Wednesday, December 9, 2009

முன்னுரை

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவின் சிந்தித்தல்தானே--திருமந்திரம்.

குருவின் மேன்மையை திருமூலர் மிகவும் அழகாக, மிகவும் தெளிவாக, மிகவும் எளிமையாக எடுத்துரைத்துள்ளார். மாதா, பிதா, குரு, தெய்வமென்பது எல்லோருமே அறிந்த கூற்று. இதை அவரவர்களின் புரிதல் மூலம் தெளிவுரை கூறியும், கண்டடைந்தும் வருகின்றனர். பிறப்பு என்பதோ, தாய் தந்தையர் யார் என்பதோ பிறக்கும் யாராலும் தீர்மானிக்க முடியாதது. பிறப்பும் இறப்பும் நமது கட்டுக்குள் நிலைப்பது இல்லை. எனவே, பிறக்கும் ஒரு ஜீவன் முதன்முதலில் சில நாட்களுக்குள் அறிந்து கொள்வது தனக்குப் பாலூட்டி, ஊன் வளர்க்கும் தாயையே. அவளின் மொழிதலின் மூலமாகவே தந்தையின் அறிமுகம் கிடைக்கிறது. உயிரின் வளர்ச்சிக்குத் தாய் தந்தையரின் பங்கு பெரியது. ஆனால் அறிவின் வளர்ச்சிக்கு குருவின் பங்கு அளவுகடந்தது. ஆரம்பப் பாடத்திற்கான, கல்விக்கான, புரிதலுக்கான குரு தந்தையால் சுட்டிக் காட்டப்படுவது என்பது என்னவோ உண்மைதான். ஆனால், தாய், தந்தை வழி பிறெப்பெடுத்தாலும் கூட மனிதனின் வாழ்க்கைப் பாதை அவன் வளர்ந்த பின் தனித்தனியாக மாறிப் போகிறது. தாய் தந்தையால் உரு கொண்டாலும்கூட ஜீவன் தனக்கான தனிவழி கொண்டது. உருவம் ஒற்றுமை கொண்டிருக்கலாம். ஆனால், எண்ணமும் ஒன்றே போல இயங்குதல் இயலாது. எல்லாப் பிள்ளை களும் தாய் தந்தையரின் வழி காட்டுதலில் தமக்கான பாதையைத் தேர்ந் தெடுத்து அதில் பயணித்து வாழ்கின்றனர்.

மனிதன் வாழ்க்கையில் தான்சார்ந்திருக்கும் துறையில் உள்ளவர்களுடன் தன்னை இணைத்துக் கொள்வதும், அதில் ஏற்றமும், மாற்றமும் பெருவதும், தனி லட்சியத்தை அடைவதும், எண்ணமும், செயலும், தான்சார்ந்த, தன் துறை சார்ந்த இயங்குதலில் வாழ்க்கை கழிகிறது. தனது லட்சியத்தை அடையப் பெரும் துணையாய் இருப்பவர் குருவே. தாய், தந்தையரை நாம் தேர்ந்தெடுக்க இயலாது என்று முன்னமே சொன்னோம். னால் குரு சிஷ்யனைக் கண்டுணர்வதும், சிஷ்யன் குருவைத் தேடித்தேடி அலைவதும் அந்த உறவின் ரகசியம். தேடி அலைந்த குரு தனது சீடனை விருப்பப் பாதையில் முன்னேற்றி, அவன் தன் லட்சியத்தை அடைய ஒரு பாதையாய் நிற்கிறார். குருவின் வழிகாட்டலின் மூலமே எந்தத் துறையில் இயங்கும் மனிதனும் மேன்மை அடைய முடியும். மனித மேன்மை, ஒவ்வொரு மனிதனும் மனிதன் என்ற நிலையிலிருந்து மேம்பட்டு, கடவுளைக் கண்டடைய, அல்லது மனித நிலையிலிருந்து மேம்பட்டுத் தன்நிலை உணர்தல் என்பதாகத் தான் அமையும். எல்லாவகைப் பாதைக்கும் அவரவர் வாழ்க்கைத் துறை சார்ந்த ஆசிரியர் அமைவதும், அதற்கான கதவு திறத்தலும் உலகில் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது. எனவே, வாழ்க்கை தேர்ந்தெடுக்கும் துறை சார்ந்த மற்றவர்களுடன் பயணிப்பதாகவே இருக்கும். ஒரு பழ வியாபாரி, தனது அறிவையும், உறவையும் பழ வியாபாரியுடன் இணைத்துக் கொள்கிறார். வளர்கிறார். ஒரு விஞ்ஞானி தனது துறைசார்ந்த விஞ்ஞானியுடன் பயணிப்பார்.

இந்த நூல் இசைத்துறை சார்ந்தது. எனவே சம்பவங்கள், தகவல்கள், பயணங்கள் இசைத்துறை சார்ந்த ஒரு கொத்துப் பூக்கள் போலக் காட்சி அளிக்கும். இசைப் பயண வழ்க்கை வரலாறுகளாவே இவை அமைந்திருக் கின்றன. இசை, அதன் நுணுக்கம் என்று 'தியரி' எனப்படும் விளக்கம் சார்பாக சிறிதும், குரு-சிஷ்ய உறவு, அதனதன் மேம்பட்ட நிலை, குருவே பெற்றோராக மாறும் மாயம், பெற்றோரே குருவாகும் நிலை என்று அவரவர் வாழ்வின் உணர்வு நிலைகளைச் சொல்வதே "குருவே சரணம்" நூல்.

தற்காலத்தில் எந்தத் துறைக்கும் என்று சொல்ல முடியாவிட்டாலும் குரு சிஷ்ய உறவு இசைத் துறையில் அருகிவிட்டது என்றே சொல்லலாம். காரணம், கலையை மட்டுமே வாழ்க்கையாகக் கொண்டு பயணம் செய்த, அதையே மூச்சாகக் கொண்ட, இந்த புத்தகத்தில் உள்ளவர்கள் போன்ற வாழ்க்கை தற்காலத்தில் சாத்தியம் இல்லாமல் போய்விட்டது. காலம் வேக வேகமாக ஓடிக் கொண்டே இருக்கிறது. கல்வி அறிவு பெறாத வாழ்க்கை பயத்தைக் கொடுக்கிறது. கலையையே வாழ்க்கையாகக் கொள்ள மிகவும் போராட வேண்டி வருகிறது. உண்மை வைரங்களை விடவும், செயற்கைக் கற்கள் மின் வெளிச்சத்தில், இரவில், சூர்ய வெளிச்சத்தில் பகலில் கூடுதல் வர்ண ஜாலங்களுடன் பிரகாசித்து மயங்கச் செய்கிறது. உண்மையின் ஒளியை கண்டுபிடிப்பது கடினமாக இருக்கிறது. இறுதியில் வெற்றியடையும் உண்மைக் காக மனிதன் தன் வாழ்வில் பல சோதனைகளைக் கடக்க நேரிடுகிறது. உடன் பயணிப்பவர் அதிக தூரத்தையும் வாழ்க்கையில் வெற்றி பெற்றவர் என்ற பட்டத்தையும் கூடப் பெற்றுவிடுகிறார்.

இத்தொகுப்பில் இசை சார்ந்த அக்கால சாதனை, சோதனை என்பதாக பேசப் பட்டிருக்கிறது. இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து ஆசான் களுமே சங்கீதத்துறையில் உன்னமாக மிளிர்ந்தவர்கள். மறைந்து விட்டவர்கள். இசைக்கு உயிர் கொடுத்தவர்கள். அவர்களால் உருவாக்கப்பட்ட பாணி, இசைப் பாதை இன்னமும் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வரும் உன்னதப் பாதை. வாழையடி வாழையாக வளர்ந்து வரும் பாதை. இந்தத் தொகுப்பில் தனது குரு பற்றிக் கூறியிருக்கும் சங்கீத வித்வான்களும் மிகுந்த மேன்மை கொண்டிருப்பவர்கள். குருவின் வழிகாட்டுதலுடன் சங்கீதத்தையும், தன்னையும் வளர்த்திக்கொண்டு மேம்பட்டவர்கள். உயர்ந்த இடத்தை அடைந்தவர்கள். குருவின் பாதையில் தன்னை இணைத்துக்கொண்டு சங்கீதத் துறைக்கு பெரும் பங்காற்றியவர்கள். மேன்மேலும் சங்கீதத்தில் தனக்கான வழியைக் கண்டடையக் கடுமையாக உழைத்தவர்கள். வாழ்வின் சோதனைகளைத் தாங்கிக் கடந்தவர்கள். இந்த நூலில் குரு சிஷ்ய உறவைச் சொல்லும் வித்வான்கள், இவர்களின் வழிகாட்டுதலில் தாமே குருவாகி நின்று பலருக்கும் சங்கீதத்தில் தெளிவையும் வழிகாட்டுதலையும் வழங்கியவர்கள், சிஷ்யர்களை இத்துறையில் சாதிக்க வைத்தவர்கள். இது ஒரு முதல் முயற்சி. இது தொடரும் முயற்சியுமாகும். ஒரு சில வித்வான்களை மட்டுமே இத்தொகுப்பில் இடம் பெறச்செய்ய முடிந்தது. அடுத்து, அடுத்து இன்னமும் பல புத்தகங்கள் இப் பாதையில் வர உள்ளன.

தொகுப்பு என்று இணைக்கும் போது வரும் சில நெருக்கடிகள் இங்கும் ஏற்பட்டன. பேட்டியில் அன்று இடம்பெற்ற சில வித்வான்கள் இன்று நூலைத் தொகுக்கும் போது நம்மிடையே இல்லை. முதலில் அவர்களைத் தொகுப்பில் இணப்பதா, வேண்டாமா என்ற வினா எங்களுக்குள் எழுந்தது. அவர்களையும் இணைக்கத்தான் வேண்டுமென்பதில் நான் பிடிவாதமாக இருந்தேன். அவர்களின் பாதையும் உண்மைகளைக் கொண்டது. எனவே அதன் தனித் தன்மையும் தொகுப்பில் இடம் பெறச்செய்ய வேண்டும். தொகுப்பு என்று வரும்போது இவைகள் எல்லாம் நேரும்தான்.

குரு சிஷ்யர் புகைப்படம் இணத்து வெளியிடவேண்டும் என்று விரும்பினோம். இன்றுவரை அதற்கான வேலை செய்து கொண்டிருக்கிறேன். கிடைத்தவரை பதிவு செய்துள்ளேன்.

சங்கீதத்துறை சார்ந்த வித்வான்களிடம் ஏறக்குறைய ஒரே மாதிரியான கேள்விகள்தான் முன் வைக்கப்பட்டன. அவை அவர்களின் வாழ்க்கைப் பதிவு போல, வாழ்க்கை வரலாறு போலப் பதிவாகியிருக்கிறது. தொழில் நுணுக்கக் கேள்விகளாக மட்டும் முன் வைக்கப்படவில்லை. இசையையும், உணர்வு களையும் சார்ந்த கேள்விகளாக அவை அமைக்கப்பட்டன.
அக் கேள்விகள் பின் வருமாறு:

1. வித்வான்களின் பிறப்பு, பெற்றோர்கள் இசைச்சுழல்
2. முதல் குரு, இசை ரம்பம்.
3. குருகுல வாசம், அதில் அவர்களின் குருவைப்பற்றிய பதிவு, மறக்க முடியாத சம்பவங்கள்.
4. முதல் கச்சேரி, தொடர் கச்சேரி
5. கச்சேரிகளில் மறக்க முடியாத சம்பவம் (உள்ளூர் மற்றும் சபாக்கள்)
6. வெளிநாட்டு அனுபவம், ஒலிப்பதிவு; குறுந்தகடுப் பதிவுகள், வானொலி நிகழ்ச்சிகள்.
7. இவர்கள் வளர்ந்தடைந்த நிலை, இவர்களின் வழிகாட்டுதலில் மேம்பட்ட மாணாக்கர்கள், அதன் பதிவு
8. மடங்களுடன், அரசர்களுடன் இவர்களின் தொடர்பு, மற்றும் அது சார்ந்த பதிவுகள்.

ஏறக்குறைய நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் எடுக்கப்பட்ட பேட்டி இவை. என்னிடம் வந்து சேர்ந்தே இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. நான் எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தி, எழுத்து வடிவம் கொடுத்து, தட்டச்சும் செய்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இது புத்தகமாக வரவேண்டும் என்று பெரிதும் விரும்பினேன். எல்லா வித்வான்களின் பேட்டியுமே நான் எழுத்தாக மாற்றும் போது அது பேச்சின் பாதையில் திசை மாறி மாறி எங்கெங்கோ பயணித்துக் கொண்டிருந்ததைக் கண்டேன். நீளம் கருதிச் சிலவற்றை நீக்க வேண்டி வந்தது. மேலும், அவர்கள் உணர்ச்சிவசப்பட்டுச் சொல்லும் வார்த்தைகளை நாம் அப்படியே பதிவும் செய்ய இயலாது. யாருடைய மனமும் புண்பட்டுவிடக் கூடாது. யாருடைய பேட்டியையும் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. வாழ்வின் அழகு வெளிப்படும் விதமாகவும் இதை உருவாக்க வேண்டும். முன் பின்னாக சொல்லிய சம்பவங்களை நான் முடிந்த வரை கேள்விகளின் அருகாமையில் இருக்கும் படி ஒன்று திரட்டி எழுதி உள்ளேன். வித்வான்கள் கூறாத ஒற்றைச் சொல் கூட இத்தொகுப்பில் கிடையாது. ஒலிப் பதிவு நாடாக்கள் எங்கள் வசம் உள்ளன. பேட்டியின் இறுதியில் அவர்களின் பேச்சிலிருந்தே எடுத்த சில வார்த்தைகள் வாழ்க்கையின் நீதிகளைச் சொல்வதைப் போலவோ, சங்கீதத்தை இன்னமும் உன்னதத்தை நோக்கி எடுத்துச் செல்ல தூண்டும் வாக்கியங்களாகவோ வடிவமைத்திருக்கிறேன். அடுத்த தலைமுறைக்கு அவர்களின் வழிகாட்டுதலும் இறுதி வார்த்தைகளாக அமைந்திருக்கலாம். தம் பதிவில் சிலர் அதிகம் கூறியிருக்கிறார்கள், சிலர் குறைவாகக் கூறியிருக்கிறார்கள். அது அவரவர்களின் பேச்சுப் பாணியை பொறுத்ததே தவிர, வேறு ஏதுமல்ல.

தனது குருவைப் பற்றிப் பேசிய அனைத்து வித்வான்களும் நெகிழ்ந்து, மகிழ்ந்து கூறியிருக்கிறார்கள். அவர்களின் உரலில் அவர்களின் குரு பக்தி துல்லியமாக வெளிப்படுகிறது. தனது கலைத்தரு குருவால்தான் முளைத்தது என்றும் அவரிட்ட பிச்சைதான் தனது இசை என்றும் அனைவருமே கூறியிருக்கின்றனர். குரு-சிஷ்ய உறவு பெற்றோரின் நிலையைவிட உயர்ந்தது என்பது ஒவ்வொருவரின் கூற்றும் நமக்கு எடுத்து உரைக்கிறது.

இதில் பதிவாகியுள்ள அனைத்து வித்வான்களும் மிகப் பெரிய அந்தஸ்தும், புகழும், பெருமையும் பல பட்டங்களும் கொண்டவர்கள். அனைவரும் மனமுவந்து அளித்த பேட்டிகளை எழுத்துருவாக்கியதை எனக்குக் கிடத்த பெரும்பேறாகக் கருதுகிறேன்.

இவ்வளவு பேரும், புகழும், வித்வத்தும் உள்ள இவர்களை பொருளடக்க வரிசையில் எப்படி பட்டியலிடுவது என்பது எனக்கும், திருமதி. சூடாமணி பாஷ்யம் திரு. பாஷ்யம் அவர்களுக்கும் குழப்பமாகவே இருந்தது. எனவே என் புத்திக்கு எட்டியபடி அவரவர்களின் பெயரின் ஆங்கில முதலெழுத்தைக் கொண்டு வரிசைப்படுத்துவது எனத் தீர்மானித்தோம்.. வயதில் மூத்தவர்கள் அவர்களைவிட ஓரிரு வயது குறைந்தவர்கள் என வரிசைப் படுத்தும்போதும் கூட சிலர் ஒரே வயதுடையவர்களாகவும் இருக்கிறார்கள். எனவேதான் ஆங்கில எழுத்து வரிசையை பயன் படுத்தினேன். இது வெறும் 1, 2 என்ற எண்ணிக்கை மட்டுமே என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இத் தொகுப்பில், வாய்ப்பாட்டு மற்றும் இசைக் கருவிகள் ஒருங்கிணந்து பேட்டிகள் இடம்பெற்றுள்ளன

தற்காலத்தில், குரு சிஷ்ய உறவு இன்னமும் சிலருக்கு வாய்க்கப் பெற்றிருந்தாலும் கூட, மெல்ல மெல்ல மறைந்து கொண்டே வருகிறது என்பதை நாமனைவரும் அறிவோம். அது சார்ந்த என் எண்ணத்தையும் நான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். இசையின்மீதான வெறி, அதன் மீதான தீராத தாகம் தற்காலத்தில் கலை கற்போரிடம் குறைந்து கொண்டேதான் போயிருக்கிறது. இது இசைக்கு மட்டும் வந்தது என்று கூற முடியாது. எல்லாக் கலைகளிலும் இதுதான் இன்றைய நிலை. காரணம் கற்போரின் எதிர் பார்ப்பும் அவர்தம் பெற்றோரின் எதிர்பார்ப்பும். எனவே இயல்பான வளர்ச்சிக்கு இடம் கொடுக்காமல், ரசாயன உரமிட்டு வளரும் செடிபோல பெரிய பலன்களைத் தரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உருவாகிறது. அதுவே வேகமான வளர்ச்சிக்கும், அதன்பின், அதனினும் அதிவேகமான மறைவிற்கும் காரணமாகிறது. பெற்றோர்கள் தன் பிள்ளைகளின் குருவை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். பிள்ளைகளை ஒரு ரேஸ் குதிரையைப் போன்று தயாரிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். இதனால் பிள்ளைகள் குழப்பத்திற்குள்ளாகின்றனர். நெருக்கடி அதிகமாகும்போது அவர்கள் கலையிலிருந்து விலகவும் துவங்குகிறார்கள். எனவே கற்கும் பிள்ளைகள் ஒரு நீண்ட பருவம் கூட ஒரே குருவிடம்பயிலுவதில்லை. கற்கும் போதே பள்ளிப் போட்டி, கல்லூரிப் போட்டிகளில் முதலிடம் பெறத் தயார் செய்ய எண்ணுகிறார்கள். தவிரவும், புகழ் பெற்ற கலைஞர்களிடம் தங்கள் பிள்ளைகளை விட்டவுடன் பிளாட்டிங் பேப்பர் போல கலையை உறிஞ்சிக் கொள்ள முடியும் என்று நினைக்கிறர்கள். நம்புகிறார்கள். புகழ் பெறுவதற்கு முன்னான அவர்களின் உழைப்பு இவர்களுக்குத் தெரியாமல் இருக்கிறது. புகழ் பெற்றவர்களின் சீடர்கள் என்று சொல்லிக் கொண்டு பெயரைப் பயன் படுத்தி நிறைய நிகழ்ச்சிகள் அளிக்கத் திட்டமிடுகிறார்கள். எல்லோரும் இது போல என்று ஒட்டுமொத்தமாகக் கூறக்கூடாது; கூறவும் முடியாது. அது பெரும் ஆறுதலைத் தருகிறது. ஆனாலும் கூட சிலரிதுபோன்ற வழியைத் தவறாகப் பயன்படுத்துகிறார்களே என்ற ஆதங்கத்தில் சொல்ல வேண்டியுள்ளது. நிகழ்ச்சிகள் பணம் கொடுத்து நிறைவேற்றிக் கொள்கிறார்கள். பணம் கொடுத்துப் பத்திரிகையில் அதுபற்றி விமர்சனம் வரச் செய்கிறார்கள். அந்தப் பதிவுகளை முதலீடாக்கி இன்னமும், இன்னமும் என முன்னேறப் பாடு படுகிறார்கள். இதனால், உண்மையான ஒரு சங்கீதக் கலைஞனின், போதிய பொருளாதார வசதியற்ற கலைஞனின் பயணம் பின் தங்க நேரிடுகிறது. அனால், இந்த மின்னல் சட்டென காணாமலும் போகும். இறுதியில் உண்மை வெல்கிறது. தாமதமானாலும் கூட.

கற்பிப்போரிடமும் சில நிலைகள் உள்ளன. அதைப் பற்றியும் சொல்லித்தான் ஆகவேண்டும். இதிலும் அனைவரும் என்ற பொத்தாம் பொது நிலை கிடையாது. எங்கோ சிலர். பல நல்ல உள்ளங் கொண்ட ஆசான் வசதியற்றவர்களுக்குத் தமது சொந்த செலவில் கற்றுக் கொடுத்து உண்மையை பிரகாசிக்கச் செய்கிறார்கள். சிலர் பணம் படைத்த வீட்டுப் பிள்ளைகளிடம் அதிக கவனம் செலுத்தும் நிலையும் உள்ளது. புகழ் பெற்ற பாதையில் இருக்கும் கலைஞர்கள் தாம் பெற்ற புகழையும், பொருளையும் அதன் பாதையையும் விருப்பமில்லாத் தமது பிள்ளைகளிடம் மடைமாற்றம் செய்கிறார்கள். முழுமையாக கற்றுத் தேறாமல் தான் கற்றுக்கொண்ட சிறிதளவான இசையை முதலீடாக்கி பலருக்கும் போதிக்கும் ஆசிரியராகவும் சிலர் மாறிவிடுகிறார்கள். இவர்களிடம் கற்கும் சீடர்கள் என்ன கற்றுக் கொள்ள இயலும்?

இன்றளவும் தெலுங்கு, சம்ஸ்கிருதம், கன்னடம், தமிழ் போன்ற மொழிகளில் இருக்கும் சாஹித்யங்கள் ஏராளம். அவற்றுக்கு இசை வடிவத்தையும் கொடுத்து, அதைத் தமதினிய குரலால் பாடிப் பரவச்செய்த வாக்கேயகாரர்கள் தற்போது இந்தியா முழுவதுமே குறையக் காரணம் என்ன? என்ற கேள்வியை வட இந்திய விமர்சகர் ஒருவர் கேட்ட போது பதிலளித்த ஒரு வித்வான் 'அந்தக் காலத்தில் சங்கீத வித்வான்களும், கவிஞர் களும், நாட்டிய மணிகளும் இணைந்து, சந்தித்துப் பேசி, தர்க்கம் செய்து புதுப்புது வடிவ முயற்சிகளில் ஈடுபட்டனர். அந்த கூட்டு முயற்சி இப்போது அருகி விட்டது' என்றார். மேலும், 'அரசவையில் அல்லது கலையை போஷிக்கும் இடங்களில் எல்லோருடைய கருத்துக்களும் பகிர்ந்து கொள்ளப் பட்டன. இப்போது இசை, ஓவியம், கவிதை, நாட்டியம் என எல்லாக் கலை வடிவங்களும் தனித்தனியாக இயங்கி வருகின்றன. வீரியம் மிக்க சொற்களைக் கொண்ட பொருள் தரும் பாடல்களும், அதை சபையில் வெளிக் கொண்டு வருவோரும் குறைவாகி விட்டனர்' என்று சொன்னார். 'அவர்கள் எழுதிய பாடல்கள் இன்றைக்கும் பொருத்தமாகவும் புதுமையாகவும் இருக்கிறன. இன்றளவும் அப்பாடல்கள் தானே அதிகம் பாடப்படுகின்றன?' என்றும் சொன்னார்.

இரண்டாண்டுகள் கழித்தாலும் இந்த இசைப்பயணத்தின் பதிவைப் புத்தகமாகப் போட முழு அனுமதி கொடுத்த பாஷ்யம் தம்பதியருக்கு நன்றி. அனைத்து சங்கீத வித்வான்களுக்கும் அவர்களின் குரலில் உணர்வு பொங்க சொல்லிய பதிவைக் கேட்கச் செய்ததற்கும் நன்றி. சந்தேகம் எழும் போதெல்லாம் அதற்கு விளக்கம் அளித்து தெளிவு பெறச் செய்த வித்வான்களுக்கு நன்றி. புகைப் படங்கள் அளித்ததற்கும் நன்றி. இந்தப் பதிவைப் புத்தகமாக்க எண்ணியவுடன் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சிக் துறையின் நினைவுதான் வந்தது. இது போன்ற நாட்டியம் சார்ந்த நூல்களுக்கும், ஆவணப்பதிவான நூல்களுக்கும் பொருளுதவி செய்து என்னை ஊக்குவிக்கும் தமிழ் வளர்ச்சித் துறைதான் இந்த நூலுக்கும் உதவி செய்திருக்கிறது. தமிழ் வளர்ச்சித் துறைக்கு என் மனமுவந்த நன்றி. எனது எல்லா முயற்சிகளுக்கும் எப்போதும் உறு துணையாய் நின்று ஊக்கம் அளிப்பவர் என் கணவர், ஓவியர் நாகராஜன்.

கிருஷாங்கினி
சானடோரியம்,சென்னை-47

பேட்டிகண்ட அனுபவம்-பாஷ்யம் தம்பதியர்

நாங்கள் நடத்திவரும் 'தாம்பரம் மியூசிக் கிளப்' இசைக்கானது. அதன் ஆண்டு விழாவிற்கு சென்னை வானொலியின் முன்னாள் இயக்குனர் திரு. விஜய திருவேங்கடம் அவர்கள் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். 'தாம்பரம் மியூசிக் கிளப்' செயலாற்றிவரும் இசைப் பணியினை சிறப்பித்துப் பேசும் போது அவர் 'எனக்கு நீண்ட நாளாக ஒரு ஆசை உண்டு. சங்கீத வித்வான் களை -அதாவது மூத்த கலைஞர்களை குருவாகக் கொண்டு கற்று இன்று புகழ்பெற்றவர்- ஒரு நேர்காணல் செய்து அதில் அவர்களின் குரு பற்றிய தகவல்கள், குரு சிஷ்ய உறவுகள் போன்ற பல்வேறு சுவையான விஷயங் களை தொகுத்து ஒரு நூலாகக் கொண்டுவரவேண்டும். அது இசைத் துறைக்கு வரும் வருங்கால இளைஞர்களுக்கு மிகுந்த உபயோகமாக இருக்கும்.' என்று கூறினார்.

அது எங்கள் மனதில் இருந்துகொண்டே இருந்தது. நாம் ஏன் அந்த எண்ணத்தை முயற்சிக்கக்கூடாது என்று தோன்றியது. பின்னொரு நாள் திருவேங்கடம் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். எங்கள் சந்திப்பு அடிக்கடி நிகழும். சங்கீதம் பற்றிப் பேசுவோம். அன்று அவரிடம் நாங்கள், 'விழாவில் நீங்கள் தெரிவித்த உங்கள் ஆசையை நாங்கள் செயற்படுத்தலாமா? தவறாமல் கொண்டு வருவோம்.' என்றோம். அவர் உற்சாகமாக, 'ஓ! தாராளமாகக் கொண்டு வரலாம். அதற்கு என்னால் முடிந்த உதவிகளைக் கண்டிப்பாகச் செய்கிறேன். தொடங்குங்கள்' என்றார்.

நாங்கள் சங்கீதத் துறையில் அன்று புகழ் பெற்றிருந்த பெரிய வித்வான்களின் சிஷ்யர் இன்று புகழ்பெற்று மூத்த இசைக் கலைஞராக விளங்குபவர் என்று ஒரு பட்டியல் தயாரித்தோம். அதில் வாய்ப்பாட்டு, பக்க வாத்தியங்கள், நாதசுரம், வீணை என்பதாக பலரையும் தேர்ந்தெடுத்தோம். குழல்மேதை திரு. ரமணி எங்களது நெருங்கிய நண்பர். குருவாயூர் துரை, பி.எஸ்.நாரயண சாமி ரமணி மூவரும்தான் எங்களுக்குத் தூண்போல. 'தாம்பரம் மியூசிக் கிளப்' வளர அவர்கள்தான் ஊக்கமளிப்பவர், வழிகாட்டி. ரமணியும் இதை செய்ய உற்சாகப்படுத்தினார்.

நாங்கள் அவர்களிடம் நேர்காணலுக்கான ஒரு கேள்விப்பட்டியல் தயாரித்தோம். திருவேங்கடம்தான் அதைத் தயாரித்தார். அதில் தனது குரு பற்றி,குருவுடன் அவர்களுக்கு கிடைத்த அனுபவங்கள், கச்சேரிகளில் நிகழ்ந்த மறக்கமுடியாத சம்பவங்கள், காஞ்சி பெரியவாளுடன் நேர்ந்த இசை அனுபவமும் கிடைத்த ஆசிகளும் போன்ற விஷயங்களை அடக்கியதாக அது இருந்தது. (எங்களுக்கும் மஹா பெரியவரிடம் ஈடுபாடு அதிகம்) வித்வான் களிடம் தொடர்புகொண்டு அவர்களது விருப்பத்தை தெரிந்து கொண்டோம்.
அந்தக் கேள்விப்பட்டியலை எடுத்துக்கொண்டு நேர்காணலுக்கு ஒப்புக் கொண்ட வித்வான்களின் இல்லத்துக்கு சென்று பேட்டியெடுத்தோம். அதை ஒலிநாடாவில் பதிவுசெய்துகொண்டோம். வித்வான்களுக்கும் பேட்டி என்பது உவகைதந்ததாக அமைந்தது. அடுத்தது, உரையாடல் எழுத்து வடிவம் பெற வேண்டும். அந்தப் பணியை திருவேங்கடம் ஏற்றுக் கொண்டார். ஆனால், அவகாசமின்மையால் அவரால் ஈடுபடமுடிய வில்லை. அவ்விதமே இரண்டு ஆண்டுகள் கழிந்தன. எங்களுக்கும் வழியேதும் தெரியாமல் இருந்தோம். யாரைக் கொண்டு எழுதச் சொல்லலாம் என்பதும் தெரியவில்லை. நூல் கொண்டுவர ஆகும் செலவு பற்றியும் யோசித்து, குழம்பி திட்டத்தை அப்படியே வைத்துவிட்டோம். தற்செயலாக கிருஷாங்கினி, நாகராஜனிடம் இதுபற்றிச் சொல்லவும் அவர்கள் தாங்கள் செய்வதாக ஒப்புக்கொண்டு இன்று வாசகர் கையில் நூல் தவழச் செய்துள்ளார்கள். எங்களுக்கு நிரம்ப மகிழ்ச்சி.
வளரும் இளம் கலைஞர்களுக்கு பயனளிப்பதாக இந்நூல் இருக்கும் என்று நம்புகிறோம்.

பேட்டியளித்து மிகுந்த உற்சாகத்துடன் தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட அனைத்து கலைஞர் பெருமக்களுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். நூலைப் டிக்கும்போது மீண்டும் ஒருமுறை அவரருகில் அமர்ந்துகொண்டு கேட்பதுபோன்ற அனுபவம் கிட்டுகிறது. எழுத்து விடிவில் கொடுத்த கிருஷாங்கினிக்கு மிக்க நன்றி. தியாகப் பிரம்மத்தின் அனுக்கிரகமும் பெரியவாளின் ஆசியும்தான் இதற்குக் காரணம் என்று நாங்கள் முழுதாக நம்புகிறோம். இது ஒரு தொடக்கம்தான் என்றும் கருதுகிறோம். இன்னமும் பல மூத்த வித்வான்கள் உள்ளனர். அவர்களிடமிருந்தும் இம்மாதிரியான பேட்டியின் மூலம் அடுத்த நூல் கொணர வேண்டும்.

தாம்பரத்தில் ஒரு நல்ல சங்கீத சபை இல்லையே என்ற குறை எங்களுக்கு இருந்தது. நாராயணன் என்பவர் எங்களது நண்பர். அவர்தான் சபா தொடங்கும் ஆசையை எங்களிடம் உண்டாக்கினார் எனலாம். 'நாம் தாம்பரத்தில் ஒரு சங்கீத சபா தொடங்கலாமா? ஜெயகோபால் பள்ளி பொறுப்பாளர் திரு. நாராயணராவ் அவர்களை சீதாதேவி கரோடியா பள்ளி வளாகத்தில் இடம்கேட்டு அணுகலாம்.' என்று சொன்னார். அவ்விதமே நாங்கள் அவரை அணுகிக் கேட்கவும் மிகவும் பெருந்தன்மையுடன் சீதாதேவி கரோடியா பெண்கள் பள்ளியில் இடம் கொடுத்து உதவினார். இன்றுவரை அது தொடர்கிறது. அந்த முயற்சியே திருவினையாகி கடந்த பதின்நான்கு ஆண்டுகளாக 'தாம்பரம் மியூசிக் கிளப்' செயற்பட்டு வருகிறது. மாதம் ஒரு இசை நிகழ்ச்சி, டிசம்பரில் இசை விழா தியாகப் பிரம்மத்தின் ஆராதனை உற்சவம், வளரும் கலைஞருக்கான இசைப்போட்டிகள் என்று நடத்தி வருகிறோம். இசைக்கலைஞர்களுடன் நெருக்கமான உறவு தொடர்கிறது. நூலுக்கு அது மிகவும் உதவியது.

எங்களது எதிர்கால ஆசை மயிலையில் உள்ள சங்கீத வித்வத் சமாஜம் போலத் தாம்பரத்தில் தியாக பிரம்மத்துக்கு ஒரு கோவில் நிர்மாணிக்க வேண்டும். அதைப் பேராசை என்றுகூடச் சொல்லலாம். அந்த மண்டபத்தில் இசை நிகழ்ச்சிகளை நடத்தவேண்டும். கடவுள் சித்தம் எப்படியோ?

சூடாமணி பாஷ்யம் தம்பதியர்
தாம்பரம்
சென்னை

No comments: