Monday, July 23, 2012

ஓளியிடை நிழலாய்-கவிதை

ஓளியிடை நிழலாய்

1.நீ நிழல் பற்றி என்ன எழுதி இருக்கிறாய்?
இல்லை என்றே நினைக்கிறேன்.
எப்போதும் உடன் உழலும் நிழல் பற்றி
ஏன் எழுதத் தோன்றவில்லை உனக்கு?
தெரியவில்லையே? ஏன்?
நிழலாக எட்டி நின்று கேட்டுக்கொள்கிறேன்.

2.ஒளியின் நிறம் பச்சை, நீலம், சிவப்பு
பொருளின் நிறமும் ஏதாகிலும் இருக்கலாம்.-ஆனால்
எப்போதும்,எந்நேரமும், நீளமாகவோ, குட்டையாகவோ
பருத்தோ, சிறுத்தோ விழும் நிழல் என்ன நிறம்?
தோற்றம் தரும் கருமைதானே?
நிழல்கள் ஏன் நிறத்தைத் துறக்கின்றன?

3. குழந்தையைக் கொஞ்சினாள்
கோடி சூர்யப் பிரகாசமே
சுட்டுபொசுக்கும் ஒரு சூரியனே போதாதா?
மேற்கின் கோடியில் விழும்வரை.
கோடி சூரியன்? தாங்குமா?
உட்சபட்ச ஒளி பொருந்திய
அறிவுச் சுடர், ஞான சூரியன், எல்லாமாக
வந்து விழுகின்றன தாயின் மொழியில்.

4. அதீத ஒளி, ஒளியின் வெளி
ஒளி திடப்பொருளை ஊடுருவாது.
ஒளிக்குத்தடை திடப்பொருள்.
தடை செய்யும் பொருளை,
உருவத்தை ஒன்றுமில்லாமல் செய்து
பொருளையே நிழலாக்குகிறது
பின்புலத்தின் அதீத ஒளி.

5.எங்கள் ஊரில் என்றும் உண்டு சூரியன்,
வருடத்தில் ஓரிரு மாதங்கள் தவிர.
சூரியனை வழிபடுவோம்,
பயிருக்காகவும், உயிருக்காகவும்.
உடலின் நீரும், நிலத்தடி நீரும்
உஷ்ணப் பெருக்கில் வெளியேறும்
இருப்பிடம் விட்டு.
உனக்கோ ஆரஞ்சுச் சூரியன் அதிசயம்.
என்றேனும் எட்டிப் பார்க்கும் ஒளி உருண்டை
கொண்டாட்டமாகிறது, உயிர்களுக்கு.
ஆரஞ்சு சூரியன் ஆரஞ்சுத் திரையிடை
தோன்றித் தோன்றி மறைந்து
பின்னிருந்து வெளியேறும் ஒளிவெள்ளம்
பிடித்துத் தள்ளி, உன்னையும் ஆடவைக்கிறது
ஓளியிடை நிழலாய், உருவத்தின் வெளிக்கோடுகளாய்.

                                    க்ருஷாங்கினி.

No comments: