Friday, December 21, 2012

குப்பை-காகிதங்கள்-குப்பை- கட்டுரை

குப்பை-காகிதங்கள்-குப்பை


‘சுடிதார் தைக்கணுமாம்மா' பணிவன்புடன் கை நீட்டி காகிதம் ஒன்றைத் திணித்துத் திரும்புகிறான் ஒரு சிறுவன்.'  கணிணி படிப்புங்கண்ணா' மற்றொரு சிறுவன் கை நீட்டி அளிக்கிறான், ஒரு வண்ணக் காகிதத்தை.'உடல் பருமன் ஒரு வாரத்தில் குறைய' என்ற சொற்கள் தாங்கிய பெரிய தொப்பை கொண்ட பெண் உருவம் அச்சிடப்பட்ட வழவழத்தாளை நீட்டுகிறாள் ஒல்லியான ஒரு இளம் பெண்.  இந்த மூன்று வகைக் காகிதங்களாலும், அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையில் விநியோகிக்கப்படும் காகிதங்கள் என் கைக்குக் கிடைக்காது. நான் எப்போதும் அவற்றை வாங்க மாட்டேன். காகிதத்தின் அருமை தெரியும்.

பெண் முகமும் தலையும் இல்லாமல் பிதுங்கிய மார்பகங்களுடனும், அதற்கு கீழே சட்டையை விட்டு வெளியே பேண்டுக்கும் இடையே நீட்டிக் கொண்டிருக்கும் இடைப் பட்ட வெள்ளைத் தோல் பிரதேசத்துடனும், நடுவில் துருத்திக்கொண்ட தொப்பையும் வண்ணப்படத்தில் அச்சிடப் பட்டிருக்கும் .

அட்சய திருதியைக்கு கடவுள் படமிடப்பட்டு, ((கைகளிலிருந்து தங்கக்காசு கொட்டிக்கொண்டிருக்கும், மற்றொரு கையால் அருள் பாலிக்கும் காசின் கடவுள் படம், சில நொடிகளுக்குப்பின் எல்லோருடைய  காலடியின் கீழும் மிதிபட்டுப் புரளும்.) கடையின் பெயர்களுடன் தள்ளுபடியில் தங்கக்காசுகள், நகைகள். .கடையின் பெயரில் மட்டுமே மாற்றம் இருக்கும். மிகுந்த  விலை உயர்ந்த தாளில் வண்ணத்துடன் கூடிய  நோட்டீஸ்  கூட்டம் அலை மோதும் தெருவில் எல்லோர் கைகளிலும் கொடுக்கப்படும். அந்தத் தெருவில் யாருடனும் இடிக்காமல் நடக்க முடியாது. பெண்களைக் கவர்ந்திழுக்க கடையின் வாசலில் அழகழகான வண்ணக்கோலங்களும், வாழை மரங்கள், தோரணங்கள் கட்டப்பட்ட  நுழைவாயிலில்  ஏறும் போதே தங்கள் வீட்டில் திருமணம் கைகூடி விட்டதாக கனவுடன் படி ஏறும் கூட்டம். கடைக்கதவு எப்போதும் திறந்தே இருக்கும். எரிக்கும் வெய்யிலுக்கு இதமாக செயற்கைக் குளிரூட்டப்பட்ட காற்றும் என எல்லாவற்றையும் கடந்துதான் நான் செல்கிறேன். இலவசமாக விநியோகிக்கும் எதையும் எல்லோரும் கைநீட்டி வாங்கிக்கொள்கிறார்கள். வண்ணவண்ண அந்தக் கையகலத் தாள்கள், பெரியவர்கள் கைகளில் கொடுக்கப்பட்டவுடன் தனக்கும் ஒன்று என்று கைநீட்டி வாங்கிக் கொள்ளும் குழந்தைகள். பெரியவர்கள் செய்வதையே தானும் செய்யும் குழந்தைகள். இளைஞர்கள் நடுத்தர வயதினர், வயோதிகர் என எல்லோரும் கைநீட்டி வாங்கிக் கொள்கின்றனர். ஓரிரு அடிகள் நடப்பதற்குள், காகிதத்தை படித்தும் படிக்காமலும், மடித்தும் மடிக்காமலும், எந்தவித நுண் உணர்வும் இல்லாமல், தங்கள் காலடியில் நழுவ விடுகின்றனர். ஏறக்குறைய நூறு அடிகளுக்குள் வழியெங்கும் (ரயிலடியின் வெகு அருகில் கடைகள் மட்டுமல்ல குப்பைகளும் நிறைந்திருக்கும்) ரயில் நிலையம் செல்லும் வழியில், படி எங்கும், நிறைந்து இறைந்து கிடக்கும் அவற்றைப் பார்க்க பார்க்க மனம் கொதிக்கும்.அட்டைக்கு மட்டுமே வண்ணத்தை ஓடவிட்டு விட்டு, அதுவும் மிகுந்த சிரமத்திற்கு இடையில்,  உள்ளே அனைத்தையும் கருப்பு வெள்ளையில் அடைத்து திணித்து நிரப்பி உயிரையும், உயிர்காற்றையும், வலியையும், வேதனையும், காதலையும், காமத்தையும் கொட்டி எழுதிய நூல்கள் தயாரிக்கிறேன். என் ஆசை அளவிற்கு எந்த நூலையும் செலவு செய்து கொண்டுவர முடியவில்லை. ஓவியம் பற்றிய நூல்களைக்கூட கருப்பு வெள்ளையில் வடித்தும், அதையே படித்தும் வர வேண்டிய நிலை. .நிகழ்த்துக்கலைகளைக் கூட அப்பி வைத்த கருப்பு வெள்ளையில் வண்ணங்களைத் துடைத்து எறிந்துவிட்டு அதையே வெள்ளையாக்கி வண்ண ஜாலம் காட்டி வித்தையும் காட்டுகின்றன நூல்கள். வண்ணத்தில் அடிக்க பணம் கொடுத்து மாளாது.

சிற்றிதழ் தயாரிப்போர் ஒவ்வொரு இதழையும் வழ்க்கையைப் பணயம் வைத்து உறவுகளுடன் முரண்பட்டு வெறி பிடித்தது போல வெளிக் கொண்டு வருகின்றனர்.

ஆனால் இந்தப் பணக்கார வியாபாரிகளின் விளம்பரமோ வழவழ வண்ணத்தாளில், அழாழகாக அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன. அதை வாங்கி ஓரிரு நொடிகளில் நழுவ விடுகின்றனர். எத்தனை மரங்கள்? அதிலுள்ள எத்தனை சிற்றுயிர்களை அரைத்துப் பூசிய காகிதமது?  

தேர்வு முடிந்து அடுத்த கட்டத்துக்குப் போகும் மாணவர்களைக் கவர்ந்திழுக்க இப்போது ஜூன் ஜூலையில் என்ன படிக்கலாம், எப்படிப் படிக்கலாம், என்று வழிகாட்டும்(?)  காகிதங்கள் தெருவெங்கும்.  என்னால் இப்ப்டி செலவு செய்ய முடியவில்லையே என்ற பொறாமையும் இதில் கொஞ்சம்  கலந்துதான் இருக்கிறது. வெள்ளைத் தாள்கள் வண்ணம் பூசப்படுவதற்கான காரணம் இன்னமும் கொஞ்சம் மக்களை வழி நடத்துவதாகவோ, மக்களை விழிக்கச் செய்வததகவோ இல்லாமல் முட்டாளாக்கும் செயலைத் திறம்பட அதிகம் செலவழித்து விழும் விட்டில் பூச்சி ஆக்குகிறார்களே என்ற கவலையும் இணைந்துதான்  இதைச் சொல்ல வைக்கிறது.

.

No comments: