப்படைப்புகள் உருவாகத் தொடங்கின. 1985க்குப் பிறகுதான் ஹிந்தி மொழியில் அம்பேத்கார் வகை எழுத்துக்களின் எழுச்சி உருவாகத் தொடங்கியது. மாதா பிரசாத்தின் ‘நூறு பீமன்' இந்த ஆண்டில்தான் வெளியானது. இவரின் மதிப்பீடுகள் அம்பேத்காரின் எண்ணங்களுடன் வேறுபாடு கொண்டவை. மாற்றுக் கருத்து இருந்தது. இந்த வகையில் ஓம்பிரகாஷ் வால்மீகி, மோஹன் தாஸ் நைமிஷ்ராய், டாக்டர். தர்மவீர், கவல் பாரதி, ஷ்யோர் ராஜ் சிங்,பேசைன், டாக்டர்.என்.சிங் ஆகியோர் ஆவர். 1988 இல் இந்திய தலித் எழுத்துக்களின் அரங்கில் ‘வலி எழுப்பிய அலறல்' நூல் குறிப்பிடத்தக்கது. இதன் பிறகு, ஓம்பிரகாஷ் வால்மீகியின் ‘நூற்றாண்டு கால துயர்' 1989 இல் வெளியானது. இதே சமயத்தில் மோஹன்தாஸ் நைமிஸ்ராயின் ‘ஒரு நீண்ட வாக்குமூலம்' வெளிவந்தது. இதே ஆண்டில் ஷ்யோர்ராஜ் சிங் அவர்களின் ‘புதிய விளைச்சல்' வெளியானது. ஹிந்தி மொழியில் அம்பேத்கார் பாணி எழுத்துக்கள் இதிலிருந்துதான் தொடங்கியது எனலாம்.

    1991 ஆம் ஆண்டு முதல் இவ்வகை எழுத்துக்கள் புனைவு அல்லாதது என்ற வகைப்பாட்டில் சேர்க்கப்பட்டுள்ளன. அம்பேத்காரின் கருத்துக்களை இவ்வகை படைப்புகள் வெளிப்படுத்துகின்றன. இந்த காலகட்டத்தில் கவிதை விமர்சனம், எண்ணங்கள், தன் வரலாறு, நினைவு கூர்தல் போன்ற பலவகையில் நூல்கள் வெளிவந்தன. ஓம்பிரகாஷ் வால்மீகியின் தன் வரலாறு ‘எச்சில்' 1997 இல் வெளியாகி, நிறைய விமர்சனத்திற்கும் ஆளானது. மோஹன்தாஸ் நைமிஷ்ராயின் தன் வரலாறு ‘அவரவர் கூண்டு' 1995 இல் வெளியானது.   அதையும் புறந்தள்ளாமல் குறிப்பிட வேண்டும். இந்த நூல் ஹிந்தி மொழியின் முக்கியப் படைப்பாளிகளை பாதித்தது எனலாம். கவிதைத் தொகுதிகளில் ஓம்பிரகாஷ் வால்மீகியின் தொகுப்பான ‘போதும் நிறைய அனுபவித்தாயிற்று' மற்றும் கவல் பாரதியின், 'உன் தவம் இப்போது என்னவாயிற்று?' தொகுப்பும் முக்கியமானவை. ஓம்பிரகாஷ் வால்மீகியின் ‘சலாம்' சிறுகதைத் தொகுப்பு 2000ம் ஆண்டு வெளிவந்தது. இந்த நூலில் தலித் மக்களின் வாழ்க்கைப் பதிவு என்பதுடன் கூட இந்த நூற்றாண்டின் இறுதி குரல் என்ற கூற்றுடன் வெளியானது. இருபத்தியோராம் நூற்றாண்டுத் துவக்கம் ஆவதற்கு முன்னரே தர்மவீரின் நூலான ‘கபீர் பற்றிய ஆய்வு' 1997 இல் வெளிவந்துவிட்டது. அந்த நூல் ராமச்சந்திர சுக்ல, ஹஜாரிப்பிரசாத் த்விவேதி, ஹரி ஔத் போன்ற படைப்புக்களின், கபீர் பற்றிய பிற ஆராய்ச்சியாளரின் வரிசையில் இணந்தது. டாக்டர். தர்மவீரின் ஆய்வு, அம்பேத்கார் வகை எழுத்துக்களின் குரலாக ஒலித்தது என்று நாம் புரிந்து கொள்ளலாம்.
    இருபத்திஓராம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வெளியான சிறந்த நூல்களில் சூரஜ்பால் சௌஹான் அவர்களின் ‘விலக்கப்பட்டவன்' தன் வரலாறு முக்கியமகக் கருதப்பட வேண்டியது. இதற்கு முன்னதாகவே வால்மீகியின் ‘தலித் படைப்புகளில் அழகியல் 2001-ம் ஆண்டு வெளிவந்துவிட்டது. இந்த நூலில் அம்பேத்கார் வகை இலக்கியப் பார்வை தெளிவாகச் சொல்லப்பட்டிருந்தது.  தலித்துக்களின் கேள்விகளைத் தீவிரமாகக் குரல்எழுப்பி ஒலிக்கும் ஹரிராம் மீணாவின் கவிதைக் காவியம் ‘யட்சன் அழவில்லை' (2003) சிறந்த நூல். ஏன் எனில், இதில் காளிதாசனின் ‘யட்ச காவ்யம்' மறுபடைப்பாக்கப் பட்டிருந்தது.  மீணா, சிறந்த, தரமான கவிதைகளைக் கொடுப்பவர். இயற்கையை வாழ்க்கையுடன் இணைத்து எழுதுவதில் வல்லவர். சிறுகதைத் தொகுதிகளும், நாவல்களும் கூட இதே வகையில் எழுதப்பட்டு கூடவே வெளிவந்தன. எம்.ஆர். ஹார்நோட் அவர்களின் நாவல், ‘ஹிடும்பு' மலைவாழ் தலித் மக்களின் வாழ்க்கையைக் கூறும் நூல். குறிப்பிடதக்க நூல். இந்த நூலில் கதையின் நாயகன், தலித் தன் நிலத்தைக் காப்பாற்றப் போராடுகிறான். இந்த நூல் சமுதாயத்தின் நெறிமுறைகளைத் தீவிரமாகக் கேள்வி கேட்டிகிறது. மூல்சந்த் சொனாகரின் ‘இரு வரிக் கவிதை' நூல் இதே வேளையில் வெளியானது. இதிலும் அம்பேத்கார் பாணி எண்ணங்கள் பதியப்பட்டுள்ளன.

    இப்போது அம்பேத்கார் வகை எழுத்துக்களில் புதிய இணைப்பாகப் பெண்ணின் படைப்பும் இணைந்துள்ளது. மெல்ல மெல்ல இந்த வகை எழுத்துக்களில் பெண்களின் பங்களிப்பும் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டு வருகிறன. இந்தப் பெண் எழுத்துக்கள் உயர்சாதி பிராம்மணர்களை, பாரம்பரியக் கூறுகளை கேள்விக்குட்படுத்துவதுடன், தந்தைமை வழிப் பாரம்பரியத்தையும் அதே தீவிரத்துடன் கேள்விக்குட்படுத்துகிறது. குற்றம் சாட்டுகிறது. இந்தப் பெண் படைப்பாளிகள் ‘தன் வரலாறு' என்ற வகைமையைக் கையெலெடுத்து இருக்கிறார்கள். இங்கு கௌசல்யா பைசந்திரியின் தன் வரலாறு 'இரண்டாம் சாபம்' சிறந்த நூல். இதில் அவர் தனக்கு நேர்ந்த துன்பங்கள், அவமானங்கள் ஆகியவற்றை வாக்காகக் கொடுத்திருக்கிறார். இந்தப் பெண் எழுத்துக்களில், புதிய கோணம் தென் படுகிறது. இவர்கள் சமத்துவத்தையே குறிகோளாகக் கொண்டு இயங்குவதால், இவை அம்பேத்கார் வகையில் முதன்மை வாய்ந்தவை.
    இதைப் போலவே அம்பேத்கார் -தலித்- வகை இலக்கியம் ஹிந்தி, மராத்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளுடன் கூட இந்திய மொழிகள் அனைத்திலும் உள்ளன.  ‘புனையப்பட்ட சமூகம்' சச்சிதானந்தனின் நூல். காவிய வகையில் எழுதப்பட்டது. அது ஒரு வகையில் தலித் கவிதையாக ஒப்புக்கொள்ளப்படுகிறது. அதில் அவர் மராத்தி, குஜராத்தி, கன்னடம், ஹிந்தி, பஞ்சாபி, தெலுங்கு ஆகிய மொழிகளின் தலித் கவிஞர்களை  இணைத் திருக்கிறார். அவரின் கூற்றுப்படி, இந்தக் கவிஞர்களுக்கு, பொருளாதார ஏற்ற தாழ்வைவிடவும், சமூகத்தில் சாதி ஏற்ற தாழ்வு இன்னமும் வலிமையானது. அருண் கம்ளே, யஷ்வந்த் மனோஹர், அர்ஜுன் தாங்கே, ஜே.வி.பவார், நாம்தேவ், டசால், தயா பவார், ப்ரகாஷ் ஜாதவ், புஜங்க மேஷ்ராம், யோசப் மைக்வான், ஜயந்த் பரமார், மங்கள் ரடௌர், கிசன் சோமா, சித்தலிங்கப்பா, ஓம்பிரகாஷ் வால்மீகி ஆகியோர் இந்தப் பட்டியலில் உள்ளவர்கள். அம்பேத்காரிய எழுத்துக்களை, இந்தியா முழுவதும் உள்ள இலக்கியங்களில் வாசித்தால், அம்பேத்காருடன் மறு சந்திப்பு நிகழ்ந்தாற்போல இருக்கிறது. இதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. யாருக்கும் இருக்காது. அம்பேத்காரின் எண்ணங்களுக்கு ஒரு புதிய விளக்கமும், வாசிப்பும் கிடைக்கிறது.

ஹிந்தி மூலம்-அவதேஷ் நாரயண்.
தமிழ் மொழி வழி-க்ருஷாங்கினி.
------------------

Friday, October 11, 2013

வலியுற்றும் வலியற்றும்.



01.
 உடலெங்கும் சீழ் வடிகிறது
வெட்டுண்ட ரப்பர் மரமென
தண்டு மரம் என ஆங்காங்கே
வெள்ளை திரவம் மேலிருந்து கீழாய்.
 கீறிவிட கீறிவிட, இன்னமும்
விரைவாய்க் கீழிறங்கி வருகிறது.
வழிகிறது, துர் நாற்றத்துடன்.
நோயுற்றவன் எண்ணுகிறான்,
உடல் ஒரு நோய்க் கிடங்கென்று.
‘ஊத்த சரீரம்'
பட்டினத்தாரும் பலரும் சொன்னது
சரியென்று எண்ண....
தொடர முடியாத வலி பட்டினத்தாரைப்
பறந்தோடச் செய்கிறது.
நிரம்பித் தளும்பும் வலியை
எந்த துவாரத்தின் வழியே வெளியேற்ற?
துவாரங்களால் விரும்பப்பட்ட இவ்வுடல்
துவாரங்களால் நிரம்பப்பட்ட இவ்வுடல்
துவாரமின்றித் தவிக்கிறது.

வலியை வெளியேற்ற இயலாமல்
மயங்கிச் சரிகிறது உடல்.
________________________________________________

02-.
 நீலச்சுழல் ஒளிர் விளக்கு தலையில்
சுழல, நீளமாக
விட்டு விட்டு குழல் ஒலியிட்டு
வலி நிறைந்த உடல் பைகளைக் கடத்திக்
கொண்டு செல்லுகிறது-வாகனம்
தன் சக்கரங்களின் ஊடாக
மருத்துவ மனைக்கு
இறப்போ, பிறப்போ இன்ன பிறவோ
வலி அடைத்த பைகள் கிடத்தி
இருக்கிறது உள்ளே, ஆரோக்கியத்தின்
உறவுகளுடன் கூட.
பெரு நகரங்களில், பெரிய தெருக்களில்
மட்டுமல்ல --
எல்லா வீதிகளிலும் அலறி அலறி
பயணிக்கிறது -தெருவின் மீதும்
விபத்தில்-வீட்டின்  உள்ளும் வெளியிலும்,
 ஏதேதோ இடங்களில் வலியின்
அலறலும், முனகலும் -நிறைந்து, உறைந்து
வலி நீங்குமா? உயிர் நீங்குமா?
பயணிக்கிறது வாகனம், வாகனங்கள்
எப்போதும், எங்கெங்கும்.
-----------------


Monday, February 4, 2013

வந்தடையும் பறவைகளும், வந்து செல்லும் மனிதர்களும்

தோழி இதழுக்காக

வந்தடையும் பறவைகளும், 
வந்து செல்லும் மனிதர்களும்.

மாம்பலம் ரயில் நிலையம் எனக்கு ஒரு யானையை நினைவுறுத்தும். எப்போதும் அசைந்துகொண்டே இருக்கும் அது. ஆட்கள் அருவி என படிக்கட்டுக்களில் ஏறியும் இறங்கியும் வழிந்தோடுவார்கள். தொடர்வண்டி வந்து நின்றவுடன், அதிலிருந்து அசைந்து அசைந்து ஆண்கள், குழந்தைகள், பெண்கள் பைகள் என நிலையம் பொங்கி வழியும். ஏறும் போதும் இறங்கும் போதும் எப்போதும் மனிதர்கள் மத்தியில் பதற்றம் தொற்றிக் கொள்ளும். கூட வந்தவர்களில் யாராவது ஏற இயலாமல், அல்லது இறங்க இயலாமல் போயிருக்கலாம். ஸ்டேஷனின் நடுநடுவே நாய்கள் பூரண அமைதியுடன் தூங்கிக் கொண்டு இருக்கும். டிக்கட் இன்றி தெரிந்தும், தெரியாமலும் பயணம் மேற்கொண்டோர் மன உளைச்சலுடன், அல்லது அற்று அதிகாரியின் அறை வாயிலில் நின்றபடி. எல்லோர் கைகளிலும் காசோ, கார்டோ கண்டிப்பாக இருக்கும். ஆண்டின் பண்டிகைகாலத்தை, எல்லா மதத்தினருடையதையும் அந்த ரயில் நிலையம் கூட்டத்துடன் கொண்டாடும்.

‘நான்' என்ற அடையாளம் கரைந்து போக என்னால் தேர்ந்தெடுக்கப்படும் இடம், மாம்பலம் ரயில் நிலையம்.  அது எப்போதும் புதிதுபுதிதான மக்களுடன் இருக்கும்.

இத்ததனைக்கும் நடுவில் நீங்கள் எதிர்பார்த்தே இருக்க முடியாதபடி ரயில் நிலையத்தில் மேற்கு மாம்பலம் பக்கமாக, நடைமேடையின் கடைசியில் ஒரு பெரிய ஆலமம்.  அதில் பாதி மரம் நிலையத்தினுள் நீட்டிக் கொண்டிடுக்கும். அதன் அடியில் முன்பெல்லாம் வாகனங்கள் நிற்கும். இப்போது மரம் மட்டும். மாலை ஐந்தரை மணியிலிருந்து ஏழு மனிவரை ஆந்த மரத்தின் மீது நூற்றுக்கணக்கன பறவைகள் வந்து அமரும். மைனாக்கள், கிளிகள், குயில்கள், காக்கைகள் இன்னமும் சிறியதும் பெரியதுமான  அத்தனை பறவைகளும் கூச்சலிட்டுக் கொண்டே அமரும். சிலது பறக்கும். மரத்தின் எல்லா இலைகளும் ஏதோ பொந்தை போல அத்தனை பறவைகள¨யும் உள் உறிஞ்சிக் கொள்ளும். கொஞ்சம் கொஞ்சமாக ரயில் போக வர, மனிதர்கள் ஏற இறங்க என அனைத்து இயக்கங்களும் நடை பெற்றுக் கொண்டே இருக்கும். ஆனாலும், பறவைகள் அம்மரத்தில் வந்தடையும். மாலை மெல்ல மெல்ல இருட்டாக மாறத்தொடங்கும் போது மரமும் பறவைகளும் ஒட்டு மொத்தமாக கருமை பூசிக் கொள்ளும். குரல்கள் மட்டும் மரத்திலிருந்து அசைந்து அசைந்து வெளிப்படும். பின் அதுவும் தேயும். நகரத்தின் சந்தடிகளுக்கு அவைகளும் பழக்கப்பட்டு விட்டன. ஏதோ பெஞ்சில் அமர்ந்தபடி நான் அங்கு நடைமேடையில் இருப்பேன்.

ஒரு நாள் மாம்பலம் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு இருந்ததாக செய்தி வந்த வண்ணம் இருந்தது. புரளி என்றும் சொல்லப்பட்டது. சற்று நேரத்திற்கு பிறகு நான் ரயில் நிலையம் சென்றடைந்தேன். அசையாத நிலையில் முன்பு  யானை  இருந்த கொட்டகையாக காலியாக ரயில்நிலையம் இருந்தது.  நிறைய மக்களால், மனிதர்களால் அசையாமல், சில மக்களுடன் இருந்தது அந்த இடம். ஆனால் மரம் முழுக்க எப்போதும் போல பறவைகள் ஒலி எழுப்பிக் கொண்டு இருந்தன. வந்தடையும் பறவைகள் ஒன்றே. வந்து போகும் மனிதர்கள் வேறு வேறு வகையினர். அடுத்த முறை நீங்கள் ரயில் நிலையம் செல்லும் போது அந்த மரத்தையும் சில நொடி கவனியுங்கள். வேறு வேறு இனத்தைச் சார்ந்தவைகள் அவைகள். ஆனாலும் பேதமற்று ஒரே மரத்தில் அடைகின்றன.

ராஜவிளையாட்டு (ஸ்டீ·பான் ஜ்ஸ்வேய்க்) தமிழில் லதா ராமகிருஷ்ணன் நூல் விமர்சனம் க்ருஷாங்கினி


ராஜவிளையாட்டு (ஸ்டீ·பான் ஜ்ஸ்வேய்க்)

Share
stefanzwieg

லதா ராமகிருஷ்ணன் மொழிபெயர்த்த ஜெர்மானிய குறுநாவல் ‘ராஜவிளையாட்டைப்’ பற்றிய என் கருத்துக்களை நான் இங்கே பதிவு செய்கிறேன்.   ‘ஸ்டீபன் ஜ்ஸ்வேய்க் (1881-1942) என்ற எழுத்தாளரின் குறுநாவலை ஆங்கில வழி தமிழாக்கி இருக்கிறார்.
லதா ராமகிருஷ்ணன், 1957ல் பிறந்தவர். சென்னை மாநிலக் கல்லூரியில்  ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.  1983 முதல் கவிதை சிறுகதை, கட்டுரைகள், மொழிபெயர்ப்பு- தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும்,ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும்- என்று பல தளங்களில் இயங்கி வருபவர். நவீனக் கவிதைகளை பிரெயில் முறையில் புத்தகமாக்கி, நவீன இலக்கியத்தை வாசிப்போரின் பரப்பை விரிவடையச் செய்திருக்கிறார். பல கவிஞரின் தொகுப்புக்களை ஒருங்கிணைத்து தொகுப்புக்களும் கொணர்திருக்கிறார். இன்று வரை தொடர்ந்து நவீன இலக்கியத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறார்.
‘ரிஷி’ என்ற பெயரில் கவிதைகளும், ‘அநாமிகா’ என்ற பெயரில் சிறுகதைகளும், லதா ராமகிருஷ்ணன் என்ற இயற்பெயரில் மொழிபெயர்ப்புகளும், கட்டுரைகளும்  எழுதி வருகிறார். தொலை பேசித் துறையில் பணி புரிந்த இவர், பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று, தற்போது முழு நேர எழுத்தாளராக இலக்கியப்பணி ஆற்றி வருகிறார். தற்போது ‘என்.சி.பி.ஹெச்’இல் நிறைய மொழிபெயர்ப்புகள், குழந்தை இலக்கியம்  போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளார். இவைகளும் எண்ணிக்கையில் 30க்கும்  அதிகமாகவே இருக்கும்.
நவீன இலக்கியம் சார்ந்த 30க்கும் மேற்பட்ட நூல்களை மொழிபெயர்த்து-இரு மொழிகளிலும்- உள்ளார்.மொழிபெயர்ப்பு படைப்பிலக்கியம் இரண்டிலும் எந்த விதமான சமரசமும் செய்து கொள்ளாதவர். தன் மனதிற்கு உகந்த நூல்களை மட்டுமே மொழியாக்கம் செய்வது என்ற உறுதி கொண்டவர். தவம் போல தொடர்ந்து இயங்கி வருபவர்.
இதுவரை எட்டுக் கவிதைத் தொகுதிகள் வெளிவந்திருக்கின்றன. இரண்டு சிறுகதைத் தொகுதிகள், மூன்று கட்டுரைத் தொகுதிகள்  வெளியாகி இருக்கின்றன.
லதா ராமகிருஷ்ணனின் மொழிபெயர்ப்பு, மூல நூலின் உயிரோட்டத்தோடு ஒட்டிச் செல்லும் வகையில் அமையப் பெற்றிருக்கும். அதே நேரத்தில் ரிஷியின் கவிதை மொழியின் செறிவான சொற்கள் கொண்டு அவருக்கே உரித்தான சொற்பிரயோகத்தோடும் விளங்கும். (மொழி பெயர்ப்பில் இப்போது பலவிதமான சொற்கள் மூலத்தோடு கொஞ்சமும் தொடர்பில்லாமல் வெளியாகி, புகழ்  அதிகம்பெறும் காலமாக இருக்கிறது.)  எந்த நூலையும் மொழிபெயர்க்கும் முன்னதாக அந்தத் துறை சார்ந்த சில துணை நூல்களையும், அந்த குறிப்பிட்ட எழுத்தாளரின் இன்னமும் சில நூல்களையும் படித்து முடித்த பின்பே மொழிபெயர்க்கப் போகும் நூலுக்குள் இறங்குவார். இதனால் அந்த நூலில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களை இன்னமும் புரிந்து கொள்ளவும், எழுத்தாளரின் நடையை இன்னமும் உள்வாங்கிக் கொள்ளவும் இது உபயோகமாக இருக்கும்.
தன்னைப் பற்றி புகழ்ந்து பேசுவதை  விரும்பாதவர். தன் சாதனைகளைப் பட்டியல் இட்டுச் சொல்லாதவர். எந்தக் குழுவுடனும் தன்னை இணைத்துக் கொள்வதை விரும்பாதவர். எந்தப் பரிசுக்கும் தன் பெயரை பரிந்துரைப்பதை அறவே வெறுப்பவர். பதிப்பாளர்களிடம், தன் நூல்களை பரிசுக்கோ, போட்டிகளுக்கோ அனுப்ப வேண்டாம் என்று அன்போடு தெரிவித்து விடுவார். பெண் என்ற தனித்த அடையாளத்தை மறுப்பவர். ஆனால், பெண்ணிய சிந்தனைகளும் கருத்துக்களும் கொண்டவர். பெண்களுக்கு உதவியும் செய்து வருபவர். எல்லா உயிர்களிடத்தும் நேசமும், உதவி தேவைப்படுவோருக்குத் தன்னை வருத்திக்கொண்டு கூட உதவி செய்வார். ஆனால், அதை எல்லாம் பெரிதாக சொல்லிக்கொள்ளவோ, நினைத்துக் கொள்ளவோ கூட மாட்டார். பணி நிறைவேறியதும், அடுத்த பணிக்காக சென்றுவிடுவார். வெற்றுச் சொற்களோடு நின்றுவிடாமல் இலக்கியம் சார்ந்த பலருக்கும், உதவி தேவைப்படும் எவருக்கும் உதவுவார்.
நான் சொல்லும் இத்தனையும் ஒரு ஒற்றைச் சொல்லில், ‘ஒன்றுமில்லை க்ருஷாங்கினி’ என்று ஒதுக்கித் தள்ளிவிடுவார். ‘என் மறைவுக்குப் பின் எந்தத் தடயமும் இருக்க வேண்டியதில்லை. அதற்கான தேவை ஏதும் அதில் இல்லை’ என்பார்.
நான் அவரைப் பற்றி எழுதுவதை அவரால் தடுக்க முடியாது.
இந்த நூல் முழுக்க முழுக்க சதுரங்க விளையாட்டை உள்ளடக்கியதாக இருக்கிறது. மற்ற விளையாட்டுகளுக்கும், சதுரங்கத்திற்கும் உள்ள முக்கிய வேறுபாடு, உடல் இயக்கம் அற்ற அறிவு, அறிவு மட்டுமே கொண்டு விளையாடுவதுதான். மற்ற விளையாட்டுக்களில், அது புறத்தில் விளையாடுவதாக இருந்தாலும், (கிரிக்கட் போன்று) உள்ளிடத்தில் விளையாடுவதாக இருந்தாலும், (கேரம் போன்றவை) உடலுக்கான இயக்கம் அந்த விளையாட்டுகளுக்கு தேவையாக இருக்கும். எண்ணம், மனதில் தோன்றும் உடல் விளையாட்டில் ஈடுபடும். சதுரங்கத்தில் எண்ணம் இயக்கம் எல்லாமே அறிவுதான். எனவே, கருப்பு, வெள்ளை 64 கட்டங்களிலிருந்து கண்களையும் மனத்தையும் மீட்க இயலாமல் கட்டிப் போட்டுவிடுவதால், சதுரங்கம் விளையாடும் பலரும், கண்களுக்கும் மேலாக, புருவத்தில் கைகளைக்கொண்டு, பலகை, பலகை மீதான காய்கள், அதன் நகர்வுகள்  அது பற்றிய எண்ண ஓட்டம் என்று தங்களைக் குறுக்கிக் கொள்வார்கள். புறச்சத்தம், புறக்காட்சி எதுவும் அவர்கள் அறிவில் புகாது. இந்த நூலில் அது மிக அழகாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆட்டம் முடிவிற்கு வந்தபின் கப்பலின் மேல் தளத்தில் நடமாடும் ஓசை, சிறு காற்றின் அசைவுகள், மனிதர்களின் பேச்சு, கடலின் ஓசை என எல்லாமே ஆட்டக்காரனுக்கு புலனாகிறது.
சதுரங்க விளையாட்டுக்காரர்களுக்கு பொதுவாகப் பேச்சுக் குறைவு. சிந்தனையும், வாழ்க்கையைப் பார்க்கும் பார்வையும் கூட ஆட்டம் போல இருக்கும். எந்தச் செயலையும் தனியாகப் பார்க்காமல், முன்னும் பின்னும் இணைத்துப் பார்ப்பது, எட்டி நின்று செயல்களை அணுகுவது போன்றவை இருக்கும். கேள்விகளுக்கு அல்லது உரையாடல்களுக்கு ஓரிரு சொற்களில் பதில் அமையும்.  வாழ்க்கையின் சம்பவங்களை, ஏற்ற தாழ்வுகளை விலகி நின்று கணக்கிடுவார்கள். மூளை கொதித்துக் கொண்டிருந்தாலும், உடலில் மிகுந்த நிதானமும், கட்டுப்பாடும் அழுத்தமும் கொண்டு இருப்பார்கள். எல்லோரையும் ஒரே அச்சில் ஊற்ற முடியாவிட்டாலும் இதில் பல குணங்களும் அவர்களிடம் இருக்கும். இவை என் அனுபவங்கள்.
யுகோஸ்லாவியாவைச் சார்ந்த ஏழையின் மகனான ஜ்ஸெண்டோவிற்கு பனிரெண்டு வயதாகும் பொழுது அவனின் தந்தை இறந்துவிட மதகுருவால் வளர்க்கப்படுகிறான்.
ஜ்ஸெண்டோவைப் பற்றிய வர்ணனை இது:
‘படிப்பில் நாட்டமில்லாத, பேசவைக்கவே பெரும் பாடு படச் செய்யும், அகலமான நெற்றியை உடையவன் அவன். பள்ளியில் கற்றுக் கொடுக்கும் எதையும் அவனால் கிரகித்துக் கொள்ள முடிவதில்லை. மதகுரு தொடர்ந்து முயற்சித்தும், அவன் தொடர்ந்து எழுத்துக்களை வெறித்துப் பார்த்துக் கொண்டே இருக்கிறான். பார்த்தே இராதது போல.  எளிய பாடத்தையும் நினைவில் வைத்துக் கொள்ள ஆற்றல் இல்லாதவன். பதினான்கு வயதான பின்பும் கூட ஏதும் தெரியாமல் வளருகிறான்.
‘தண்ணீர் மொண்டு வைப்பான், சமையல் அறையைச் சுத்தம் செய்வான். ஆனால், எல்லாமே சகிக்க முடியாத அளவிற்கு நிதானமாய்.’
இந்த வர்ணனைகள் எல்லாம் பிற்காலத்தில் சதுரங்கத்தில் உலக சாம்பியன் ஆகப் போகும் ஒரு சிறுவனைப் பற்றியது என்றால் நம்புவது கடினம். ஆனால், மிர்க்கோ ஜ்ஸெண்ட்டோவின் மூளையில் ஏதோ ஒரு இழையில் விளையாட்டு இருந்திருக்கிறது.
இப்போதும் விளையாடிக்கொண்டிருக்கும் சதுரங்க வீரர்கள் சிலரும் கூட படிப்பில் சூட்டிகையாக இல்லாமல் இருக்கலாம்.ஆனால், இந்த அறுபத்திநாலு கருப்பு வெள்ளைக் கட்டங்களின் பல நகர்வுகளை மனதினுள் அடுக்கிவைத்துக் கொண்டு, கணக்கிட்டு விளையாடுபவர்களாக இருக்கிறார்கள். முதல் மதிப்பெண் பெறும் மாணவனால், இந்த அறுபத்திநான்கு கட்டங்களின் ஓரிரு நகர்வுகளைக் கூட நினைவில் வைத்துக்கொண்டு ஆட முடியாமல் போவதும் நடைமுறையில் உள்ளது. ஏன் எனில் இது அறிவு சார் விளையாட்டு என்பதால் மக்களின் கணிப்பு வேறாக இருக்கிறது. சதுரங்கம், சிலவகையில் ஊனமுற்றோர்க்கு மிகுந்த தன்னம்பிக்கை தருவதாகவும், வாழ்க்கையில் நம்மாலும் சாதனை செய்ய முடியும் என்ற உறுதியைத் தருவதாகவும் கூட இருக்கிறது.
ஜ்ஸெண்டோவின் தோற்றம், நடை உடை எல்லாமே ஒரு கனவானைப் போல, அவன் சதுரங்கம் ஆடத்தொடங்கி வெற்றிகள் பெறப் பெற மாற்றம் கொள்கிறது.  ஆனாலும், அவன் உள்ளுக்கு இன்னமும் படிப்பறிவில்லாத ஓர் ஏழை மந்த புத்தி மனிதனாக தாழ்வு மனப்பான்மையுடன் இருக்கிறான். சதுரங்கத்தில் நூற்றுக் கணக்கான நகர்வுகளை அவனால் மனதினுள் பதிய வைத்துக் கொண்டு, ஆட்டத்தின் போக்கையும், முடிவுகளையும் அது சார்பான கணக்குகளையும் விரல் நுனிக்குள் கொண்டு வந்துவிட முடிகிறது.
இந்த நூலில் பக்கம் 43 இல்
‘ஒரு மனிதன் தன் மொத்த வாழ்வையும் அறுபத்தி நான்கு கருப்பு வெள்ளைக் கட்டங்களைக் கொண்ட ஒரு சிறு வெளியில் கழித்துவிட முடியும் என்றால்…
மனிதனால் கண்டிபிடிக்கப்பட்ட வல்ல விளையாட்டுக்களில் எல்லாம் வல்ல விளையாட்டாக விளங்கும், தற்செயல் என்பதன் எல்லாவித மேலாதிக்கத்தையும் முறியடித்து முன்னேறுவதாய், இறுதியில் வெற்றி வாகை ஒரு அதி சிறந்த அறிவுசாலிக்கே வழங்குவதாய், ஒரு பிரத்யேக வகையில் உளத்திறன் கொண்டோருக்கு மட்டுமே அமைந்துள்ள இந்த விளையாட்டு…;’
என்ற தொடர் இதன் உள் அர்த்தத்தை முறியடிக்கும் விதமாக இரு நபர்களின் கூட்டாக உருவாகி உள்ளது இநூலில்.
பக்கம் 44 இல்
‘சதுரங்கம்- ஒரு அறிவியல்- அது ஒரு கலை. எண்ணற்ற அணிச் சேர்க்கைகளாலும், வரிசை  மாற்றங்களாலும், வரையறைக்குள்ளிருந்து விடுபடுவது’ என்று கதை சொல்லியின் சதுரங்க மூளையும், வியப்பும் இந்தப் பகுதியில் சொல்லப்பட்டு இருக்கிறது.விளையாட்டைப் பற்றிய புரிதல் இல்லாமல் இத்தகைய குறுநாவல் எழுதுவது சாத்யமற்றது.நூறுபக்கங்களே உடைய இந்த குறு நாவலில் மிக அற்புதமாக இரு வெவ்வேறு வகை மனிதனுடைய விளையாட்டு அறிவுத் திறன் வேறுபாடும், நேர்த்தியும் பதிவாக்கப்பட்டு இருக்கிறது.
சதுரங்கம் என்பதே போர் அல்லவா? உயிருள்ள உடைமைகளை வைத்து விளையாடி வெட்டிச் சாய்த்து உயிருடன் விளையாடிய விளையாட்டல்லவா?
டாக்டர் ‘பி’ ஹிட்லரின் நாஜிப் படையினரால் தனிமைச் சிறைக்கு தள்ளப்படுகிறார்.வதை முகாம்களில் பார்க்க மனித முகங்கள் இருக்கும். கேட்க மனிதக் குரல்கள் இருக்கும்.தனிமைச் சிறையில் இவை ஏதும் கிடையாது.விசாரணைக்காக மணிக்கணக்கில் காத்திருக்க வைக்கப் படுகிறான் டாக்டர் ‘பி’.  ஷ¥க்களின் காலடி ஓசைக்காக ஒரு தனிமை அறையில் இருப்பவன் மனப்பிறழ்வுக்கு உள்ளாகாமல் இருக்க, தன்னைத் தானே காத்துக் கொள்ளும் வழியாக சதுரங்கத்தைக் கையிலெடுக்கிறான்.ஒரு காவலாளியின் கோட்டுப் பயில் இருந்த புத்தகத்தை திருடி அறைக்குச் சென்று பார்க்கும் போது அதில் 150 சதுரங்க விளையாட்டுக்களின் நகர்வுகள் மட்டுமே அச்சடிக்கப் பட்டிருப்பதைப் பார்க்கிறான். வேறு வழியின்றி சதுரங்கத்தை ஆடத் துவங்குகிறான். சுமாரான 64 கட்டங்கள் கொண்ட பலகையாக தனது படுக்கை விரிப்பை மடித்து, அதில் ரொட்டித்துண்டுகளைக் காய்களாக்கி ஆடத் துவங்குகிறான்.அந்த கைதிக்குள் அந்த விளையாட்டு ஸ்திரமாக ஊன்றத் துவங்கி விடுகிறது. ரொட்டித்துண்டுகள் காய்களாக ஆக்கப்பட்டு விளையாடப்பட்ட அந்த விளயாட்டை பின்னாளில், போர்வையின் கட்டங்களும் இல்லாமல், காய்களும் இல்லாமலே விளையாட ஆரம்பிக்கிறான்.
வெட்டவெளியில், கட்டங்களற்ற அந்தத் தனி அறையில் டாக்டர்’பி’  தன்னையே இருகூறுகளாகப் பிளந்து கருப்புக் கட்டங்களுக்கும், வெள்ளைக் கட்டங்களுக்கும்  இட்டு, எதிரெதிர் ஆட்டக்காரனாகி கட்டங்களைக் கட்டி ஆளத் துவங்குகிறான்.  ஆனால், அந்த தொடர் ஆட்டமும், தொடர் வெற்றி தோல்வியும் தொடர் வெறியும் டாக்டர் ‘பி’யை மனப் பிறழ்வுக்கு தள்ளுகிறது. மன நோயிலிருந்து தப்பிக்க துவங்கப்பட்ட ஆட்டமே அவனை நோயாளியாக மாற்றிவிடுகிறது.
சதுரங்க ஆட்டக்காரன், தன் கண்ணெதிரில் நிகழும் தவறான நகர்வுக்கு பெரும் பதட்டமடைவான். இருபத்தி ஐந்து ஆண்டுகள் சுதந்திரமான மனிதனாக வலம் வரும் டாகடர்  ‘பி’ , கப்பலில் அது போன்ற ஒரு சூழலில் மாட்டிக் கொள்கிறான். தவறான ஆட்டத்திலிருந்து ஒரு சாதாரண விளையாட்டுக்காரனைக் காப்பாற்ற எதிராளியுடன் விளையாடத் துவங்குகிறான். அவனை வெற்றியும் கொள்கிறான்.தான் வென்றது உலக சாம்பியன் என்ற தகவல் அவனைப் பதட்டமடையச் செய்கிறது. உலக சாம்பியனுக்கோ, முன் பின் தெரியாத ஒரு கற்றுக்குட்டியிடம் தோற்ற வலி உடல் முழுவதும் நிரம்புகிறது.
தொடர்ந்து விளையாட வற்புறுத்தும் உலக சாம்பியன், தன் தோல்வியை  மறுக்க  திரும்பத் திரும்ப ஆடுகிறான், தோற்கிறான். விளையாட்டால் தோற்க அடிக்க முடியாத போது எதிராளியின் பலவீனத்தால் வீழ்த்தப் பார்க்கிறான். டாக்டர்’பி’க்கு காய் நகர்வுக்கு ஏற்படும் காத்திருத்தல் பதட்டத்தை உண்டு பண்ணுகிறது. மந்த புத்திக்காரனான உலக சாம்பியன் ஜ்ஸெண்ட்டோ  இதை உணர்ந்து கொள்கிறான். அந்த பலவீனத்தையே ஆயுதமாக்கி மிக மிகத் தாமதமாக காய் நகர்த்தல்களை கொடுக்கிறான்.  டாக்டர்’பி’க்கு காத்திருப்பு என்பது சதுரங்கக் கட்டங்களிலிருந்து, விசாரனைக்காக காத்திருந்தது, அதன் இறுக்கம், தனிமைச் சிறையின் உணர்வு மறுபடியும் எல்லாம் மேலோங்குகிறது. தான் சதுரங்கம் ஆடத்துவங்கிய சூழலை உணரத்தொடங்குகிறான். அது உடல் மனம் இரண்டையுமே ஆக்கரமிக்க, ஆடமுடியாமல் மனப் பிறழ்வுக்கு மறுபடியும் உள்ளாகி விடுவோம் என்று உணர்ந்த அந்தக் கணத்தில் தன்னையும் ஆட்டத்தையும் வேறுபடுத்தி தன் சுயநிலையை அடைகிறான்.
குறுநாவல் முழுக்க மனம் சம்பந்தப்பட்டதாகவும், மனிதர்களின் அற்பத்தன்மை நிறைந்த உலகமாகவும் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. ராணியின் ஒட்டகம், ராணியின் யானை, ராஜாவின் சேவகன் என்று விளையாட்டு நகர்வுகளாக சொல்லப்பட்டிருக்கிறது. விளையாட்டின் தோல்வி, மன பாதிப்புகுள்ளாகும் விதம் பற்றியும் சொல்லப்படிருக்கிறது.
குறு நாவல் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, சிறு சிறு அத்யாயங்களாக சொல்லப்படும் அதே வேளையில், சதுரங்க விளையாட்டைப் போலவே தளர்வான நகர்தல்களுடன் ஆரம்பிக்கப்பட்டு இறுக்கமும், தீவிரமும், அடுத்த அடுத்த நகர்வுகளுக்கு நீண்ட நேரம்  கோரும் சதுரங்க விளையாட்டைப் போலவே அத்யாயங்கள்  பிரித்து அடுக்கப்பட்டு இருக்கின்றன.
இந்த குறு நாவல் வெறும் சதுரங்கம் என்ற விளையாட்டுத் தளத்திலிருந்து பெயர்ந்து, தனிமனித சண்டை, நாடுகளுக்கு இடயேயான போர், உலக யுத்தம், ஹிட்லரின் படை என மாறி பயணிக்கிறது. விளையாட்டின் உத்திகள் கூட போரின் தந்திரமாக மாறிப் போகிறது. போர்+ சதுரங்கம் என நாவல் முழுவதும் விரவிக்கிடக்கிறது.
130 பக்க  நூலில் ஆசிரியரின் வாழ்க்கைக் குறிப்புக்கள் 30 பக்கங்களில் சொல்லப்பட்டு இருக்கிறது.
ஆசிரியர் மறைந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகும் நாவல் இன்னமும் புதியதாகவே உள்ளது.
இந்த நூலின் முகப்பு அட்டை பற்றிய பதிவும் செய்யப்பட வேண்டும். விஸ்வரூப ராஜா, மங்கலான பின்புலத்தில் ஒரு சில சதுரங்களில் இடையில் ராஜாவின் இருப்பு, சில நகர்வுகளுக்குப்பின் ராஜாவின் சரிவு மெல்ல மெல்ல, முற்றிலுமாக சரிந்து கட்டங்களில் வீழ்ந்து கிடக்கும் ராஜா என அட்டை வடிவமைக்கப்பாட்டிருக்கிறது. சதுரங்கப்பலகையில் ராஜா ‘டிக்’ என்ற ஒலியுடன் வீழ்த்தப்படும் ஒவ்வொரு நொடியும் ராஜாவைச் சார்ந்தவன் மன அதிர்ச்சியும், ராஜாவை சாய்த்தவனின் பேருவகையும் உலகில் எதோ ஒரு மூலையில் எப்போதும் தொடர்ந்து வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
நமக்கோ மக்கள் சூழ இருந்தும், தற்காலத்தில் மன மாற்றத்திற்கும், தனிமைக்குமாக எல்லோரிடமிருந்தும் மனத்தளவில் விலகி கைப்பேசியில் விளையாட்டு, கணனியில் சீட்டாட்டம் என்று பொழுது சென்று கொண்டிருக்கிறது.
புதுப்புனல் வெளியீடாக ‘ராஜ விளையாட்டு’ பதிப்பாக்கம் பெற்று இருக்கிறது.

