Thursday, July 15, 2010

சிறப்புக் குழந்தைகள்

பத்து சிறப்புக் குழந்தைகள் எனப்படும் மனவளம் குன்றிய குழந்தைகளை ஒரு சேரப் பார்க்கின்ற போதே நெகிழும் மனம் என்று ஒன்று உள்ள அனைவருக்கும். ஏறக்குறைய 600 சிறப்புக் குழந்தைகள் அவர்களை அணைத்துப் பாதுகாக்க அவர்களின் பெற்றோர்கள் அல்லது பெற்றோர், மற்றும் அவர்களைப் பெறாத பிள்ளைகள் என தாங்கி வளர்க்கும் பயிற்சி கொடுக்கும் ஆசிரியர்கள், அந்தப் பள்ளிகளை உருவாக்கி நடத்திவரும் தனியார் நிறுவனங்களின் நிறுவனர்கள் என, 2000க்கும் மேல் ஒருங்கினைந்திருந்தார். கலைவாணர் அரங்கிலிருந்து அவர்கள் ஊர்வலமாக கோட்டையை அடையும் முகமாக நடந்து வந்து கொண்டிருந்தனர். கையில் போராட்டத்திற்கான விளக்க அட்டை களுடன் தளர்ந்த கைகளுக்குள் இறுக்கிப்பிடித்தவாறு தகிக்கும் வெயிலில் நடந்து வருகின்றனர். சென்னையின் முக்கிய சாலைகளில் நடந்து வந்து கொண்டு இருக்கும் இவர்களைக் காண நேர்ந்தவர்கள் யாருக்குமே அன்றைய உணவு இதமளிப்பதாய் இருந்திருக்காது. அன்று காவலுக்கு உடன் நடந்த காவலர் அனைவரும்-ஆண்களும் பெண்களும், மனித நேயம் மிக்க நெகிழ்ச்சி கொண்ட உயிர்களாக கண்கள் பனிக்க காக்கி உடைக்குள் உடல் தளர இதயம் வெடிக்கும் ஆத்மாக்கள் எனக் கண்டேன். முக்கிய சாலைகளின் போக்கு வரத்தில் இந்தப் பிள்ளைகள் சிக்கிக் கொண்டு விடக்கூடாதே எறு கரிசனம் கொண்டு வழி நடத்திக் கொண்டு செல்கின்றனர். அங்கு பாதையில் போகும் வாகனங்களுக்குள் இருப்பவர்களும், கால் நடையாகச் செல்லும் இவர்களைக் கடந்து செல்லும் மனிதர்களும், ஒருசேர இவ்வளவு சிறப்புக் குழந்தைகளைக் கண்ட சங்கடத்தில் கடந்து செல்கின்றனர்.

சரி, இந்த சிறப்புக் குழந்தைகளுக்கும் அவர்களது பெற்றோருக்கும் போராட்டம் நடத்தும் அளவுக்கு என்ன குறை? அரசிடம் என்ன கோரிக்கை? அதைப் பற்றி அறியும் முன்பாக சில வார்த்தைகள்.

உடல் ஊனமுற்ற- பார்வை஡ற்ற, கை கால்களற்ற, வாய் பேச முடியாத, காது கேட்காத மற்ற அனைத்து மக்களுக்கும் அந்த ஊனம் பிறவியிலேயோ அல்லது இடையிலேயோ ஏற்பட்டிருக்கலாம். சில ஊனங்கள் சிகிச்சைகள் மற்றும் மாற்று அங்கம் பொருத்துதலினால் நிவாரணம் அடையலாம். அவர்களைப் பயிற்றுவித்து அவரவர்களின் சுய தேவைகளை அவர்களே செய்து கொள்ளும் அளவுக்கு பழக்கலாம். தனியே வெளியில் சென்றுவர இவர்களுக்கு பயிற்றுவிக்க இயலும். ஏன் எனில் இவர்களின் மூளை முழு வளர்ச்ச்சி அடைந்துள்ளது. எனவே புரிதல் சாத்யம். இவ்வகை மனிதர்களுக்கு அரசு பல உதவிகளையும் செய்து வருகிறது. உதாரணமாக பேருந்துகளில் இலவச பயணம். மிகவும் நல்ல விஷயங்கள்தான் இந்த அரசு உதவிகள்.

ஆனால் மன வளர்ச்சி குன்றிய சிறப்புப் பிள்ளைகளிடம், சிறிய சிறிய முன்னேற்றங்களைத் தவிர்த்து வேறு எதையும் அதிகமாக நீங்கள் எதிர்பார்க்க முடியாது. இத்தகைய பிறப்பு ஓர் நிலை. அதை அப்படியே ஏற்றுக் கொள்ள மனப் பக்குவம் மிகவும் தேவை. முக்கியமாக பெற்றோருக்கு தேவை. இவ்வகை பிள்ளைகள் தனியே வெளியே செல்ல இயலாது. துணைக்கு ஒருவர் அவசியம். மேலும் இது போன்ற பிள்ளைகளில் 60 சதவிகிதம் பேருக்கு வலிப்பு நோய் இருக்கும். உடல் பலமற்று இருக்கும். நரம்புகளும் பலமற்று இருக்கும். எனவே எதிர்ப்பு சக்தியும் குறைவாக இருக்கும். நோய் எதிர்ப்பு மாத்திரைகளும், சத்தான உணவுகளும், வலிப்பு நோய்க்கான மாத்திரைகளும் கண்டிப்பாக தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். பேச்சுப் பயிற்சியும் அவசியம். பிசியோ தெரபி எனப்படும் உடல் செயற்பட அளிக்கும் பயிற்சிகளும் தொடர்ந்து அளிக்கப்பட வேண்டும். இவைகள் அத்தனையும் எப்போதும் தேவை. சில சமயங்களில் மருந்தின் அளவு குறையலாம் அல்லது கூடலாமே தவிர மருந்து உட்கொள்ள வேண்டாம் என்ற நிலை ஏற்படுவது மிக அரிது. இவ்வகை பயிற்சிகள் அனைத்துமே இதற்கான சிறப்புப் பள்ளிகளில்தான் கிடைக்கும். பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதும் கட்டாயமாகிறது. கூட ஒருவரின் துணை இல்லாமல் இவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாது. குறைந்த பட்சம் இருவருக்காவது பஸ் கட்டணச் சலுகை அவசியம்.

சில சிறப்பு பிள்ளைகளுக்கு வளைந்த பாதங்கள் இருக்கும். வளைந்த பாதங்களுக்காக தயாரிக்கப் பட்ட காலணிகள் ஷுக்கள் அணிவிக்க வேண்டும். அது மிகவும் விலை அதிகமானது. வலியும் அளிப்பதுதான். ஆனாலும், அது போன்ற காலணிகள் அணிவித்து காலப் போக்கில் சிறிது சிறிதாக வளைந்த கால்கள் நிமிர்ந்து ஓரளவுக்காவது நடக்க முடியும். இவ்வகை ஷுக்கள் உட்புறம் மிருதுவாகவும் வெளிப்புறம் எலும்பை வளைக்கும் அளவுக்கு கடினமானதாகவும் தயாரிக்கப்படுகிறது. மென்மையான பாதங்கள் புண் ஆகிவிடக் கூடாது. இவ் வகைக் குழந்தைகளுக்கு -எவ்வளவு வயதானாலும் இவர்கள் குழந்தைகள்தான்- பொருந்தும் வகையில் தயாரிக்கப்பட வேண்டும்.

சிறப்பு பிள்ளைகள் தமது வலியையோ, வேதனையையோ, பசியையோ, நோயையோ நமக்குப் புரியும் வகையில் நேரடியாக கூறத் தெரியாதவர்கள். எல்லாவற்றிக்கும் இன்னொருவர் துணை தேவை.

முதலில் இவர்களுக்கு அளிக்கப்பட வேண்டியது சுயதேவைப் பராமரிப்புப் பயிற்சி. அவற்றுள் முதன்மையானது கழிப்பறை பயிற்சி.

இவ்வகை பயிற்சிகள் அனைத்தும் இதற்காக சிறப்புப் படிப்புப் படித்து பயிற்சியும் பெற்ற ஆசிரியகளால்தான் அளிக்க முடியும்.

இது போன்ற எல்லா அடிப்படை நிலைகளும் பொருளாதாரத்தைச் சார்ந்தே இயங்குகின்றன. இவ்வகை பிள்ளைகள் ஜாதி, மதம், இன, பொருளா தாரம் என எந்த வகை ஏற்ற தாழ்வும் இன்றி எந்தக் குடும்பத்திலும் பிறக்கலாம். இது போன்ற பிள்ளைகளைப் பெற்றவர்கள் அனைவரும் ஒரே இனம். ஏனெனில் அவர்களின் சிரமம் ஒன்றேதான்.

அரசு சாரா தனியார் தொண்டு நிறுவனங்கள் நடத்தும் சிறப்புப் பிள்ளை களுக்கான பள்ளிகள் தமிழ்நாட்டில் மட்டும் 84 பள்ளிகள் உள்ளன. ஆனால் அரசின் பள்ளி ஒன்றே ஒன்று மட்டுமே உள்ளது. அது சென்னை சிட்லபாக்கத்தில் இருக்கிறது. அது, தங்கும் இட வசதியுடன் கூடியது. மன வளம் குன்றிய ஆதரவற்ற குழந்தைகளின் இல்லம் 'பால விஹார்' என்னும் பெயரில் கீழ்பாக்கத்தில் பஞ்சவடியில் இயங்கி வருகிறது. இப்பள்ளிக்குப் பின் புறம் இவ்வகை பிள்ளைகளுக்கு பயிற்றுவிக்கும் ஆசிரியப் பயிற்சிப் பள்ளியும் இருக்கிறது.

இன்னொருவர் துணையுடன் பயணம் செய்யும் இப்பிள்ளைகளுடன் வருவோருக்கு இலவச பஸ் பாஸ் கிடையாது. தனியார் நிறுவனங்கள் எவ்வளவு தான் கருணை நோக்கில் பள்ளிகள் நடத்தி வந்தாலும் கூட தொடர்ந்து நடத்த ஆகும் செலவு அதிகம். மேலும் முழு மன வளர்ச்சி அடைந்த பிள்ளைகளை வகுப்புக்கு 40 அல்லது 50 என்று ஒருங்கினைத்து நடத்துவது போல இப்பிள்ளை களை கூட்டமாக உட்கார்த்தி வகுப்பு எடுக்க இயலாது. முழு வளர்ச்சி அடைந்த பிள்ளைகளைக்கூட பெரும் கூட்டமாக அமர்த்தி அவர்களின் தனி வளர்ச்சியில் கவனம் இல்லாமல் நடத்தப்படும் பள்ளிகளை நாம் கண்டிக்க வேண்டும். அப்படி இருக்கும் நிலையில் இப்பிள்ளைகளின் மேல் அக்கறை எடுத்து நடத்தப்படும் பள்ளிகளில் 5 அல்லது ஆறு பிள்ளைகளுக்கு ஒரு ஆசிரியர் என்ற அடிப் படையில்தான் நடத்த முடியும். இவை அனைத்திற்கும் அரசின் உதவி இருந்தால்தான் நல்ல பாராமரிப்பு கிடைக்கும். இவை அனைத்திற்குமாக நடத்தப்படும் போராட்டம்தான் நான் முதலில் கூறியது.

தனியார் நடத்தும் சிறப்புப் பள்ளிகளில் ஆசிரியராக பணி ஆற்றுவோர் பலர் தம்முடைய பங்களிப்பை இவர்களுக்கு ஆற்றும் நோக்கில் வேலை செய்ய வந்தவர்கள். .அதனால் ஊதியம் பற்றிக் கவலைப்படாமல் தன்னார்வத்தினால் பணி ஆற்ற முன் வருகிறார்கள். ஆனால் எல்லோரையும் அந்த நோக்கிலேயே அணுக முடியாது. சிறப்பு பிள்ளைகளைகளின் பெற்றோர்களே தனது முழு நேரத்தையும் பிள்ளைக்காகவே செலவிடும் தியாக உணர்வும் அர்ப்பணிப்பும் இருந்தால்தான் குழந்தைகள் ஓரளவாவது மேம்பட இயலும் என்கிற நிலையில், இப் பிள்ளைகளுக்காகப் பணி ஆற்றவரும் ஆசிரியர்களும் அர்ப்பணிப்பு உடையவர்களாகத்தான் இருப்பார்கள் என்றாலும் கூட தனது குடும்பத்தையும் குழந்தைகளையும் பராமரிக்கும் அளவாவது ஊதியம் இருந்தால்தானே தனது முழு கவனத்தையும் இப்பிள்ளைகள் மீது செலுத்த இயலும்? பள்ளியில் ஒருசேர பல பிள்ளைகளை வழிநடத்தும் இவ்வகை சிறப்பு ஆசிரியர்களுக்கு எவ்வளவு ஊதியம் கொடுத்தாலும் தகும். இம்மாதிரியான சவால் மிகுந்த வேலைகளில் ஈடுபடும் இவர்களுக்கு ஊதியம் 2000 ரூபாய்க்கும் குறைவாகக் கிடைக்கிறது. நல்ல வருமானம் கிடைத்து அமைதியான குடும்பப் பிண்ணனி இருந்தால் இவ்வாசிரியர்கள் இன்னமும் முழு ஈடுபாட்டுடன் பணி ஆற்ற இயலும். குறைவான ஊதியம் காரணமாக ஏற்படும் மன உளைச்சலுக்கும் குடும்ப அமைதிக்கு பங்கமும் ஏற்பட்டால் ஆசிரியர்கள் எப்படி தன் கடமையில் முழு மனதுடனும், சிறப்பு பிள்ளைகளிடம் அன்பும் அரவணைப்பும் காட்ட முடியும்?

இத்தகைய பள்ளி நடத்துவோருக்கும் பலவகை சிக்கல்கள். இப்படிப்பட்ட பள்ளிகள் நடத்த இடம் தர முனைவோர் மிகக் குறைவு. சொந்த இடத்தில் பள்ளி நடத்தினாலும், இப்பிள்ளைகளின் ஒழுங்கற்ற சப்தத்தைத் தொந்தரவாகக் கருதும் மக்கள், -இது போன்ற பிள்ளைகளால் பாதிக்கப் படாத மக்கள்- பள்ளியை அகற்ற எல்லாவிதமான ஏற்பாடுகளையும் செய்கின்றனர். ஆகையால் தொடர்ந்து பள்ளி நடத்துவது என்பது கடுமையான விஷயமாக உள்ளது. அரசு உதவி கிடைத்தால் அல்லது இது போன்ற சிறப்பு பள்ளிகள் நடத்த இடம் அளித்தால் இது போன்ற பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் பேருதவியாக இருக்கும்.

சிறப்புப் பள்ளிகளில் பணிபுரியும் ஆயாக்கள் தெய்வத்திற்கும் மேலானவர் கள். எச்சில் ஒழுகி கொண்டும், அடிக்கடி வலிப்பு வந்து திடீர் திடீரென்று விழுந்து கொண்டும், கழிப்பறை உபயோகிக்கத் தெரியாதவரை உணர்வற்று கழிவுகளை வெளிப்படுத்திக் கொண்டும் இருக்கும் இப்பிள்ளைகளின் தேவைகள் அனைத்தையும் பள்ளியில் இருக்கும் வரை ஆயாக்கள்தான் கவனிக்கின்றனர். ஆனால் பல இடங்களில் ஆயாக்களுக்கு ஊதியம் 800 ரூபாய் தரப்படுகிறது.

குடும்பங்களில் ஏற்படும் குழப்பங்கள் குறித்தும் பேச வேண்டும். டூம் மாதிரியான சிறப்புப் பிள்ளைகள் பிறக்கக் காரணம் பெண்ணே, அதாவது மனைவியே என்ற மூடத்தனமான எண்ணத்தால், மனைவியை விட்டுப் பிரியும் ஆண்களும் உள்ளனர். வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்வித்து முழு மூளை வளர்ச்சியுடன் பிள்ளைகள் பிறக்கும் என்று ஆண்களைச் சார்ந்தவர் களும் நம்புவதால் பெண்ணுக்கு மண வாழ்க்கை பாதிக்கப் படுகிறது. பெண்ணே தன் குழந்தையின் முழுப் பொறுப்பையும் சுமப்பது, பெண்ணின் பிறந்த வீட்டில் இவர்களைக் கடைசிவரை காப்பற்றும் பொறுப்பும் கூடிவிடுகிறது. ஆண் பெண் இருவராலும் மற்றும் குடும்பத்தாராலும் நிராகரிக்கப் பட்டு இந்தப் பிள்ளைகள் பேருந்து நிலையங்களிலும், ரயில் நிலையங்களிலும் பல பொது இடங்களிலும் விட்டுவிடப் படுகின்றனர். இது போன்ற ஆதரவற்ற சிறப்புப் பிள்ளைகளை கண்ட நல்ல உள்ளம் கொண்டோ ர் அவர்களை காவல் நிலையத்தில் ஒப்படைக்கின்றனர். இல்லையென்றால் அவர்கள் ஆதரவற்ற நிலையில் சமூகத்தில் நிராகரிக்கப்பட்டும் அலைய வேண்டி வருகின்றது. இது போன்ற பிள்ளைகளை தங்குமிடத்துடன் காப்பாற்ற இருக்கும் பள்ளிகள் முன் சொன்னபடி தமிழகத்தில் இரண்டே இரண்டுதான். தனியார் தொண்டு நிறுவனங்கள் நடத்தும் பள்ளி களுக்கு அரசு இடம் கொடுத்து உதவலாம், பள்ளி நடத்த பொருளாதார முறையில் உதவலாம், அல்லது அரசே இவ்வகைப் பள்ளிகளை எடுத்து முன்னுதாரணமாக மிக நல்ல முறையில் நடத்தி பிள்ளைகளுக்குப் பாதுகாப்புத் தரலாம்.

சிறப்புப்பள்ளிகள், அவற்றினாசிரியர்கள், ஆயாக்கள், பள்ளி நடத்துவதில் உள்ள நடை முறைச் சிக்கல்கள் போன்றவற்றைப் பற்றின சில துளிகள் பற்றி பார்த்தோம். பள்ளிக்கு வரும் பிள்ளைகள் தவிர இன்னமும் அநேகர் உண்டு.

சிறப்புப் பிள்ளைகள் என்று அழைக்கப்படும் மன வளர்ச்சி குன்றிய பிள்ளைகள் அனைவரையும் ஒரே பட்டியலில் இட முடியாது. அவர்களின் புரிதலின் அடிப்படையில் மற்றும் மன வளர்ச்சியின் அடிப்படையில் ஒருவருக்கு ஒருவர் மாறுபட்டு இருப்பார்கள். வெறும் உயிருள்ள அசையும் திறன் மட்டுமே கொண்டவர்கள் முதல், வெளிப்பார்வைக்கு ஒன்றுமே அறிய முடியாதவாறு சாதாரண பிள்ளைகளைப் போல இருப்பவர்கள் வரை பல நிலைகளில் இருக்கின்றனர்.

சரி. இப்படிப்பட்ட பிள்ளைகள் பிறக்கக் காரணங்கள் சிலவற்றைப் பார்ப்போம். பொது மக்களான நாம் இவற்றை உணர்ந்து இவ்வகை குழந்தைகளின் பிறப்பு தவிர்க்கப்பட ஆவன செய்ய வேண்டும். மன வளர்ச்சி குன்றிய பிள்ளைகள் மொத்த ஜனத்தொகையில் 3% மட்டுமே. இன்னமும் இது குறையவும், நல்ல மக்களை உருவாக்குவதும் நமது கடமை என்பதையும் உணர வேண்டும்.

1. நெருங்கிய சொந்தத்தில் திருமணம் தவிர்க்கப்பட வேண்டும்.

2. சற்றே மன வளர்ச்சி குன்றியிருந்தாலும் கூட அவர்களை திருமண பந்தத்தில் ஈடுபடுத்தாமல் இருப்பது மிக முக்கியம். அவர்களின் பிள்ளைகள் இன்மும் அதிக மனவளம் குன்றியவர்களாக பிறக்க கூடுதல் வாய்ப்பு உண்டு.

3. குழந்தை பிறந்த உடன், தொப்புள்கொடி அறுக்கப்பட்ட பின் அழ ஆரம்பிக்க வேண்டும். அப்படி அழத் தவறினால், தலைகீழாக தூக்கித் தட்டி அழ வைக்க வேண்டும். அப்படி முயற்சி செய்யாமல் இருக்கும் ஒவொரு வினாடியும் குழந்தையின் மூளை செல்கள் அழிந்து கொண்டே இருக்கும் அபாயம் உள்ளது என்பதை நாம் மிக முக்கியமாக உணர வேண்டும்.

4. கர்ப்பமாய் இருக்கும் சமயம் கருவுக்கு ஊறு விளைவிக்கும் மருந்துகள் எதையும் சாப்பிடக் கூடாது. மருத்துவரின் ஆலோசனை இன்றி வலி நிவாரணி கூட எடுத்துக் கொள்ளக் கூடாது. கருவின் வளர்ச்சியில் மருந்துகளின் பாதிப்பு அதிகம்.

5. கர்ப்பமாயிருக்கும் போது ஆறாம் மாதத்தில் கருப்பையின் நீரை எடுத்து பரிசோதிக்க வேண்டும். அதன் மூலம் குழந்நதைன் மூளை வளர்ச்சி குறித்து அறிய முடியும். ஒரு வேளை கரு மூளை வளர்ச்சி குன்றி இருப்பது தீர்மானம் ஆனது என்றால் மருத்துவரின் ஆலோசனையுடன் அடுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இவைகள் எல்லாவற்றையும் மீறி குழந்தை பிறந்து விட்டால், அதை பூரணமாக ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் பெற்றோர்களுக்கு வர வேண்டும். எனக்கு இப்படிப்பட்ட ஒரு குழந்தையா? என்று மருகாமல் கடவுள் என்னைத் தேர்ந்தெடுக்க ஏதாவது சிறப்புக் காரணம் இருக்க வேண்டும் என்று ஆக்க பூர்வமாக நினைக்கப் பழக வேண்டும். சிறப்பு குழந்தைகளை குடும்பத்தில் ஒரு அங்கத்தினராக ஏற்று அன்பு செலுத்த முற்பட வேண்டும்.

சிறப்பு குழந்தைகளை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். எப்போதும் அறையில் அடைத்து வைப்பது, பூட்டிய வீடுகளினுள் விட்டு செல்வது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

அருகில் அமைந்துள்ள பயிற்சி மையத்திற்கு அக்குழந்தையை சேர்க்க வேண்டும். நாம் மட்டுமல்ல நம் போன்ற பலர் உள்ளனர், எனவே ஓநான்'' இல்லை ஓநாம்'' என்ற மனப்பக்குவமும் தைரியமும் அடைய இது ஒரு சிறந்த வழி. குழந்தையும் பசி, தாகம், கழிப்பறை உபயோகம் போன்ற பலவற்றை உணர்ந்து, தனக்கேயான முறைகளில் வெளிப்படுத்தத் துவங்கும். தனியே வீட்டில் வைத்திருந்தால் இந்த வெளிப்பாடு வரவே வராது. எல்லோருடனுமிருப்பதும் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மூலம் பயிற்சி பெருவதிலுமே இது கை கூடும். சில குழந்தைகள் பேச, நடக்கக் கூட ஆரம்பிக்கும். எத்தனை வயது கூடினாலும் இவர்கள் குழந்தைகள் மட்டுமே என்பதையும் பெற்றோர் உணர வேண்டும்.

சிறப்புப் பிள்ளைகளின் மாற்றம் என்பதும் வளர்ச்சி என்பதும் பூ ஒன்று மலர்வதற்கு இணையானது. எனவே உடனே வெளிப்படையாக மாறுதல் கண்ணுக்குத் தெரிய முடியாது. மிக மெதுவாக நிகழும் மாற்றம் ஆகும். விளைவை நோக்கி துரித ஓட்டம் ஓடாமல், பெற்றோர்கள் மிகப் பொறுமையாக பள்ளிகளில் கற்றுக் கொடுத்த பயிற்சிகளில் குழந்தைகளைத் தொடர்ந்து ஈடுபடுத்தி வர வேண்டும்.

மருத்துவர்களும், பெற்றோர்களுக்கு இது ஒரு நிலை. தீர்க்கக்கூடிய நோய் அல்ல. அதிக மாற்றமோ அதிசய நிகழ்வுகளோ இதில் சாத்யம் இல்லை என்ற உண்மையை மெல்ல மெல்ல புரியவைக்க முயல வேண்டும். மருத்துவரின் பங்கு இதில் பெற்றோர்களுக்கு மிக முக்கியமானது. மிராக்கிள்ஸ் எனப்படும் மாயையை சாத்யமாக்குவேன் என்று தவறன நம்பிக்கைகள் கொடுக்காமல் இருந்தால் நல்லது.

இது போன்ற பிள்ளைகளுக்கு ஆகும் செலவு மிக அதிகம். பணம் உள்ளவரகளாக இருந்தால் சமாளிக்கலாம். ஏழை எளிய மக்களுக்கு வலிப்புக்கான மாத்திரை, ஷூக்கள், சத்தான உணவு என்பதெல்லாம் இயலாத விஷயம். அரசு இவ்வகைப் பிள்ளைகளைப் பெற்றவர்களுக்கு கூடுதல் கவனம் எடுத்து அவர்களுக்கு மாதாமாதம் உதவித்தொகை அளித்தால் ஏழை மக்கள் தம் சிறப்பு குழந்தைகள் மேல் கூடுதல் அன்பு செலுத்த முடியும். இதை அரசு செய்யும் என்று நான் பூரணமாக நம்புகிறேன். அரசே எடுத்து நடத்தும் சிறப்பு பள்ளிகள் இன்னமும் எண்ணிக்கையில் அதிகமாக்கி, தரமான பயிற்சி தரமான உணவு என்று வழங்கினால் நலம்.

அன்று நடந்த இவர்களின் போராட்டம் இவை அனைத்தையும் உள்ளடக்கியது தான். போராட்டம் நடந்து சில அதிகம் ஆகிவிட்டது என்றால் இதற்கான தேவை முடிந்து விட்டது, எல்லாம் சுபம் என்ற பொருள் அல்ல. போராட்டம் ஒரு பார்வைக் குவிப்பு. அவ்வளவே. இது ஒரு ஆரம்ப முயற்சி.

போராடத்தின் போது என்னை அதிசயிக்க வைத்தது பிள்ளைகளின் ஒழுங்கு, மற்றும் அமைதி காத்த விதம். நன்கு வளர்ந்த சிலர் கூடினாலே சப்தமும், விவாதங்களும், தான் என்ற ஈகோவுடன் போடும் கூச்சலும் இருக்கும். அன்று அத்தனை பிள்ளைகளும், கழிப்பறை உபயோகம், பசி, தாகம் என்று எதற்காகவும் கூச்சல் இடாமல் கைகளில் போராட்ட அட்டைகளுடன் சிலர் நடந்தும் சிலர் சைக்கிளிலும் பயணம் செய்து வந்தனர். ஒழங்கு கொண்டு நடந்து வந்த அத்தனை பிள்ளைகளும் அற்புதமானவர்களே. நம்மைப் போன்றவர்களோ, சிறு விஷயங்களுக்கெல்லாம் சண்டையும், கலவரமும், யுத்தமும், செய்து கொண்டு அப்பாவிகளைக் கொன்று, நமது நன்கு வளர்ந்த மூளைகளையும், உடல்களையும் தவறாகவும், பிடிவாதமாகவும் உபயோகித்துக் கொண்டு இருக்கிறோம். காலத்தையும் மனங்களையும் காயப்படுத்திக் கொண்டு நிரந்தரக் கருப்புப் பதிவுகளை உருவாக்கிக் கொண்டு இருக்கிறோம். தனக்கு உறு துணையாக இருக்கும் அனைத்தையுமே சுல நலம் கொண்டு இயற்கையையும் சேர்த்து, எடுத்தாள்கிறோம். அழிக்கிறோம்.

இவர்களை ஏற்றுக் கொண்டு இவர்களுக்கு அனுசரனையாக என்ன என்ன செய்யமுடியும்? முதல் நிலை இவர்களை பெற்றோர்களும், உற்றோர்களும், சமூகமும் தன்னுடைய ஒரு பகுதியாக ஏற்றுக் கொள்ள பழக வேண்டும். சிறப்பு பிள்ளைகளால் உண்டாக்கப்படும் மெழுகுவர்த்தி, துடைக்கும் துணி, கைவினைப் பொருள்களையும் வாங்கி ஊக்கப்படுத்தலாம். எனக்கு இப்படி ஒரு குழந்தையா என்று ஆதங்கப்படாமல் தன்னுடன் கூட்டிச் சென்று, அவர்களுக்கும் வெளி உலகத்துடன் தொடர்பு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். ஓரளவு தேறி தன் வேலைகளை தானே செய்து கொண்டு, கற்றுக்கொடுத்த சின்னச் சின்ன வேலை களைச் செய்யும் பிள்ளைகளுக்கு தகுந்த வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கலாம். உலகம் வேகம் மிகுந்ததுதான். அவரச உலகம்தான். ஆனாலும் சற்றே பயணத்தை நிறுத்தி இவர்களையும் உடன் அழைத்துச் செல்லலாம்.

மருத்துவர்களும் தன்னாலியன்ற மட்டும் பெற்றோர்களுக்குப் புரிய வைக்கலாம். அதை விடுத்து புது புது விதமான சிகிச்சை முறைகளை இருப்பதாகச் சொல்லி பெற்றோர்களின் நம்பிக்கையை தூண்டி பணம் பண்ணும் சொல்லை விடுத்து, உண்மையாக என்ன செய்ய முடியுமோ என்ன செய்ய இயலுமோ அவற்றை மட்டுமே சொல்லி புரிய வைக்கலாம். பெற்றோர்களும் மருத்துவர் உண்மையைச் சொன்ன உடன் மந்திரத்தை நம்பி அடுத்து பணம் செலவழித்து அக்குழந்தையையும் இம்சைக்குள்ளாக்காமல், சரி, என்று ஏற்றுக் கொண்டு முழு குடும்பமும் குழந்தையின் மீது அன்பு செலுத்தலாம்.

சிறப்புப் பிள்ளைகளுக்கு வரும் நோய்களுக்கு- வலிப்பு, விழுந்து அடி பட்டுக் கொள்ளும் காயங்களுக்கு மருந்திட்டு ஆற்றுதல், இவர்களின் உடல் நலத்தின் தேவைகளுக்கு ஏற்ப சத்தான உணவு, நரம்புகளுக்கு வலு சேர்க்கும் மருந்துகள் போன்று பல மருத்துவ கவனிப்பு தற்காலத்தில் அதிகரித்திருப்பதால், இவர்களின் ஆயுளும் அதிகரித்து இருக்கிறது. இப்போது 40 வயது வரை கூட வாழ்கின்றனர்.

சிறப்புப் பிள்ளைகளில் ஒரு பகுதியினர் மட்டுமே அன்று வந்திருந்தார்கள். இன்னமும் நடக்கக் கூட இயலாமல், வெளி உலகத்திற்கு அறிமுகமே ஆகாமல் இருக்கும் பிள்ளைகளையும் கணக்கில் எடுத்து அவர்களின் மேம்பாடுக்கு அரசின் உதவி கிடைக்கவும் அவர்களை நம்மில் ஒருவராக ஏற்கவும் கற்போம், கற்பிப்போம்.

No comments: