Tuesday, January 22, 2013

ஒலிக்காத இளவேனில்-கவிதைத் தொகுப்பு விமர்சனம்

ஒலிக்காத இளவேனில்

கனடாவில் வாழும் புலம்பெயர்ந்த இலங்கைப்  பெண்களின் தொகுப்பாக வடலி பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கிறது ‘ஒலிக்காத இளவேனில்'. 2009 ஆம் ஆண்டு கனடாவில் வெளியிடப்பட்ட இந்தத் தொகுப்பு எனக்கு 2012 இன் இறுதியில் ஜெ. சாந்தாராமின் மூலம் வந்தடைந்தது.  மூன்றாண்டு காலம் கழிந்தபின்னும் இந்த நூல் பரவலாக அறியப்படவில்லை. இதை நினைக்கும் போது ஏற்பட்ட தடைகளைத் தவிர, உண்டாக்கப்பட்ட தடைகளும் கூட காரணங்களும்  இருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது.  பெண் எழுத்து எப்போதும் போராடிப் போராடித்தான் வெளிவர வேண்டியிருக்கிறது என்பது இன்னும் ஒருமுறை நிரூபணம் ஆகியிருக்கிறது.

இந்தத் தொகுப்பில் பதினெட்டுப் பெண்களின் கவிதைகள் உள்ளன.  கவிதைகள் கருப்பொருள் வாரியாகப் பிரிக்கப்பட்டு, உள்ளீடு கொடுக்கப்பட்டிருப்பது ஒருவித சமனை உண்டாக்கி உள்ளது. தலைப்பில்லா கவிதைகளுக்கு அதன் முதல் வரியே உள்ளீட்டில்கொடுக்கப்படிருப்பதும் வாசிக்கக் கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு எளிய வழி.  தேசம் யுத்தகாலம், யுத்த நிறுத்தம், புலம் பெயர்வு-மாணவம், குடும்பம் எனவும் பெண் வாழ்வியல் என்ற ஒரு தனிப் பிரிவும் கொடுக்கப்படிருந்தாலும் அனைத்துமே பெண்கள் வாழ்வியல் என்ற அடிப்படைப் பார்வையிலேயே உருவானதுதான். இதில் எழுதி இருக்கும் கவிஞர்கள் சில பெண்கள், தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு சில இலக்கிய அமைப்புகளுடன் இணைந்து முன்னமே கவிதை தொகுதிகள் வெளியிட்டும் இருக்கிறார்கள். அதனால்  பரவலாக அறியப்பட்டும், அதிகம் பேசப்படுபவர்களாகவும் இருக்கிறார்கள்.

யுத்தம், யுத்தத்தின் விளைவு பற்றிய பதிவு இல்லாமல் இலங்கைக் கவிதைகள் இருக்க முடியாது. அதன் காரணமான புலம் பெயர்வு, புகலிடத்தில் இணைய முடியாத தனிமைத் திணறல், அதன் பின் தாய் மண் கனவுகள் கொஞ்சம் அடித்தட்டுக்குள் செலுத்தப்பட்ட நிதர்சன வாழ்க்கை என எல்லாமே பதிவாகி உள்ளன.

கவிஞர்கள் பற்றிய குறிப்புக்கள் மிக முக்கியம் என நான் கருதுகிறேன். அவர்களின் வாழ்வனுபவத்தின்  ஊடாக கவிதைகளை கருத்தில் கொள்ள இயலும். கவிஞர்களின் பிறந்த ஆண்டும், புலம் பெயர்ந்த ஆண்டும் இருந்திருந்தால், இன்னமும் தெளிவு பெற அது உதவும்.

மொழி தமிழ் என்பதானாலும் கூட அந்தந்த வட்டாரப் பிரிவு, மதம் சாதி எல்லாவற்றையும் உள்ளடக்கியதாகத்தான் கருத வேண்டி உள்ளது. மொழியை வாயைத் திறந்து முழுதாக உச்சரிக்கவும், உதடு பிரிபடாமல் அடுத்தவர்களிடம் கொண்டு சேர்க்கவும் அவரவர் வாழும் நாட்டின் தட்பவெட்பம் காரணியாகிறது.  மேலும் தாய் மொழியுடன், அந்தந்த வாழ்விடத்தின் சூழலும், அனுபவமும் இணைய மொழி இன்னமும் மாற்றம் கொள்கிறது. தாய் மண்ணுடன் இணைந்தே.

மொழி மாற்றம் கொண்டாலும், ஆண்களின் அடிப்படை மொழி மாறாமல்  தொடரும் நிலையை மோனிக்காவின் ‘இயந்திரப் போக்கு' கவிதையில் பர்க்க முடிகிறது. எல்லா மக்களுக்கும் துன்பம் தரும் யுத்தம் ஒருபக்கம் தனது இருப்பை உணர்த்திக் கொண்டே இருந்தாலும் கூட, ‘வெறும் பெண்' என்ற  தொனியைக் காணும் பொழுது அதிர்ச்சி அளிக்கிறது. பொது துக்கம் கூட மாற்ற இயலாத போது வேறு எது இவர்களுக்குள் மாற்றத்தைக் கொடுக்கும்?

தாய் மண்ணிலிருந்து பெண்களை மணந்து கொண்டு வரும் ஆண்கள், சிலர், அவர்களுக்கு ‘வீட்டு விஷயங்கள் வெளியே போகக்கூடாது என்ற பெயரில் வாய்ப்பூட்டு மட்டுமல்ல  பெண்ணின் வெளியையும் குறுக்கி ஒருவித மூச்சுத் திணறலுக்கு ஆளாக்குகிறார்கள் என்றால் என்ன சொல்வது?  இந்த ‘பளப்பளப்பான' குடும்ப விஷயம் சொற்கள் உள் வன்முறைக்கு வழிவகுக்காது என்பது என்ன நிச்சயம். இவை  துர்காவின் கவிதைகளில் காண முடிகிறது. மைதிலியோ ‘தயவு செய்து கவிதை கேட்காதீர்கள்'  என்று நுழைவிடத்திலேயே போர்ட் மாட்டிவிடுகிறார்.  இளம்பிறையின் கவிதையிலும் இது போன்ற பதிவு ஒன்று உண்டு. குடும்பப் பின்ணனியில் கவிதைகள் கொலை செய்யப்படுகின்றன. போரின் பிண்ணனியில்  சொல்லவே தேவை இல்லை. கலைகள் கொலை செய்யப்படுகின்றன என்றும் கூறலாம். பீரோக்களில், கொதிக்கும் குழம்பில், மனத்தின் அடியில், கனவுக்குள், வெளியில் யாருக்கும் தெரியாமல், உரத்து சொல்ல இயலாமல் என்றபடி, போரும், அதன் விளைவுகளும், குடும்பமும், பெண்ணை மனச்சீரழிவுக்கு  ஆளாக்கி அலைக் கழிக்கிறது. தற்கொலையும், மரணமும் மட்டுமே சிறு சலனத்தை சிறிது நேரம்- தொகுப்பாளரின் முன்னுரையில் கூறுவது  உண்டாக்குகிறது. பிறகு சுலபமாக மறக்கவும் படுகிறது. வாசிப்போரின் மனம் பீதிக்குள்ளாவதைத் தவிர்க்க முடியவில்லை. போர் அதனால் ஏற்பட்ட வன்முறை, குடும்பத்தை இழந்த தனிமை, குடும்பம் உண்டானதால் தனிமை, என்று பலவும் பெண்களின் மன நலத்தைச் சிதைக்கிறது. கடல் கடந்தும், நாடு இழந்தும், இன்னமும் சாதி, மதம், சடங்குகள் என பின்பற்றும் மக்கள், என  எல்லாக்குரல்களும் இணைந்த நூல் இது.

காதல், காமம், உடல் குதூகலம், உடல் மறுப்பு என எதுவும் சிந்திக்க இயலாத பெண்கள். நிறைய துக்கப்பதிவுகள். எதையோ அல்லது யாரையோ சார்ந்த தொடர் வாழ்க்கைப் பதிவுகள்.

நிவேதாவின் கவிதைகள் என்னை மிகவும் ஈர்த்தன. சிறப்பாகவும், ஆழமாகவும், இருக்கின்றன. மாணவி என்றும் அறிந்தேன். கவிதை மிக அற்புதமான வடிவம் கொண்டு வெளிவருகின்றன. துருத்திக் கொண்டு இல்லாத உணர்வு வெளிப்பாடு, பாசாங்கற்ற உண்மையான நிலையை எடுத்துரைத்தல், குறியீடுகளும், படிமங்களும், உதாரணங்களும் புதிய தளத்திலிருந்து கையாளப்படுவது, கையறு நிலை உணர்த்துதல், பயத்தையும், மரணத்தையும், கலையையும் இணைத்து மென் உணர்வுகளுடன், கடும் (கனத்த) துயரங்களும் நிறைந்த சொற்களைக் கொண்டும்  கவிதை கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

தொகுப்பாளரின் குறிப்பும் பிற் சேர்க்கையும் மிக கவனம் கொண்டு படிக்க வேண்டியவை. சொல்லித் தீர்க்க முடியாத கோபங்கள், ஆதங்கங்கள் நிரம்பிக் கிடக்கின்றன.

பெண்களின் எழுத்து இன்னமும் இன்னமும் அதிகமாகத் தொகுக்கப்பட வேண்டியவை. பதிக்கப்படாவிட்டால் காலப்போக்கில் மறதிக்கு ஆளாகும்.
படைப்பாளி என்ற தன்னிச்சைப் போக்கிலிருந்து மாறுபட்டது, தொகுப்பது.  தொகுப்பாளரின் பார்வையும், தேர்வில் -தெரிந்தும், தெரியாமலும்- சேர்க்கையும், நிராகரிப்பும் அரசியலும் உள்ளடங்கியதுதான். இதிலும் அரசியல் இருக்கலாம்.  எழுத்து என்பதே அரசியல்தான். கவிதைகளை மேற்கோள் காட்டாமல் எழுதி இருக்கிறேன். தேடிப் படிக்கட்டும் ஆர்வலர்கள்.

கருப்பொருள், வடிவம், உத்தி, சமகாலப் பார்வை என எல்லாவற்றையும் உள்ளடக்கியதாக பல கவிதைகள் உள்ளன இத்தொகுப்பில். உணர்வுகள் கவிதையாய் மாற்றப்படாமல் சில கவிதைகளும் காணக்கிடைக்கின்றன. உணர்வுகள் கவிதையாய் மாற சில காலமும்,  பக்குவமும் தேவைப்படுகிறது  ஆனாலும் பெண்கள் எழுத்து (இத்தனை துன்பங்களுக்கும், பிரிவுகளுக்கும், மரணங்களுக்கும் இடையில்) எழுதப்பட்ட இவ்வகை எழுத்துக்கள் இன்னமும் பரவலாக வெளிச்சத்திற்கு வரவேண்டியவையே. நல்ல வடிவத்தில் வடலியினால் வெளியிடப் பட்டிருக்கிறது, 'ஒலிக்காத இளவேனில்'.
தொகுப்பு:தான்யா,பிரதீபா கனகா-தில்லைநாதன்
வடலி வெளியீடு
Email:sales.vadaly@gmail.com

Friday, January 18, 2013

குருவே சரணம் நூலிலிருந்து-திருச்சூர் ராமசந்திரன்

திருச்சூர் ராமசந்திரன்

குடும்பத்தில் ஒன்றிய இசை

என் பூர்வீகம் கேரளாவில் உள்ள திருச்சூர். 1940 இல் பிறந்தேன். என் அப்பாவுக்கு சீப் ஜட்ஜ் (தலைமை நீதிபதி) உத்தியோகம். என்னுடன் பிறந்த வர்கள் அதிகம். சிறுவயது முதலே நான் சங்கீதம் கற்றுக்கொண்டு இருக் கிறேன். அதற்குக் காரணம் என் அம்மாதான். எனக்கு நான்கு வயதாக இருக்கும்போதே காலை நான்கு மணிக்கு எழுந்து, என் அம்மா பக்திப் பாட்டுக்கள் பாடுவார். என் சகோதரிகளும் சங்கீதம் கற்றுக்கொண்டனர். இதனால், சங்கீதம் கேட்கும் வாய்ப்பு எனக்கு சிறு வயதிலேயே அதிகம் கிட்டியது. எனவே எனக்கும் சிறு வயதிலேயே பாட்டு கிட்டியது. நான் பி.எஸ்.சி. படித்து முடித்த உடன் சங்கீதத்தையே பிரதானமாக எடுத்துக் கொள்ள முடிவெடுத்தேன்.

மருத்துவக் கல்லூரியிலிருந்து  குருவிடம்

என்னுடைய ஏழாவது வயதில் வர்கலா சுப்ரமணிய பாகவதரிடம் இசைப் பாடம் ஆரம்பித்தேன். அதன் பிறகு திருப்பனந்துறை கிருஷ்ண அய்யரிடம் மேற்கொண்டு கற்றேன். படிப்பும் நன்றாக வந்தது. எனக்கு மெடிக்கல் சீட் கிடைத்தது. நான் மெடிக்கல் கல்லூரியில் சேர்ந்தும் விட்டேன். அப்போதுதான், திரு ஜி.என்.பாலசுப்ரமணியம் அவர்களிடம் சங்கீதம் பயில  வந்து சேர்ந்தேன். அவர் அப்போது பெரிய வித்வான். மிகவும் பிரபல மானவர். அவர் என்னைப் பாடச் சொல்லிக் கேட்டார். பிறகு, ‘உனக்கு சங்கீதத்தில் ஒரு உன்னத இடம் கிடைக்கும். அதற்கு நான் பொறுப்பு. எனக்கு என்ன என்ன தெரியுமோ அவற்றையெல்லாம் உனக்கு சொல்லித்தருவேன். நீ சங்கீதத்திற்கே வா' என்றார். அதைவிட எனக்கு வேறு என்ன பெரிது? இவ்வளவு பெரிய வித்வான் சொல்கிறார். எனவே நான் மெடிக்கல் காலேஜில் படிப்பதை விட்டுவிட்டு ஜி.என்.பி. அவர்களிடம் வந்து சேர்ந்தேன். சங்கீதத்தையே தொழிலாகக் கொள்ளத் தீர்மானித்தேன். அவருடன் ஐந்து ஆண்டுகள் இருந்து சங்கீதம் கற்றேன். அவரின் சிஷ்யனாக சேர்ந்தது மஹா பாக்யம். அந்த ஐந்து வருட அனுபவம் ஐம்பது வருட அனுபவத்திற்குச் சமம்.   எனக்கு மறக்க முடியாத நிகழ்ச்சி என்றால், என்னுடைய இருபத்தோ ராவது வயதில் சங்கீதம் கற்க என் குருநாதரான ஜி.என்.பி. அவர்களிடம்  சேர்ந்ததைத்தான் சொல்ல வேண்டும். அந்த நாட்களில் எங்கள் ஊரில் கோவில் விழாக்களில், திருமணங்களில், பொது விழாக்களில் பெரிய பெரிய வித்வான்கள் வந்து பாடுவார்கள். நிறைய கச்சேரிகள் நடைபெறும். அவற்றை யெல்லாம் நான் போய் கேட்பேன். அப்படித்தான் ஒரு முறை ஜி.என்.பி. அவர்கள் வந்து பாடினார். ‘சரசிஜநாப சோதரி' என்ற பாடலைப் பாடினார். இப்போதும் அது நினைவுக்கு வருகிறது. அதைக் கேட்டு மயங்கினேன். அவரிடம் சென்று கற்க மாட்டோமா என்ற தாபம். அது கிடைப்பதற்கும் ஒரு நாள் வந்தது.

என் அம்மா என்னை அவரிடம் அழைத்துச் சென்றார். ‘இவன் சுமாராகப் பாடுகிறான். உங்களிடம் சேர ஆசைப்படுகிறான். நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அப்படிச் செய்யலாம்'' என்று சொன்னார். என்னைப் பாடச் சொல்லிக் கேட்டார். பின், “நாளை முதல் வந்து விடு” என்று கூறினார். மறுநாள் பாடம் ஆரம்பித்து விட்டார். இக்காலத்தில் பெற்றோர், ‘இவன் மிக நன்றாகப் பாடுகிறான் இவனுக்கு நீங்கள் சொல்லிக் கொடுங் கள்' என்று பேசி குருவையே அசத்தி விடுவார்கள். 

அப்போது ஜி.என்.பி. திருவனந்தபுரத்தில் ஸ்வாதித்திருநாள் இசைக் கல்லூரியில் முதல்வராக இருந்தார். சங்கீத வித்வான்களுடன் இருக்கும் பொழுதுதான் சங்கீதத்தின் நுட்பங்கள் எல்லாம் நன்கு தெரியும். இருபத்தி நான்கு மணி நேரமும் அவர் கூடவே இருக்கும்பொழுது சங்கீதம் சம்பந்த மாகத்தான் பேசுவார். மஹா வித்வான்கள் எல்லோரும் அவரைப் பார்க்க வருவார்கள். சங்கீதத்தைப் பற்றி நிறைய சர்ச்சைகள் செய்வார்கள். அப்போது நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. இப்போது இது போன்ற வாய்ப்புக்கள் கிடைப்பதில்லை. குருகுலவாசம் சுத்தமாக இல்லாமல் போய் விட்டது.

குருவிடம் பயிலுதல்

நான் அவரிடம் ஐந்து ஆண்டுகள்தான் இருக்க முடிந்தது. திடீரென்று என்னுடைய குருநாதர் தமது 54 வது வயதில் காலமானார். நான் அதன் பிறகு என்ன செய்வது என்கிற குழப்பமான மனோநிலையில் இருந்தேன். ஒன்றும் புரியவில்லை. அந்த நேரத்தில் எனக்கு மத்திய அரசின் ‘ஸ்காலர்ஷிப்' எனப்படும் ஊக்கத் தொகை ஜி.என்.பி. அவர்களின் மேற்பார்வையில் கற்கத் தான்  கிடைத்தது. ஆனால் அவர் காலமாகி விட்டதால், அந்தப் பாணி மாறக் கூடாது என்பதால் எம்.எல்.வசந்தகுமாரி அவர்களின் பெயரைப் போட்டு மாற்றிக் கொண்டேன். இரண்டு ஆண்டுகள் அவரிடம் கற்றுக் கொண்டேன். அதன் பிறகும் கூட அந்த அம்மையாரிடம் நிறைய உருப்படிகள் கற்றுக் கொண்டேன். நிறைய கச்சேரிகள் கேட்டேன்.  மதுரை மணி அய்யர், மஹா ராஜபுரம் விஸ்வநாத அய்யர், ஆலத்தூர் சகோதரர்கள், நாதஸ்வரம் போன்ற இசைக்கருவிகள் என்று பலவகையான கச்சேரிகள் கேட்டேன். கேட்டுக் கேட்டு இன்னமும் என்னைத் தெளிவுபடுத்திக் கொண்டேன். மேம்படுத்திக் கொண்டேன் என்பதும் பொருந்தும். “நாம் அனைவரும் வித்யார்த்திகள், வித்வான்கள் அல்ல.  அனைவருமே என்றுமே மாணவர்கள்தான். எப்போதும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். சங்கீதம் ஒரு கடல் அல்லவா?  அதில் முழுவதும் கற்றுக்கொண்டுவிட்டேன் என்று யாரும் கூற முடியாது. பாடிப் பாடி நம்மை நாம் மேம்படுத்திக்கொள்ள வேண்டும். கச்சேரிகள் கேட்கும் போதே எந்த வித்வான் எப்படிப் பாடுகிறார் என்று கவனமாய் கேட்டு அதை நாம் பயிற்சி செய்து அதில் உள்ள நல்ல விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் ‘ஏன்? எதற்கு?' என்பதும் அவரவர் முயற்சியாலேயே தெளிவு கிட்டும்.'' என்றெல்லாம் என் குருநாதர் கூறுவார். அவர் எனக்கு குருவானதும், அவரைப் போன்ற ஒருவரின் ஆசி கிட்டியதும் பெரும் பேறு என்று நான் கருதுகிறேன். என்னைத் தன் மகனாகவே எண்ணிப் பழகினார்.

என் குருநாதர் எப்போதும் கச்சேரிகளில் புதிது புதிதாகத்தான் பாடுவார். அப்போது நிறைய  புதிய  விஷயங்கள் தெரிந்துகொள்ள முடியும். புதுமையாக இருக்கும். மாணவர்களுக்கு நிறைய பாடங்கள் கிடைக்கும். நேற்றுப் பாடியதுபோல் இன்று பாட மாட்டார். அவரொரு லட்சிய வித்வான். லட்சண வித்வானும்கூட. மேலும், படித்தவர். அவர் வித்வான்களில் தனித் தன்மையுடன் மிளிர்ந்தார்.

குருவின் பயிற்சி முறை

என் குருநாதர் பாட்டு கற்றுக் கொடுக்கும் முறையைப் பற்றிக் கூற வேண்டும். அவர் தன் சிஷ்யர்கள்  எல்லோரும் பிரகாசமான அறிவோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார். ‘சொல்லிக் கொடுத்த உடன் பிடித்துக் கொள்ள வேண்டும். இந்தப் பாணி சற்று கடினமானது. எனவே, எளிமையாய் கற்றுக்கொண்டுவிட முடியாது. உண்மையான சங்கீதம் ‘வாய்ஸ் கல்ச்சர்' எனப்படும் குரல் வளத்தைப் பெருக்கிக் கொண்டால்தான் சரியாகப் பாட வரும். நுணுக்கமாக கவனிக்கும் திறன் படைத்தவர்களுக்கே இது பிடி படும். சொல்லிக் கொடுப்பது கஷ்டமான காரியம் அல்ல. ‘ஒரு கீர்த்தனையை இரண்டு நாட்களில் கூட பாடம் செய்துவிடலாம். அப்புறம் அதை கச்சேரியில் பாடப் பாட சரியாகி விடும்' என்பார்.

அவர் பழகுவதற்கு மிக எளிமையானவர். அன்பானவர். மிகவும் நட்போடு பழகுவார். கச்சேரியின்போது அவருடைய ரசிகர்கள் எல்லோருமே கூட்டம் கூட்டமாக அமர்ந்து அன்று புதிதாக என்ன பாடப் போகிறார், எப்போது ஆரம்பிப்பார் என்று மிகவும் ஆர்வத்தோடு, எதிர்பார்ப்போடு காத்திருப்பார்கள். கச்சேரியின் இறுதி வரை அனைவரும் இருப்பார்கள். ஏதாவது புதிதாகச் செய்வார் என்ற  எதிர்பார்ப்புதான் அதற்குக் காரணம்.


குருவுடன் சேர்ந்து கச்சேரிகளில் பாடியும் இருக்கிறேன். அவருடன் நான் இணைந்து பாடிய கச்சேரிகளில் மறக்க முடியாதது என்று இதைக் குறிப்பிடலாம். ஒரு முறை திருநெல்வேலியில் கச்சேரி. அங்கு சென்றபின் அவருக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. ஆனால் அங்கே உள்ள ரசிகர்களுக்கெல்லாம் ஏமாற்றம். ‘நாங்கள் எங்கெங்கிருந்தோ வந்திருக்கிறோம். கச்சேரி கான்சல் ஆகிவிட்டதே' என்று வருத்தத்துடன் சொன்னார்கள். ‘சாயங்காலம் பாடுகிறேன்' என்று ஜி.என்.பி. அவர்கள் சொல்லிவிட்டார். ஆனால் டாக்டரோ பாடவேகூடாது என்கிறார். ‘நான் பாடுவேன், ரசிகர்கள் எதிர்பார்ப்போடு வந்திருக்கின்றனர். அவர்கள் ஏமாற்றம் அடையக்கூடாது' என்று கூறி, சாயங்காலம் மூன்று மணிக்கு உள்ளூரில் பக்க வாத்யக்காரர்கள் யாராவது இருக்கிறார்களா என்று கேட்டார். நெல்லை மணி வயலின், நெல்லை தேவராஜன் மிருதங்கம். கச்சேரி மிக நன்றாக அமைந்தது. நான்கு மணி நேரம் கச்சேரி செய்து ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி விட்டார். அன்றைய கச்சேரி அமர்க்களமாக அமைந்தது. தன் உடல் நிலையையும் பொருட்படுத்தாது ரசிகர்களுக்காக, அவர்கள் தம்மீது வைத்திருந்த மரியாதைக்காகப் பாடினார். நல்ல கூட்டம். மக்கள் நன்கு ரசித்தனர்.

என் குருநாதரே என்னுடைய கச்சேரியை ஒரு முறை கேட்டிருக்கிறார். அவர் முன் பாட எனக்கு மிகவும் பயம். ஆனால் அவர் என் பயத்தைப் போக்கி பாடும் முறைகளைக் கற்றுக் கொடுத்து, எந்த எந்த ராகங்களைப் பாட வேண்டும், என்று சொல்லிக் கொடுத்து நான் பாடியதைக் கேட்டார். மும்பை ஷண்முகாநந்த சபாவில் அன்று நல்ல கூட்டம். பாலக்காட்டு மணி அய்யர் மைக்கின் முன் வாசிக்க மாட்டார். மைக் இல்லாமல் யாரும் பாட மாட்டார்கள். அன்று நான் பாடினேன்.

புதுப் பாணியை உருவாக்கிய எனது குரு

என் குருநாதர் எந்த குருவிடமும் பயிலாதவர். அது உங்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். ஆனால் அதுதான் உண்மை. அவர் இயற்கையிலேயே நல்ல குரல்வளம் கொண்டவர். அவருடைய அப்பா நன்றாகப் பாடுவார். பெரிய வித்வான்கள் அவர் வீட்டிற்கு வருவார்கள். மஹாராஜபுரம் விஸ்வநாத அய்யர் போன்றோரையெல்லாம் அவர் தனது வீட்டில் சந்தித்து இருக்கிறார். வீட்டில் சங்கீத சர்ச்சைகள் நடக்கும். அதைக் கேட்டுக்கேட்டு தனது ஞானத்தை வளர்த்துக்கொண்டு இருக்கிறார். அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் போன்றோரை தனது மானசீக குருவாகக் கொண்டு தானே கற்றுத் தேர்ந்து பெரிய இசைக் கலைஞர் ஆனார். அவர் தனது தங்கம் போன்ற குரலை நன்கு பயன்படுத்தி தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டவர். அவருடைய குடும்பத்தில் யாரும் சங்கீதத்திற்கு வரவில்லை. அவருடைய சிஷ்யனாக நான் வந்திருக்கிறேன். அவருடைய ஆசீர்வாதத்தில் பாடிக்கொண்டு இருக்கிறேன். அவருடைய இன்னொரு சிஷ்யர் கல்யாண ராமனுடன் இணைந்து கச்சேரி செய்து இருக்கிறேன். மஹாராஜபுரம் சந்தானமும் நானும் நெருங்கிய நண்பர்கள். அவருக்கு என் குருநாதரின் பாட்டு மிகவும் பிடிக்கும். எனக்கு சந்தானத்தின் பாட்டு மிகவும் பிடிக்கும். நானும் அவரும் சேர்ந்து ஐந்து, ஆறு  கச்சேரிகள் செய்து இருக்கிறோம்.

குருவே என் பாக்யம்

ஜி.என்.பி. அவர்களுடன் செல்வதே ஒரு பெரிய பாக்யம். அதுவே ஒரு மறக்க முடியாத நிகழ்ச்சியாகும். அவருடன் இணைந்து போட்டோ ஒன்றும் எடுத்துக் கொண்டுள்ளேன். அப்போது அருகிலிருந்த பலருடனும் தானே அழைத்து போட்டோ எடுத்துக்கொண்டார். வாரத்தில் இரண்டு மூன்று கச்சேரிகள் நடைபெறும். ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்தாலும் குறை வாக இருந்தாலும் ஒரே மாதிரிப் பாடுவார். கூட்டம் எப்படி இருந்தாலும் அதில் ஞானமுள்ளவர்களும் இருப்பார்கள். எனவே அவர்களுக்காக உழைத்துப் பாட வேண்டும் என்பார். ராகங்களை விஸ்தாரமாக, மிக அழகாகப் பாடுவார். 

கற்பனைதான் நமது சங்கீதத்தில் உயர்ந்தது என்று பட்டணம் சுப்ரமணிய அய்யர் சொல்லுவாரென்று அவர் சொல்லியிருக்கிறார். எனது குரு, மஹாராஜபுரம் விஸ்வநாத அய்யர்,  செம்மங்குடி ஸ்ரீநிவாச அய்யர் ஆகியோர் கற்பனை வளத்துடன் பாடுவதில் வல்லவர்கள். எப்போதும் புதிதாகவும், மலர்ச்சியுடனும் பாடுபவர்கள். இவர்கள் சங்கீதம் எவ்வளவு முறை கேட்டாலும் அலுக்காது. எம்.எல்.வி. அம்மாவும் அப்படித்தான். சங்கீதம் அதிகம் கேட்க வேண்டும்.  கேள்வி ஞானம் மிக முக்கியம். என் குருநாதர் நளினகாந்தி, ஆபோகி, செஞ்சுகாம்போதி, ரஞ்சனி, தேவ மனோஹரி ஆகிய பல ராகங்கள் பாடுவார். ராகங்களைக் கையாள்வது எளிமையானது. அவற்றை விஸ்தாரமாகவும் பாடத் தெரியவேண்டும். சில நொடிகளிலும் அவற்றிற்கு ஜீவனூட்ட வேண்டும் என்பார். அப்படித் தெரிந்து கொள்வதும் பாடுவதும்தான் நாம் கற்ற ராகங்கள் என்பார். வீணை பாலசந்தர் ஒரு முறை என் குருவைப் பற்றி குறிப்பிடும் போது, ‘இவர் ஒரு ராகத்தை ஒன்றரை மணிநேரமும் பாடுவார், ஒன்றரை நிமிடமும் பாடுவார்' என்று குறிப்பிட்டுள்ளார். ரசிகர்களின் நாடி நரம்பினை அறிந்தவர்கள்தான் வெற்றி அடைய முடியும். ஜி.என்.பி. அவர்கள் நமக்குத் தெரிந்த, பிரபலமான பல ராகங்களில் சாகித்தியங்களும் இயற்றியுள்ளார். சிலதுதான் கிடைத்துள்ளன. இரண்டு தொகுப்பாகப்  போட்டாகிவிட்டது. இன்னமும் தேடிக் கொண்டு இருக்கிறோம். அவர் பாடிய பாடல்களை வைத்துக் கொண்டு செயல் முறை விளக்கம் (டெமான்ஸ்ட்ரேஷன்) செய்கிறோம். 200க்கும் மேற்பட்ட கீர்த்தனைகள் படைத்திருக்கிறார். அவற்றைத் தற்போதும் வித்வான்கள் பாடிக் கொண்டு இருக்கின்றனர்.

என் குருநாதர், ‘அபூர்வ ராகங்களை நன்றாகப்  பாடுவது  ஒன்றும் கஷ்டம் கிடையாது. நடை முறையில் உள்ள ராகங்களான தோடி, கரகரப்பிரியா, கல்யாணி, காம்போதி போன்ற ராகங்களைப் பாடுவதுதான் அதி முக்கியம். அதில் மனோதர்மங்கள், சங்கதிகள் எல்லாம் புதிது புதிதாகப் போட்டுப் பாடவேண்டும்' என்பார். நான்கு அல்லது ஐந்து மணி நேரம்கூட சிறிதும் சிரமம் இல்லாமல் அநாயாசமாகப் பாடுவார். எப்போதும் நேரம் தவறாமையைப் பற்றி முன்னமே குறிப்பிட்டுள்ளேன். இவற்றையெல்லாம் இக்கால வித்வான்களும் தெரிந்துகொள்ள வேண்டும், நடைமுறைப்படுத்த வேண்டும். தெரியாதனவற்றைத் தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதில் தவறே கிடையாது.

முதல் கச்சேரி

நான் என்னுடைய பதினான்காவது வயதில் எங்கள் ஊரான திருச்சூரில் முதன் முதலாக கச்சேரி செய்தேன். அப்போது முதல், கடந்த  ஐம்பது ஆண்டுகளாக எல்லா இடங்களிலும் பாடிவருகிறேன். தாம்பரத்தில் உங்கள் சபாவிலும் பாடி உள்ளேன். சபாக்களின் ஆதரவும் ரசிகர்களின் ஆதரவும் நிறையக் கிடைத்துள்ளது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா, ஸ்ரீலங்கா, ஜெர்மனி போன்ற பல நாடுகளுக்கும் சென்று கச்சேரி செய்து இருக்கிறேன். போகாத பெரிய நாடு என்பது ரஷ்யாதான்.

காஞ்சிப் பெரியவர், ஜீயர் மற்றும் சாயிபாபா

நான் காஞ்சி மடத்தில் பெரியவர் முன்னிலையிலும், ஜீயர் சுவாமிகள் முன்னிலையிலும், புட்டபர்த்தி சத்யசாய்பாபா முன்னிலையிலும் பாடி உள்ளேன். மஹாப் பெரியவர் முன்பாக நான் ஒரு முறை பாடியபோது, ஜி.என்.பி.அவர்களைப் பற்றிப் பேசி, அவர் பாடும் பாடல்களைப் பற்றிக் கூறினார். கானடா ராகத்தில் “பராமுக மேலரா'' என்னும் பாடலை எப்படி அமைத்துள்ளார் என்பதையும் பாடிக்காண்பித்தார். ‘அவைகளெல்லாம் உனக்குத் தெரியுமா?' என்றும் கேட்டார்.

எனக்கு எல்லோருமே பக்க வாத்தியம் வாசித்திருக்கிறர்கள். வயலினில் டி.என்.கிருஷ்ணன், எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன், லால்குடிஜி.ஜெயராமன், வி.வி.சுப்ரமணியம், எம்.சந்திரசேகரன் போன்றோரும்; மிருதங்கத்தில், உமையாள்புரம் சிவராமன், டி.கே. மூர்த்தி, பாலக்காட்டு மணி அய்யர் போன்று அநேகம் பேர் வாசித்திருக்கின்றனர்.

ஒருமுறை தாம்பரம் ம்யூசிக் கிளப்பில் எனக்குக் குரல் சரியில்லாத போது அதன் செயலாளர் பாஷ்யம் நிறையப் பேரை  அணுகிபோது, யாரும் பாட வரவில்லை. ஆனால் டி.வி. ராம்பிரசாத் வந்து பாடினார்.  நானும் அது போல பாடியிருக்கிறேன்.  ஏற்பாடு செய்யப்பட்ட வித்வானுக்குப் பாட இயலாமல் போனதற்கான காரணம் நேர்மையாய் இருக்கும் பட்சத்தில் அவருக்குப் பதிலாகப் பாடி இருக்கிறேன். டி.என்.சேஷகோபாலனுக்கு ரயில் தாமதம் ஆகிப் போனபோது, ஆறு மணிக்கு போன் செய்து  சொன்ன போதுகூட நான் போய் பாடியிருக்கிறேன். நாம் மட்டும் நினைத்தால் போதாது. எல்லோருமே அது போல எண்ண வேண்டும். எனக்கு எந்த வேறு பாடும் கிடையாது. கடைசி நிமிடத்தில் சொன்னாலும் காரணம் சரியாயிருந்தால் நான் போய் பாடுவேன். கோயமுத்தூரில்  உமையாள்புரம் சிவராமன் மிருதங்கம், ஹரிசங்கர் கஞ்சிரா. இந்தப் பக்க வாத்யங்களுடன் நான் செய்த கச்சேரி என்னால் மறக்க முடியாத ஒன்று. 1999 அல்லது 2000 ஆம் ஆண்டில் சென்னை மடிப்பாக்கத்தில் ஒரு கச்சேரி, ஆஞ்சநேயர் கோவிலில் நடைபெற்றது. உமையாள்புரம் சிவராமன் மிருதங்கம். அவரெல்லாம் கச்சேரி நன்றாக நடைபெற வேண்டும் என்ற எண்ணத்துடன் நிறைய சின்சியராக நினைத்து நல்ல முறையில் வாசிப்பவர். தான் நன்றாக வாசிப்பதாக ஒரு முறைகூடக் கூறிக்கொள்ள மாட்டார். அவர்கள்தான் உண்மையான கலைஞர்கள்.

நாராயணீயம், ஜி.என்.பி. அவர்களின் சாகித்யங்கள், தீட்சிதர் கிருதிகள் என்று நானும் என் மனைவி சாருமதியுமாக இணைந்து நூற்றுக் கணக்கில்   காஸட்டுக்கள்(ஒலிநாடா), சி.டி.(குறுந்தகடு) எல்லாம் கொடுத்திருகிக்றோம். எங்கள் மகள் சுபஸ்ரீயும் இப்போது பாடிக்கொண்டிருக்கிறள். அவளும் ஒலி நாடாக்களில் பாடி இருக்கிறாள். மூன்று பேரும் இணைந்து பாடுவது என்றால் வீட்டில் பயிற்சி எடுத்துக்கொண்டுதான் பாடுவோம். 

இசை உலகம் - அப்போதும், இப்போதும்.

அப்போது இசை உலகில் இவ்வளவு அரசியல் கிடையாது. எனது குரு தனி இடத்தை வகித்தார். அக்காலத்தில் நேர்மையும் உண்மையும் அதிகம் இருந்தது. இப்போது ஈடுபாடு குறைவாக உள்ளது. நான் ஒரு உண்மையைச் சொல்லியே ஆக வேண்டும். அந்தக் காலத்து ரசிகர்கள் போல் இப்போதைய ரசிகர்களும் இல்லை.  கச்சேரியின் கடைசிவரை எல்லோரும் இருந்து கேட்ப தில்லை. இப்போது ரசிகர்களுக்கு விஷயம் தெரியும். ஆனால் அது மட்டும் போதாது. ரசித்துக் கேட்க வேண்டும். அப்போதுதான் நுட்பங்கள் தெரியும். பாடும் வித்வான்களும் நன்றாகப் பாடுவார்கள். நிறைய நுணுக்கங்கள் தெரிந்து கொள்ள முடியும். ஜி.என்.பி.அவர்களைப் பார்க்க, அவரது கச்சேரியைக் கேட்டு ரசிக்க, மக்கள் ஓடி வருவார்கள். இப்போது ஆறு மணிக்கு கச்சேரி என்றால், வித்வான்களும், ரசிகர்களும் தாமதமாக வருகிறார்கள். ஆனால், அப்போது ஆறு மணிக்கு கச்சேரி என்றால், 5.30 மணிக்கே கூட்டம் கூடிவிடும். ரசிகர்களைக் காக்க வைக்கக் கூடாது என்று என் குருநாதர் அடிக்கடி கூறுவார். எங்கெங்கிருந்தோ இசை கேட்க மக்கள் வருகிறார்கள் அவர்களை நாம் காக்க வைக்கக் கூடாது என்பார் என் குருநாதர். ஆறு மணிக்கு முன்னதாகவே வந்திருந்து சரியாக ஆறு மணிக்குக் கச்சேரியைத் துவக்கி விடுவார். முன்பெல்லாம் நான்கு மணி நேரம் கச்சேரி இருக்கும். இப்பொதோ இரண்டரை மணி நேரம்தான் கச்சேரி. ராகம், தானம், பல்லவி பாட நேரமே இருப்பதில்லை. அனுபவித்துக்  கேட்க ஆட்களும் இல்லை. ‘ஃபாஸ்ட் புட்' எனப்படும் துரித வகை உணவு போல் ஆகிவிட்டது இசையும்.

இப்போதெல்லாம் கச்சேரிகளில் நிறைய சப்தம். இங்கேயே நாம் பேச முடிவதில்லை. அவ்வளவு சப்தம். அமைதியாக இருந்தால் நன்றாகக் கேட்கலாம். இளம் கலைஞர்கள் கூட மைக் இல்லாமல் பாடுவதில்லை. முன்பு ரசிகர்கள் அமைதியாயிருந்தார்கள். இந்நாட்களில் யாருக்கும் எதற்கும் நேரம் இருப்பதில்லை. எல்லாவற்றிக்கும் அவசரம்தான். சாப்பிட, தூங்கக்கூட நேரம் இல்லை யென்றால்,  கச்சேரி உட்கார்ந்து கேட்க ஏது நேரம்? பட்டங்கள், பட்டயங்கள், கலைமாமணி, பத்மபூஷன் எல்லாம் எனக்குக் கிடைத்திருக் கிறன்றன. ஆனால் அதை எல்லாம் நான் பெரிதாக நினைக்கவில்லை.  பெரிய வித்வான்கள் தங்களுடைய முன்னோர்கள்போல் பாட வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். அது போல நானும் புகழ்பெற்ற பழைய வித்வான் கள் போல் பாட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இசை பெரிய கடல். இதில் இவ்வளவுதான் என்று முடிவு கிடையாது. நிறைய பாட வேண்டும். நன்றாகப் பாட வேண்டும். இதுதான் என் ஆசை. இப்போதும் நான் மாணவன்தான்.

சாருமதி

நானும் எனது இசை பரிசோதனைகளும்

கச்சேரி மட்டும் பாடுவது என்றில்லாமல் புதிய சோதனைகளும் செய்து பார்க்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவள் நான். எழுபத்தியிரண்டு மேளகர்த்தா ராகங்களின் தாளங்களில் மிகப் பெரிய அட்சரம் கொண்டது கீர வாணி ராகம், கீரவாணி தாளம், நீதிமதி ராகம், நீதிமதி தாளம். அறுபத்தி எட்டாவது மேளகர்த்தாவில் பல்லவிக்கு முக்யத்துவம் கொடுத்து மியூஸிக் அகடெமியில் செயல்முறை விளக்கம் செய்தேன். எல்லோரும் பாராட்டினார் கள். ராகமாலிகையில் பல்லவி, அதாவது பல்லவிக்கு முக்யத்துவமும் அழுத்தமும் கொடுப்பதற்காக நிறைய செய்திருக்கிறேன். ‘கிருஷ்ணாமிர்த தரங்கிணி' என்று நானும் ராமச்சந்திரனும் இணைந்து எங்கள் மாணவர் களுடன் செய்து இருக்கிறோம். ‘கர்ணாமிர்த ஸ்லோகங்கள்', ‘கிருஷ்ண லீலா தரங்கிணி' பக்திப்  பாடல்களை, பக்க வாத்யங்களுடன் குழந்தைகளை வைத்து காஸட் செய்து இருக்கிறோம். இது நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தியாவில் மட்டுமல்லாது அமெரிக்காவிலும்கூட நிறைய பெற்றோர்கள், உங்கள் காஸட்டு போட்டால்தான் எங்கள் குழந்தை தூங்குகிறது என்றெல்லாம் கூறியிருக்கிறார்கள். அதாவது இந்தப் பரிசோதனை குழந்தைகளைச் போய்ச் சேர்ந்துள்ளது. இதில் என் பெண் சுபஸ்ரீ ஏழு வயதில் பாடியிருக்கிறாள். ‘கோபாலா கோபாலா கோகுல நந்தன கோபாலா', ‘மாமவ மாதவ' போன்ற பாடல்களைக் குழந்தைகள் பாடியுள்ளனர். ‘ஹம்டி டம்டி சேட் ஆன் எ வால்' என்று பாடும் குழந்தைகள் சம்ஸ்கிருதத்தில் பாடியது எனக்கு மகிழ்ச்சி.

ஓவிய இசை

ரவி வர்மாவின் ஓவியங்களை வைத்து கேரளாவில் பக்திப் பாடல்கள் பாடினோம். ‘ஸ்ரீ க்ருஷ்ண மாதுரி' என்ற மேடை நாடகம் ஒன்றும் செய்தோம். பாடுபவர்கள் வேடம் அணிந்து வந்து பாடுவார். உன்னி கிருஷ்ணன் ஜெய தேவர், டி.எம்.கிருஷ்ணா அர்ச்சுனன், நான் துக்காராமின் மனைவி, என்று வேடமிட்டு ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் நடித்தோம். இதே போன்று பக்த மீராவையும் செய்தோம். பிறகு சில இடைவெளி விட்டு விட்டு, திரும்ப ரவி வர்மாவின் வீணை வைத்துக்கொண்டுள்ள சரஸ்வதி படத்தைப் போல் வெள்ளைப் புடவை கட்டிக்கொண்டு வீணையைக் கையில் கொண்டு  மேடையில் வந்து பாடுவது, ராமர் பட்டாபிஷேக படத்தை அடிப்படையாகக் கொண்டு ராமர், சீதை எல்லோரும் நாட்டியம் ஆடிக் கொண்டு பாடினார்கள். அதேபோல் ராதா கிருஷ்ணன் படம் போல் எல்லாம் செய்தோம். இதற்கு வரவேற்பு நன்றாக இருந்தது. தியாகராஜரின் நௌகா சரித்திரம் பண்ணினோம். உடனே பிரான்சிலிருந்து இதை செய்யச் சொல்லி அழைத்தார்கள். நாங்கள் இருவருமாக அங்கு சென்று செய்தோம்.  தெலுங்கில் வெறுமே பாடினால் அவர்களுக்கு, அதுவும் வெளிநாடுகளில்  இருப்பவர்களுக்கு எப்படிப் புரியும்? எனவே அவற்றை காட்சிகளாக்கி அவற்றுடன் பாட்டும் பாடினோம். கிருஷ்ணனும் கோபிகைகளும் துவார கைக்கு படகில் செல்வார்கள். கோபிகளின் அகம்பாவத்தை அழிக்க கிருஷ்ணன் புயலை கொண்டு வருவார். படகு ஓட்டையாகிவிடுகிடும். யார் தன்னுடைய உடையை அவிழ்த்து ஓட்டையை அடைக்கிறார்களோ அப்போது படகு  ஓட்டை அடைபட்டு மிதக்கத் துவங்கும்; துவாரகை சென்றுவிடலாம் என்பார் கிருஷ்ணர். இது கேட்ட கோபிகைகளுக்கு மிகுந்த அவமானமாகி விடுகிறது. பிறகு கோபிகைகள் பிரார்த்தனை செய்ய புயல் ஓய்ந்து விடுகிறது. அகம்பாவம் அழிகிறது. பக்திதான் முக்கியம். அகம்பாவம் அல்ல என்பதைப் புரிய வைக்கிறார்.

இதை  ஓவியமாக்கி ப்ரெஞ்ச் மொழியில் எழுதியும் வைத்தோம். எல்லா மக்களும் புரிந்து கொண்டார்கள். எங்களிடம் நீங்கள்தான் கிருஷ்ணாவை பற்றிப் பாடப் போகிறீர்களா என்று ஆர்வமாகக் கேட்டார்கள். நான்கு காட்சிகளிலும் அவை நிறைந்தது. அது போல பன்னிரெண்டு இடங்களிலும் அவை நிறைந்த கூட்டம்தான். இவையெல்லாம் மறக்க முடியாது. இவற்றை நாங்கள் பெற்ற அனுபவங்கள், படைத்த சாதனைகள் என்றும் கூறலாம். இதே போல ‘சர்வம் விஷ்ணு மயம்' என்று விஷ்ணு ஸ்தலங்களை போட்டோ எடுத்து அத்துடன் வீணை, தபலா வைத்துக் கொண்டு அதன் பின்னணியில் பாடினோம். நல்ல வரவேற்பைப் பெற்றது. இது போல இன்னமும் நிறைய நிகழ்ச்சிகள் தயாரிக்கும் திட்டம் உள்ளது.

Wednesday, January 16, 2013

துப்பாக்கி-ஒரு பார்வை

டெல்லியில் நடந்த பாலியல் வன்முறையினால் ஏற்பட்ட அதிர்வால் நாடு முழுக்க ஒரு பெரிய மாற்றம் நடக்கும் என்று நாம் நம்பலாம். பெண்ணை சமமாகப் பார்க்க வேண்டும். பெண்ணை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். பெற்றோர் இரு பாலாரையும் சமமாக எண்ண வேண்டும். பள்ளிக்கூடங்களில் ஆண் பெண் கலந்து படிக்க வேண்டும். இப்படி எல்லோரும் எல்லா இடங்களிலும் இது பற்றியே பேசிக் கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறோம்.

இப்படிப்பட்ட காலத்திலும் கூட சப்தமில்லாமல் ஒரு சில சொற்கள் மக்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம், ‘துப்பாக்கி' இப்படத்தில் குறிப்பிட்ட மதத்தை இழிவுபடுத்தும் படியான வசனங்கள் வெளியாகி இருக்கின்றன என்று அந்த மதம் சார்ந்த அமைப்புக்கள் போராடி வருகின்றன. இன்று (10-1-13) நீதிபதிக்களுக்கும் கோர்ட்டுக்கும் படத்தைப் போட்டுக் காண்பித்து, அதில் ஒரு மதத்தை இழிவுபடுத்தும்படியான வசனங்கள் இருந்தால் அவற்றை நீக்கி, அதன் ‘யு' சர்டிபிகேட்டை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

மதம்,சாதி இவைகள் பற்றிய-சார்பான போராட்டங்களை ஆண்கள் கையிலெடுப்பதும், அதில் பெண்களும் பங்கு கொள்வதும் எப்போதும் நிகழ்வதுதான். சாதி, மதம் அனைத்தையும் கையில் கொள்பவர்கள் ஆண்கள். அதைக் கட்டிக்காத்து, திருமணங்கள் மற்றும் குடும்பச் சடங்குகள் மூலம் அவற்றை அணையாமல் அடுத்த தலைமுறைக்கும் அடுத்தடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்ப்பவர்கள் பெண்கள். அப்படித்தான் செயல்படவேண்டும் என்று அதிகாரம் மிக்கவர்களால் உண்டாக்கப் பட்ட பாதையில் இன்னமும் நம் சமூகம் சென்று கொண்டிருக்கிறது. ‘துப்பாக்கி' படத்தில் ஒரு மதத்தை இழிவு படுத்தும்படியான வசனங்கள் இடம் பெற்று இருந்து, ‘அது யாரையாவது புண்படுத்தும் எனில் அந்த வசனங்களை நீக்கிவிடுவோம், நீக்கிவிட்டோம்' என்று படம் சம்பந்தப்பட்டவர்கள், தயாரிப்பாளர், இயக்குனர் ஆகியோர் அறிக்கை கூட விட்டிருக்கிறார்கள். ஆனாலும் இன்னமும் சில ஊர்களில் அவை நீக்கப்படவில்லை என்று தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டும் இருக்கின்றார்கள். தணிக்கைக் குழுவினரின் பங்கு இதில் உள்ளது.

இதே படத்தில் ஒரு காவல்துறை அதிகாரியிடம் கதாநாயகன் பேசுவதாக சில சொற்தொடர் வருகிறது. கதாநாயகன் இரண்டு துப்பாக்கிகளைக் கையில் வைத்துக் கொண்டு, காவல்துறை அதிகாரியிடம் கூறுவது போல வரும் காட்சியில், காவல்துறை அதிகாரி தன்னைத்தானே சுட்டுக் கொண்டு இறந்தால் என்ன என்ன விதமான சாதக பாதகங்கள் வரும், கதாநாயகன் சுட்டு இறந்து போனால் என்ன என்ன பின் விளைவுகள் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. மிக மென்மையான குரலில் எந்தவிதாமான உணர்வும் கேட்பவர்களுக்கு ஏற்பட்டுவிடா வண்ணம் இயல்பாக சொல்லப்படுகிறது. ‘உன் குடும்பம் நடுத்தெருவுக்கு வரும். உன் குழந்தைகள் தெருவில் கை நீட்டி பிச்சை எடுப்பார்கள். உன் மனைவி இரவு நேரத்தில் தெருவில் ஆண்களைக் கை நீட்டிக் கூப்பிடுவாள்' என்று. ஏதோ காப்பி சாப்பிடலாமா? காற்று இதமாக அடிக்கிறது இல்லையா என்று சொல்லும் போது  மேற்கொள்ளும் மென்மையான குரல். ஆனால் சொல்லப்படும் செய்தியோ, பெண்ணை மிக மிக அவமானப் படுத்துவது.

இந்த கதையின் நாயகன், அந்தத் தயாரிப்பாளர், இயக்குனர் ஆகியோரின் மரணத்திற்குப் பிறகும் இது போன்ற நிலைதான் ஏற்படப்போகிறதா?  கணவன் என்பவன் இறந்தால் பெண்கள் பாலியல் தொழிக்குத்தான் போக வேண்டும் என்று சட்டம் இயற்றப்போகிறார்களா? காவல்துறை அதிகாரிக்கே இந்த நிலைதான் என்று திரைப்படங்கள் சொன்னால், கூலி வேலை செய்வோரின் மனைவியும், ஏழை மக்களின் மனைவிகளும் என்ன செய்ய முடியும்? என்ன செய்ய வேண்டும் என்று இவர்கள் அறிவுறுத்துவார்கள்? எல்லாத் தரப்பினருமாக இருக்கும் அந்த நடிகரின் ரசிகர்(ஆண்)களின் மறைவுக்கிற்குப் பின் அவர்களின் மனைவியும் இதே  பாலியல் தொழிலுக்குப் போக வேண்டும் என்று ரசிகர்கள் உறுதி மொழி வாங்கிக் கொண்டு சாகப்போகிறார்களா?இது திரையின் ஒரு கதாபாத்திரம் பேசும் வசனம் மட்டுமே என்று கூறுவார்களா?

அப்படி என்றால் மற்ற வசனங்களுக்கு மட்டும் ஏன் பதில் தர வேண்டும்? ஒரு வேளை அந்தப் படத்தில் அந்த காவல்துறையின் அதிகாரியின் சாதி சொல்லப்பட்டு அதன் மூலம் இது போன்ற வசனமும் பேசப்பட்டிருந்தால், அப்போது சாதிக் கலவரம் ஏற்பட்டிருக்கலாம். இது வெறும் ஒரு பெண். எந்த அடையாளமும் சூட்டப்படவில்லை. அதற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று எல்லொருமே நினைத்துவிட்டார்களா? தெரியவில்லை.

ஒரு படத்தில் ஒரு கதாநாயகன் பேசும் சில சொற்களாவது புகழ்பெற வேண்டும் என்று ஒவ்வொரு நடிகருக்கும் அவரவர்களுக்குத் தகுந்தாற்போல சில வசனங்களை உண்டாக்கி, அதை அப்படத்தில் திரும்பத் திரும்பப் பேசவைத்து, அதுவும் கூர்மையான உச்சரிப்போடு, அங்க அசைவுகளோடு பேசவைத்து, அந்த வசனத்தை அந்தப் படமாகவே மக்கள் பார்க்கும்படி மாற்றுகிறார்கள். நடிகரும் சரி, மற்ற படம் சார்ந்தவர்களும் சரி அதை தவறாமல் மக்கள் கையில் கொண்டு சேர்க்கிறார்கள். அது அந்த நடிகனின் ரசிகர்களால் காற்றுப் பரவும் திசை எங்கும் அலைபாய்ந்து கொண்டு இருக்கும். அதைக் கேட்டுக்  குழந்தைகளும் நடிகனைப்போலவே உடல் மொழியுடன் சொல்லும். அதைக் கேட்டு மிக்க மகிழ்ச்சி கொள்கின்றனர் பெற்றோர்.  அந்த வகை வசனங்கள் அந்த நடிகரின் உண்மைக் குரலாகத்தானே எதிரொலிக்கிறது. படத்தின் பாத்திரம் பேசப்படுவதாகச் சொல்ல முடியுமா?

அப்படிப்பட்ட சொற்கள் போலவே இந்தப் பேச்சையும் எடுத்துக் கொள்வதா? அல்லது நடிகரின் குரலில் வெளிப்பட்ட எல்லாமே மாயை என்று சொல்லப்போகிறோமா?
 

ஒரு புறம் இப்போதுதான் பெண்ணின் இருப்பு பற்றிய தெளிவு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது என்று நம்பிக்கை கொண்டிருக்கிறோம். ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட அந்த பாலியல் குற்றம் எல்லோர் மனதிலும் இன்னமும் ஆறாத புண்ணாக மாறி இருக்கிறது. ஆண்களும், பெண்களும் சேர்ந்து குரல் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். இளைஞர்கள் மத்தியில் ஆண், பெண் சமத்துவமும் ஏற்படும் என்று நேர்மறையான எண்ணம் தோன்றும் சமயம் இது.

பெண்ணை  எந்த வயதிலும் பாலியல் தொந்தரவுக்குள்ளாக்கலாம். கணவன் இறந்துவிட்டால் மனைவி அவளாகவே பாலியல் தொழிலுக்கு  வரவேண்டும் என்று கூறுவது போல இல்லையா இது?  பாலியல் தொழில் செய்யும் பெண்களை நான் எந்தவிதத்திலும் இழிவு படுத்தவில்லை. பெண் என்பவள் எப்போதும் உடல் சார்ந்தவளாகவே பார்க்கப்படுவாள், அதுதான் சரி என்ற நோக்கில் அல்லவா இருக்கிறது இது?  பெண் எந்த நிலையிலும் தனக்கான எதையும் தானே தேர்ந்தெடுக்கக் கூடாது அப்படித்தானே? சாதி, மதம் என்பது போல பெண்ணை இழிவுபடுத்தினால் அதற்காகவும் குரல் கொடுக்க மக்கள் முன்வரவேண்டும். நிச்சயம் வருவார்கள்.

இவ்வளவுக்கும் மேல் இந்தப் படம் தணிக்கைக்குள்ளாகும் போது, தனிக்க¨யாளார்களில் பெண்ணும் இருத்தாரா? இல்லையா?

Sunday, January 13, 2013

புத்தகக் கண்காட்சிக் கவிதை

புதிய ஆண்டு, புதிய புத்தகம்.
புத்தாண்டு, புதுப் புத்தகம்.
       
    புத்தாண்டு, புதிய புத்தகம்
    புது ஆண்டு, புதூப் புத்தகம்.

(இவ்விரண்டு வரிகளையும் மரத்துப் போன, உணர்வற்ற குரலில், ஒவ்வொரு பாரா முடிந்த பின்னும் கூட்டுக் குரலில், அல்லது தனித்த குரலில் சொல்லலாம்.)
   
    மார்கழி  மாதம்,
     மஹாக்  கோலம்
    பெரிய கோலம்
    புதிய கோலம்.
           
(உற்சாகக் குரலில்)
   
    புத்தாண்டு, புதிய புத்தகம்
    புது ஆண்டு, புதூப் புத்தகம்.

    மஹாப் பிரதோஷம்
    மாதப் பிரதோஷம்
    புண்ணிய பலன்கள்
    பாவம் கரைய.        
           
(மந்திரம் சொல்லும் குரலில்)
   
    புத்தாண்டு, புதிய புத்தகம்
    புது ஆண்டு, புதுப் புத்தாகம்.

    ரகசிய வாழ்க்கை 
    அந்தரங்க ஆசை
    வேதம் சொல்லுவதென்ன
    உள்ளது உள்ளபடி.       
           
 (ரகசிய பெருங்குரலில்)
   
    புத்தாண்டு, புதுப் புத்தகம்
    புதிய ஆண்டு, பெரும் புத்தகம்.

    கம்மல் வாங்குறீங்க,
    வளையல் வாங்குறீங்க
    சட்டை வாங்குறீங்க
    பல செருப்பு வாங்குறீங்க
    மறுபடி மறுபடி.        
           
(மிரட்டும் குரலில்)
   
    புத்தாண்டு, புதுப் புத்தகம்
    புதிய ஆண்டு, அரும் புத்தகம்.
   
    உனக்கும் ஆகும்- பின்
    உன் மகனுக்கும், மகளுக்கும்
    பேரனுக்கும், பேத்திக்கும்
    அழியாச் சொத்து.        
    அறிவுச் சொத்து

(கெஞ்சும் குரலில்)

    புத்தாண்டு, புதுப் புத்தகம்
    புதிய ஆண்டு, அரும் புத்தகம்.

    உரைநடை ஆயிரம்
    நாவல் ஆயிரம்
    சிறு கதை ஆயிரம்
    கவிதை சிலநூறு.       
           
(பெரும் குரலில்)
   
    புத்தாண்டு, புதுப் புத்தகம்
    புதிய ஆண்டு, அரும் புத்தகம்.

    உள்ளே வாங்க,
    வாங்க வாங்க.
    அம்மாமார்களே! அய்யாமார்களே!
    மாணவர்களே! குழந்தைகளே!    
   
(ஆசை காட்டும் குரலில்)
   
    புத்தாண்டு, புதிய புத்தகம்
    செம்பதிப்பும், மலிவுப்பதிப்பும்.

    என்னது வாங்கு
    உன்னது கொடு
    அவனதும், அவளதும்
    வாங்கினால் வாங்கு        
           
(தணிந்த குரலில்)
   
    புத்தாண்டு, புதிய புத்தகம்
    செம்பதிப்பும், மலிவுப்பதிப்பும்.

    புதூ ஆண்டு, புதூப் புத்தகம்,
    தள்ளுபடி உண்டு, தள்ளு முள்ளும் உண்டு,
    காபி உண்டு, டிபனும் உண்டு,
    பேச்சும் உண்டு, ஏச்சும் உண்டு.  
           
(உற்சாகக் குரலில்)   
   
    புத்தாண்டு பெரிய புத்தகம்.
    புதுப் புத்தகம் புதிய பலன்கள்.

(கூட்டுக்குரலில் மெலிதாக ஆரம்பித்துக் கூவி முடிக்கவும்).

    சின்னப் புத்தகம்.
    அன்னப் புத்தகம்.
    அழகுப் புத்தகம்.
    மொழி பழகு புத்தகம்.
    புதிய புத்தகம்.
    புதிய வாழ்க்கை.
    புத்தாண்டு புத்தாண்டு.
    புத்தக ஆண்டு.

Friday, January 11, 2013

க்ருஷாங்கினி (Bio-Data)

இயற்பெயர்: பிருந்தா நாகராஜன் M.A.(ஹிந்தி)புனைப்பெயர்: க்ருஷாங்கினி
பிறந்தஊர்: தாராபுரம் (கோவை மாவட்டம்) தமிழ்நாடு
பிறந்த ஆண்டு: 20.11.1948
திருமணமான ஆண்டு: 8.5.1969
கணவர்: அ.நாகராஜன் (ஓவியர்)
மகள்: நீரஜா ரமணி கிருஷ்ணா (பரதநாட்டியக் கலைஞர்)
மகன்: சத்யாஸ்ரயன்( முதுநிலைப் பட்டதாரி) சதுரங்க ஆட்டக்காரன்

திருமணமானபின்: புதுவையில் 15 வருடமும் கும்பகோணத்தில் 5 வருடமும் வாழ்ந்த இவர் 1990 முதல் சென்னையில் வசிக்கிறார்.

ஃ இவருடைய முதல் சிறுகதை 'புஷ்பித்தல்' 1982ஆம் ஆண்டு கணையாழி மாத இதழில் வெளிவந்தது. இவரது சிறுகதைகள் பெரும்பாலும் தீபம், கணையாழி, ஞானரதம், ராகம், சுபமங்களா, நவீன விருட்சம், புதிய பார்வை, சுந்தர சுகன், கனவு, அரும்பு போன்ற இலக்கியம் பேணும் இதழ்களில் வெளிவந்தன.ஃ நவீன கவிதைகளும் இவ்வாறான சிறு பத்திரிகைகளில் பிரசுரமாயின. இந்தியா டுடே, கல்கி, ஆனந்த விகடன், குமுதம், திணமணி கதிர் போன்ற வெகுஜன பத்திரிகைகளிலும் இவருடைய கவிதைகள் வெளிவந்தன.ஃ ஓவியம், நடனம், இலக்கியம் தொடர்பான பல விமரிசனக் கட்டுரைகள் தின மணி, சுதேச மித்திரன், நுண் கலை (தமிழ் நாடு ஓவியம், நுண்கலை குழு) தினகரன் போன்ற வாராந்திர இதழ்களிலும் தொடர்ந்து வெளிவந்தன.

ஃ பின்வரும் தொகுதிகளில் இவரது படைப்புகள் இடம் பெற்று உள்ளன. 1. இலக்கிய வட்டம் சிறுகதை தொகுப்பு-1985
2. இந்த நூற்றாண்டுச் சிறு கதைகள்-1993. கலைஞன் பதிப்பகம் (விட்டல் ராவ் தொகுத்தது)
3. நவீன விருட்சம் சிறுகதைத் தொகுப்பு-1992. நவீன விருட்சம் வெளியீடு.
4. நவீன விருட்சம் கவிதைத் தொகுப்பு-1994. நவீன விருட்சம் வெளியீடு.
5. நதிகள் தமிழுறவு-தமிழ் எழுத்தாளர் கூட்டுறவு சங்கம், 1998
6.  யானைச்சவாரி தொகுப்பு- 2001 எஸ்.ஷங்கரநாராயணன் (புதிய நூற்றாண்டின் துவக்கத்தில் சில சிறுகதைப் பதிவுகள்.)
7. The Unhurried City - Edited by C.S.Lakshmi -Ambai (Penguin books & The Hindu)
8. ந.பிச்சமூர்த்தி நினைவாக (சிறுகதைகள், கவிதைகள் & கட்டுரைகள்) தொகுதி - 2

மேலும்,மளையாளம், ஹிந்தி, ஆங்கிலம் போன்ற பிறமொழிகளிலும் இவரது கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டுளன. இவரது சிறுகதைகள் எம்ஃபில் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. ஆறாம் திணை, மின்னம்பலம், திசைகள், திண்ணை போன்ற இணைய இதழ்களில் ஓவியம், நடனம், பற்றின கட்டுரைகளும், கவிதைகளும் சிறுகதைகளும் வெளிவந்துள்ளன. சிங்கப்பூரில் உள்ள தமிழ்முரசு என்னும் இணைய இதழிலும் இவரது கவிதைகள் வெளி வந்துள்ளன. 1992 இல் ஸ்காண்டினேவியா- தமிழ்நாடு கலாச்சாரப் பரிமாற்றம் சென்னையில் நிகழ்ந்தது. அவ்வமயம் தமது கவிதையை இவர் படித்தார். பின்னர் வெளிவந்த ஆங்கிலத் தொகுதியில் அது இடம் பெற்றது.1995 இல் அகில உலகப் பெண் ஓவியர்களின் ஓவியக் கண்காட்சி சென்னையில் 'அலயான்ஸ் பிரான்ஸே' வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் கவிதை வாசித்தல் என்ற நிகழ்வில் தமிழ் நாட்டைச் சேர்ந்த தமிழ் மற்றும் ஆங்கிலப் பெண் கவிஞர்களுடன் இவரும் பங்கு கொண்டார். ஆறாம்திணை இணைய இதழில் 1998 ஆம் ஆண்டு சென்னை இசை விழாக் காலத்தில் இவரது மகள் நீரஜாவுடன் இணைந்து எழுதிய 'பரதம் புரிதல்' என்னும் பரதக்கலை பற்றிய எளிமையான தொடர் வெளிவந்தது. பலரின் பாராட்டைப் பெற்ற இது பின்னர் சென்னை ஆன்லைன் (ஆங்கில இணைய இதழ்) இல் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு தொடர்ச்சியாக வந்து பெருவாரியான வாசகர்களின் பாராட்டைப் பெற்றது. தமது கணவர் அ.நாகராஜனுடன் இணைந்து 'ஓவிய நிகழ்வு' என்னும் தலைப்பில் 1900திலிருந்து 2000வரை உலக அளவில் சிற்ப, ஓவியத் துறையில் இதுவரை நிகழ்ந்த மாற்றங்கள், நிகழ்வுகள், பரிசோதனைகள், அதில் பெண்களின் பங்களிப்பு பற்றிய தொடர் ஒன்று 'கணையாழி' 2000 இதழ்களில் தொடர்ந்து வெளிவந்தது. 2001 ஆம் ஆண்டு மகளிர் தினத்தை ஒட்டி 'கவிதைக் காட்சி' என்ற பெயரில் 32 தமிழ்ப் பெண் கவிஞர்களின் கவிதைகள் இவரது முயற்சியால் பெரிய அளவில் (4'x6') சென்னை அருங்காட்சியக் கலைக்கூடத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டன. அவற்றுக்கு பெண் ஓவியர்களின் ஓவியங்களும் இடம்பெற்றன. அதே ஆண்டு சென்னையில் டிசம்பர் மாதம் திருமதி நீரஜா ரமணி இன்றையத் தமிழ் பெண் கவிஞர்களின் புதுக் கவிதைகளில் சிலவற்றை 'அவ்வைக்குப் பின்னும் ஆங்காங்கே' என்னும் தலைப்பில் மரபு வழுவாத பரதநாட்டியப் பாணியில் நிகழ்த்தினார். இதன் பின்புலமாகக் 'க்ருஷாங்கினி' இருந்தார். இவற்றின் தொடர்ச்சியாக உலகளாவிய பெண் கவிஞர்களின் கவிதைகளை தொகுத்து 'பறத்தல் அதன் சுதந்திரம்' என்னும் தலைப்பில் காவ்யா மூலம் வெளியிட்டார். இதில் ஏராளமான பெண் ஓவியர்களின் கோட்டு ஓவியங்களும் இடம் பெற்றன. 2001 இல் 'அஸ்மிதா' என்ற மகளிர் அமைப்பு, பெண் எழுத்துக்கள், அதன் மீதான தடை என்ற கருத்தரங்கை மாநில அளவிலும், பின்னர் அனைத்திந்திய அளவிலும் நடத்தியது. Women's world என்ற பெண்கள் அமைப்பு 2003இல் நடத்திய 3நாட்கள் கருத்தரங்கில் உலகம் அனைத்திலுமுள்ள பெண் எழுத்துக்களை மொழி மாற்றம் செய்து பரவச் செய்வது பற்றிய பொருள் அலசப் பட்டது இந்த இரு நிகழ்ச்சிகளுக்கும் பங்கேற்க அழைக்கப்பட்டு இவர் கலந்துகொண்டார். பெண்களின் எழுத்தைப் பற்றிய சர்ச்சைகளும் விவாதங்களும் தொடர்ந்து வாந்து கொண்டு இருந்த காரணத்தால் பெண் எழுத்து பற்றிய பிரக்ஞை ஏற்படுத்தும் முகமாக 2004 மார்ச் 27 அன்று 'இலக்கிய மரபும் பெண்ணும்' என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் மாலதி மைத்ரியுடன் இணைந்து 'அணங்கு' என்ற அமைப்பை ஏற்படுத்தி நடத்தினார். அது பின்னர் 'மருது' வெளியீடாக 2004ல் வெளி வந்துள்ளது.

 மொழிபெயர்ப்பு:
ஜெர்மன் நாடக ஆசிரியர் பெர்டோ ல்ட் ப்ரெக்ட் இன் நூற்றாண்டு நினைவு அஞ்சலியாக அவரது 'மதர் கரேஜ்' (mother courage) என்ற நாடகம் 'தீரத் தாய்' என்ற தலைப்பில் 1999இல் சென்னையில் தேசிய நாடகப் பள்ளியின் மூலம் அரங்கேறியது. அதன் தமிழ் வடிவம் ஹிந்தி மொழியிலிருந்து இவரால் செய்யப் பட்டது.

பரிசு:
1. சமகாலப் புள்ளிகள் சிறுகதைத் தொகுதி-1998 தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையால் அவ்வாண்டின் சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான 2ஆம் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டு, 16.1.2000 திருவள்ளுவர் தினத்தன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நிகழ்ந்த விழாவில் அளிக்கப் பட்டது.
2. கானல் சதுரம் கவிதைத் தொகுதி-1998 கவிஞர் தேவமகள் அறக்கட்டளை (கோவை) 2002க்கான கவிச்சிறகு விருது அளித்துச் சிறப்பித்தது.

இந்திய அரசாங்கத்தின் அமைப்பான மனித உரிமைக் கமிஷனில் அமையப்பெற்றுள்ள கலை மற்றும் கலாசார மையத்தின் உயர் நிலை மான்யம் 2002-2004 (senior fellowship) பெற்றுள்ள இவர் தமிழில் 50களுக்குப் பிறகு எழுதப்பட்ட புதுக் கவிதையில் பெண்களின் கருப் பொருள், அணுகுமுறை பற்றின ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். சதுரம் பதிப்பகம் என்ற பெயரில் பதிப்பகமும் தொடங்கி உள்ளார். இதில் பெண்ணெழுத்துக்களுக்கு முன்னுரிமை அளித்து பதிப்பித்துக் கொண்டும் இருக்கிறர்.
இதுவரை வெளிவந்துள்ள தொகுப்புகள்:

1. கானல் சதுரம்- கவிதைத் தொகுதி-1998 'கனவு' வெளியீடு '8/707. பாண்டியன் நகர், 12, வாணிய வீதி, திருப்பூர்
2. சமகாலப் புள்ளிகள்  -1988 சிறுகதைத் தொகுதி அருள் பதிப்பகம்' வெளியீடு -641 602 குறிஞ்சிப்பாடி-607 302 
3. பறத்தல் அதன் சுதந்திரம் தொகுப்பாசிரியர்கள் கிருஷாங்கினி, மாலதி மைத்ரிஉலகளாவிய தமிழ் பெண் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு காவ்யா பதிப்பகம்,
 4. பரதம் புரிதல் சதுரம் பதிப்பகம்,சென்னை-47 சென்னை
5. கிருஷாங்கினி கதைகள்  சதுரம் பதிப்பகம், சென்னை-47
6. அணங்கு  'இந்திய மரபும் பெண்ணும்' பெண்ணியம் சார்ந்த கட்டுரைகள் 2004
மருதா பதிப்பகம்226(188) பாரதி தெருராயப்பேட்டைசென்னை-600014.

முகவரி
க்ருஷாங்கினி(பிருந்தா நாகராஜன்)
ப.எண்.98/ பு.எண். 34.சிட்லபாக்கம் 2வது பிரதான சாலை
தாம்பரம் சானடோரியம்(கிழக்கு)
சென்னை-600 047தொ.பே.எண். 044-2223 1879
e.mail: nagarajan63@gmail.com

அறிவைத் திறக்கும் போதையும், கண்களை மறைக்கும் போதையும்-கட்டுரை

சென்ற ஆண்டு புத்தகக் கண்காட்சி சார்ந்த புதுப்புனலில் இடம்பெற்றது
 
அறிவைத் திறக்கும் போதையும்,
கண்களை மறைக்கும் போதையும்

ஜனவரி மாதம், வரும் பொங்கலையும், மாட்டுப் பொங்கலையும், திருவள்ளுவர் தினத்தையும் ஒட்டி மூன்று நாட்கள் அல்லது வார இறுதியில் என்றால் தொடர்ந்து நான்கு அல்லது ஐந்து நாட்கள் கூட விடுமுறை விடப்படும். பள்ளிகள், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் (இரண்டு நாட்கள்) என அனைவருக்கும் கிடைக்கும் விடுமுறையைப் பயனுள்ளதாக மாற்றும் பொருட்டு அமைக்கப்பட்டது புத்தகக் கண்காட்சி. இது கடந்த 35 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இந்த ஆண்டு அறுபது லட்சம் புத்தகங்கள் விற்பனையாகி இருக்கிறது. ஆறு லட்சம் மக்கள் கண்காட்சியைக்கண்டு களித்துள்ளனர். குழந்தைகளும், ஆண்களும், பெண்களுமாக அந்த இடமே நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. அந்த வழித் தடங்களைப் பார்க்கும் பொழுது இந்த விற்பனை குறைவுதான். மக்கள் கூட்டத்திற்கு இடையில் நீந்தி, நீந்தி நூல் வாங்கும் கடை எண் தேடி அலைந்த போது எனக்கு மாம்பலம் ரங்கநாதன் தெருவுக்குள் சென்று கொண்டிருக்கிறேனோ என்ற ஐயம் ஏற்பட்டது. அத்தனை விதமான,  அத்தனை நிலைகளில் மனிதர்கள் சென்று கொண்டே இருந்தனர்.

இந்த ஆண்டு புதுப் புத்தகங்களின்  வரவு அவ்வளவாக இல்லை என்றே சொல்ல வேண்டும். நூலக ஆணையை மூன்று ஆண்டுகளாகக் காணாத என் போன்ற சிறு பத்திரிகை எழுத்தாளர்கள் புத்தகம் போடத் துணியவில்லை. புத்தகத்தை வெறும் பொருளாகப் பார்க்காமல் உயிராகப் பார்க்கும் என்னைப் போன்ற பலரும் இதையே கூறினர்.

ரங்கநாதன் தெருவுக்குள் செல்வோருக்கு நிச்சயம் ஒரு நோக்கம் இருக்கும். துணி, நகை, அல்லது மின்சாதனங்கள் என எதையோ ஒன்றை வாங்க வேண்டியிருக்கும். அதை வாங்கும் கடைகளைத் தேர்வு செய்வதில்தான் குழப்பம், விவாதம் இருக்கும். எனவே எல்லோரும் எதோ ஒரு கடையின் முத்திரை இடப்பட்ட பிளாஸ்டிக் பைகளில்- அந்தந்தப் பொருட்களின் அளவுக்கு ஏற்ப பெரியதாகவோ சிறியதாகவோ -நிச்சயம் கைகளில் கொண்டு தம் இருப்பிடம் திரும்புவர். அங்கு பணப்புழக்கமும், வியாபாரமும் ஏற்றமாகவே இருக்கும்.

ஆனால், புத்தகக் கண்காட்சிக் கூட்டம் நிறையப் பார்வையாளர்களைக் கொண்டதாக மட்டுமே தங்கி விட்டதாக  எனக்கு எண்ணம். நிறைய மக்கள் வெற்றுக் கைகளுடன், அல்லது எதோ கொறிக்கும் பொருட்களுடன் வெளியில் வந்து கொண்டிருந்தனர். சென்ற ஆண்டு ஐந்து லட்சம் மக்கள் கண்டு களித்தனர். ஐம்பது லட்சம் புத்தகங்கள் விற்பனை என்று புள்ளிவிவரம் குறிப்பிட்டாலும்கூட.

இதே பொங்கல் தொடர் விடுமுறையை ஒட்டி தொடர்ந்து ஏறுமுகத்தில் உட்சபட்ச வருமானத்தை எட்டிப்பிடித்த மற்றொரு வியாபாரம் மது. இக்கடைகளினால் அரசுக்குக் கிடைத்த இந்த ஆண்டு வருமானம் - அதிகமில்லை ஜெண்டில் மேன் 260 கோடிதான். மதுக்கடைகளில் காணும் கூட்டமும் திருவிழாக் கூட்டம்தான். ஆனால் அங்கு வரும் மக்களின் எண்ணிக்கையை விட வசூல் ஆகும் பணம் பெருந்தொகை. ரங்கநாதன் தெருவையும், புத்தக் கண்காட்சியையும் இன்ன பிற பிற இடங்களைக் காட்டிலும் வருமானம் மிக மிக அதிகம்.

உடல் பணிபுரிவோரின் உழைப்பையும், அதன் வலியையும், நாற்றத்தின் பிடியிலிருந்தும் விடுவித்துக் கொள்ள, அவைகளை மறக்கச் செய்யும் ஒரு பொருள் மது என்பதில் மாற்றுக் கருத்து  இருக்க முடியாது. அது போன்ற ஒரு தொழில் புரியும்  மக்களே இல்லாத நிலை உருவாக வேண்டும் என்று எல்லோரும் எண்ணவும் எண்ணுகிறோம். எனவே அது சிலருக்குத் தேவையானது என்று சொல்லப்படுவது ஏற்கக் கூடியதே. அது உண்மையும் கூட. தெருவில் பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் சக மனிதரைப் பணியாளரைக் காணும் போதெல்லாம் உறைக்கும் உண்மைதான் அது. ஆனால், 260 கோடி ரூபாயும் உடலுழைப்பைத் தொழிலாகக் கொண்ட உழைப்பாளின் வருமானமாக மட்டும் இருக்கவே முடியாது. இவ்வளவு பணம் செலவழிக்கும் அளவிற்கு தொழிலாளியின் வருமானமும் கிடையாது. இந்த வாருமானம் மூன்று தலை முறையாகப் படித்த அனைத்துத் தரப்பு மக்களிடமிருந்தும் பெறப்படுகிறது. படிப்பறிவு இல்லாத உடலுழைப்பின் வாரிசாக இருக்கும் படித்த மக்கள், படித்த பெற்றோரின் அடுத்த தலைமுறை, அடுத்த தலைமுறையின் கல்லூரியில் படிக்கும்  மக்கள் என கொத்துக் கொத்தாய் கூடி இருக்கின்றனர் இவர்கள். கல்வி அறிவைத் திறக்கும், கல்வி அதன் பசியை அதிக்கப்படுத்தும், எனவே புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்கச் செய்யும். நூல்கள் எல்லோர் இல்லங்கள¨யும் அலங்கரிக்கும், பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு நூல்களயும், அதனால் தாம் பெற்ற அறிவையும் சொத்தாக விட்டுச் செல்வர். தீயால் அழிக்க முடியாத, வெள்ளத்தால் கொண்டு செல்ல இயலாத அறிவு பல்கிப் பெருகும், என்பதெல்லாம் வெறும் மாயையாகிப் போனது. எல்லோரும் (ஆண்கள்) தங்களின் வருமானத்தில் ஒரு பகுதியைக் குடியில் செலவிடுகின்றனர். அதற்கு அடுத்த தலைமுறையையும் போதைக்குள் இழுத்து விடுகின்றனர் என்பதுதான் தெளிவாகத் தெரிகிறது. இல்லா விட்டால் பன்னிரெண்டு நாட்களில் 6 கோடி ரூபாய்க்கு புத்தகமும், (ஒரு குறியீடாக சொல்லப்பட்ட பணம் இந்த அளவு. இன்னமும் குறைவாகவும் இருக்கலாம்.) மூன்றே நாட்களில் 260 கோடி ரூபாய் மதுவும் விற்பன¨யாகுமா? கூட்டம் என்பது வேறு. வியாபாரம் என்பது வேறு. இந்த ஆண்டும் இந்த மூன்று நாட்கள் விடுமுறை இதைத்தான் உறுதி செய்துள்ளது.