Tuesday, January 22, 2013

ஒலிக்காத இளவேனில்-கவிதைத் தொகுப்பு விமர்சனம்

ஒலிக்காத இளவேனில்

கனடாவில் வாழும் புலம்பெயர்ந்த இலங்கைப்  பெண்களின் தொகுப்பாக வடலி பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கிறது ‘ஒலிக்காத இளவேனில்'. 2009 ஆம் ஆண்டு கனடாவில் வெளியிடப்பட்ட இந்தத் தொகுப்பு எனக்கு 2012 இன் இறுதியில் ஜெ. சாந்தாராமின் மூலம் வந்தடைந்தது.  மூன்றாண்டு காலம் கழிந்தபின்னும் இந்த நூல் பரவலாக அறியப்படவில்லை. இதை நினைக்கும் போது ஏற்பட்ட தடைகளைத் தவிர, உண்டாக்கப்பட்ட தடைகளும் கூட காரணங்களும்  இருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது.  பெண் எழுத்து எப்போதும் போராடிப் போராடித்தான் வெளிவர வேண்டியிருக்கிறது என்பது இன்னும் ஒருமுறை நிரூபணம் ஆகியிருக்கிறது.

இந்தத் தொகுப்பில் பதினெட்டுப் பெண்களின் கவிதைகள் உள்ளன.  கவிதைகள் கருப்பொருள் வாரியாகப் பிரிக்கப்பட்டு, உள்ளீடு கொடுக்கப்பட்டிருப்பது ஒருவித சமனை உண்டாக்கி உள்ளது. தலைப்பில்லா கவிதைகளுக்கு அதன் முதல் வரியே உள்ளீட்டில்கொடுக்கப்படிருப்பதும் வாசிக்கக் கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு எளிய வழி.  தேசம் யுத்தகாலம், யுத்த நிறுத்தம், புலம் பெயர்வு-மாணவம், குடும்பம் எனவும் பெண் வாழ்வியல் என்ற ஒரு தனிப் பிரிவும் கொடுக்கப்படிருந்தாலும் அனைத்துமே பெண்கள் வாழ்வியல் என்ற அடிப்படைப் பார்வையிலேயே உருவானதுதான். இதில் எழுதி இருக்கும் கவிஞர்கள் சில பெண்கள், தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு சில இலக்கிய அமைப்புகளுடன் இணைந்து முன்னமே கவிதை தொகுதிகள் வெளியிட்டும் இருக்கிறார்கள். அதனால்  பரவலாக அறியப்பட்டும், அதிகம் பேசப்படுபவர்களாகவும் இருக்கிறார்கள்.

யுத்தம், யுத்தத்தின் விளைவு பற்றிய பதிவு இல்லாமல் இலங்கைக் கவிதைகள் இருக்க முடியாது. அதன் காரணமான புலம் பெயர்வு, புகலிடத்தில் இணைய முடியாத தனிமைத் திணறல், அதன் பின் தாய் மண் கனவுகள் கொஞ்சம் அடித்தட்டுக்குள் செலுத்தப்பட்ட நிதர்சன வாழ்க்கை என எல்லாமே பதிவாகி உள்ளன.

கவிஞர்கள் பற்றிய குறிப்புக்கள் மிக முக்கியம் என நான் கருதுகிறேன். அவர்களின் வாழ்வனுபவத்தின்  ஊடாக கவிதைகளை கருத்தில் கொள்ள இயலும். கவிஞர்களின் பிறந்த ஆண்டும், புலம் பெயர்ந்த ஆண்டும் இருந்திருந்தால், இன்னமும் தெளிவு பெற அது உதவும்.

மொழி தமிழ் என்பதானாலும் கூட அந்தந்த வட்டாரப் பிரிவு, மதம் சாதி எல்லாவற்றையும் உள்ளடக்கியதாகத்தான் கருத வேண்டி உள்ளது. மொழியை வாயைத் திறந்து முழுதாக உச்சரிக்கவும், உதடு பிரிபடாமல் அடுத்தவர்களிடம் கொண்டு சேர்க்கவும் அவரவர் வாழும் நாட்டின் தட்பவெட்பம் காரணியாகிறது.  மேலும் தாய் மொழியுடன், அந்தந்த வாழ்விடத்தின் சூழலும், அனுபவமும் இணைய மொழி இன்னமும் மாற்றம் கொள்கிறது. தாய் மண்ணுடன் இணைந்தே.

மொழி மாற்றம் கொண்டாலும், ஆண்களின் அடிப்படை மொழி மாறாமல்  தொடரும் நிலையை மோனிக்காவின் ‘இயந்திரப் போக்கு' கவிதையில் பர்க்க முடிகிறது. எல்லா மக்களுக்கும் துன்பம் தரும் யுத்தம் ஒருபக்கம் தனது இருப்பை உணர்த்திக் கொண்டே இருந்தாலும் கூட, ‘வெறும் பெண்' என்ற  தொனியைக் காணும் பொழுது அதிர்ச்சி அளிக்கிறது. பொது துக்கம் கூட மாற்ற இயலாத போது வேறு எது இவர்களுக்குள் மாற்றத்தைக் கொடுக்கும்?

தாய் மண்ணிலிருந்து பெண்களை மணந்து கொண்டு வரும் ஆண்கள், சிலர், அவர்களுக்கு ‘வீட்டு விஷயங்கள் வெளியே போகக்கூடாது என்ற பெயரில் வாய்ப்பூட்டு மட்டுமல்ல  பெண்ணின் வெளியையும் குறுக்கி ஒருவித மூச்சுத் திணறலுக்கு ஆளாக்குகிறார்கள் என்றால் என்ன சொல்வது?  இந்த ‘பளப்பளப்பான' குடும்ப விஷயம் சொற்கள் உள் வன்முறைக்கு வழிவகுக்காது என்பது என்ன நிச்சயம். இவை  துர்காவின் கவிதைகளில் காண முடிகிறது. மைதிலியோ ‘தயவு செய்து கவிதை கேட்காதீர்கள்'  என்று நுழைவிடத்திலேயே போர்ட் மாட்டிவிடுகிறார்.  இளம்பிறையின் கவிதையிலும் இது போன்ற பதிவு ஒன்று உண்டு. குடும்பப் பின்ணனியில் கவிதைகள் கொலை செய்யப்படுகின்றன. போரின் பிண்ணனியில்  சொல்லவே தேவை இல்லை. கலைகள் கொலை செய்யப்படுகின்றன என்றும் கூறலாம். பீரோக்களில், கொதிக்கும் குழம்பில், மனத்தின் அடியில், கனவுக்குள், வெளியில் யாருக்கும் தெரியாமல், உரத்து சொல்ல இயலாமல் என்றபடி, போரும், அதன் விளைவுகளும், குடும்பமும், பெண்ணை மனச்சீரழிவுக்கு  ஆளாக்கி அலைக் கழிக்கிறது. தற்கொலையும், மரணமும் மட்டுமே சிறு சலனத்தை சிறிது நேரம்- தொகுப்பாளரின் முன்னுரையில் கூறுவது  உண்டாக்குகிறது. பிறகு சுலபமாக மறக்கவும் படுகிறது. வாசிப்போரின் மனம் பீதிக்குள்ளாவதைத் தவிர்க்க முடியவில்லை. போர் அதனால் ஏற்பட்ட வன்முறை, குடும்பத்தை இழந்த தனிமை, குடும்பம் உண்டானதால் தனிமை, என்று பலவும் பெண்களின் மன நலத்தைச் சிதைக்கிறது. கடல் கடந்தும், நாடு இழந்தும், இன்னமும் சாதி, மதம், சடங்குகள் என பின்பற்றும் மக்கள், என  எல்லாக்குரல்களும் இணைந்த நூல் இது.

காதல், காமம், உடல் குதூகலம், உடல் மறுப்பு என எதுவும் சிந்திக்க இயலாத பெண்கள். நிறைய துக்கப்பதிவுகள். எதையோ அல்லது யாரையோ சார்ந்த தொடர் வாழ்க்கைப் பதிவுகள்.

நிவேதாவின் கவிதைகள் என்னை மிகவும் ஈர்த்தன. சிறப்பாகவும், ஆழமாகவும், இருக்கின்றன. மாணவி என்றும் அறிந்தேன். கவிதை மிக அற்புதமான வடிவம் கொண்டு வெளிவருகின்றன. துருத்திக் கொண்டு இல்லாத உணர்வு வெளிப்பாடு, பாசாங்கற்ற உண்மையான நிலையை எடுத்துரைத்தல், குறியீடுகளும், படிமங்களும், உதாரணங்களும் புதிய தளத்திலிருந்து கையாளப்படுவது, கையறு நிலை உணர்த்துதல், பயத்தையும், மரணத்தையும், கலையையும் இணைத்து மென் உணர்வுகளுடன், கடும் (கனத்த) துயரங்களும் நிறைந்த சொற்களைக் கொண்டும்  கவிதை கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

தொகுப்பாளரின் குறிப்பும் பிற் சேர்க்கையும் மிக கவனம் கொண்டு படிக்க வேண்டியவை. சொல்லித் தீர்க்க முடியாத கோபங்கள், ஆதங்கங்கள் நிரம்பிக் கிடக்கின்றன.

பெண்களின் எழுத்து இன்னமும் இன்னமும் அதிகமாகத் தொகுக்கப்பட வேண்டியவை. பதிக்கப்படாவிட்டால் காலப்போக்கில் மறதிக்கு ஆளாகும்.
படைப்பாளி என்ற தன்னிச்சைப் போக்கிலிருந்து மாறுபட்டது, தொகுப்பது.  தொகுப்பாளரின் பார்வையும், தேர்வில் -தெரிந்தும், தெரியாமலும்- சேர்க்கையும், நிராகரிப்பும் அரசியலும் உள்ளடங்கியதுதான். இதிலும் அரசியல் இருக்கலாம்.  எழுத்து என்பதே அரசியல்தான். கவிதைகளை மேற்கோள் காட்டாமல் எழுதி இருக்கிறேன். தேடிப் படிக்கட்டும் ஆர்வலர்கள்.

கருப்பொருள், வடிவம், உத்தி, சமகாலப் பார்வை என எல்லாவற்றையும் உள்ளடக்கியதாக பல கவிதைகள் உள்ளன இத்தொகுப்பில். உணர்வுகள் கவிதையாய் மாற்றப்படாமல் சில கவிதைகளும் காணக்கிடைக்கின்றன. உணர்வுகள் கவிதையாய் மாற சில காலமும்,  பக்குவமும் தேவைப்படுகிறது  ஆனாலும் பெண்கள் எழுத்து (இத்தனை துன்பங்களுக்கும், பிரிவுகளுக்கும், மரணங்களுக்கும் இடையில்) எழுதப்பட்ட இவ்வகை எழுத்துக்கள் இன்னமும் பரவலாக வெளிச்சத்திற்கு வரவேண்டியவையே. நல்ல வடிவத்தில் வடலியினால் வெளியிடப் பட்டிருக்கிறது, 'ஒலிக்காத இளவேனில்'.
தொகுப்பு:தான்யா,பிரதீபா கனகா-தில்லைநாதன்
வடலி வெளியீடு
Email:sales.vadaly@gmail.com

Friday, January 18, 2013

குருவே சரணம் நூலிலிருந்து-திருச்சூர் ராமசந்திரன்

திருச்சூர் ராமசந்திரன்

குடும்பத்தில் ஒன்றிய இசை

என் பூர்வீகம் கேரளாவில் உள்ள திருச்சூர். 1940 இல் பிறந்தேன். என் அப்பாவுக்கு சீப் ஜட்ஜ் (தலைமை நீதிபதி) உத்தியோகம். என்னுடன் பிறந்த வர்கள் அதிகம். சிறுவயது முதலே நான் சங்கீதம் கற்றுக்கொண்டு இருக் கிறேன். அதற்குக் காரணம் என் அம்மாதான். எனக்கு நான்கு வயதாக இருக்கும்போதே காலை நான்கு மணிக்கு எழுந்து, என் அம்மா பக்திப் பாட்டுக்கள் பாடுவார். என் சகோதரிகளும் சங்கீதம் கற்றுக்கொண்டனர். இதனால், சங்கீதம் கேட்கும் வாய்ப்பு எனக்கு சிறு வயதிலேயே அதிகம் கிட்டியது. எனவே எனக்கும் சிறு வயதிலேயே பாட்டு கிட்டியது. நான் பி.எஸ்.சி. படித்து முடித்த உடன் சங்கீதத்தையே பிரதானமாக எடுத்துக் கொள்ள முடிவெடுத்தேன்.

மருத்துவக் கல்லூரியிலிருந்து  குருவிடம்

என்னுடைய ஏழாவது வயதில் வர்கலா சுப்ரமணிய பாகவதரிடம் இசைப் பாடம் ஆரம்பித்தேன். அதன் பிறகு திருப்பனந்துறை கிருஷ்ண அய்யரிடம் மேற்கொண்டு கற்றேன். படிப்பும் நன்றாக வந்தது. எனக்கு மெடிக்கல் சீட் கிடைத்தது. நான் மெடிக்கல் கல்லூரியில் சேர்ந்தும் விட்டேன். அப்போதுதான், திரு ஜி.என்.பாலசுப்ரமணியம் அவர்களிடம் சங்கீதம் பயில  வந்து சேர்ந்தேன். அவர் அப்போது பெரிய வித்வான். மிகவும் பிரபல மானவர். அவர் என்னைப் பாடச் சொல்லிக் கேட்டார். பிறகு, ‘உனக்கு சங்கீதத்தில் ஒரு உன்னத இடம் கிடைக்கும். அதற்கு நான் பொறுப்பு. எனக்கு என்ன என்ன தெரியுமோ அவற்றையெல்லாம் உனக்கு சொல்லித்தருவேன். நீ சங்கீதத்திற்கே வா' என்றார். அதைவிட எனக்கு வேறு என்ன பெரிது? இவ்வளவு பெரிய வித்வான் சொல்கிறார். எனவே நான் மெடிக்கல் காலேஜில் படிப்பதை விட்டுவிட்டு ஜி.என்.பி. அவர்களிடம் வந்து சேர்ந்தேன். சங்கீதத்தையே தொழிலாகக் கொள்ளத் தீர்மானித்தேன். அவருடன் ஐந்து ஆண்டுகள் இருந்து சங்கீதம் கற்றேன். அவரின் சிஷ்யனாக சேர்ந்தது மஹா பாக்யம். அந்த ஐந்து வருட அனுபவம் ஐம்பது வருட அனுபவத்திற்குச் சமம்.   எனக்கு மறக்க முடியாத நிகழ்ச்சி என்றால், என்னுடைய இருபத்தோ ராவது வயதில் சங்கீதம் கற்க என் குருநாதரான ஜி.என்.பி. அவர்களிடம்  சேர்ந்ததைத்தான் சொல்ல வேண்டும். அந்த நாட்களில் எங்கள் ஊரில் கோவில் விழாக்களில், திருமணங்களில், பொது விழாக்களில் பெரிய பெரிய வித்வான்கள் வந்து பாடுவார்கள். நிறைய கச்சேரிகள் நடைபெறும். அவற்றை யெல்லாம் நான் போய் கேட்பேன். அப்படித்தான் ஒரு முறை ஜி.என்.பி. அவர்கள் வந்து பாடினார். ‘சரசிஜநாப சோதரி' என்ற பாடலைப் பாடினார். இப்போதும் அது நினைவுக்கு வருகிறது. அதைக் கேட்டு மயங்கினேன். அவரிடம் சென்று கற்க மாட்டோமா என்ற தாபம். அது கிடைப்பதற்கும் ஒரு நாள் வந்தது.

என் அம்மா என்னை அவரிடம் அழைத்துச் சென்றார். ‘இவன் சுமாராகப் பாடுகிறான். உங்களிடம் சேர ஆசைப்படுகிறான். நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அப்படிச் செய்யலாம்'' என்று சொன்னார். என்னைப் பாடச் சொல்லிக் கேட்டார். பின், “நாளை முதல் வந்து விடு” என்று கூறினார். மறுநாள் பாடம் ஆரம்பித்து விட்டார். இக்காலத்தில் பெற்றோர், ‘இவன் மிக நன்றாகப் பாடுகிறான் இவனுக்கு நீங்கள் சொல்லிக் கொடுங் கள்' என்று பேசி குருவையே அசத்தி விடுவார்கள். 

அப்போது ஜி.என்.பி. திருவனந்தபுரத்தில் ஸ்வாதித்திருநாள் இசைக் கல்லூரியில் முதல்வராக இருந்தார். சங்கீத வித்வான்களுடன் இருக்கும் பொழுதுதான் சங்கீதத்தின் நுட்பங்கள் எல்லாம் நன்கு தெரியும். இருபத்தி நான்கு மணி நேரமும் அவர் கூடவே இருக்கும்பொழுது சங்கீதம் சம்பந்த மாகத்தான் பேசுவார். மஹா வித்வான்கள் எல்லோரும் அவரைப் பார்க்க வருவார்கள். சங்கீதத்தைப் பற்றி நிறைய சர்ச்சைகள் செய்வார்கள். அப்போது நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. இப்போது இது போன்ற வாய்ப்புக்கள் கிடைப்பதில்லை. குருகுலவாசம் சுத்தமாக இல்லாமல் போய் விட்டது.

குருவிடம் பயிலுதல்

நான் அவரிடம் ஐந்து ஆண்டுகள்தான் இருக்க முடிந்தது. திடீரென்று என்னுடைய குருநாதர் தமது 54 வது வயதில் காலமானார். நான் அதன் பிறகு என்ன செய்வது என்கிற குழப்பமான மனோநிலையில் இருந்தேன். ஒன்றும் புரியவில்லை. அந்த நேரத்தில் எனக்கு மத்திய அரசின் ‘ஸ்காலர்ஷிப்' எனப்படும் ஊக்கத் தொகை ஜி.என்.பி. அவர்களின் மேற்பார்வையில் கற்கத் தான்  கிடைத்தது. ஆனால் அவர் காலமாகி விட்டதால், அந்தப் பாணி மாறக் கூடாது என்பதால் எம்.எல்.வசந்தகுமாரி அவர்களின் பெயரைப் போட்டு மாற்றிக் கொண்டேன். இரண்டு ஆண்டுகள் அவரிடம் கற்றுக் கொண்டேன். அதன் பிறகும் கூட அந்த அம்மையாரிடம் நிறைய உருப்படிகள் கற்றுக் கொண்டேன். நிறைய கச்சேரிகள் கேட்டேன்.  மதுரை மணி அய்யர், மஹா ராஜபுரம் விஸ்வநாத அய்யர், ஆலத்தூர் சகோதரர்கள், நாதஸ்வரம் போன்ற இசைக்கருவிகள் என்று பலவகையான கச்சேரிகள் கேட்டேன். கேட்டுக் கேட்டு இன்னமும் என்னைத் தெளிவுபடுத்திக் கொண்டேன். மேம்படுத்திக் கொண்டேன் என்பதும் பொருந்தும். “நாம் அனைவரும் வித்யார்த்திகள், வித்வான்கள் அல்ல.  அனைவருமே என்றுமே மாணவர்கள்தான். எப்போதும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். சங்கீதம் ஒரு கடல் அல்லவா?  அதில் முழுவதும் கற்றுக்கொண்டுவிட்டேன் என்று யாரும் கூற முடியாது. பாடிப் பாடி நம்மை நாம் மேம்படுத்திக்கொள்ள வேண்டும். கச்சேரிகள் கேட்கும் போதே எந்த வித்வான் எப்படிப் பாடுகிறார் என்று கவனமாய் கேட்டு அதை நாம் பயிற்சி செய்து அதில் உள்ள நல்ல விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் ‘ஏன்? எதற்கு?' என்பதும் அவரவர் முயற்சியாலேயே தெளிவு கிட்டும்.'' என்றெல்லாம் என் குருநாதர் கூறுவார். அவர் எனக்கு குருவானதும், அவரைப் போன்ற ஒருவரின் ஆசி கிட்டியதும் பெரும் பேறு என்று நான் கருதுகிறேன். என்னைத் தன் மகனாகவே எண்ணிப் பழகினார்.

என் குருநாதர் எப்போதும் கச்சேரிகளில் புதிது புதிதாகத்தான் பாடுவார். அப்போது நிறைய  புதிய  விஷயங்கள் தெரிந்துகொள்ள முடியும். புதுமையாக இருக்கும். மாணவர்களுக்கு நிறைய பாடங்கள் கிடைக்கும். நேற்றுப் பாடியதுபோல் இன்று பாட மாட்டார். அவரொரு லட்சிய வித்வான். லட்சண வித்வானும்கூட. மேலும், படித்தவர். அவர் வித்வான்களில் தனித் தன்மையுடன் மிளிர்ந்தார்.

குருவின் பயிற்சி முறை

என் குருநாதர் பாட்டு கற்றுக் கொடுக்கும் முறையைப் பற்றிக் கூற வேண்டும். அவர் தன் சிஷ்யர்கள்  எல்லோரும் பிரகாசமான அறிவோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார். ‘சொல்லிக் கொடுத்த உடன் பிடித்துக் கொள்ள வேண்டும். இந்தப் பாணி சற்று கடினமானது. எனவே, எளிமையாய் கற்றுக்கொண்டுவிட முடியாது. உண்மையான சங்கீதம் ‘வாய்ஸ் கல்ச்சர்' எனப்படும் குரல் வளத்தைப் பெருக்கிக் கொண்டால்தான் சரியாகப் பாட வரும். நுணுக்கமாக கவனிக்கும் திறன் படைத்தவர்களுக்கே இது பிடி படும். சொல்லிக் கொடுப்பது கஷ்டமான காரியம் அல்ல. ‘ஒரு கீர்த்தனையை இரண்டு நாட்களில் கூட பாடம் செய்துவிடலாம். அப்புறம் அதை கச்சேரியில் பாடப் பாட சரியாகி விடும்' என்பார்.

அவர் பழகுவதற்கு மிக எளிமையானவர். அன்பானவர். மிகவும் நட்போடு பழகுவார். கச்சேரியின்போது அவருடைய ரசிகர்கள் எல்லோருமே கூட்டம் கூட்டமாக அமர்ந்து அன்று புதிதாக என்ன பாடப் போகிறார், எப்போது ஆரம்பிப்பார் என்று மிகவும் ஆர்வத்தோடு, எதிர்பார்ப்போடு காத்திருப்பார்கள். கச்சேரியின் இறுதி வரை அனைவரும் இருப்பார்கள். ஏதாவது புதிதாகச் செய்வார் என்ற  எதிர்பார்ப்புதான் அதற்குக் காரணம்.


குருவுடன் சேர்ந்து கச்சேரிகளில் பாடியும் இருக்கிறேன். அவருடன் நான் இணைந்து பாடிய கச்சேரிகளில் மறக்க முடியாதது என்று இதைக் குறிப்பிடலாம். ஒரு முறை திருநெல்வேலியில் கச்சேரி. அங்கு சென்றபின் அவருக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. ஆனால் அங்கே உள்ள ரசிகர்களுக்கெல்லாம் ஏமாற்றம். ‘நாங்கள் எங்கெங்கிருந்தோ வந்திருக்கிறோம். கச்சேரி கான்சல் ஆகிவிட்டதே' என்று வருத்தத்துடன் சொன்னார்கள். ‘சாயங்காலம் பாடுகிறேன்' என்று ஜி.என்.பி. அவர்கள் சொல்லிவிட்டார். ஆனால் டாக்டரோ பாடவேகூடாது என்கிறார். ‘நான் பாடுவேன், ரசிகர்கள் எதிர்பார்ப்போடு வந்திருக்கின்றனர். அவர்கள் ஏமாற்றம் அடையக்கூடாது' என்று கூறி, சாயங்காலம் மூன்று மணிக்கு உள்ளூரில் பக்க வாத்யக்காரர்கள் யாராவது இருக்கிறார்களா என்று கேட்டார். நெல்லை மணி வயலின், நெல்லை தேவராஜன் மிருதங்கம். கச்சேரி மிக நன்றாக அமைந்தது. நான்கு மணி நேரம் கச்சேரி செய்து ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி விட்டார். அன்றைய கச்சேரி அமர்க்களமாக அமைந்தது. தன் உடல் நிலையையும் பொருட்படுத்தாது ரசிகர்களுக்காக, அவர்கள் தம்மீது வைத்திருந்த மரியாதைக்காகப் பாடினார். நல்ல கூட்டம். மக்கள் நன்கு ரசித்தனர்.

என் குருநாதரே என்னுடைய கச்சேரியை ஒரு முறை கேட்டிருக்கிறார். அவர் முன் பாட எனக்கு மிகவும் பயம். ஆனால் அவர் என் பயத்தைப் போக்கி பாடும் முறைகளைக் கற்றுக் கொடுத்து, எந்த எந்த ராகங்களைப் பாட வேண்டும், என்று சொல்லிக் கொடுத்து நான் பாடியதைக் கேட்டார். மும்பை ஷண்முகாநந்த சபாவில் அன்று நல்ல கூட்டம். பாலக்காட்டு மணி அய்யர் மைக்கின் முன் வாசிக்க மாட்டார். மைக் இல்லாமல் யாரும் பாட மாட்டார்கள். அன்று நான் பாடினேன்.

புதுப் பாணியை உருவாக்கிய எனது குரு

என் குருநாதர் எந்த குருவிடமும் பயிலாதவர். அது உங்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். ஆனால் அதுதான் உண்மை. அவர் இயற்கையிலேயே நல்ல குரல்வளம் கொண்டவர். அவருடைய அப்பா நன்றாகப் பாடுவார். பெரிய வித்வான்கள் அவர் வீட்டிற்கு வருவார்கள். மஹாராஜபுரம் விஸ்வநாத அய்யர் போன்றோரையெல்லாம் அவர் தனது வீட்டில் சந்தித்து இருக்கிறார். வீட்டில் சங்கீத சர்ச்சைகள் நடக்கும். அதைக் கேட்டுக்கேட்டு தனது ஞானத்தை வளர்த்துக்கொண்டு இருக்கிறார். அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் போன்றோரை தனது மானசீக குருவாகக் கொண்டு தானே கற்றுத் தேர்ந்து பெரிய இசைக் கலைஞர் ஆனார். அவர் தனது தங்கம் போன்ற குரலை நன்கு பயன்படுத்தி தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டவர். அவருடைய குடும்பத்தில் யாரும் சங்கீதத்திற்கு வரவில்லை. அவருடைய சிஷ்யனாக நான் வந்திருக்கிறேன். அவருடைய ஆசீர்வாதத்தில் பாடிக்கொண்டு இருக்கிறேன். அவருடைய இன்னொரு சிஷ்யர் கல்யாண ராமனுடன் இணைந்து கச்சேரி செய்து இருக்கிறேன். மஹாராஜபுரம் சந்தானமும் நானும் நெருங்கிய நண்பர்கள். அவருக்கு என் குருநாதரின் பாட்டு மிகவும் பிடிக்கும். எனக்கு சந்தானத்தின் பாட்டு மிகவும் பிடிக்கும். நானும் அவரும் சேர்ந்து ஐந்து, ஆறு  கச்சேரிகள் செய்து இருக்கிறோம்.

குருவே என் பாக்யம்

ஜி.என்.பி. அவர்களுடன் செல்வதே ஒரு பெரிய பாக்யம். அதுவே ஒரு மறக்க முடியாத நிகழ்ச்சியாகும். அவருடன் இணைந்து போட்டோ ஒன்றும் எடுத்துக் கொண்டுள்ளேன். அப்போது அருகிலிருந்த பலருடனும் தானே அழைத்து போட்டோ எடுத்துக்கொண்டார். வாரத்தில் இரண்டு மூன்று கச்சேரிகள் நடைபெறும். ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்தாலும் குறை வாக இருந்தாலும் ஒரே மாதிரிப் பாடுவார். கூட்டம் எப்படி இருந்தாலும் அதில் ஞானமுள்ளவர்களும் இருப்பார்கள். எனவே அவர்களுக்காக உழைத்துப் பாட வேண்டும் என்பார். ராகங்களை விஸ்தாரமாக, மிக அழகாகப் பாடுவார். 

கற்பனைதான் நமது சங்கீதத்தில் உயர்ந்தது என்று பட்டணம் சுப்ரமணிய அய்யர் சொல்லுவாரென்று அவர் சொல்லியிருக்கிறார். எனது குரு, மஹாராஜபுரம் விஸ்வநாத அய்யர்,  செம்மங்குடி ஸ்ரீநிவாச அய்யர் ஆகியோர் கற்பனை வளத்துடன் பாடுவதில் வல்லவர்கள். எப்போதும் புதிதாகவும், மலர்ச்சியுடனும் பாடுபவர்கள். இவர்கள் சங்கீதம் எவ்வளவு முறை கேட்டாலும் அலுக்காது. எம்.எல்.வி. அம்மாவும் அப்படித்தான். சங்கீதம் அதிகம் கேட்க வேண்டும்.  கேள்வி ஞானம் மிக முக்கியம். என் குருநாதர் நளினகாந்தி, ஆபோகி, செஞ்சுகாம்போதி, ரஞ்சனி, தேவ மனோஹரி ஆகிய பல ராகங்கள் பாடுவார். ராகங்களைக் கையாள்வது எளிமையானது. அவற்றை விஸ்தாரமாகவும் பாடத் தெரியவேண்டும். சில நொடிகளிலும் அவற்றிற்கு ஜீவனூட்ட வேண்டும் என்பார். அப்படித் தெரிந்து கொள்வதும் பாடுவதும்தான் நாம் கற்ற ராகங்கள் என்பார். வீணை பாலசந்தர் ஒரு முறை என் குருவைப் பற்றி குறிப்பிடும் போது, ‘இவர் ஒரு ராகத்தை ஒன்றரை மணிநேரமும் பாடுவார், ஒன்றரை நிமிடமும் பாடுவார்' என்று குறிப்பிட்டுள்ளார். ரசிகர்களின் நாடி நரம்பினை அறிந்தவர்கள்தான் வெற்றி அடைய முடியும். ஜி.என்.பி. அவர்கள் நமக்குத் தெரிந்த, பிரபலமான பல ராகங்களில் சாகித்தியங்களும் இயற்றியுள்ளார். சிலதுதான் கிடைத்துள்ளன. இரண்டு தொகுப்பாகப்  போட்டாகிவிட்டது. இன்னமும் தேடிக் கொண்டு இருக்கிறோம். அவர் பாடிய பாடல்களை வைத்துக் கொண்டு செயல் முறை விளக்கம் (டெமான்ஸ்ட்ரேஷன்) செய்கிறோம். 200க்கும் மேற்பட்ட கீர்த்தனைகள் படைத்திருக்கிறார். அவற்றைத் தற்போதும் வித்வான்கள் பாடிக் கொண்டு இருக்கின்றனர்.

என் குருநாதர், ‘அபூர்வ ராகங்களை நன்றாகப்  பாடுவது  ஒன்றும் கஷ்டம் கிடையாது. நடை முறையில் உள்ள ராகங்களான தோடி, கரகரப்பிரியா, கல்யாணி, காம்போதி போன்ற ராகங்களைப் பாடுவதுதான் அதி முக்கியம். அதில் மனோதர்மங்கள், சங்கதிகள் எல்லாம் புதிது புதிதாகப் போட்டுப் பாடவேண்டும்' என்பார். நான்கு அல்லது ஐந்து மணி நேரம்கூட சிறிதும் சிரமம் இல்லாமல் அநாயாசமாகப் பாடுவார். எப்போதும் நேரம் தவறாமையைப் பற்றி முன்னமே குறிப்பிட்டுள்ளேன். இவற்றையெல்லாம் இக்கால வித்வான்களும் தெரிந்துகொள்ள வேண்டும், நடைமுறைப்படுத்த வேண்டும். தெரியாதனவற்றைத் தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதில் தவறே கிடையாது.

முதல் கச்சேரி

நான் என்னுடைய பதினான்காவது வயதில் எங்கள் ஊரான திருச்சூரில் முதன் முதலாக கச்சேரி செய்தேன். அப்போது முதல், கடந்த  ஐம்பது ஆண்டுகளாக எல்லா இடங்களிலும் பாடிவருகிறேன். தாம்பரத்தில் உங்கள் சபாவிலும் பாடி உள்ளேன். சபாக்களின் ஆதரவும் ரசிகர்களின் ஆதரவும் நிறையக் கிடைத்துள்ளது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா, ஸ்ரீலங்கா, ஜெர்மனி போன்ற பல நாடுகளுக்கும் சென்று கச்சேரி செய்து இருக்கிறேன். போகாத பெரிய நாடு என்பது ரஷ்யாதான்.

காஞ்சிப் பெரியவர், ஜீயர் மற்றும் சாயிபாபா

நான் காஞ்சி மடத்தில் பெரியவர் முன்னிலையிலும், ஜீயர் சுவாமிகள் முன்னிலையிலும், புட்டபர்த்தி சத்யசாய்பாபா முன்னிலையிலும் பாடி உள்ளேன். மஹாப் பெரியவர் முன்பாக நான் ஒரு முறை பாடியபோது, ஜி.என்.பி.அவர்களைப் பற்றிப் பேசி, அவர் பாடும் பாடல்களைப் பற்றிக் கூறினார். கானடா ராகத்தில் “பராமுக மேலரா'' என்னும் பாடலை எப்படி அமைத்துள்ளார் என்பதையும் பாடிக்காண்பித்தார். ‘அவைகளெல்லாம் உனக்குத் தெரியுமா?' என்றும் கேட்டார்.

எனக்கு எல்லோருமே பக்க வாத்தியம் வாசித்திருக்கிறர்கள். வயலினில் டி.என்.கிருஷ்ணன், எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன், லால்குடிஜி.ஜெயராமன், வி.வி.சுப்ரமணியம், எம்.சந்திரசேகரன் போன்றோரும்; மிருதங்கத்தில், உமையாள்புரம் சிவராமன், டி.கே. மூர்த்தி, பாலக்காட்டு மணி அய்யர் போன்று அநேகம் பேர் வாசித்திருக்கின்றனர்.

ஒருமுறை தாம்பரம் ம்யூசிக் கிளப்பில் எனக்குக் குரல் சரியில்லாத போது அதன் செயலாளர் பாஷ்யம் நிறையப் பேரை  அணுகிபோது, யாரும் பாட வரவில்லை. ஆனால் டி.வி. ராம்பிரசாத் வந்து பாடினார்.  நானும் அது போல பாடியிருக்கிறேன்.  ஏற்பாடு செய்யப்பட்ட வித்வானுக்குப் பாட இயலாமல் போனதற்கான காரணம் நேர்மையாய் இருக்கும் பட்சத்தில் அவருக்குப் பதிலாகப் பாடி இருக்கிறேன். டி.என்.சேஷகோபாலனுக்கு ரயில் தாமதம் ஆகிப் போனபோது, ஆறு மணிக்கு போன் செய்து  சொன்ன போதுகூட நான் போய் பாடியிருக்கிறேன். நாம் மட்டும் நினைத்தால் போதாது. எல்லோருமே அது போல எண்ண வேண்டும். எனக்கு எந்த வேறு பாடும் கிடையாது. கடைசி நிமிடத்தில் சொன்னாலும் காரணம் சரியாயிருந்தால் நான் போய் பாடுவேன். கோயமுத்தூரில்  உமையாள்புரம் சிவராமன் மிருதங்கம், ஹரிசங்கர் கஞ்சிரா. இந்தப் பக்க வாத்யங்களுடன் நான் செய்த கச்சேரி என்னால் மறக்க முடியாத ஒன்று. 1999 அல்லது 2000 ஆம் ஆண்டில் சென்னை மடிப்பாக்கத்தில் ஒரு கச்சேரி, ஆஞ்சநேயர் கோவிலில் நடைபெற்றது. உமையாள்புரம் சிவராமன் மிருதங்கம். அவரெல்லாம் கச்சேரி நன்றாக நடைபெற வேண்டும் என்ற எண்ணத்துடன் நிறைய சின்சியராக நினைத்து நல்ல முறையில் வாசிப்பவர். தான் நன்றாக வாசிப்பதாக ஒரு முறைகூடக் கூறிக்கொள்ள மாட்டார். அவர்கள்தான் உண்மையான கலைஞர்கள்.

நாராயணீயம், ஜி.என்.பி. அவர்களின் சாகித்யங்கள், தீட்சிதர் கிருதிகள் என்று நானும் என் மனைவி சாருமதியுமாக இணைந்து நூற்றுக் கணக்கில்   காஸட்டுக்கள்(ஒலிநாடா), சி.டி.(குறுந்தகடு) எல்லாம் கொடுத்திருகிக்றோம். எங்கள் மகள் சுபஸ்ரீயும் இப்போது பாடிக்கொண்டிருக்கிறள். அவளும் ஒலி நாடாக்களில் பாடி இருக்கிறாள். மூன்று பேரும் இணைந்து பாடுவது என்றால் வீட்டில் பயிற்சி எடுத்துக்கொண்டுதான் பாடுவோம். 

இசை உலகம் - அப்போதும், இப்போதும்.

அப்போது இசை உலகில் இவ்வளவு அரசியல் கிடையாது. எனது குரு தனி இடத்தை வகித்தார். அக்காலத்தில் நேர்மையும் உண்மையும் அதிகம் இருந்தது. இப்போது ஈடுபாடு குறைவாக உள்ளது. நான் ஒரு உண்மையைச் சொல்லியே ஆக வேண்டும். அந்தக் காலத்து ரசிகர்கள் போல் இப்போதைய ரசிகர்களும் இல்லை.  கச்சேரியின் கடைசிவரை எல்லோரும் இருந்து கேட்ப தில்லை. இப்போது ரசிகர்களுக்கு விஷயம் தெரியும். ஆனால் அது மட்டும் போதாது. ரசித்துக் கேட்க வேண்டும். அப்போதுதான் நுட்பங்கள் தெரியும். பாடும் வித்வான்களும் நன்றாகப் பாடுவார்கள். நிறைய நுணுக்கங்கள் தெரிந்து கொள்ள முடியும். ஜி.என்.பி.அவர்களைப் பார்க்க, அவரது கச்சேரியைக் கேட்டு ரசிக்க, மக்கள் ஓடி வருவார்கள். இப்போது ஆறு மணிக்கு கச்சேரி என்றால், வித்வான்களும், ரசிகர்களும் தாமதமாக வருகிறார்கள். ஆனால், அப்போது ஆறு மணிக்கு கச்சேரி என்றால், 5.30 மணிக்கே கூட்டம் கூடிவிடும். ரசிகர்களைக் காக்க வைக்கக் கூடாது என்று என் குருநாதர் அடிக்கடி கூறுவார். எங்கெங்கிருந்தோ இசை கேட்க மக்கள் வருகிறார்கள் அவர்களை நாம் காக்க வைக்கக் கூடாது என்பார் என் குருநாதர். ஆறு மணிக்கு முன்னதாகவே வந்திருந்து சரியாக ஆறு மணிக்குக் கச்சேரியைத் துவக்கி விடுவார். முன்பெல்லாம் நான்கு மணி நேரம் கச்சேரி இருக்கும். இப்பொதோ இரண்டரை மணி நேரம்தான் கச்சேரி. ராகம், தானம், பல்லவி பாட நேரமே இருப்பதில்லை. அனுபவித்துக்  கேட்க ஆட்களும் இல்லை. ‘ஃபாஸ்ட் புட்' எனப்படும் துரித வகை உணவு போல் ஆகிவிட்டது இசையும்.

இப்போதெல்லாம் கச்சேரிகளில் நிறைய சப்தம். இங்கேயே நாம் பேச முடிவதில்லை. அவ்வளவு சப்தம். அமைதியாக இருந்தால் நன்றாகக் கேட்கலாம். இளம் கலைஞர்கள் கூட மைக் இல்லாமல் பாடுவதில்லை. முன்பு ரசிகர்கள் அமைதியாயிருந்தார்கள். இந்நாட்களில் யாருக்கும் எதற்கும் நேரம் இருப்பதில்லை. எல்லாவற்றிக்கும் அவசரம்தான். சாப்பிட, தூங்கக்கூட நேரம் இல்லை யென்றால்,  கச்சேரி உட்கார்ந்து கேட்க ஏது நேரம்? பட்டங்கள், பட்டயங்கள், கலைமாமணி, பத்மபூஷன் எல்லாம் எனக்குக் கிடைத்திருக் கிறன்றன. ஆனால் அதை எல்லாம் நான் பெரிதாக நினைக்கவில்லை.  பெரிய வித்வான்கள் தங்களுடைய முன்னோர்கள்போல் பாட வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். அது போல நானும் புகழ்பெற்ற பழைய வித்வான் கள் போல் பாட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இசை பெரிய கடல். இதில் இவ்வளவுதான் என்று முடிவு கிடையாது. நிறைய பாட வேண்டும். நன்றாகப் பாட வேண்டும். இதுதான் என் ஆசை. இப்போதும் நான் மாணவன்தான்.

சாருமதி

நானும் எனது இசை பரிசோதனைகளும்

கச்சேரி மட்டும் பாடுவது என்றில்லாமல் புதிய சோதனைகளும் செய்து பார்க்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவள் நான். எழுபத்தியிரண்டு மேளகர்த்தா ராகங்களின் தாளங்களில் மிகப் பெரிய அட்சரம் கொண்டது கீர வாணி ராகம், கீரவாணி தாளம், நீதிமதி ராகம், நீதிமதி தாளம். அறுபத்தி எட்டாவது மேளகர்த்தாவில் பல்லவிக்கு முக்யத்துவம் கொடுத்து மியூஸிக் அகடெமியில் செயல்முறை விளக்கம் செய்தேன். எல்லோரும் பாராட்டினார் கள். ராகமாலிகையில் பல்லவி, அதாவது பல்லவிக்கு முக்யத்துவமும் அழுத்தமும் கொடுப்பதற்காக நிறைய செய்திருக்கிறேன். ‘கிருஷ்ணாமிர்த தரங்கிணி' என்று நானும் ராமச்சந்திரனும் இணைந்து எங்கள் மாணவர் களுடன் செய்து இருக்கிறோம். ‘கர்ணாமிர்த ஸ்லோகங்கள்', ‘கிருஷ்ண லீலா தரங்கிணி' பக்திப்  பாடல்களை, பக்க வாத்யங்களுடன் குழந்தைகளை வைத்து காஸட் செய்து இருக்கிறோம். இது நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தியாவில் மட்டுமல்லாது அமெரிக்காவிலும்கூட நிறைய பெற்றோர்கள், உங்கள் காஸட்டு போட்டால்தான் எங்கள் குழந்தை தூங்குகிறது என்றெல்லாம் கூறியிருக்கிறார்கள். அதாவது இந்தப் பரிசோதனை குழந்தைகளைச் போய்ச் சேர்ந்துள்ளது. இதில் என் பெண் சுபஸ்ரீ ஏழு வயதில் பாடியிருக்கிறாள். ‘கோபாலா கோபாலா கோகுல நந்தன கோபாலா', ‘மாமவ மாதவ' போன்ற பாடல்களைக் குழந்தைகள் பாடியுள்ளனர். ‘ஹம்டி டம்டி சேட் ஆன் எ வால்' என்று பாடும் குழந்தைகள் சம்ஸ்கிருதத்தில் பாடியது எனக்கு மகிழ்ச்சி.

ஓவிய இசை

ரவி வர்மாவின் ஓவியங்களை வைத்து கேரளாவில் பக்திப் பாடல்கள் பாடினோம். ‘ஸ்ரீ க்ருஷ்ண மாதுரி' என்ற மேடை நாடகம் ஒன்றும் செய்தோம். பாடுபவர்கள் வேடம் அணிந்து வந்து பாடுவார். உன்னி கிருஷ்ணன் ஜெய தேவர், டி.எம்.கிருஷ்ணா அர்ச்சுனன், நான் துக்காராமின் மனைவி, என்று வேடமிட்டு ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் நடித்தோம். இதே போன்று பக்த மீராவையும் செய்தோம். பிறகு சில இடைவெளி விட்டு விட்டு, திரும்ப ரவி வர்மாவின் வீணை வைத்துக்கொண்டுள்ள சரஸ்வதி படத்தைப் போல் வெள்ளைப் புடவை கட்டிக்கொண்டு வீணையைக் கையில் கொண்டு  மேடையில் வந்து பாடுவது, ராமர் பட்டாபிஷேக படத்தை அடிப்படையாகக் கொண்டு ராமர், சீதை எல்லோரும் நாட்டியம் ஆடிக் கொண்டு பாடினார்கள். அதேபோல் ராதா கிருஷ்ணன் படம் போல் எல்லாம் செய்தோம். இதற்கு வரவேற்பு நன்றாக இருந்தது. தியாகராஜரின் நௌகா சரித்திரம் பண்ணினோம். உடனே பிரான்சிலிருந்து இதை செய்யச் சொல்லி அழைத்தார்கள். நாங்கள் இருவருமாக அங்கு சென்று செய்தோம்.  தெலுங்கில் வெறுமே பாடினால் அவர்களுக்கு, அதுவும் வெளிநாடுகளில்  இருப்பவர்களுக்கு எப்படிப் புரியும்? எனவே அவற்றை காட்சிகளாக்கி அவற்றுடன் பாட்டும் பாடினோம். கிருஷ்ணனும் கோபிகைகளும் துவார கைக்கு படகில் செல்வார்கள். கோபிகளின் அகம்பாவத்தை அழிக்க கிருஷ்ணன் புயலை கொண்டு வருவார். படகு ஓட்டையாகிவிடுகிடும். யார் தன்னுடைய உடையை அவிழ்த்து ஓட்டையை அடைக்கிறார்களோ அப்போது படகு  ஓட்டை அடைபட்டு மிதக்கத் துவங்கும்; துவாரகை சென்றுவிடலாம் என்பார் கிருஷ்ணர். இது கேட்ட கோபிகைகளுக்கு மிகுந்த அவமானமாகி விடுகிறது. பிறகு கோபிகைகள் பிரார்த்தனை செய்ய புயல் ஓய்ந்து விடுகிறது. அகம்பாவம் அழிகிறது. பக்திதான் முக்கியம். அகம்பாவம் அல்ல என்பதைப் புரிய வைக்கிறார்.

இதை  ஓவியமாக்கி ப்ரெஞ்ச் மொழியில் எழுதியும் வைத்தோம். எல்லா மக்களும் புரிந்து கொண்டார்கள். எங்களிடம் நீங்கள்தான் கிருஷ்ணாவை பற்றிப் பாடப் போகிறீர்களா என்று ஆர்வமாகக் கேட்டார்கள். நான்கு காட்சிகளிலும் அவை நிறைந்தது. அது போல பன்னிரெண்டு இடங்களிலும் அவை நிறைந்த கூட்டம்தான். இவையெல்லாம் மறக்க முடியாது. இவற்றை நாங்கள் பெற்ற அனுபவங்கள், படைத்த சாதனைகள் என்றும் கூறலாம். இதே போல ‘சர்வம் விஷ்ணு மயம்' என்று விஷ்ணு ஸ்தலங்களை போட்டோ எடுத்து அத்துடன் வீணை, தபலா வைத்துக் கொண்டு அதன் பின்னணியில் பாடினோம். நல்ல வரவேற்பைப் பெற்றது. இது போல இன்னமும் நிறைய நிகழ்ச்சிகள் தயாரிக்கும் திட்டம் உள்ளது.

Wednesday, January 16, 2013

துப்பாக்கி-ஒரு பார்வை

டெல்லியில் நடந்த பாலியல் வன்முறையினால் ஏற்பட்ட அதிர்வால் நாடு முழுக்க ஒரு பெரிய மாற்றம் நடக்கும் என்று நாம் நம்பலாம். பெண்ணை சமமாகப் பார்க்க வேண்டும். பெண்ணை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். பெற்றோர் இரு பாலாரையும் சமமாக எண்ண வேண்டும். பள்ளிக்கூடங்களில் ஆண் பெண் கலந்து படிக்க வேண்டும். இப்படி எல்லோரும் எல்லா இடங்களிலும் இது பற்றியே பேசிக் கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறோம்.

இப்படிப்பட்ட காலத்திலும் கூட சப்தமில்லாமல் ஒரு சில சொற்கள் மக்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம், ‘துப்பாக்கி' இப்படத்தில் குறிப்பிட்ட மதத்தை இழிவுபடுத்தும் படியான வசனங்கள் வெளியாகி இருக்கின்றன என்று அந்த மதம் சார்ந்த அமைப்புக்கள் போராடி வருகின்றன. இன்று (10-1-13) நீதிபதிக்களுக்கும் கோர்ட்டுக்கும் படத்தைப் போட்டுக் காண்பித்து, அதில் ஒரு மதத்தை இழிவுபடுத்தும்படியான வசனங்கள் இருந்தால் அவற்றை நீக்கி, அதன் ‘யு' சர்டிபிகேட்டை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

மதம்,சாதி இவைகள் பற்றிய-சார்பான போராட்டங்களை ஆண்கள் கையிலெடுப்பதும், அதில் பெண்களும் பங்கு கொள்வதும் எப்போதும் நிகழ்வதுதான். சாதி, மதம் அனைத்தையும் கையில் கொள்பவர்கள் ஆண்கள். அதைக் கட்டிக்காத்து, திருமணங்கள் மற்றும் குடும்பச் சடங்குகள் மூலம் அவற்றை அணையாமல் அடுத்த தலைமுறைக்கும் அடுத்தடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்ப்பவர்கள் பெண்கள். அப்படித்தான் செயல்படவேண்டும் என்று அதிகாரம் மிக்கவர்களால் உண்டாக்கப் பட்ட பாதையில் இன்னமும் நம் சமூகம் சென்று கொண்டிருக்கிறது. ‘துப்பாக்கி' படத்தில் ஒரு மதத்தை இழிவு படுத்தும்படியான வசனங்கள் இடம் பெற்று இருந்து, ‘அது யாரையாவது புண்படுத்தும் எனில் அந்த வசனங்களை நீக்கிவிடுவோம், நீக்கிவிட்டோம்' என்று படம் சம்பந்தப்பட்டவர்கள், தயாரிப்பாளர், இயக்குனர் ஆகியோர் அறிக்கை கூட விட்டிருக்கிறார்கள். ஆனாலும் இன்னமும் சில ஊர்களில் அவை நீக்கப்படவில்லை என்று தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டும் இருக்கின்றார்கள். தணிக்கைக் குழுவினரின் பங்கு இதில் உள்ளது.

இதே படத்தில் ஒரு காவல்துறை அதிகாரியிடம் கதாநாயகன் பேசுவதாக சில சொற்தொடர் வருகிறது. கதாநாயகன் இரண்டு துப்பாக்கிகளைக் கையில் வைத்துக் கொண்டு, காவல்துறை அதிகாரியிடம் கூறுவது போல வரும் காட்சியில், காவல்துறை அதிகாரி தன்னைத்தானே சுட்டுக் கொண்டு இறந்தால் என்ன என்ன விதமான சாதக பாதகங்கள் வரும், கதாநாயகன் சுட்டு இறந்து போனால் என்ன என்ன பின் விளைவுகள் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. மிக மென்மையான குரலில் எந்தவிதாமான உணர்வும் கேட்பவர்களுக்கு ஏற்பட்டுவிடா வண்ணம் இயல்பாக சொல்லப்படுகிறது. ‘உன் குடும்பம் நடுத்தெருவுக்கு வரும். உன் குழந்தைகள் தெருவில் கை நீட்டி பிச்சை எடுப்பார்கள். உன் மனைவி இரவு நேரத்தில் தெருவில் ஆண்களைக் கை நீட்டிக் கூப்பிடுவாள்' என்று. ஏதோ காப்பி சாப்பிடலாமா? காற்று இதமாக அடிக்கிறது இல்லையா என்று சொல்லும் போது  மேற்கொள்ளும் மென்மையான குரல். ஆனால் சொல்லப்படும் செய்தியோ, பெண்ணை மிக மிக அவமானப் படுத்துவது.

இந்த கதையின் நாயகன், அந்தத் தயாரிப்பாளர், இயக்குனர் ஆகியோரின் மரணத்திற்குப் பிறகும் இது போன்ற நிலைதான் ஏற்படப்போகிறதா?  கணவன் என்பவன் இறந்தால் பெண்கள் பாலியல் தொழிக்குத்தான் போக வேண்டும் என்று சட்டம் இயற்றப்போகிறார்களா? காவல்துறை அதிகாரிக்கே இந்த நிலைதான் என்று திரைப்படங்கள் சொன்னால், கூலி வேலை செய்வோரின் மனைவியும், ஏழை மக்களின் மனைவிகளும் என்ன செய்ய முடியும்? என்ன செய்ய வேண்டும் என்று இவர்கள் அறிவுறுத்துவார்கள்? எல்லாத் தரப்பினருமாக இருக்கும் அந்த நடிகரின் ரசிகர்(ஆண்)களின் மறைவுக்கிற்குப் பின் அவர்களின் மனைவியும் இதே  பாலியல் தொழிலுக்குப் போக வேண்டும் என்று ரசிகர்கள் உறுதி மொழி வாங்கிக் கொண்டு சாகப்போகிறார்களா?இது திரையின் ஒரு கதாபாத்திரம் பேசும் வசனம் மட்டுமே என்று கூறுவார்களா?

அப்படி என்றால் மற்ற வசனங்களுக்கு மட்டும் ஏன் பதில் தர வேண்டும்? ஒரு வேளை அந்தப் படத்தில் அந்த காவல்துறையின் அதிகாரியின் சாதி சொல்லப்பட்டு அதன் மூலம் இது போன்ற வசனமும் பேசப்பட்டிருந்தால், அப்போது சாதிக் கலவரம் ஏற்பட்டிருக்கலாம். இது வெறும் ஒரு பெண். எந்த அடையாளமும் சூட்டப்படவில்லை. அதற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று எல்லொருமே நினைத்துவிட்டார்களா? தெரியவில்லை.

ஒரு படத்தில் ஒரு கதாநாயகன் பேசும் சில சொற்களாவது புகழ்பெற வேண்டும் என்று ஒவ்வொரு நடிகருக்கும் அவரவர்களுக்குத் தகுந்தாற்போல சில வசனங்களை உண்டாக்கி, அதை அப்படத்தில் திரும்பத் திரும்பப் பேசவைத்து, அதுவும் கூர்மையான உச்சரிப்போடு, அங்க அசைவுகளோடு பேசவைத்து, அந்த வசனத்தை அந்தப் படமாகவே மக்கள் பார்க்கும்படி மாற்றுகிறார்கள். நடிகரும் சரி, மற்ற படம் சார்ந்தவர்களும் சரி அதை தவறாமல் மக்கள் கையில் கொண்டு சேர்க்கிறார்கள். அது அந்த நடிகனின் ரசிகர்களால் காற்றுப் பரவும் திசை எங்கும் அலைபாய்ந்து கொண்டு இருக்கும். அதைக் கேட்டுக்  குழந்தைகளும் நடிகனைப்போலவே உடல் மொழியுடன் சொல்லும். அதைக் கேட்டு மிக்க மகிழ்ச்சி கொள்கின்றனர் பெற்றோர்.  அந்த வகை வசனங்கள் அந்த நடிகரின் உண்மைக் குரலாகத்தானே எதிரொலிக்கிறது. படத்தின் பாத்திரம் பேசப்படுவதாகச் சொல்ல முடியுமா?

அப்படிப்பட்ட சொற்கள் போலவே இந்தப் பேச்சையும் எடுத்துக் கொள்வதா? அல்லது நடிகரின் குரலில் வெளிப்பட்ட எல்லாமே மாயை என்று சொல்லப்போகிறோமா?
 

ஒரு புறம் இப்போதுதான் பெண்ணின் இருப்பு பற்றிய தெளிவு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது என்று நம்பிக்கை கொண்டிருக்கிறோம். ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட அந்த பாலியல் குற்றம் எல்லோர் மனதிலும் இன்னமும் ஆறாத புண்ணாக மாறி இருக்கிறது. ஆண்களும், பெண்களும் சேர்ந்து குரல் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். இளைஞர்கள் மத்தியில் ஆண், பெண் சமத்துவமும் ஏற்படும் என்று நேர்மறையான எண்ணம் தோன்றும் சமயம் இது.

பெண்ணை  எந்த வயதிலும் பாலியல் தொந்தரவுக்குள்ளாக்கலாம். கணவன் இறந்துவிட்டால் மனைவி அவளாகவே பாலியல் தொழிலுக்கு  வரவேண்டும் என்று கூறுவது போல இல்லையா இது?  பாலியல் தொழில் செய்யும் பெண்களை நான் எந்தவிதத்திலும் இழிவு படுத்தவில்லை. பெண் என்பவள் எப்போதும் உடல் சார்ந்தவளாகவே பார்க்கப்படுவாள், அதுதான் சரி என்ற நோக்கில் அல்லவா இருக்கிறது இது?  பெண் எந்த நிலையிலும் தனக்கான எதையும் தானே தேர்ந்தெடுக்கக் கூடாது அப்படித்தானே? சாதி, மதம் என்பது போல பெண்ணை இழிவுபடுத்தினால் அதற்காகவும் குரல் கொடுக்க மக்கள் முன்வரவேண்டும். நிச்சயம் வருவார்கள்.

இவ்வளவுக்கும் மேல் இந்தப் படம் தணிக்கைக்குள்ளாகும் போது, தனிக்க¨யாளார்களில் பெண்ணும் இருத்தாரா? இல்லையா?

Sunday, January 13, 2013

புத்தகக் கண்காட்சிக் கவிதை

புதிய ஆண்டு, புதிய புத்தகம்.
புத்தாண்டு, புதுப் புத்தகம்.
       
    புத்தாண்டு, புதிய புத்தகம்
    புது ஆண்டு, புதூப் புத்தகம்.

(இவ்விரண்டு வரிகளையும் மரத்துப் போன, உணர்வற்ற குரலில், ஒவ்வொரு பாரா முடிந்த பின்னும் கூட்டுக் குரலில், அல்லது தனித்த குரலில் சொல்லலாம்.)
   
    மார்கழி  மாதம்,
     மஹாக்  கோலம்
    பெரிய கோலம்
    புதிய கோலம்.
           
(உற்சாகக் குரலில்)
   
    புத்தாண்டு, புதிய புத்தகம்
    புது ஆண்டு, புதூப் புத்தகம்.

    மஹாப் பிரதோஷம்
    மாதப் பிரதோஷம்
    புண்ணிய பலன்கள்
    பாவம் கரைய.        
           
(மந்திரம் சொல்லும் குரலில்)
   
    புத்தாண்டு, புதிய புத்தகம்
    புது ஆண்டு, புதுப் புத்தாகம்.

    ரகசிய வாழ்க்கை 
    அந்தரங்க ஆசை
    வேதம் சொல்லுவதென்ன
    உள்ளது உள்ளபடி.       
           
 (ரகசிய பெருங்குரலில்)
   
    புத்தாண்டு, புதுப் புத்தகம்
    புதிய ஆண்டு, பெரும் புத்தகம்.

    கம்மல் வாங்குறீங்க,
    வளையல் வாங்குறீங்க
    சட்டை வாங்குறீங்க
    பல செருப்பு வாங்குறீங்க
    மறுபடி மறுபடி.        
           
(மிரட்டும் குரலில்)
   
    புத்தாண்டு, புதுப் புத்தகம்
    புதிய ஆண்டு, அரும் புத்தகம்.
   
    உனக்கும் ஆகும்- பின்
    உன் மகனுக்கும், மகளுக்கும்
    பேரனுக்கும், பேத்திக்கும்
    அழியாச் சொத்து.        
    அறிவுச் சொத்து

(கெஞ்சும் குரலில்)

    புத்தாண்டு, புதுப் புத்தகம்
    புதிய ஆண்டு, அரும் புத்தகம்.

    உரைநடை ஆயிரம்
    நாவல் ஆயிரம்
    சிறு கதை ஆயிரம்
    கவிதை சிலநூறு.       
           
(பெரும் குரலில்)
   
    புத்தாண்டு, புதுப் புத்தகம்
    புதிய ஆண்டு, அரும் புத்தகம்.

    உள்ளே வாங்க,
    வாங்க வாங்க.
    அம்மாமார்களே! அய்யாமார்களே!
    மாணவர்களே! குழந்தைகளே!    
   
(ஆசை காட்டும் குரலில்)
   
    புத்தாண்டு, புதிய புத்தகம்
    செம்பதிப்பும், மலிவுப்பதிப்பும்.

    என்னது வாங்கு
    உன்னது கொடு
    அவனதும், அவளதும்
    வாங்கினால் வாங்கு        
           
(தணிந்த குரலில்)
   
    புத்தாண்டு, புதிய புத்தகம்
    செம்பதிப்பும், மலிவுப்பதிப்பும்.

    புதூ ஆண்டு, புதூப் புத்தகம்,
    தள்ளுபடி உண்டு, தள்ளு முள்ளும் உண்டு,
    காபி உண்டு, டிபனும் உண்டு,
    பேச்சும் உண்டு, ஏச்சும் உண்டு.  
           
(உற்சாகக் குரலில்)   
   
    புத்தாண்டு பெரிய புத்தகம்.
    புதுப் புத்தகம் புதிய பலன்கள்.

(கூட்டுக்குரலில் மெலிதாக ஆரம்பித்துக் கூவி முடிக்கவும்).

    சின்னப் புத்தகம்.
    அன்னப் புத்தகம்.
    அழகுப் புத்தகம்.
    மொழி பழகு புத்தகம்.
    புதிய புத்தகம்.
    புதிய வாழ்க்கை.
    புத்தாண்டு புத்தாண்டு.
    புத்தக ஆண்டு.

Friday, January 11, 2013

க்ருஷாங்கினி (Bio-Data)

இயற்பெயர்: பிருந்தா நாகராஜன் M.A.(ஹிந்தி)புனைப்பெயர்: க்ருஷாங்கினி
பிறந்தஊர்: தாராபுரம் (கோவை மாவட்டம்) தமிழ்நாடு
பிறந்த ஆண்டு: 20.11.1948
திருமணமான ஆண்டு: 8.5.1969
கணவர்: அ.நாகராஜன் (ஓவியர்)
மகள்: நீரஜா ரமணி கிருஷ்ணா (பரதநாட்டியக் கலைஞர்)
மகன்: சத்யாஸ்ரயன்( முதுநிலைப் பட்டதாரி) சதுரங்க ஆட்டக்காரன்

திருமணமானபின்: புதுவையில் 15 வருடமும் கும்பகோணத்தில் 5 வருடமும் வாழ்ந்த இவர் 1990 முதல் சென்னையில் வசிக்கிறார்.

ஃ இவருடைய முதல் சிறுகதை 'புஷ்பித்தல்' 1982ஆம் ஆண்டு கணையாழி மாத இதழில் வெளிவந்தது. இவரது சிறுகதைகள் பெரும்பாலும் தீபம், கணையாழி, ஞானரதம், ராகம், சுபமங்களா, நவீன விருட்சம், புதிய பார்வை, சுந்தர சுகன், கனவு, அரும்பு போன்ற இலக்கியம் பேணும் இதழ்களில் வெளிவந்தன.ஃ நவீன கவிதைகளும் இவ்வாறான சிறு பத்திரிகைகளில் பிரசுரமாயின. இந்தியா டுடே, கல்கி, ஆனந்த விகடன், குமுதம், திணமணி கதிர் போன்ற வெகுஜன பத்திரிகைகளிலும் இவருடைய கவிதைகள் வெளிவந்தன.ஃ ஓவியம், நடனம், இலக்கியம் தொடர்பான பல விமரிசனக் கட்டுரைகள் தின மணி, சுதேச மித்திரன், நுண் கலை (தமிழ் நாடு ஓவியம், நுண்கலை குழு) தினகரன் போன்ற வாராந்திர இதழ்களிலும் தொடர்ந்து வெளிவந்தன.

ஃ பின்வரும் தொகுதிகளில் இவரது படைப்புகள் இடம் பெற்று உள்ளன. 1. இலக்கிய வட்டம் சிறுகதை தொகுப்பு-1985
2. இந்த நூற்றாண்டுச் சிறு கதைகள்-1993. கலைஞன் பதிப்பகம் (விட்டல் ராவ் தொகுத்தது)
3. நவீன விருட்சம் சிறுகதைத் தொகுப்பு-1992. நவீன விருட்சம் வெளியீடு.
4. நவீன விருட்சம் கவிதைத் தொகுப்பு-1994. நவீன விருட்சம் வெளியீடு.
5. நதிகள் தமிழுறவு-தமிழ் எழுத்தாளர் கூட்டுறவு சங்கம், 1998
6.  யானைச்சவாரி தொகுப்பு- 2001 எஸ்.ஷங்கரநாராயணன் (புதிய நூற்றாண்டின் துவக்கத்தில் சில சிறுகதைப் பதிவுகள்.)
7. The Unhurried City - Edited by C.S.Lakshmi -Ambai (Penguin books & The Hindu)
8. ந.பிச்சமூர்த்தி நினைவாக (சிறுகதைகள், கவிதைகள் & கட்டுரைகள்) தொகுதி - 2

மேலும்,மளையாளம், ஹிந்தி, ஆங்கிலம் போன்ற பிறமொழிகளிலும் இவரது கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டுளன. இவரது சிறுகதைகள் எம்ஃபில் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. ஆறாம் திணை, மின்னம்பலம், திசைகள், திண்ணை போன்ற இணைய இதழ்களில் ஓவியம், நடனம், பற்றின கட்டுரைகளும், கவிதைகளும் சிறுகதைகளும் வெளிவந்துள்ளன. சிங்கப்பூரில் உள்ள தமிழ்முரசு என்னும் இணைய இதழிலும் இவரது கவிதைகள் வெளி வந்துள்ளன. 1992 இல் ஸ்காண்டினேவியா- தமிழ்நாடு கலாச்சாரப் பரிமாற்றம் சென்னையில் நிகழ்ந்தது. அவ்வமயம் தமது கவிதையை இவர் படித்தார். பின்னர் வெளிவந்த ஆங்கிலத் தொகுதியில் அது இடம் பெற்றது.1995 இல் அகில உலகப் பெண் ஓவியர்களின் ஓவியக் கண்காட்சி சென்னையில் 'அலயான்ஸ் பிரான்ஸே' வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் கவிதை வாசித்தல் என்ற நிகழ்வில் தமிழ் நாட்டைச் சேர்ந்த தமிழ் மற்றும் ஆங்கிலப் பெண் கவிஞர்களுடன் இவரும் பங்கு கொண்டார். ஆறாம்திணை இணைய இதழில் 1998 ஆம் ஆண்டு சென்னை இசை விழாக் காலத்தில் இவரது மகள் நீரஜாவுடன் இணைந்து எழுதிய 'பரதம் புரிதல்' என்னும் பரதக்கலை பற்றிய எளிமையான தொடர் வெளிவந்தது. பலரின் பாராட்டைப் பெற்ற இது பின்னர் சென்னை ஆன்லைன் (ஆங்கில இணைய இதழ்) இல் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு தொடர்ச்சியாக வந்து பெருவாரியான வாசகர்களின் பாராட்டைப் பெற்றது. தமது கணவர் அ.நாகராஜனுடன் இணைந்து 'ஓவிய நிகழ்வு' என்னும் தலைப்பில் 1900திலிருந்து 2000வரை உலக அளவில் சிற்ப, ஓவியத் துறையில் இதுவரை நிகழ்ந்த மாற்றங்கள், நிகழ்வுகள், பரிசோதனைகள், அதில் பெண்களின் பங்களிப்பு பற்றிய தொடர் ஒன்று 'கணையாழி' 2000 இதழ்களில் தொடர்ந்து வெளிவந்தது. 2001 ஆம் ஆண்டு மகளிர் தினத்தை ஒட்டி 'கவிதைக் காட்சி' என்ற பெயரில் 32 தமிழ்ப் பெண் கவிஞர்களின் கவிதைகள் இவரது முயற்சியால் பெரிய அளவில் (4'x6') சென்னை அருங்காட்சியக் கலைக்கூடத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டன. அவற்றுக்கு பெண் ஓவியர்களின் ஓவியங்களும் இடம்பெற்றன. அதே ஆண்டு சென்னையில் டிசம்பர் மாதம் திருமதி நீரஜா ரமணி இன்றையத் தமிழ் பெண் கவிஞர்களின் புதுக் கவிதைகளில் சிலவற்றை 'அவ்வைக்குப் பின்னும் ஆங்காங்கே' என்னும் தலைப்பில் மரபு வழுவாத பரதநாட்டியப் பாணியில் நிகழ்த்தினார். இதன் பின்புலமாகக் 'க்ருஷாங்கினி' இருந்தார். இவற்றின் தொடர்ச்சியாக உலகளாவிய பெண் கவிஞர்களின் கவிதைகளை தொகுத்து 'பறத்தல் அதன் சுதந்திரம்' என்னும் தலைப்பில் காவ்யா மூலம் வெளியிட்டார். இதில் ஏராளமான பெண் ஓவியர்களின் கோட்டு ஓவியங்களும் இடம் பெற்றன. 2001 இல் 'அஸ்மிதா' என்ற மகளிர் அமைப்பு, பெண் எழுத்துக்கள், அதன் மீதான தடை என்ற கருத்தரங்கை மாநில அளவிலும், பின்னர் அனைத்திந்திய அளவிலும் நடத்தியது. Women's world என்ற பெண்கள் அமைப்பு 2003இல் நடத்திய 3நாட்கள் கருத்தரங்கில் உலகம் அனைத்திலுமுள்ள பெண் எழுத்துக்களை மொழி மாற்றம் செய்து பரவச் செய்வது பற்றிய பொருள் அலசப் பட்டது இந்த இரு நிகழ்ச்சிகளுக்கும் பங்கேற்க அழைக்கப்பட்டு இவர் கலந்துகொண்டார். பெண்களின் எழுத்தைப் பற்றிய சர்ச்சைகளும் விவாதங்களும் தொடர்ந்து வாந்து கொண்டு இருந்த காரணத்தால் பெண் எழுத்து பற்றிய பிரக்ஞை ஏற்படுத்தும் முகமாக 2004 மார்ச் 27 அன்று 'இலக்கிய மரபும் பெண்ணும்' என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் மாலதி மைத்ரியுடன் இணைந்து 'அணங்கு' என்ற அமைப்பை ஏற்படுத்தி நடத்தினார். அது பின்னர் 'மருது' வெளியீடாக 2004ல் வெளி வந்துள்ளது.

 மொழிபெயர்ப்பு:
ஜெர்மன் நாடக ஆசிரியர் பெர்டோ ல்ட் ப்ரெக்ட் இன் நூற்றாண்டு நினைவு அஞ்சலியாக அவரது 'மதர் கரேஜ்' (mother courage) என்ற நாடகம் 'தீரத் தாய்' என்ற தலைப்பில் 1999இல் சென்னையில் தேசிய நாடகப் பள்ளியின் மூலம் அரங்கேறியது. அதன் தமிழ் வடிவம் ஹிந்தி மொழியிலிருந்து இவரால் செய்யப் பட்டது.

பரிசு:
1. சமகாலப் புள்ளிகள் சிறுகதைத் தொகுதி-1998 தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையால் அவ்வாண்டின் சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான 2ஆம் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டு, 16.1.2000 திருவள்ளுவர் தினத்தன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நிகழ்ந்த விழாவில் அளிக்கப் பட்டது.
2. கானல் சதுரம் கவிதைத் தொகுதி-1998 கவிஞர் தேவமகள் அறக்கட்டளை (கோவை) 2002க்கான கவிச்சிறகு விருது அளித்துச் சிறப்பித்தது.

இந்திய அரசாங்கத்தின் அமைப்பான மனித உரிமைக் கமிஷனில் அமையப்பெற்றுள்ள கலை மற்றும் கலாசார மையத்தின் உயர் நிலை மான்யம் 2002-2004 (senior fellowship) பெற்றுள்ள இவர் தமிழில் 50களுக்குப் பிறகு எழுதப்பட்ட புதுக் கவிதையில் பெண்களின் கருப் பொருள், அணுகுமுறை பற்றின ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். சதுரம் பதிப்பகம் என்ற பெயரில் பதிப்பகமும் தொடங்கி உள்ளார். இதில் பெண்ணெழுத்துக்களுக்கு முன்னுரிமை அளித்து பதிப்பித்துக் கொண்டும் இருக்கிறர்.
இதுவரை வெளிவந்துள்ள தொகுப்புகள்:

1. கானல் சதுரம்- கவிதைத் தொகுதி-1998 'கனவு' வெளியீடு '8/707. பாண்டியன் நகர், 12, வாணிய வீதி, திருப்பூர்
2. சமகாலப் புள்ளிகள்  -1988 சிறுகதைத் தொகுதி அருள் பதிப்பகம்' வெளியீடு -641 602 குறிஞ்சிப்பாடி-607 302 
3. பறத்தல் அதன் சுதந்திரம் தொகுப்பாசிரியர்கள் கிருஷாங்கினி, மாலதி மைத்ரிஉலகளாவிய தமிழ் பெண் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு காவ்யா பதிப்பகம்,
 4. பரதம் புரிதல் சதுரம் பதிப்பகம்,சென்னை-47 சென்னை
5. கிருஷாங்கினி கதைகள்  சதுரம் பதிப்பகம், சென்னை-47
6. அணங்கு  'இந்திய மரபும் பெண்ணும்' பெண்ணியம் சார்ந்த கட்டுரைகள் 2004
மருதா பதிப்பகம்226(188) பாரதி தெருராயப்பேட்டைசென்னை-600014.

முகவரி
க்ருஷாங்கினி(பிருந்தா நாகராஜன்)
ப.எண்.98/ பு.எண். 34.சிட்லபாக்கம் 2வது பிரதான சாலை
தாம்பரம் சானடோரியம்(கிழக்கு)
சென்னை-600 047தொ.பே.எண். 044-2223 1879
e.mail: nagarajan63@gmail.com

அறிவைத் திறக்கும் போதையும், கண்களை மறைக்கும் போதையும்-கட்டுரை

சென்ற ஆண்டு புத்தகக் கண்காட்சி சார்ந்த புதுப்புனலில் இடம்பெற்றது
 
அறிவைத் திறக்கும் போதையும்,
கண்களை மறைக்கும் போதையும்

ஜனவரி மாதம், வரும் பொங்கலையும், மாட்டுப் பொங்கலையும், திருவள்ளுவர் தினத்தையும் ஒட்டி மூன்று நாட்கள் அல்லது வார இறுதியில் என்றால் தொடர்ந்து நான்கு அல்லது ஐந்து நாட்கள் கூட விடுமுறை விடப்படும். பள்ளிகள், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் (இரண்டு நாட்கள்) என அனைவருக்கும் கிடைக்கும் விடுமுறையைப் பயனுள்ளதாக மாற்றும் பொருட்டு அமைக்கப்பட்டது புத்தகக் கண்காட்சி. இது கடந்த 35 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இந்த ஆண்டு அறுபது லட்சம் புத்தகங்கள் விற்பனையாகி இருக்கிறது. ஆறு லட்சம் மக்கள் கண்காட்சியைக்கண்டு களித்துள்ளனர். குழந்தைகளும், ஆண்களும், பெண்களுமாக அந்த இடமே நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. அந்த வழித் தடங்களைப் பார்க்கும் பொழுது இந்த விற்பனை குறைவுதான். மக்கள் கூட்டத்திற்கு இடையில் நீந்தி, நீந்தி நூல் வாங்கும் கடை எண் தேடி அலைந்த போது எனக்கு மாம்பலம் ரங்கநாதன் தெருவுக்குள் சென்று கொண்டிருக்கிறேனோ என்ற ஐயம் ஏற்பட்டது. அத்தனை விதமான,  அத்தனை நிலைகளில் மனிதர்கள் சென்று கொண்டே இருந்தனர்.

இந்த ஆண்டு புதுப் புத்தகங்களின்  வரவு அவ்வளவாக இல்லை என்றே சொல்ல வேண்டும். நூலக ஆணையை மூன்று ஆண்டுகளாகக் காணாத என் போன்ற சிறு பத்திரிகை எழுத்தாளர்கள் புத்தகம் போடத் துணியவில்லை. புத்தகத்தை வெறும் பொருளாகப் பார்க்காமல் உயிராகப் பார்க்கும் என்னைப் போன்ற பலரும் இதையே கூறினர்.

ரங்கநாதன் தெருவுக்குள் செல்வோருக்கு நிச்சயம் ஒரு நோக்கம் இருக்கும். துணி, நகை, அல்லது மின்சாதனங்கள் என எதையோ ஒன்றை வாங்க வேண்டியிருக்கும். அதை வாங்கும் கடைகளைத் தேர்வு செய்வதில்தான் குழப்பம், விவாதம் இருக்கும். எனவே எல்லோரும் எதோ ஒரு கடையின் முத்திரை இடப்பட்ட பிளாஸ்டிக் பைகளில்- அந்தந்தப் பொருட்களின் அளவுக்கு ஏற்ப பெரியதாகவோ சிறியதாகவோ -நிச்சயம் கைகளில் கொண்டு தம் இருப்பிடம் திரும்புவர். அங்கு பணப்புழக்கமும், வியாபாரமும் ஏற்றமாகவே இருக்கும்.

ஆனால், புத்தகக் கண்காட்சிக் கூட்டம் நிறையப் பார்வையாளர்களைக் கொண்டதாக மட்டுமே தங்கி விட்டதாக  எனக்கு எண்ணம். நிறைய மக்கள் வெற்றுக் கைகளுடன், அல்லது எதோ கொறிக்கும் பொருட்களுடன் வெளியில் வந்து கொண்டிருந்தனர். சென்ற ஆண்டு ஐந்து லட்சம் மக்கள் கண்டு களித்தனர். ஐம்பது லட்சம் புத்தகங்கள் விற்பனை என்று புள்ளிவிவரம் குறிப்பிட்டாலும்கூட.

இதே பொங்கல் தொடர் விடுமுறையை ஒட்டி தொடர்ந்து ஏறுமுகத்தில் உட்சபட்ச வருமானத்தை எட்டிப்பிடித்த மற்றொரு வியாபாரம் மது. இக்கடைகளினால் அரசுக்குக் கிடைத்த இந்த ஆண்டு வருமானம் - அதிகமில்லை ஜெண்டில் மேன் 260 கோடிதான். மதுக்கடைகளில் காணும் கூட்டமும் திருவிழாக் கூட்டம்தான். ஆனால் அங்கு வரும் மக்களின் எண்ணிக்கையை விட வசூல் ஆகும் பணம் பெருந்தொகை. ரங்கநாதன் தெருவையும், புத்தக் கண்காட்சியையும் இன்ன பிற பிற இடங்களைக் காட்டிலும் வருமானம் மிக மிக அதிகம்.

உடல் பணிபுரிவோரின் உழைப்பையும், அதன் வலியையும், நாற்றத்தின் பிடியிலிருந்தும் விடுவித்துக் கொள்ள, அவைகளை மறக்கச் செய்யும் ஒரு பொருள் மது என்பதில் மாற்றுக் கருத்து  இருக்க முடியாது. அது போன்ற ஒரு தொழில் புரியும்  மக்களே இல்லாத நிலை உருவாக வேண்டும் என்று எல்லோரும் எண்ணவும் எண்ணுகிறோம். எனவே அது சிலருக்குத் தேவையானது என்று சொல்லப்படுவது ஏற்கக் கூடியதே. அது உண்மையும் கூட. தெருவில் பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் சக மனிதரைப் பணியாளரைக் காணும் போதெல்லாம் உறைக்கும் உண்மைதான் அது. ஆனால், 260 கோடி ரூபாயும் உடலுழைப்பைத் தொழிலாகக் கொண்ட உழைப்பாளின் வருமானமாக மட்டும் இருக்கவே முடியாது. இவ்வளவு பணம் செலவழிக்கும் அளவிற்கு தொழிலாளியின் வருமானமும் கிடையாது. இந்த வாருமானம் மூன்று தலை முறையாகப் படித்த அனைத்துத் தரப்பு மக்களிடமிருந்தும் பெறப்படுகிறது. படிப்பறிவு இல்லாத உடலுழைப்பின் வாரிசாக இருக்கும் படித்த மக்கள், படித்த பெற்றோரின் அடுத்த தலைமுறை, அடுத்த தலைமுறையின் கல்லூரியில் படிக்கும்  மக்கள் என கொத்துக் கொத்தாய் கூடி இருக்கின்றனர் இவர்கள். கல்வி அறிவைத் திறக்கும், கல்வி அதன் பசியை அதிக்கப்படுத்தும், எனவே புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்கச் செய்யும். நூல்கள் எல்லோர் இல்லங்கள¨யும் அலங்கரிக்கும், பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு நூல்களயும், அதனால் தாம் பெற்ற அறிவையும் சொத்தாக விட்டுச் செல்வர். தீயால் அழிக்க முடியாத, வெள்ளத்தால் கொண்டு செல்ல இயலாத அறிவு பல்கிப் பெருகும், என்பதெல்லாம் வெறும் மாயையாகிப் போனது. எல்லோரும் (ஆண்கள்) தங்களின் வருமானத்தில் ஒரு பகுதியைக் குடியில் செலவிடுகின்றனர். அதற்கு அடுத்த தலைமுறையையும் போதைக்குள் இழுத்து விடுகின்றனர் என்பதுதான் தெளிவாகத் தெரிகிறது. இல்லா விட்டால் பன்னிரெண்டு நாட்களில் 6 கோடி ரூபாய்க்கு புத்தகமும், (ஒரு குறியீடாக சொல்லப்பட்ட பணம் இந்த அளவு. இன்னமும் குறைவாகவும் இருக்கலாம்.) மூன்றே நாட்களில் 260 கோடி ரூபாய் மதுவும் விற்பன¨யாகுமா? கூட்டம் என்பது வேறு. வியாபாரம் என்பது வேறு. இந்த ஆண்டும் இந்த மூன்று நாட்கள் விடுமுறை இதைத்தான் உறுதி செய்துள்ளது.